இந்திய பவுலர்கள் பதிலடி

பார்படாஸ் டெஸ்டில், வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு இந்திய வேகப்பந்து வீச்சாளர்கள் பதிலடி கொடுத்தனர். பேட்டிங்கில் லட்சுமண்(85) கைகொடுத்தார்.

மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்க, இந்திய அணி வெஸ்ட் இண்டீஸ் சென்றுள்ளது. முதல் டெஸ்டில் வென்ற இந்திய அணி, 1-0 என முன்னிலையில் உள்ளது. இரு அணிகள் இடையிலான இரண்டாவது டெஸ்ட் பார்படாசில் நடக்கிறது.


"சூப்பர் ஜோடி:

முதல் இன்னிங்சை துவக்கிய இந்திய அணிக்கு, வெஸ்ட் இண்டீஸ் அணியின் வேகப்பந்து வீச்சாளர்கள் பெரும் தொல்லை கொடுத்தனர். இதனால் முகுந்த்(1), அனுபவ டிராவிட்(5), முரளி விஜய்(11) நிலைக்கவில்லை. விராத் கோஹ்லியும் "டக் அவுட்டானார்.

இதன் பின் இணைந்த லட்சுமண், ரெய்னா ஜோடி அணியை சரிவிலிருந்து மீட்டனர். ஐந்தாவது விக்கெட்டுக்கு 117 ரன்கள் சேர்த்த நிலையில், டெஸ்ட் அரங்கில் நான்காவது அரைசதம் (53) கடந்த ரெய்னா, அம்பயரின் தவறான தீர்ப்பில் வெளியேற்றப்பட்டார்.


லட்சுமண் அபாரம்:

மறுமுனையில் உறுதியான ஆட்டத்தை வெளிப்படுத்தி, 50வது அரைசதம் கடந்த லட்சுமண், தொடர்ந்து அசத்தினார். அணியை காப்பாற்றுவார் என்று எதிர்பார்க்கப்பட்ட கேப்டன் தோனி (2) கைவிட்டார். ஹர்பஜன் (5) இம்முறை நிலைக்கவில்லை. 85 ரன்கள் எடுத்த லட்சுமண், பிஷூ சுழலில் வீழ்ந்தார். அபிமன்யு மிதுன், "டக் அவுட்டாகி ஏமாற்றினார்.

பிரவீண் குமார் தன் பங்குக்கு 11 ரன்கள் எடுத்தார். இந்திய அணி முதல் இன்னிங்சில் 201 ரன்னுக்கு ஆல் அவுட்டானது. இஷாந்த் சர்மா (1) அவுட்டாகாமல் இருந்தார். வெஸ்ட் இண்டீஸ் சார்பில் எட்வர்ட்ஸ், ராம்பால், தேவேந்திர பிஷூ ஆகியோர் தலா 3 விக்கெட் வீழ்த்தினர்.


பவுலர்கள் அபாரம்:

வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு ஆட்ரியன் பரத், சிம்மன்ஸ் துவக்கம் தந்தனர். இம்முறை இந்திய வேகப்பந்து வீச்சாளர்கள் பிரவீண் குமார், இஷாந்த் சர்மா மற்றும் அபிமன்யு மிதுன் ஆகியோர் "போட்டுத் தாக்க ஆரம்பித்தனர். இஷாந்த் வேகத்தில் முதலில் பரத் (3) வெளியேறினார். சிம்மன்ஸ் (2), பிரவீணுக்கு பலியானார். டேரன் பிராவோவை (9), அபிமன்யு மிதுன் திருப்பி அனுப்பினார்.

முதல் நாள் ஆட்டநேர முடிவில் வெஸ்ட் இண்டீஸ் அணி, முதல் இன்னிங்சில் 3 விக்கெட்டுக்கு 30 ரன்கள் எடுத்து, 171 ரன்கள் பின்தங்கியிருந்தது.


இஷாந்த் அசத்தல்:

நேற்று இரண்டாவது நாள் ஆட்டம் நடந்தது. மழை காரணமாக ஆட்டம் 45 நிமிடம் தாமதமாக துவங்கியது. இஷாந்த் சர்மா வேகப்பந்து வீச்சில் மிரட்டினார். இவரது ஓவரின் 4வது பந்தில் "நைட் வாட்ச்மேன் பிஷூ (13) பெவிலியன் திரும்பினார். இதே ஓவரின் கடைசி பந்தில், 18 ரன்கள் எடுத்திருந்த சர்வானையும் அவுட்டாக்கினார்.

உணவு இடைவேளைக்குப் பின், மழை காரணமாக போட்டி நிறுத்தப்பட்ட போது, வெஸ்ட் இண்டீஸ் அணி முதல் இன்னிங்சில் 5 விக்கெட்டுக்கு 98 ரன்கள் எடுத்து, 103 ரன்கள் பின்தங்கி இருந்தது. சந்தர்பால் (20), சாமுவேல்ஸ் (21) களத்தில் இருந்தனர். இந்தியாவின் இஷாந்த் சர்மா 3 விக்கெட் வீழ்த்தினார்.

தீர்ப்புக்கு எதிர்ப்பு: ரெய்னாவுக்கு அபராதம்

பார்படாஸ் டெஸ்டில் அம்பயர் வழங்கிய தீர்ப்புக்கு எதிர்ப்பு தெரிவித்த ரெய்னாவுக்கு அபராதம விதிக்கப்பட்டுள்ளது.

பார்படாஸ் டெஸ்டில் பிஷூ பந்தை எதிர்கொண்ட ரெய்னா, "கேட்ச்' ஆனதாக அம்பயர் அறிவித்தார். இதை ஏற்று உடனடியாக வெளியேறாமல், இவர் தனது எதிர்ப்பை தெரிவித்தார்.

இது ஐ.சி.சி., விதிமுறையை(2.1.3) மீறிய செயல் என்பதால், ரெய்னாவுக்கு போட்டிக்கட்டணத்தில் 25 சதவீதம் அபராதம் விதிக்கப்பட்டது.

இதுகுறித்து "மேட்ச் ரெப்ரி' கிறிஸ் பிராட் கூறுகையில்,"" அம்பயர் அவுட் கொடுத்தவுடன், பந்து பேட்டில் படவில்லை என்று மறுப்பு தெரிவித்தார் ரெய்னா.

பின் வானத்தை பார்த்த அவர், மீண்டும் தலையசைத்துக் கொண்டே வெளியேறினார். இவரது இந்தச் செயல் ஏற்றுக் கொள்ளத்தக்கதல்ல.

இது கிரிக்கெட் விதிகளை மீறிய செயல் என்பதால் அவருக்கு அபராதம் விதிக்கப்பட்டது,'' என்றார்.

புதிய வரலாறு படைக்குமா இந்தியா?

இந்தியா, வெஸ்ட் இண்டீஸ் அணிகள் மோதும் இரண்டாவது டெஸ்ட் போட்டி இன்று பார்படாசில் துவங்குகிறது. கடந்த 58 ஆண்டுகளாக பார்படாஸ் மண்ணில் இந்திய அணி வென்றதில்லை. இந்த சோகத்துக்கு தோனி தலைமையிலான அணி முற்றுப்புள்ளி வைத்து, புதிய வரலாறு படைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

வெஸ்ட் இண்டீஸ் சென்றுள்ள இந்திய அணி மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்கிறது. முதல் டெஸ்டில் வென்ற இந்திய அணி, 1-0 என முன்னிலையில் உள்ளது. இரு அணிகள் இடையிலான இரண்டாவது டெஸ்ட், இன்று பிரிஜ்டவுன் நகரிலுள்ள பார்படாஸ், கென்சிங்டன் ஓவல் மைதானத்தில் துவங்குகிறது.

