தென் ஆப்ரிக்கா மீண்டும் நம்பர் 1

பரபரப்பான கொழும்பு டெஸ்ட் போட்டியை டிரா செய்த தென் ஆப்ரிக்க அணி, தொடரை 1–0 என கைப்பற்றியது. இதன் மூலம் டெஸ்ட் ரேங்கிங் பட்டியலில் மீண்டும் நம்பர்–1 இடத்தை பெற்றது. இலங்கை அணியின் போராட்டம் வீணானது.

இலங்கை சென்ற தென் ஆப்ரிக்க அணி இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்றது. முதல் டெஸ்டில் வென்ற தென் ஆப்ரிக்கா 1–0 என முன்னிலை வகித்தது. 

இரண்டாவது டெஸ்ட் கொழும்புவில் நடந்தது. முதல் இன்னிங்சில் இலங்கை 421, தென் ஆப்ரிக்கா 282 ரன்கள் எடுத்தன. இரண்டாவது இன்னிங்சில் இலங்கை அணி 8/229 ரன்களுக்கு ‘டிக்ளேர்’ செய்தது. 

இதன் மூலம் தென் ஆப்ரிக்காவுக்கு 369 ரன்கள் என்ற கடின வெற்றி இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. நான்காவது நாள் ஆட்ட நேர முடிவில், தென் ஆப்ரிக்க அணி இரண்டாவது இன்னிங்சில் ஒரு விக்கெட்டுக்கு 38 ரன்கள் எடுத்தது.

நேற்று கடைசி மற்றும் ஐந்தாவது நாள் ஆட்டம் நடந்தது. மழை அவ்வப்போது வந்து தொல்லை தந்தது. இதனால் ஆட்டம் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக தடைபட்டது. தென் ஆப்ரிக்க அணிக்கு எல்கர் (13) ஏமாற்றினார். 

ஹெராத் வலையில் குயின்டன் (37), டிவிலியர்ஸ் (12) சிக்கினர்.  திருவான் பெரேரா சுழற்பந்துவீச்சில் கேப்டன் ஆம்லா (25), டுமினி (3) அவுட்டாகினர். ஸ்டைன் 6 ரன்களில் ஆட்டமிழந்தார். இதையடுத்து தென் ஆப்ரிக்க அணி 8 விக்கெட்டுக்களை இழந்து தவிக்க, ஆட்டத்தில் சூடு பிடித்தது.

கடைசி ஒரு மணி நேரத்தில் எஞ்சிய இரு விக்கெட்டை கைப்பற்ற, இலங்கை அணி மேற்கொண்ட முயற்சிகள் வீணாகின. துாணாக நின்ற பிலாண்டர் கைகொடுக்க, தென் ஆப்ரிக்க அணி இரண்டாவது இன்னிங்சில் 8 விக்கெட்டுக்கு 159 ரன்கள் எடுத்து, போட்டியை ‘டிரா’ செய்தது. 


21 ஆண்டுக்குப்பின்:

சுமார் 21 ஆண்டுகளுக்குப்பின் இலங்கை மண்ணில் டெஸ்ட் தொடரை கைப்பற்றிய தென் ஆப்ரிக்க அணி(124 புள்ளிகள்), டெஸ்ட் தரவரிசையில் ‘நம்பர்–1’ இடத்தையும் பிடித்தது. இரண்டாவது, மூன்றாவது இடத்தில் முறையே ஆஸ்திரேலியா(123), பாகிஸ்தான் (103) அணிகள் உள்ளன. இந்திய அணி 102 புள்ளிகளுடன் நான்காவது இடத்தில் உள்ளது.

முற்றுகிறது ஜடேஜா விவகாரம் - ஐ.சி.சி., அபராதத்தை ஏற்க பி.சி.சி.ஐ., மறுப்பு

தள்ளு’ விவகாரத்தில் இந்தியாவின் ரவிந்திர ஜடேஜாவுக்கு ஐ.சி.சி., விதித்த அபராதத்தை ஏற்க பி.சி.சி.ஐ., மறுத்தது. இதனால், பி.சி.சி.ஐ., மற்றும் ஐ.சி.சி., இடையே மோதல் வெடித்துள்ளது.

