சச்சின் விக்கெட்டே எனது இலக்கு: ஆமீர்

இந்தியாவுடனான ஆட்டத்தில் சச்சின் டெண்டுல்கரின் விக்கெட்டே எனது இலக்கு என பாகிஸ்தான் இளம் வீரர் முகமது ஆமீர் (18) கூறினார்.

ஜோஹன்னஸ்பர்கில் இருந்து ஆமீர் கூறியதாவது: சச்சின் உலகின் சிறந்த பேட்ஸ்மேன். அவரது விக்கெட்டை கைப்பற்றுவதில் ஆர்வமாக உள்ளேன். அதற்காக எப்படிப் பந்துவீசுவது என பயிற்சியும் எடுத்துள்ளேன்.

இந்தியாவுக்கு எதிரான ஆட்டத்தில் பங்கேற்பது என்பது எனது கனவு. அது தற்போது நிறைவேறியுள்ளது. இரு அணிகளுக்கும் இடையே நடைபெற்ற மறக்க முடியாத சில ஆட்டங்களைப் பார்த்துள்ளேன். டெண்டுல்கருக்கு வாசிம் அக்ரம் எப்படி பந்துவீசினார் என்பதை விடியோவில் பார்த்து தெரிந்து கொண்டுள்ளேன்.

சச்சின் விக்கெட்டை தொடக்கத்திலேயே வீழ்த்துவது எனக்கு மட்டும் உற்சாகத்தைக் கொடுப்பதல்ல. முழு அணியுமே அதனால் மகிழ்ச்சி அடையும்.

மொத்த அணியுமே இந்தியாவுடனான ஆட்டத்தை எதிர் நோக்கியுள்ளது. இந்தியாவுடனான ஆட்டத்தில் தனிப்பட்ட முறையில் எப்படி விளையாடுகிறோம் என்பது முக்கியமல்ல. இணைந்து எப்படி செயல்படப் போகிறோம் என்பதே முக்கியம் என்றார்.

மேற்கிந்தியத் தீவுகளுடனான முதல் ஆட்டத்தில் ஆமீர் 24 ரன்கள் மட்டுமே கொடுத்து 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார் என்பது குறிப்பிடத்தக்கது

0 comments:

Post a Comment