இங்கு கடந்த 1953 முதல் இந்திய அணி, 8 டெஸ்ட் போட்டிகளில் பங்கேற்றுள்ளது. இதில் கடந்த 1971ல் நடந்த போட்டியை மட்டும் "டிரா செய்தது. மற்றபடி, இரண்டு இன்னிங்ஸ் தோல்வி உட்பட, பங்கேற்ற அனைத்து போட்டியிலும் தோல்வி அடைந்துள்ளது.

இதனால் தோனி தலைமையிலான வீரர்கள், வழக்கத்துக்கு மாறாக நீண்டநேரம் பயிற்சியில் ஈடுபட்டனர். பின் ஆடுகளம் குறித்து ஹர்பஜன் மற்றும் அணித் தேர்வாளர்களுடன் ஆலோசனை நடத்தியுள்ளனர். இந்த ஆடுகளம், <உண்மையில் இந்திய பேட்ஸ்மேன்களின் திறமையை சோதிக்க காத்திருக்கிறது எனலாம்.

ஏற்கனவே இந்திய அணியின் துவக்க வீரர்கள் அபினவ் முகுந்த், முரளி விஜய் இருவரும் ரன்சேர்க்க தடுமாறி வருகின்றனர். இங்கிலாந்து தொடருக்கான அணியை தேர்வு செய்யவுள்ள நேரத்தில், இந்த போட்டியில் ரன்குவிப்பை வெளிப்படுத்த வேண்டிய கட்டாயம் இவர்களுக்கு ஏற்பட்டுள்ளது.


டிராவிட் நம்பிக்கை:

"மிடில் ஆர்டரில் வழக்கம் போல இந்திய "பெருஞ்சுவர் டிராவிட், அணியை காப்பாற்றலாம். கடந்த முறை ஏமாற்றிய லட்சுமணன், விராத் கோஹ்லி, கேப்டன் தோனி எழுச்சி பெற்றால் நல்லது. ரெய்னாவின் "பார்ம் பின்வரிசையில் ஹர்பஜன், அமித் மிஸ்ரா போன்றோர் பேட்டிங்கில் கைகொடுப்பது, நல்ல விஷயம் தான்.


பவுலிங் சாதகம்:

இந்த ஆடுகளத்தில் மால்கம் மார்ஷல், ஜோயல் கார்னர், சார்லி கிரிவ்த் போன்றவர்கள் தங்களது வேகப்பந்து வீச்சு மூலம், பேட்ஸ்மேன்களின் முதுகு தண்டை சில்லிடச் செய்துள்ளனர். இதற்கேற்ப, இந்திய வீரர்கள் இஷாந்த் சர்மா, பிரவீண் குமாரும் தங்களது மிரட்டலை தொடர்ந்தால் நல்லது. வேகப்பந்து வீச்சுக்கு சாதகமான ஆடுகளம் என்பதால், அமித்மிஸ்ரா நீக்கப்பட்டு முனாப் படேல் சேர்க்கப்படலாம். சுழலில் ஹர்பஜன் மட்டும் சேர்க்கப்படுவார் என்று தெரிகிறது.


எட்வர்ட்ஸ் சேர்ப்பு:

வெஸ்ட் இண்டீஸ் அணியின் அதிரடி துவக்க வீரர் கெய்ல், மீண்டும் சேர்க்கப் படவில்லை. இதனால் சிம்மன்ஸ், பரத் ஜோடி தான் மறுபடியும் களமிறங்கும். "மிடில் ஆர்டரில் சீனியர்கள் சந்தர்பால், சர்வான், கேப்டன் சமி, டேரன் பிராவோ ஆகியோர் திறமை நிரூபிக்க வேண்டும். பிரண்டனுக்குப் பதில் இடம் பெற்ற கிர்க் எட்வர்ட்ஸ் நம்பிக்கை தருவாரா என, இன்று தெரியும்.


பிஷூ பலம்:

பவுலிங்கில் வழக்கம் போல பிடல் எட்வர்ட்ஸ், ரவி ராம்பால் இந்திய அணிக்கு தொல்லை தர முயற்சிக்கலாம். சுழலில் கடந்த போட்டியில் ஏழு விக்கெட் வீழ்த்திய தேவேந்திர பிஷூ, வேகப்பந்துக்கு சாதகமான ஆடுகளத்தில் என்ன செய்யப் போகிறார் என்று தெரியவில்லை.
---

காத்திருக்கும் சாதனைகள்

வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான, இரண்டாவது டெஸ்டில் இந்திய வீரர்கள் பலர் சாதிக்க காத்திருக்கின்றனர். சுழற்பந்து வீச்சாளர் ஹர்பஜன் சிங், இன்னும் 4 விக்கெட் வீழ்த்தும் பட்சத்தில், புதிய இலக்கை (400 விக்.,) எட்டவுள்ளார்.

* இதேபோல இஷாந்த் சர்மாவும் (96 விக்.,) 100வது விக்கெட் எடுப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

* பேட்டிங்கில் லட்சுமண், இன்னும் 85 ரன்கள் எடுத்தால், டெஸ்ட் அரங்கில் 8000 ரன்கள் என்ற இலக்கை எட்டலாம்.

* கேப்டன் தோனி, 3000 ரன்கள் என்ற மைல்கல்லை எட்ட, 59 ரன்கள் தேவைப்படுகிறது.
---

மழை வரும்

இன்று போட்டி நடக்கும் ஓவல் மைதானம் அமைந்துள்ள பிரிஜ்டவுனில், முற்பகலில் இடியுடன் கூடிய மழை வருவதற்கு 30 சதவீத வாய்ப்பு உள்ளது. மதியம் லேசான மழையும், மாலை மீண்டும் இடியுடன் மழை வரவும் (40 சதவீதம்) வாய்ப்புள்ளது.
---

பவுலர்கள் கையில்

இரண்டாவது டெஸ்ட் போட்டி குறித்து, இந்திய அணி கேப்டன் தோனி கூறியது:

இந்திய அணியில் சிறப்பான வீரர்கள் இடம் பெற்றிருப்பது, அவர்கள் 100 சதவீதம் திறமை வெளிப்படுத்துவது ஆகியவை உண்மையில் எனக்கு அதிர்ஷ்டம் தான். இந்நிலையில் அனைத்து போட்டியிலும் வெல்வது என்பது இயலாது. அதேநேரம் போட்டிகளுக்கு எப்போதும் சிறப்பாக தயாராகலாம், களத்திலும் சிறப்பாக செயல்படலாம்.

இன்றைய போட்டி நடக்கும் ஓவல் ஆடுகளத்தில், பந்துகள் அதிகமாக "பவுன்ஸ் ஆகும். இதற்கேற்ப, இந்திய வேகப்பந்து வீச்சாளர்கள் தங்களது பவுலிங் முறையில் மாற்றம் செய்து கொள்ள வேண்டும். இதில் தான் அணியின் வெற்றி அடங்கியுள்ளது. பவுலிங்கில் இஷாந்த்தும், பிரவீண் குமாரும் வேறுபட்டவர்கள்.

அதிக டெஸ்டில் இஷாந்த் பங்கேற்றுள்ளதால், பேட்ஸ்மேன்களுக்கு ஏற்ப பந்து வீசுவார். ஆனால் பிரவீண் குமார், இரண்டு பக்கமும் "சுவிங் செய்வார். இதேபோல சுழலில் அசத்தி வரும் ஹர்பஜன், அணிக்கு தேவையான நேரங்களில் விக்கெட் வீழ்த்தி தருவார். இப்போது பேட்டிங்கிலும் அசத்துகிறார்.