இந்தியா, இங்கிலாந்து அணிகள் மோதிய முதல் டெஸ்ட் நாட்டிங்காமில் நடந்தது. இதன் இரண்டாவது நாள் ஆட்ட உணவு இடைவேளை முடிந்து திரும்பிய போது, இங்கிலாந்து பவுலர் ஆண்டர்சன், இந்திய வீரர் ரவிந்திர ஜடேஜா இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.     

 அப்போது ஜடேஜாவை பிடித்து தள்ளிய ஆண்டர்சன் மீது, இந்திய அணியும், ஜடேஜா மீது இங்கிலாந்து அணியும் புகார் கொடுத்தது. சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.,) விசாரிக்கிறது.

சவுத்தாம்ப்டனில் நடந்த ஜடேஜா தரப்பு விசாரணையில், இரு வீரர்கள் மற்றும் அவர்களது சட்ட ஆலோசகர்கள் பங்கேற்றனர். ‘மேட்ச் ரெப்ரி’ டேவிட் பூன் (ஆஸி.,), இரண்டு மணி நேரத்துக்கும் அதிகமாக விசாரித்தார்.

முடிவில், ஆண்டர்சனை நோக்கி மிரட்டும் வகையில் சென்றதாக தெரிவித்து, ஜடேஜாவுக்கு முதல் டெஸ்ட் போட்டி சம்பளத்தில், 50 சதவீதம் அபராதம் விதித்தார்.

ஆண்டர்சன் மீதான விசாரணை, மூன்றாவது டெஸ்ட் முடிந்த மறுநாள் (ஆக., 1) நடக்கும். ஐ.சி.சி.,யின் முடிவை ஏற்க இந்திய கிரிக்கெட் போர்டு (பி.சி.சி.ஐ.,) மறுத்தது.

ஏற்கனவே, இப்பிரச்னை காரணமாக, பி.சி.சி.ஐ., மற்றும் இங்கிலாந்து போர்டு இடையே உரசல் ஏற்பட்டது. இப்போது, பி.சி.சி.ஐ., மற்றும் ஐ.சி.சி., இடையே மோதல் ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

இதுகுறித்து பி.சி.சி.ஐ., வெ ளியிட்ட அறிக்கையில்,‘ ஐ.சி.சி., விதித்த தீர்ப்பு ஏற்றுக் கொள்ளத்தக்கது அல்ல. ஜடேஜா தரப்பில் எவ்வித தவறும் இல்லை என, நம்புகிறோம். இவ்விஷயத்தில் ஜடேஜாவுக்கு முழு ஆதரவு உண்டு,’ என, தெரிவித்துள்ளது.

தள்ளு விவகாரம் தள்ளிவைப்பு

ரவிந்திர ஜடேஜா, ஆண்டர்சன் ‘தள்ளு’ விவகாரம் தொடர்பான விசாரணை, ஆக., 1க்கு தள்ளிவைக்கப்பட்டது.

இங்கிலாந்து சென்றுள்ள இந்திய அணி, நாட்டிங்காமில் முதல் டெஸ்டில் பங்கேற்றது. 

இப்போட்டியின் இரண்டாவது நாள் ஆட்ட உணவு இடைவேளை முடிந்து திரும்பிய போது, இங்கிலாந்து பவுலர் ஆண்டர்சன், இந்திய வீரர் ரவிந்திர ஜடேஜா இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.

அப்போது ஜடேஜாவை பிடித்து தள்ளியுள்ளார் ஆண்டர்சன். இதுகுறித்து ஆண்டர்சன் மீது ‘லெவல்–3’, ஜடேஜா மீது ‘லெவல்–2’ ன் கீழ், இருதரப்பிலும் மாறி மாறி புகார் செய்யப்பட்டது.

சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் (ஐ.சி.சி.,) கமிஷனர் கார்டன் லுாயிஸ் சம்பவம் குறித்து விசாரிக்கிறார். 

நேற்று நடந்த முதற்கட்ட விசாரணையில், இரு நாடுகளின் கிரிக்கெட் போர்டுகள் சார்பில் சட்ட வல்லுனர்கள் குழு ஆஜராகியது.

தற்போது அடுத்த கட்ட விசாரணை, மூன்றாவது டெஸ்ட் முடிந்த மறுநாள் அதாவது, ஆக., 1ல் நடக்கும். ‘வீடியோகான்பரன்சிங்’ முறையில் இரு வீரர்களிடம் விசாரிக்கப்பட்டு, அடுத்த 48 மணி நேரத்தில் தீர்ப்பு வழங்கப்படும்.

ஒருவேளை தடை வழங்கப்பட்டால், அதை எப்போது முதல் அமல் படுத்துவது என்பதை லுாயிஸ் முடிவு செய்வார்.

ஷரபோவா கருத்துக்கு சச்சின் பதில்

லண்டனில் நடந்த விம்பிள்டன் டென்னிஸ் தொடரை இந்திய கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் நேரடியாக கண்டுகளித்தார். 

அப்போது. ரஷ்ய டென்னிஸ் வீராங்கனை ஷரபோவா, ‘சச்சினை யார் என்று தெரியாது’ என, கூறினார்.

சதத்தில் சதம் உட்பட பல சாதனைகள் படைத்த சச்சின் பற்றி, ஷரபோவா சொன்ன இந்த கருத்துக்கு கடும் எதிர்ப்பு கிளம்பியது.

இது குறித்து சச்சின் கூறுகையில்,‘‘ஷரபோவா கருத்தில் அவமதிப்பு எதுவும் இல்லை. அவர், கிரிக்கெட் போட்டியை பார்ப்பவர் அல்ல,’’ என்றார்.  

வெஸ்ட் இண்டீஸ் அணியின் சுனில் நரைன் சாதனை

வெஸ்ட் இண்டீஸ் அணியின் சுழற்பந்துவீச்சாளர் சுனில் நரைன், ‘டுவென்டி–20’ அரங்கில், ‘சூப்பர் ஓவரில்’ ‘மெய்டன்’ வீசிய முதல் வீரர் என்ற புதிய சாதனை படைத்தார்.

வெஸ்ட் இண்டீசில், கரீபியன் பிரிமியர் லீக் (சி.பி.எல்.,) தொடர் நடக்கிறது. கயானாவில் நடந்த போட்டியில், முதலில் பேட்டிங் செய்த ரெட் ஸ்டீல் அணி, 20 ஓவரில் 8 விக்கெட்டுக்கு 118 ரன்கள் எடுத்தது. 

பின் களமிறங்கிய கயானா அமேசான் வாரியர்ஸ் அணி 20 ஓவரில் 9 விக்கெட்டுக்கு 118 ரன்கள் எடுக்க, போட்டி ‘டை’ ஆனது. இதனையடுத்து போட்டியின் முடிவு ‘சூப்பர் ஓவருக்கு’ சென்றது.

‘சூப்பர் ஓவரில்’ இரு அணிகளுக்கும் தலா ஒரு ஓவர் வழங்கப்படும். அதிக ரன்கள் எடுக்கும் அணி வெற்றி பெற்றதாக அறிவிக்கப்படும். 

முதலில் களமிறங்கிய காயானா அணி, ஒரு ஓவரில் ஒரு விக்கெட்டுக்கு 11 ரன்கள் எடுத்தது. பின் 12 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற சுலப இலக்கோடு வந்த ரெட் ஸ்டீஸ் அணிக்கு, கயானாவின் சுனில் நரைன் பந்துவீசினார். 

முதல் நான்கு பந்தில் ஒரு ரன் கூட வழங்காத நரைன், 5வது பந்தில் பூரனை அவுட்டாக்கினார். கடைசி பந்திலும் ஒரு ரன் கூட கொடுக்கவில்லை. இதனையடுத்து கயானா அணி வெற்றி பெற்றது. 

இதன்மூலம் ‘டுவென்டி–20’ வரலாற்றில், ‘சூப்பர் ஓவரை’ ‘மெய்டனாக’ வீசிய முதல் பவுலர்கள் என்ற புதிய உலக சாதனை படைத்தார்.

சுனில் நரைன் ஐ.பி.எல்., தொடரில் கோல்கட்டா அணிக்காக விளையாடுகிறார். இவரது ‘சுழல் ஜாலம்’ கைகொடுக்க, 2012, 2014ல் கோல்கட்டா அணி கோப்பை வென்றது.

இணையதளத்தில் அதிகமாக தேடப்பட்ட வீரர் யார்?