இவ்வாறு தோனி கூறினார்.

"வால்' ஆடினால் "தலை' நிமிரும் இந்தியா

டெஸ்ட் அரங்கில் இந்திய அணியின் சமீபத்திய எழுச்சிக்கு "டெயிலெண்டர்கள்' முக்கிய காரணம். ஹர்பஜன், இஷாந்த் சர்மா, அமித் மிஸ்ரா உள்ளிட்டோர் கடைசி கட்டத்தில் கைகொடுக்கின்றனர். இவர்களது அசத்தல் ஆட்டம் வெஸ்ட் இண்டீஸ் மண்ணிலும் நீடிப்பதால், கேப்டன் தோனி மிகுந்த மகிழ்ச்சியில் இருக்கிறார்.

டெஸ்ட் போட்டிகளில் இந்தியாவின் வெற்றிநடை தொடர்கிறது. கடந்த 22 போட்டிகளில் 12 வெற்றி, 7 "டிரா' மற்றும் 3 தோல்விகளை சந்தித்துள்ளது. இதன் காரணமாக டெஸ்டில் தோனி தலைமையிலான நமது "நம்பர்-1' இடத்தில் உள்ளது.

சில போட்டிகளில் "டாப்-ஆர்டர்' பேட்ஸ்மேன்கள் ஏமாற்றினாலும் கூட, பின் வரிசையில் களமிறங்கும் "டெயிலெண்டர்கள்' அணியை கரை சேர்த்து விடுகின்றனர்.

சமீபத்தில் ஜமைக்காவில் நடந்த வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான முதல் டெஸ்டின் முதல் இன்னிங்சில் இந்திய அணி 6 விக்கெட்டுக்கு 85 ரன்கள் எடுத்து தத்தளித்தது. இந்த நேரத்தில் பொறுப்பாக ஆடிய ஹர்பஜன்(70), ரெய்னாவுடன் சேர்ந்து 7வது விக்கெட்டுக்கு 146 ரன்கள் சேர்க்க உதவினார். இதே போல இரண்டாவது இன்னிங்சில் அமித் மிஸ்ரா(28) கைகொடுத்தார். இவரும் டிராவிட்டும் சேர்ந்து 9வது விக்கெட்டுக்கு 63 ரன்கள் சேர்த்தனர். இதன் காரணமாக இந்திய அணி 63 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.


ஜாகிர் அபாரம்:

கடந்த இரண்டு ஆண்டுகளில் நடந்த பரபரப்பான டெஸ்ட் போட்டிகளை பார்த்தால், "டெயிலெண்டர்களின்' பங்கு தெளிவாக புரியும். இவர்கள் பந்துவீச்சில் மட்டுமல்லாது பேட்டிங்கிலும் அசத்தியுள்ளனர். 2010ல் கிங்ஸ்மீட்டில் நடந்த தென் ஆப்ரிக்காவுக்கு எதிரான போட்டியில் இந்திய அணி இரண்டாவது இன்னிங்சில் 7 விக்கெட்டுக்கு 148 ரன்கள் எடுத்து திணறியது.

அப்போது 8வது விக்கெட்டுக்கு ஜாகிர் கான்(27) கைகொடுக்க, லட்சுமண்(96) வெற்றியை உறுதி செய்தார். கடந்த ஆண்டு மொகாலியில் நடந்த ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்டில் இந்திய அணியின் வெற்றிக்கு 216 ரன்கள் தேவைப்பட்டன.

ஒரு கட்டத்தில் 8 விக்கெட்டுக்கு 124 ரன்கள் என்ற படுமோசமான நிலையில் இருந்தது. இந்த நேரத்தில் இஷாந்த் சர்மா(31) துணிச்சலாக ஆடினார். மறுபக்கம் லட்சுமண்(73) வழக்கம் போல அசத்தினார். பிரக்யான் ஓஜாவும்(5) தனது பங்களிப்பை உறுதி செய்ய, இந்தியா ஒரு விக்கெட்டில் "திரில்' வெற்றி பெற்றது.

பின் கொழும்புவில், கடந்த ஆண்டு நடந்த இலங்கைக்கு எதிரான டெஸ்டின் முதல் இன்னிங்சில் அபிமன்யு மிதுன்(46), அமித் மிஸ்ராவின்(40) அபார ஆட்டம், அணியின் வெற்றிக்கு அடித்தளம் அமைத்தது.


ஹர்பஜன் சதம்:

வெற்றி மட்டுமல்ல, தோல்வியின் விளிம்பில் இருந்தும் இந்திய அணியை "டெயிலெண்டர்கள்' மீட்டுள்ளனர். கடந்த ஆண்டு நியூலாண்ட்சில் நடந்த தென் ஆப்ரிக்காவுக்கு எதிரான டெஸ்டில் ஹர்பஜன்(40), ஜாகிர் கான்(23) பொறுப்பாக ஆடி, போட்டியை "டிரா' செய்தனர்.

கடந்த 2010ல் ஆமதாபாத்தில் நடந்த நியூசிலாந்துக்கு எதிரான டெஸ்டின் இரண்டாவது இன்னிங்சில் இந்திய அணி 5 விக்கெட்டுக்குக்கு 15 ரன்கள் எடுத்து திணறியது. இந்த நேரத்தில் மீண்டும் ஒரு முறை ஆபத்பாந்தவனாக மாறிய ஹர்பஜன் சதம்(115) அடித்து அணியை தோல்வியில் இருந்து மீட்டார்.

இதே போல 2009ல் வெலிங்டனில் நடந்த நியூசிலாந்துக்கு எதிரான டெஸ்டில் ஹர்பஜன்(60), ஜாகிர் கான்(33), இஷாந்த் சர்மா(18) ஆகியோர் பொறுப்பாக ஆடி, போட்டியை "டிரா' செய்தனர். இதன் மூலம் இந்திய அணி, நியூசிலாந்து மண்ணில் 41 ஆண்டுகளுக்கு பின் டெஸ்ட் தொடரை வென்று வரலாறு படைத்தது.


புதிய "ஆல்-ரவுண்டர்':

இப்படி "வால்' ஆடும் போதெல்லாம் இந்தியாவின் "தலை' நிமர்வது வாடிக்கையாக உள்ளது. இதில், ஹர்பஜன் தான் முன்னிலை வகிக்கிறார். கடந்த 7 டெஸ்ட் போட்டிகளில் இரண்டு சதம், இரண்டு அரைசம் உட்பட 483 ரன்கள் எடுத்துள்ளார். சுழல் மன்னனான இவர், டெஸ்டில் இதுவரை 2 ஆயிரம் ரன்களுக்கும் மேல் எடுத்து, தன்னை மிகச் சிறந்த "ஆல்-ரவுண்டராக' அடையாளம் காட்டியுள்ளார்.


மாறுமா "பார்முலா':

வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான முதல் டெஸ்டில் வெற்றி பெற்ற பின் பேட்டி அளித்த கேப்டன் தோனி, அணியின் "டெயிலெண்டர்களை' வாயார புகழ்ந்தார். பின் வரிசை வீரர்கள் கைகொடுப்பதால், 7 பேட்ஸ்மேன்கள்+ 4 பவுலர்கள் என்ற பழைய "பார்முலாவை' மாற்றலாம். வரும் போட்டிகளில் 5 பவுலர்களுடன் துணிந்து களமிறங்கலாம். இதன் மூலம் அதிக டெஸ்டில் வெற்றியை வசப்படுத்தலாம். இது பற்றி யோசிப்பாரா தோனி.