பிரேசில் உலக கோப்பை கால்பந்து போட்டியில் போர்ச்சுகலின் கதாநாயகன் கிறிஸ்டியானோ ரொனால்டோ, அர்ஜென்டினா அணியின் நட்சத்திர வீரர் லயோனல் மெஸ்சி உள்ளிட்டோர் ரசிகர்களின் எதிர்பார்ப்புக்கு ஏற்ப செயல்படாமல் போயிருக்கலாம். 

ஆனால் உலக கோப்பை போட்டியின் போது, ‘கூகுள்’ இணையதளத்தில் ரசிகர்களால் ஆர்வமுடன் அதிகமாக தேடப்பட்ட வீரர்களின் பட்டியலில் இவர்கள் தான் முன்னணியில் இருந்துள்ளனர். 

மேலும், உலக கோப்பை தொடர்பான செய்திகள், படங்கள் தேடல் 200 கோடி முறைக்கு மேலாக நடந்துள்ளது. 

பெல்ஜியத்திற்கு எதிரான ஒரே ஆட்டத்தில் 15 முறை கோல் வாய்ப்புகளை முறியடித்து அனைவரது கவனத்தையும் ஈர்த்த அமெரிக்க கோல் கீப்பர் டிம் ஹோவர்ட், அதிகமாக தேடப்பட்ட கோல் கீப்பர் ஆவார். 

மேற்கண்ட தகவல் கூகுள் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கேப்டனுக்கு பொருத்தமானவர் தோனி - சாப்பலுக்கு டிராவிட் பதிலடி

இந்திய அணியின் கேப்டன் பதவிக்கு தோனி தான் பொருத்தமானவர். விராத் கோஹ்லி கேப்டனாக சரியான நேரம் வரவில்லை,’’ என, டிராவிட் தெரிவித்தார்.     

கடந்த 2011 முதல் அன்னிய மண்ணில் பங்கேற்ற 12 டெஸ்டில் 10ல் தோற்ற இந்திய அணி, 2 போட்டிகளை ‘டிரா’ செய்தது. ஒன்றில் கூட வெற்றி பெறவில்லை. தற்போது இங்கிலாந்து சென்றுள்ள இந்திய அணி முதல் டெஸ்டை ‘டிரா’ செய்தது.       

இதனால், டெஸ்ட் அணிக்கு கேப்டனாக கோஹ்லியை நியமிக்க வேண்டும் என, ‘சிண்டு முடியும்’ வேலை பார்த்தார் ஆஸ்திரேலியாவின் இயான் சாப்பல். இதற்கு பதிலடி கொடுத்த இந்திய அணியின் முன்னாள் கேப்டன் டிராவிட் கூறியது:      

இந்திய அணியை முன்னெடுத்துச் செல்ல தோனி தான் சரியான கேப்டன். கடந்த 2011–12ல் இங்கிலாந்து, ஆஸ்திரேலிய மண்ணில் அடைந்த தோல்விகளுக்காக இவரை, எல்லோரும் குற்றம் சுமத்துகின்றனர். 

ஆனால், இப்போதைய நிலையில் இளம் வீரர்கள் அடங்கிய இந்திய அணியை வைத்துக்கொண்டு சிறப்பாக செயல்படுகிறார். 

விராத் கோஹ்லியை பொறுத்தவரையில், கேப்டன் பதவி ஏற்பதற்கான நேரம் இன்னும் வரவில்லை. ஸ்டூவர்ட் பின்னி போதியளவு பவுலிங் செய்யவில்லை என்கின்றனர். 

ஆனால், இவரது ஸ்டைலுக்கு ஏற்ற ஆடுகளம் அமையவில்லை என்பது தான் உண்மை. லார்ட்ஸ் டெஸ்டில் இவருக்கு கூடுதல் வாய்ப்பு கிடைக்கும் என்று நம்புகிறேன்.      

இந்த ஆடுகளம், நாட்டிங்காமை விட சற்று வித்தியாசமானது. வேகப்பந்து வீச்சாளர்களுக்கு நன்கு கைகொடுக்கும். 

சமீபத்திய ஜடேஜாவின் செயல்பாடுகளை பார்க்கும் போது, இவர் இல்லாமல் களமிறங்குவது என்பது சிரமம் தான். இருப்பினும், ஆடுகளத்தின் தன்மைக்கு ஏற்ப அஷ்வினுக்கு வாய்ப்பு கிடைக்கும் என்று நம்புகிறேன்.       

இவ்வாறு டிராவிட் கூறினார்.

ஓய்வு பெறுகிறார் ஜெயவர்தனா

டெஸ்ட் அரங்கில் இருந்து விடை பெற முடிவு செய்துள்ளார் இலங்கை வீரர் ஜெயவர்தனா.       

இலங்கை அணியின் முன்னாள் கேப்டன் மகிளா ஜெயவர்தனா, 37. கடந்த ‘டுவென்டி–20’ உலக கோப்பை போட்டியுடன், இந்த கிரிக்கெட்டுக்கு விடை கொடுத்தார். 

கடந்த 1997ல் இந்திய அணிக்கு எதிராக அறிமுகம் ஆன இவர், இதுவரை 145 டெஸ்டில், 11,493 ரன்கள் (33 சதம், 48 அரை சதம்) எடுத்தார். 

இதனிடையே, வரும் தென் ஆப்ரிக்கா (ஜூலை 16–24), பாகிஸ்தான் (ஆக., 6–18) அணிகளுக்கு எதிரான தலா 2 போட்டிகள் கொண்ட தொடருடன், டெஸ்ட் அரங்கில் இருந்து விடைபெற முடிவு செய்துள்ளார்.       

இதுகுறித்து இலங்கை கிரிக்கெட் போர்டுக்கு ஜெயர்வர்தனா எழுதிய கடிதத்தில்,‘ கடந்த 18 ஆண்டுகளாக தேசிய அணிக்காக விளையாடியது பெருமையாக உள்ளது. 

இந்நிலையில் ஓய்வு பெறுவது என்பது எடுத்த முடிவு அவ்வளவு எளிதானது அல்ல. இருப்பினும், இதற்கு இது தான் சரியான நேரம்,’ என, தெரிவித்துள்ளார்.

அஷ்வின் என்ன குப்பைத்தொட்டியா?

முதல் டெஸ்டில் அஷ்வினை நீக்கியது புரியாத புதிராக உள்ளது. இவரை, ரோட்டின் ஓரத்தில் வைக்கப்படும் குப்பைத்தொட்டியை போல கருதுகின்றனர்,’’ என, மார்ட்டின் குரோவ் தெரிவித்தார்.

நாட்டிங்காமில் நடக்கும் முதல் டெஸ்ட் போட்டிக்கான இந்திய வீரர்கள் தேர்வு ஏமாற்றம் அளித்தது. அனுபவ சுழற்பந்துவீச்சாளரான தமிழகத்தின் அஷ்வின் புறக்கணிக்கப்பட்டார். இதன் காரணமாக, இங்கிலாந்தின் கடைசி விக்கெட்டை வீழ்த்த முடியாமல் இந்தியா திணறியது. 

இது குறித்து நியூசிலாந்து அணியின் முன்னாள் கேப்டன் மார்ட்டின் குரோவ் கூறியது:

டெஸ்டில் அதிவேகமாக 100 விக்கெட்டுகளை சாய்த்த இந்திய வீரர் அஷ்வின் தான். பின்வரிசை பேட்ஸ்மேனாக சராசரியாக 40 ரன்கள் எடுத்துள்ளார். 

தோனி, கோஹ்லி, புஜாராவுக்கு அடுத்து அஷ்வினை தான் தேர்வு செய்ய வேண்டும். தற்போது, இவரை வெறும் பார்வையாளராக வைத்திருப்பதன் காரணத்தை யாராவது விளக்கினால் நன்றாக இருக்கும். 

இவர் வங்கியின் மானேஜர் போன்றவர். ஆனால், கொள்ளையர் போல நடத்துகின்றனர். இவரை, ரோட்டின் ஓரத்தில் வைக்கப்படும் குப்பைத்தொட்டி போல கருதுகின்றனர். அதே நேரத்தில், ஸ்டூவர்ட் பின்னியை சிறந்த டெஸ்ட் வீரராக போற்றி, அறிமுக வாய்ப்பு அளிக்கின்றனர்.