ஒரு நாள் அரங்கில் ஏமாற்றம்

ஒரு நாள் போட்டிகளில் நிலைமை தலைகீழாக உள்ளது. இந்திய அணியின் "டெயிலெண்டர்கள்' தொடர்ந்து ஏமாற்றுகின்றனர். உதாரணமாக, சமீபத்திய உலக கோப்பை தொடரில் இங்கிலாந்துக்கு எதிராக கடைசி 6 விக்கெட்டுகளை 33 ரன்களுக்கு இழந்தோம்.

தென் ஆப்ரிக்காவுக்கு எதிராக கடைசி 8 விக்கெட்டுகளை வெறும் 29 ரன்களுக்கு பறிகொடுத்தோம். தற்போதைய வெஸ்ட் இண்டீஸ் தொடரில், கடைசி இரண்டு ஒரு நாள் போட்டிகளில் "டெயிலெண்டர்கள்' சோபிக்காததால் தோல்வி அடைந்தோம். வரும் காலங்களில் ஒரு நாள் போட்டிகளிலும் அசத்த வேண்டும்.

சச்சின் விளையாடுவதை பார்க்க வேண்டும்

கிரிக்கெட்டின் சிறந்த வீரர் சச்சின், விளையாடுவதை நேரில் பார்க்க வேண்டும். இது தான் எனது கனவாக உள்ளது,'' என, 100 மீ., உலக சாம்பியன் உசைன் போல்ட் விருப்பம் தெரிவித்துள்ளார்.

உலக கிரிக்கெட்டில் எண்ணற்ற சாதனைகள் படைத்து வருபவர் இந்திய மாஸ்டர் பேட்ஸ்மேன் சச்சின். இதேபோல, தடகள உலகில் சாதனை வீரராக இருப்பவர் ஜமைக்காவின் உசைன் போல்ட். "மின்னல் மனிதன்' என்றழைக்கப்படும் இவர் 100 மீ., ஓட்டத்தை 9.58 வினாடியில் கடந்து, உலக சாதனை படைத்துள்ளார்.

தவிர, ஒலிம்பிக் மற்றும் உலக சாம்பியன்ஷிப் தொடரில், தங்கம் வென்றுள்ளார். இம்முறை சச்சின் வெஸ்ட் இண்டீஸ் சென்றிருந்தால், கிங்ஸ்டன் ஜமைக்காவில் நடந்த டெஸ்ட் போட்டியில் பங்கேற்று இருப்பார். சச்சின், ஓய்வில் இருப்பதால் இது நடக்கவில்லை.

இதனிடையே சச்சின் குறித்து, ஜமைக்காவின் உசைன் போல்ட் கூறியது:

நான் பார்த்த கிரிக்கெட் வீரர்களில், என்னைப் பொறுத்தவரையில் சச்சின் தான் சிறந்த வீரர். கிரிக்கெட்டில் பல சாதனைகள் படைத்துள்ள இவர், களத்தில் கடுமையான போராட்டத்தை வெளிப்படுத்துவார். இவரது விளையாட்டை நேரில் காணும் நாளை எதிர்பார்த்து காத்திருக்கின்றேன்.


இதுதான் எனது நீண்ட நாளைய கனவாக உள்ளது. இவர் ஜமைக்காவில் விளையாடி இருந்தால் நன்றாக இருந்திருக்கும். இதேபோல, தோனியும் சிறந்த வீரர். இவரும் களத்தில் போராடுவதில் வல்லவர். இவரது ஆட்டத்தையும் காணவேண்டும்.


கெய்லுக்கு பாராட்டு:

வெஸ்ட் இண்டீஸ் வீரர் கிறிஸ் கெய்லை இதுவரை நேரில் சந்தித்தது இல்லை. எனது விருப்பமான வீரரான இவர். வெஸ்ட் இண்டீஸ் அணிக்காக மீண்டும் விளையாட வேண்டும் என்று விரும்புகின்றேன்.


இந்தியா வருவேன்:

இந்தியாவில் எனக்காக அதிக ரசிகர்கள் இருப்பதாக கேள்விப்பட்டேன். எனக்கு ஆதரவளித்து வரும் இவர்களுக்கு நன்றி. காமன்வெல்த் போட்டியில் பங்கேற்காத நான், எப்படியும் இந்தியா வருவேன் என்று நம்புகிறேன்.

வரும் ஆகஸ்ட் மாதம் தென்கொரியாவில் துவங்கும் உலக சாம்பியன்ஷிப் தொடர் எனக்கு விருப்பமானது. எனது முழுக்கவனத்தையும் செலுத்தி, இங்கு சிறப்பாக செயல்பட உள்ளேன் என்றார்.

நழுவியது நம்பர்-1

ஐ.சி.சி., டெஸ்ட் பேட்ஸ்மேன்களுக்கான ரேங்கிங் பட்டியலில், இந்திய "மாஸ்டர் பேட்ஸ்மேன்' சச்சின் "நம்பர்-1' இடத்தை இழந்தார்.

டெஸ்ட் அரங்கில் சிறந்து விளங்கும் வீரர்களுக்கான ரேங்கிங் (தரவரிசை) பட்டியலை, சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.,) துபாயில் நேற்று வெளியிட்டது.

இதில், வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் பங்கேற்காததால், இந்திய "மாஸ்டர் பேட்ஸ்மேன்' சச்சின் (873 புள்ளி), "நம்பர்-1' இடத்தை இழந்தார். இதன்மூலம் தென் ஆப்ரிக்க "ஆல்-ரவுண்டர்' காலிஸ் (883 புள்ளி) முதலிடத்தை தக்க வைத்துக் கொண்டார்.


டிராவிட் முன்னேற்றம்:

இந்தியாவின் டிராவிட், ஒன்பது இடங்கள் முன்னேறி 20வது இடம் பிடித்தார். இதற்கு, சமீபத்தில் ஜமைக்காவில் நடந்த வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான முதல் டெஸ்டின் இரண்டாவது இன்னிங்சில் சதம் அடித்து வெற்றிக்கு வித்திட்டதே காரணம்.

முதல் இன்னிங்சில் பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய சுரேஷ் ரெய்னா, 26 இடங்கள் முன்னேறி 61வது இடம் பிடித்தார். முதல் டெஸ்டில் பெரிய அளவில் சோபிக்காத லட்சுமண் (13வது இடம்), கேப்டன் தோனி (38வது இடம்) உள்ளிட்ட இந்திய பேட்ஸ்மேன்கள் பின்னடைவை சந்தித்தனர்.


இஷாந்த் அபாரம்:

பவுலர்களுக்கான ரேங்கிங்கில், இந்திய வேகப்பந்துவீச்சாளர் இஷாந்த் சர்மா மூன்று இடங்கள் முன்னேறி 11வது இடம் பிடித்தார். வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான முதல் டெஸ்டில் இரண்டு இன்னிங்சிலும் சேர்த்து மொத்தம் ஆறு விக்கெட் வீழ்த்தியதே இம்முன்னேற்றத்துக்கு காரணம்.

தென் ஆப்ரிக்க வேகப்பந்துவீச்சாளர் ஸ்டைன், இங்கிலாந்து சுழற்பந்துவீச்சாளர் சுவான், வேகப்பந்துவீச்சாளர் ஜேம்ஸ் ஆண்டர்சன் உள்ளிட்டோர் "டாப்-3' வரிசையில் உள்ளனர்.