இங்கிலாந்தை நிலைகுலையச் செய்ய சிறந்த ‘ஸ்பின்னர்’ தேவை. இதற்கு அஷ்வின் தான் முதல் தேர்வாக இருக்க வேண்டும். 

இவரால் 8வது வீரராக பேட் செய்யவும் முடியும். இந்திய டெஸ்ட் வரலாற்றில் ‘ஆல்–ரவுண்டராக’ சாதனை படைத்த இவரை, ஒரு மூலையில் அமரச் செய்திருப்பது புரியாத புதிராக உள்ளது.

இவ்வாறு மார்ட்டின் குரோவ் கூறினார்.

அசோக் திண்டாவுக்கு சிறந்த கிரிக்கெட் வீரர் விருது

மேற்கு வங்காள மாநில கிரிக்கெட் சங்கத்தின் ஆண்டு விழா வரும் 26-ம் தேதி நடைபெற உள்ளது. இவ்விழாவில் சிறந்த வீரர்களை கவுரவிக்கும் வகையில் 21 பிரிவுகளில் விருதுகள் வழங்கப்படுகின்றன.

மேற்கு வங்காள வேகப்பந்து வீச்சாளர் அசோக் திண்டாவுக்கு சிறந்த கிரிக்கெட் வீரருக்கான விருது வழங்கப்படுகிறது. விக்கெட் கீப்பர் விர்திமான் சகா, ஜென்டில்மேன் வீரருக்கான கோப்பையை பெறுகிறார். முன்னாள் சுழற்பந்து வீச்சாளர் சுமந்திரனாத் குண்டு வாழ்நாள் சாதனையாளர் விருதினைப் பெறுகிறார். 

விழாவில் இந்திய அணியின் முன்னாள் கேப்டன் ஜி.ஆர்.விஸ்வநாத் சிறப்பு விருந்தினராக கலந்துகொள்வார் என்று மேற்கு வங்காள கிரிக்கெட் சங்கம் தெரிவித்துள்ளது. 

பவுலர்கள் கையில் வெற்றி - டிராவிட் விளக்கம்

இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில், பவுலர்களின் செயல்பாட்டை பொறுத்து, இந்திய அணிக்கு வெற்றி கிடைக்கும்,’’ என, முன்னாள் இந்திய அணி கேப்டன் ராகுல் டிராவிட் தெரிவித்தார்.      

இங்கிலாந்து சென்றுள்ள இந்திய அணி, ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்கிறது. முதல் டெஸ்ட் நாட்டிங்காமில் வரும் ஜூலை 9ம் தேதி துவங்குகிறது.      

இத்தொடர் குறித்து முன்னாள் இந்திய அணி கேப்டன் டிராவிட் கூறியது: இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில், இந்திய அணியின் வெற்றி பவுலர்கள் கையில் தான் உள்ளது. 

இவர்களின் செயல்பாட்டை அடிப்படையாக கொண்டு தான் வெற்றி கிடைக்கும். இங்கிலாந்து பேட்ஸ்மேன்களின் 20 விக்கெட்டை கைப்பற்றும் தகுதி இந்திய பவுர்களிடம் இருக்கும் பட்சத்தில், டெஸ்ட் தொடரை எளிதில் கைப்பற்றலாம்.      

கடந்த 2007ல் இங்கிலாந்துக்கு எதிரான மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை 1–0 என வென்ற போது ஜாகிர் கான் (18 விக்கெட்) ‘வேகத்தில்’ அசத்தினார். ‘சுழலில்’ அனில் கும்ளே (12 விக்கெட்) கைகொடுத்தார். 

இவர்களுக்கு சக பவுலர்களும் ஒத்துழைப்பு தந்ததால் இங்கிலாந்து வீரர்களுக்கு நெருக்கடி கொடுத்து தொடரை வெல்ல முடிந்தது. இத்தொடரில் வேகப்பந்துவீச்சாளர் பந்தை ‘சுவிங்’ செய்து வீசியது சாதகமாக அமைந்தது. இதேபோல இம்முறை இந்திய வேகங்கள் பந்தை ‘சுவிங்’ செய்து வீச முயற்சிக்க வேண்டும்.      

இந்திய அணியில் இடம் பெற்றுள்ள நிறைய வீரர்கள் இங்கிலாந்து மண்ணில் டெஸ்ட் போட்டியில் விளையாடிய அனுபவம் இல்லாதவர்கள். 