இங்கிலாந்து தொடருக்கு தயார் - யுவராஜ்

தற்போது 100 சதவீதம் குணமடைந்துள்ளேன். எதிர்வரும் இங்கிலாந்து எதிரான தொடருக்கு தயாராக உள்ளேன்,'' என, இந்திய வீரர் யுவராஜ் தெரிவித்துள்ளார்.

கடந்த உலககோப்பை தொடரில் 362 ரன்கள் எடுத்து, 15 விக்கெட் வீழ்த்திய யுவராஜ் சிங், சுவாச தொற்று காரணமாக வெஸ்ட்இண்டீஸ் அணிக்கு எதிரான தொடரில் பங்கேற்கவில்லை. இது குறித்த யுவராஜ் சிங் கூறியது:

உலக கோப்பை தொடருக்கு முன்பாக, காயம் காரணமாக அணியில் இருந்து நீக்கப்பட்டது மிகவும் வருத்தமாக இருந்தது. இந்த காலம் தான் எனது வாழ்வின் சோதனையான நேரம். இந்த நேரத்தில் முக்கியமான விஷயங்களை கற்றுக்கொண்டேன்.

இத் தொடரில் பங்கேற்க வேண்டும் என்பது எனது முக்கிய லட்சியம். ஒருவழியாக அணியில் இடம் பெற்று, உலக கோப்பை தொடரில் சாதித்து கோப்பை வென்றது மகிழ்ச்சியாக இருந்தது. நீண்ட நாளைய கனவை, நனவாக மாற்றியதுக்கு அனைவரும் வாழ்த்துக்களை தெரிவித்தனர். உலக கோப்பை வென்றது எங்களது மிகப்பெரிய சாதனை.


தயாராக உள்ளேன்:

இதன் பின் ஏற்பட்ட சுவாச தொற்று காரணமாக வெஸ்ட்இண்டீஸ் தொடரில் பங்கேற்ற முடியாதது வருத்தம் அளிக்கிறது. தற்போது இதிலிருந்து 100 சதவீதம் குணமடைந்து இங்கிலாந்து தொடருக்கு தயாராக உள்ளேன். எனது மருத்துவ சான்றிதழை பி.சி.சி.ஐ.,க்கு விரைவில் அனுப்புவேன்.


ரசிகர்கள் ஆதரவு:

இங்கிலாந்து தொடரில் நிச்சயமாக கலந்து கொள்ள முடியும் என்ற நம்பிக்கை உள்ளது. இதேபோல, மற்ற சீனியர் வீரர்களும் தயாராகி விடுவார்கள் என்று எதிர்பார்க்கின்றேன்.

கோல்கட்டாவின் ஈடன் கார்டனில், மீண்டும் போட்டிகள் நடக்கவுள்ளது மகிழ்ச்சி அளிக்கிறது. வேறெந்த மைதானத்திலும் பார்க்க முடியாத, வித்தியாசமான உணர்வை ஈடன் கார்டனில் காணலாம். அந்தளவுக்கு ரசிகர்கள் இந்திய அணிக்கு ஆதரவு தருவார்கள்.


வீரர்களுக்கு பாராட்டு:

வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான ஒருநாள் போட்டித் தொடரில் பேட்டிங்கில் விராத் கோஹ்லி, ரோகித் சர்மா இருவரும் இணைந்து அருமையாக செயல்பட்டனர். அமித் மிஸ்ரா, முனாப் பவுலிங்கில் முத்திரை பதித்தனர். ஒரு சில வீரர்கள் சிறப்பாக செயல்படாததால் தான் கடைசி இரண்டு போட்டிகளில் தோல்வி கிடைத்தது.

நான் டி.ஆர்.எஸ்., முறைக்கு சாதகமாகவோ, எதிராகவோ எந்த கருத்தினையும் தெரிவிக்கவில்லை. என்னுடைய வேலை கிரிக்கெட் விளையாடுவது தான். இதனை பற்றி முடிவு எடுப்பது அல்ல. எந்த முறையாக இருந்தாலும் அது நியாமானதாக இருக்க வேண்டும்.

கங்குலி இதற்கு முன் நிறைய வெற்றிகளை கொடுத்துள்ளார் கங்குலி. அவரைப்பற்றி அனைவருக்கும் தெரியும். அவர் தன்னை நிரூபிக்க வேண்டிய அவசியம் இல்லை. கடந்த ஐ.பி.எல்., தொடரில் சாதிக்காத நாங்கள், அடுத்த தொடரில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி எங்களை நிரூபிப்போம்.

இவ்வாறு யுவராஜ் கூறினார்.

பலன் தந்த சீனியர்கள் ஆலோசனை

பேட்டிங்கின் போது, "ஷார்ட் பிட்ச்' பந்துகளை எதிர்கொள்வது குறித்து, டிராவிட் உள்ளிட்ட சீனியர் வீரர்கள் தந்த ஆலோசனை, நல்ல பலனை தந்தது,'' என, இந்திய வீரர் ரெய்னா தெரிவித்துள்ளார்.

வெஸ்ட் இண்டீஸ் சென்றுள்ள இந்தியா, மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்கிறது. முதல் டெஸ்ட் கிங்ஸ்டன் ஜமைக்காவில் நடக்கிறது. இதன் முதல் இன்னிங்சில் இந்திய வீரர் ரெய்னா, 82 ரன்கள் எடுத்து அணியின் ஸ்கோரை உயர்த்த உதவினார்.


ரெய்னா கூறியது:

டெஸ்ட் போட்டிகளில் ரன்கள் எடுப்பது என்பது எளிதானதல்ல. களத்தில் அதிக நேரம் செலவிட வேண்டும். எதிரணியினரின் திறமைக்கு மதிப்பு தரவேண்டும். பவுலர்களை எப்போதும் கண்காணிக்க வேண்டும். யார் பந்து வீசுகிறார், யார் பந்தை "சுவிங்' செய்கிறார், அந்த பந்துகளை எப்படி நகர்ந்து சென்று விளையாடுவது என திட்டமிட வேண்டும்.


சரியான திட்டமிடல்:

முதல் 15-20 பந்துகளில் ரன்கள் எடுக்கக் கூடாது. ஒருநாள் தொடரில் கடைசி மூன்று போட்டிகளில் சரியாக ரன்கள் சேர்க்கவில்லை. இதனால் இந்த போட்டியில் அதிக ரன்கள் எடுக்க திட்டமிட்டு இருந்தேன்.


"சீனியர்கள்' ஆலோசனை:

தவிர, போட்டியின் போது வேகப்பந்து வீச்சாளர்களை, நேரடியாக அடித்து விளையாட திட்டமிட்டு இருந்தேன். "ஷார்ட் பிட்ச்' பந்துகளை எதிர்கொள்வது குறித்து பயிற்சியாளர் டங்கன் பிளட்சருடன் கடினமாக பயிற்சிகள் செய்தேன்.

சீனியர் வீரர் டிராவிட், கேப்டன் தோனியிடமும் ஆலோசித்தேன். இதுபோன்று பந்துகள் வரும் போது, தலையை குனிந்து கொண்டு, விக்கெட் கீப்பரிடம் விட்டுவிட வேண்டும் என இவர்கள் அறிவுரை தந்தனர்.


மகிழ்ச்சியாக உள்ளது:

இப்போது மனது தெளிவாக உள்ளது. யார் பந்து வீசுகின்றார், எந்த இடத்தில் "பிட்ச்' ஆகிறது என்பதெல்லாம் கவலையில்லை. நல்லதையே நினைத்து நன்றாக பேட்டிங் செய்ய முயற்சிப்பேன். பின் வரிசையில் ஹர்பஜன் சிங், அமித் மிஸ்ரா, பிரவீண் குமார் ஆகியோர் களத்தில் நிலைத்து பேட்டிங் செய்வர் என எனக்குத் தெரியும்.

இவர்களுடன் நானும் சேர்ந்து அணியின் ஸ்கோரை உயர்த்த முடிவுசெய்தேன். இந்த ஆடுகளத்தில் புதிய பந்தில், பவுலிங் நன்றாக எடுபடுகிறது. துவக்கத்தில் சில விக்கெட்டுகளை வீழ்த்திவிட்டால், அப்புறம் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு சிக்கல் தான்.

இவ்வாறு ரெய்னா தெரிவித்தார்.

சென்னையில் சாம்பியன்ஸ் லீக் "டுவென்டி-20

டுவென்டி-20' கிரிக்கெட் தொடருக்கான போட்டிகள் சென்னை, பெங்களூரு, கோல்கட்டாவில் உள்ள மைதானங்களில் நடக்கவுள்ளது.

இந்தியா, ஆஸ்திரேலியா மற்றும் தென் ஆப்ரிக்க கிரிக்கெட் போர்டுகள் இணைந்து, சர்வதேச அளவில் உள்ளூர் போட்டிகளில் சாதித்த அணிகளுக்கு இடையிலான சாம்பியன்ஸ் லீக் "டுவென்டி-20' கிரிக்கெட் தொடரை ஆண்டுதோரும் நடத்துகின்றன. மூன்றாவது சாம்பியன்ஸ் லீக் தொடர் செப்.23ம் தேதி முதல் அக்.9ம் தேதி வரை இந்தியாவில் நடக்கிறது.


சென்னையில் பைனல்:

இப்போட்டிகள் அனைத்தும் சென்னை, பெங்களூரு, கோல்கட்டா உள்ளிட்ட மூன்று முக்கிய நகரங்களில் உள்ள மைதானங்களில் நடக்கவுள்ளது. பெங்களூருவில் உள்ள சின்னசாமி மைதானத்தில் வரும் செப்.23ம் தேதி தொடரின் முதல் போட்டி நடக்கவுள்ளது. தவிர இங்கு, ஒரு அரையிறுதிப் போட்டியும் நடக்கவுள்ளது. சென்னையில் உள்ள சேப்பாக்கம் மைதானத்தில் அக்.9ம் தேதி பைனல் நடக்கவுள்ளது. இங்கு, ஒரு அரையிறுதிப் போட்டியும் நடக்கிறது.


தகுதிச் சுற்று:

இத்தொடரில் 13 அணிகள் பங்கேற்க உள்ளன. ஏழு அணிகள் நேரடியாக சாம்பியன்ஸ் லீக் தொடருக்கு தகுதி பெற்றுவிட்டன. மீதி அணிகளுக்கு, தகுதிச் சுற்று நடத்தப்படும். முதல் மூன்று இடங்களை பிடிக்கும் அணிகள் மட்டுமே, சாம்பியன்ஸ் லீக் தொடரில் பங்கேற்க முடியும்.

இதன்மூலம் 10 அணிகள் (நேரடி 7 + தகுதிச் சுற்று 3) இரண்டு பிரிவுகளாக பிரிக்கப்பட்டு லீக் சுற்று நடத்தப்படும். ஒவ்வொரு பிரிவிலும் முதல் இரண்டு இடங்களை பிடிக்கும் அணிகள் அரையிறுதிக்கு தகுதி பெறும்.


கோல்கட்டா வாய்ப்பு:

சமீபத்தில் நடந்த நான்காவது ஐ.பி.எல்., தொடரில் சாம்பியன் பட்டம் வென்ற சென்னை சூப்பர் கிங்ஸ், இரண்டாவது இடம் பிடித்த பெங்களூரு ராயல் சாலஞ்சர்ஸ், மூன்றாவது இடம் பிடித்த மும்பை இந்தியன்ஸ், சவுத் ஆஸ்திரேலியன் ரெட்பேக்ஸ் (ஆஸ்திரேலியா), நியூ சவுத் வேல்ஸ் புளூ (ஆஸ்திரேலியா), வாரியர்ஸ் (தென் ஆப்ரிக்கா), கேப் கோப்ரா (தென் ஆப்ரிக்கா) உள்ளிட்ட ஏழு அணிகள் நேரடியாக தகுதி பெற்றுவிட்டன.

நான்காவது ஐ.பி.எல்., தொடரில் நான்காவது இடம் பிடித்த கோல்கட்டா நைட்ரைடர்ஸ், ஆக்லாந்து ஆசஸ் (நியூசிலாந்து), டிரினிடாட் அன்ட் டுபாகோ (வெஸ்ட் இண்டீஸ்), இங்கிலாந்து கவுன்டி சாம்பியன் மற்றும் இரண்டாவது இடம் பிடிக்கும் அணிகள், இலங்கையில் நடக்கும் "டுவென்டி-20' சாம்பியன் உட்பட ஆறு அணிகள் தகுதிச் சுற்றில் மோத உள்ளன. இப்போட்டிகள் செப்.19-21ம் தேதிகளில் ஐதராபாத்தில் நடக்கவுள்ளது.

இத்தொடருக்கான முழு அட்டவணை, விரைவில் வெளியிடப்படும் என சாம்பியன்ஸ் லீக் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

இந்திய வீரர்களுக்கு அதிரடி தடை

இலங்கை பிரிமியர் லீக் தொடரில் பங்கேற்க அஷ்வின், இர்பான் பதான், முனாப் படேல் உள்ளிட்ட 12 இந்திய வீரர்களுக்கு பி.சி.சி.ஐ., அதிரடியாக தடை விதித்துள்ளது.

இலங்கையில் வரும் ஜூலை 19 முதல் ஆகஸ்ட் 4ம் தேதி வரை இலங்கை பிரிமியர் லீக்(எஸ்.எல்.பி.எல்.,) "டுவென்டி-20' தொடர் நடக்க உள்ளது. இதில், கெய்ல்(வெ.இண்டீஸ்), அப்ரிதி(பாக்,,), வெட்டோரி(நியூசி.,) போன்ற வெளிநாட்டு வீரர்கள் பங்கேற்கின்றனர்.

இந்தியா சார்பில் அஷ்வின், தினேஷ் கார்த்திக், இர்பான் பதான், முனாப் படேல், சவுரப் திவாரி உள்ளிட்ட 12 வீரர்கள் பங்கேற்க இருந்தனர். இவர்களுக்கு முதலில் இந்திய கிரிக்கெட் போர்டு(பி.சி.சி.ஐ.,) அனுமதி வழங்கியது. ஆனால், நேற்று திடீரென அனுமதி மறுத்தது. தனியார் நிறுவனம் நடத்தும் தொடர் என்பதால் இத்ததைய முடிவு மேற்கொள்ளப்பட்டதாம்.

இது குறித்து பி.சி.சி.ஐ., தலைவர் சஷான்க் மனோகர் கூறுகையில்,""தனியார் நிறுவனம் நடத்தும் கிரிக்கெட் தொடர்களில் இந்திய வீரர்களை பங்கேற்க அனுமதிப்பது இல்லை. இதன்படி சிங்கப்பூர் நிறுவனம் ஒன்று நடத்த உள்ள எஸ்.எல்.பி.எல்., தொடரில் பங்கேற்க அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.

இத்தொடரை இலங்கை கிரிக்கெட் போர்டு நடத்துகிறது என நினைத்து தான் முதலில் அனுமதி தரப்பட்டது. இது பற்றி இலங்கை கிரிக்கெட் போர்டுக்கு தெரிவித்து விட்டோம். இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக ஐ.பி.எல்., தொடருக்கு இலங்கை தரப்பில் இருந்து தடை விதிக்கப்படும் என நினைக்கவில்லை,''என்றார்.


மீண்டும் மோதல்:

சமீபத்திய ஐ.பி.எல்., தொடரின் பாதியில், தனது வீரர்களை திரும்ப அழைத்து இலங்கை நெருக்கடி கொடுத்தது. இதன் காரணமாகவே தற்போது பி.சி.சி.ஐ., அனுமதி மறுத்துள்ளதாக கூறப்படுகிறது. இதனால் இரு நாட்டு கிரிக்கெட் போர்டுகள் இடையே மீண்டும் மோதல் ஏற்பட்டுள்ளது.


இலங்கை மறுப்பு

பி.சி.சி.ஐ., புகாரை இலங்கை கிரிக்கெட் போர்டு மறுத்தது. இதன் செயலர் நிஷாந்தா ரணதுங்கா கூறுகையில்,"" எஸ்.எல்.பி.எல்., தொடருக்கு இலங்கை கிரிக்கெட் போர்டு அங்கீகாரம் அளித்துள்ளது. இத்தொடருக்கான உரிமையாளர் நாங்கள் தான்.

"டெண்டர்' மூலம் மார்க்கெட்டிங் உரிமையை மட்டுமே சிங்கப்பூரை சேர்ந்த சாமர்சட் நிறுவனம் பெற்றது. இதன் அடிப்படையில் சாமர்சட் தான் உரிமையாளர் என கூற முடியாது. இவ்விஷயத்தில் பி.சி.சி.ஐ., முடிவு வியப்பும் வேதனையும் அளிக்கிறது.

இது குறித்து அவர்களுக்கு தேவையான விளக்கம் அளிக்க தயாராக உள்ளோம். இத்தொடரில் இந்திய வீரர்கள் இடம் பெறுவது மிகவும் முக்கியம்,''என்றார்.

தேவையா டி.ஆர்.எஸ்., முறை

தற்போதைய டி.ஆர்.எஸ்., முறை நம்பிக்கை இல்லாதது. இதுகுறித்த தங்களது முடிவில் எந்த மாற்றமும் இல்லை,'' என, இந்திய கிரிக்கெட் போர்டு (பி.சி.சி.ஐ.,) உறுதியாக தெரிவித்துள்ளது.

சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.,) சார்பில், அம்பயர் தீர்ப்பு மறுபரிசீலனை (டி.ஆர்.எஸ்.,) முறை கொண்டு வரப்பட்டது. இதை துவக்கத்தில் இருந்தே பி.சி.சி.ஐ., எதிர்த்து வருகிறது. இந்திய அணி கேப்டன் தோனியும் இதை எதிர்த்து வருகிறார்.

ஆனால், இந்திய அணியின் முன்னாள் பயிற்சியாளர் கிறிஸ்டன், சேவக் ஆகியோர் டி.ஆர்.எஸ்., முறைக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர். மாஸ்டர் பேட்ஸ்மேன் சச்சின் இதுகுறித்து கூறுகையில்,"" இதில் "ஸ்னிக்கோ மீட்டர்', "ஹாட் ஸ்பாட்' உதவிகளையும் சேர்த்து, தீர்ப்பு வழங்கினால் இன்னும் துல்லியமாக இருக்கும்,'' என்றார்.

பி.சி.சி.ஐ., கடும் எதிர்ப்பு காரணமாக, நாளை துவங்கும் வெஸ்ட் இண்டீஸ் தொடர், எதிர்வரும் இங்கிலாந்து தொடரில் இம்முறை பயன்படுத்தப்படவில்லை. இதற்கு இங்கிலாந்தின் சுவான், ஆண்டர்சன், டிரம்லெட் ஆகியோர் எதிர்ப்பு தெரிவித்தனர்.


பி.சி.சி.ஐ., வெளியிட்ட அறிக்கை:

டி.ஆர்.எஸ்., குறித்து சில நாட்களாக "மீடியா' அதிகமாக விமர்சித்து வருகிறது. இருப்பினும் இந்த முறையை பொறுத்தவரையில் பி.சி.சி.ஐ., நிலையில் உறுதியாக உள்ளது. ஏனெனில், தற்போதைய தொழில்நுட்ப முறையில், பந்து செல்லும் பாதையை கணக்கிடுவதில் துல்லியம் இல்லை.


நம்பகமில்லாமல் இருக்கும் இந்த முறையை ஏற்றுக்கொள்ள முடியாது. இதனால் எங்களது நிலையில் மாற்றம் இல்லை என்பதை உறுதியாக கூறுகிறோம்.

இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.


அம்பயர் எதிர்ப்பு:

ஐ.சி.சி., முன்னாள் அம்பயர் வெங்கட்ராகவன் (இந்தியா) கூறுகையில்,"" தொழில் நுட்பத்தை கொண்டு வர வேண்டும் என்று நினைத்தால், 100 சதவீதம் யாருக்கும் எந்த சந்தேகமும் ஏற்படாத வகையில் இருக்க வேண்டும். பந்து செல்வதை கணக்கிடுவதில், கடந்த உலக கோப்பை தொடரில் குழப்பம் ஏற்பட்டது. என்னைப் பொறுத்தவரையில், டி.ஆர்.எஸ்., முறையை எதிர்க்கிறேன்,'' என்றார்.

---

பி.சி.சி.ஐ., எதிர்த்த போதிலும், இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலிய கிரிக்கெட் போர்டுகள், இம்முறைக்கு துவக்கத்தில் இருந்தே ஆதரவு தெரிவித்து வருகின்றன.

கேள்விக்குறியானது கெயிலின் எதிர்காலம்?

கடந்த மாதம் வானொலிக்கு அளித்த பேட்டியில் கிரிக்கெட் வாரியம் குறித்து சில கருத்துகளை கெயில் கூறியிருந்தார். அவரது கருத்துகளால் கோபமடைந்த கிரிக்கெட் வாரியம், இந்தியாவுக்கு எதிரான ஒரு தினத் தொடரில் அவருக்கு இடம் அளிக்கவில்லை.

மேற்கிந்தியத் தீவுகள் அணிக்காக அதிரடி வீரர் கிறிஸ் கெயில் விளையாடுவது கேள்விக்குறியாகி உள்ளது.

இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடர் ஜூன் 20-ல் தொடங்க உள்ளது. டெஸ்ட் தொடரில் அவர் இடம்பெறுவது தொடர்பாக இருதரப்புக்கும் இடையேயான கூட்டம் கிங்ஸ்டனில் புதன்கிழமை நடைபெற்றது.

இதில் கெயிலுடன் வீரர்கள் சங்கத் தலைவர் தினாநாத் ராம்நாராயண், துணைத் தலைவர் வேவல் ஹைண்ட்ஸ் ஆகியோரும், வாரியத்தின் தரப்பில் தலைமை நிர்வாக அதிகாரி எர்னஸ்ட் ஹிலாரே, கிரிக்கெட் இயக்குநர் டோனி ஹோவர்ட், தலைமைப் பயிற்சியாளர் ஓட்டீஸ் கிப்சன், மேலாளர் ரிச்சி ரிச்சர்ட்சன் ஆகியோர் பங்கேற்றனர்.

சுமார் 4 மணி நேரம் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில் காரசாரமான விவாதத்துடன் மோதல் வெடித்துள்ளது. ஒரு கட்டத்தில் ஹிலாரேயை ராம்நாராயண் தாக்க முயற்சித்ததாகக் கூறப்படுகிறது

ஐ.பி.எல்.லில் கொடுக்கப்படும் பணத்துக்கு ஈடாக பணம் அளித்தால் மேற்கிந்தியத் தீவுகள் அணிக்கு விளையாடுவேன் என கெயில் கூறியதிலிருந்து பிரச்னை துவங்கியதாகக் கூறப்படுகிறது.

4 மணி நேரத்துக்கும் மேல் ஆலோசனை நடைபெற்றும் ஒரு முடிவுக்கு வர முடியவில்லை. அதனால் இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் கிறிஸ் கெயில் பங்கேற்பது சாத்தியமில்லாததாகிவிட்டது என கிரிக்கெட் வாரிய அதிகாரி தெரிவித்ததாக "டிரினிடாட் எக்ஸ்பிரஸ்' செய்தி வெளியிட்டுள்ளது.

அந்த அதிகாரி மேலும் கூறியதாவது: கெயிலுக்கு எந்த நிபந்தனையும் விதிக்காமல் அணியில் சேர்த்துக் கொள்ள வேண்டும் என வீரர்கள் கருத்து தெரிவித்தனர். அவரது கருத்தை கடந்த கால நிகழ்வாகக் கருதி அடுத்த கட்ட நடவடிக்கைக்குத் தயாராக வேண்டும் என வீரர்கள் வேண்டுகோள் விடுத்தனர்.

கெயிலின் கருத்து வாரியத்தையும், அதிகாரிகளையும் அவமானப்படுத்தும் விதத்தில் இருந்தது. எனவே, அவர் அதற்கு தகுந்த விளக்கம் அளிக்க வேண்டும் என வாரிய அதிகாரிகள் கூறினர்.

"ரீடெய்னர்' ஒப்பந்தத்தில் கெயில் கையெழுத்திட்டால்தான் கேப்டன் பதவிக்கு அவரது பெயர் பரிசீலிக்கப்படும் என வாரியம் உறுதிபடத் தெரிவித்தது. ஆனால், அத்தகைய ஒப்பந்தத்தில் கையெழுத்திடப் போவதில்லை என்பதில் கெயிலும் உறுதியாக இருந்ததால் பிரச்னை அதிகரித்தது என்றார்.

இப்போதைக்கு இருதரப்பும் சந்திக்க திட்டமிடப்படாததால் மேற்கிந்தியத் தீவுகள் அணியில் கெயில் பங்கேற்பது கேள்விக்குறியாகி உள்ளது.

பதிலடி கொடுக்குமா இளம் இந்தியா

இந்தியா, வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையிலான ஐந்தாவது ஒருநாள் போட்டி கிங்ஸ்டன் நகரில் இன்று நடக்கிறது. கடந்த போட்டியில் சந்தித்த தோல்விக்கு இம்முறை இந்திய அணி பதிலடி கொடுக்க தயாராக உள்ளது.

வெஸ்ட் இண்டீஸ் சென்றுள்ள ரெய்னா தலைமையிலான இளம் இந்திய அணி, ஐந்து போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் பங்கேற்கிறது. முதல் நான்கு போட்டிகளின் முடிவில் இந்திய அணி 3-1 என தொடரை கைப்பற்றி முன்னிலை வகிக்கிறது. ஐந்தாவது மற்றும் கடைசி போட்டி கிங்ஸ்டன் நகரில் இன்று நடக்கிறது.


ரோகித் நம்பிக்கை:

முதல் மூன்று போட்டியில் அசத்திய இந்திய அணி, நான்காவது போட்டியில் சறுக்கியது. இன்று எழுச்சி காண வேண்டும். இதுவரை நான்கு போட்டிகளில் 200 ரன்கள் எடுத்துள்ள ரோகித் சர்மா, "மிடில்-ஆர்டரில்' நம்பிக்கை அளிப்பது பலம். துவக்க வீரராக பார்த்திவ் படேல் சிறப்பாக செயல்படுகிறார். இவருக்கு மனோஜ் திவாரி, ஷிகர் தவான் உள்ளிட்டோர் ஒத்துழைப்பு அளித்தால் நல்லது. விராத் கோஹ்லி, பத்ரிநாத், ரெய்னா, யூசுப் பதான் உள்ளிட்ட முன்னணி பேட்ஸ்மேன்கள் அசத்தினால், இமாலய இலக்கை பதிவு செய்யலாம்.


மிஸ்ரா அபாரம்:

இந்திய அணியின் மிகப் பெரிய பலம் சுழற்பந்துவீச்சு. கடந்த நான்கு போட்டிகளில் ஒன்பது விக்கெட் வீழ்த்தியுள்ள சுழற்பந்துவீச்சாளர் அமித் மிஸ்ரா, இன்றும் விக்கெட் வேட்டை நடத்தலாம். இவருக்கு ஹர்பஜன் சிங், அஷ்வின் உள்ளிட்டோர் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும். வேகத்தில் முனாப் படேல், பிரவீண் குமார் நம்பிக்கை அளிக்கின்றனர்.


சர்வான் ஆறுதல்:

வெஸ்ட் இண்டீஸ் அணி சிறந்த துவக்கம் இல்லாமல் திணறுகிறது. கடந்த போட்டியில் அரைசதம் கடந்த சிம்மன்ஸ் இன்றும் சாதிக்கலாம். கடந்த நான்கு போட்டிகளில் 141 ரன்கள் எடுத்துள்ள அனுபவ வீரர் சர்வான், ஓரளவு ஆறுதல் அளிக்கிறார். போலார்டு, கார்ல்டன் பாக், ஆன்ட்ரூ ரசல் உள்ளிட்டோர் அதிரடியாக எழுச்சி கண்டிருப்பது பேட்டிங் பலத்தை அதிகரித்துள்ளது. இவர்களுடன் டேரன் பிராவோ, சாமுவேல்ஸ் உள்ளிட்டோர் அதிரடி காட்டும் பட்சத்தில் நல்ல ஸ்கோரை பெறலாம்.


மார்டின் துல்லியம்:

வெஸ்ட் இண்டீஸ் அணியின் வேகப்பந்துவீச்சில் கேப்டன் டேரன் சமி நம்பிக்கை அளிக்கிறார். இவருக்கு ஆன்ட்ரூ ரசல், ரவி ராம்பால், கீமர் ரோச் உள்ளிட்டோர் கைகொடுத்தால் நல்லது. சுழலில் தேவேந்திர பிஷூ சிறப்பாக செயல்படுகிறார்.

கடந்த போட்டியில் விக்கெட் மழை பொழிந்த அந்தோனி மார்டின், இன்றும் சுழலில் சாதிக்கும் பட்சத்தில் இரண்டாவது வெற்றியை பெறலாம்.

இப்போட்டியில் கிடைக்கும் வெற்றி, அடுத்து வரவுள்ள டெஸ்ட் தொடருக்கு மனரீதியாக உற்சாகம் அளிக்கும் என்பதால், இரு அணிகளும் முழுத்திறமையை வெளிப்படுத்தலாம்.
----

கெய்ல் இல்லை

ஐந்தாவது ஒருநாள் போட்டிக்கான வெஸ்ட் இண்டீஸ் அணி நேற்று அறிவிக்கப்பட்டது. இதில் கிர்க் எட்வர்ட்ஸ், ஹயாத் நீக்கப்பட்டனர். இவர்களுக்கு பதிலாக அட்ரியன் பரத், ரவி ராம்பால் இடம் பிடித்துள்ளனர். நட்சத்திர துவக்க வீரர் கிறிஸ் கெய்லுக்கு மீண்டும் வாய்ப்பு மறுக்கப்பட்டது.