இந்தியா ‘ஏ’ மற்றும் சாம்பியன்ஸ் டிராபி (50 ஓவர்) தொடரில் பங்கேற்ற சில வீரர்கள், இந்த அனுபவத்தை கொண்டு சிறப்பாக விளையாடலாம். இத்தொடர், இளம் இந்திய வீரர்களுக்கு சிறந்த அனுபவம் கொடுக்கும். இதன்மூலம் அடுத்து வரும் தொடர்களில் சாதிக்க முயற்சிக்கலாம்.    
  
இந்திய அணியின் ஆலோசகராவது குறித்து இன்னும் முடிவு செய்யவில்லை. டெஸ்ட் தொடரின் முடிவைப் பொறுத்து, தீர்மானிக்கப்படும்.      

இவ்வாறு டிராவிட் கூறினார்.

28 ஆண்டுகளுக்கு பிறகு பெல்ஜியம் அணி கால் இறுதிக்கு தகுதி

உலக கோப்பை கால்பந்து போட்டியின் கடைசி 2–வது சுற்று ஆட்டம் இந்திய நேரப்படி நள்ளிரவு 1.30 மணிக்கு நடந்தது.

இதில் ‘எச்’ பிரிவில் முதல் இடத்தை பிடித்த பெல்ஜியம் ‘ஜி’ பிரிவில் 2–வது இடத்தை பிடித்த அமெரிக்கா அணிகள் மோதின.

இரு அணி வீரர்களுமே கால் இறுதியில் நுழைய வேண்டும் என்ற ஆக்ரோஷத்துடன் விளையாடினார்கள். இதனால் ஆட்டம் மிகவும் விறுவிறுப்பாக இருந்தது.

பெல்ஜியம், அமெரிக்க வீரர்கள் தங்களுக்கு கிடைத்த கோல் வாய்ப்பை தவறவிட்டனர். மேலும் பெல்ஜியம் அணியின் கோல் அடிக்கும் வாய்ப்பை அமெரிக்க கோல்கீப்பர் டிம்ஹவார்டு பலமுறை தகர்த்தார். இதேபோல பெல்ஜியம் கோல்கீப்பர் கோர்ட்டசின் செயல்பாடும் நன்றாக இருந்தது.

இதன் காரணமாக முதல் பாதி ஆட்டத்தில் இரு அணிகளாலும் கோல் அடிக்க முடியவில்லை. 2–வது பாதி ஆட்டத்திலும் இதே நிலை நீடித்தது.

ஆட்டத்தின் முடிவில் இரு அணிகளும் கோல் அடிக்காததால் 0–0 என்ற நிலை இருந்தது. இதனால் வெற்றி தோல்வியை நிர்ணயம் செய்ய கூடுதல் நேரமான 30 நிமிடம் ஒதுக்கப்பட்டது.

கூடுதல் நேரத்தில் ஆட்டம் தொடங்கிய 3–வது நிமிடத்திலேயே பெல்ஜியம் கோல் அடித்து அமெரிக்காவுக்கு அதிர்ச்சி கொடுத்தது. 93–வது நிமிடத்தில் கெவின்டி புருனே இந்த கோலை அடித்தார்.

ரோமலு ஹாகு தட்டி கொடுத்த பந்தை அமெரிக்கா பின்கள வீரர்கள் 3 பேர் மற்றும் கோல் கீப்பரை ஏமாற்றி இந்த கோலை அவர் அருமையாக அடித்தார்.

தொடர்ந்து பெல்ஜியம் கையே ஓங்கி இருந்தது. 105–வது நிமிடத்தில் அந்த அணி 2–வது கோலை அடித்து அமெரிக்காவுக்கு மேலும் அதிர்ச்சி கொடுத்தது. இந்த முறை புருனே தட்டி கொடுத்த பந்தை ஹாகு கோலாக்கினார். இதன்மூலம் பெல்ஜியம் 2–0 என்ற கணக்கில் முன்னிலை பெற்றது.

இதனால் அமெரிக்க அணி ஆவேசத்துடன் தாக்குதல் ஆட்டத்தில் ஈடுபட்டது. அடுத்த 2–வது நிமிடத்தில் அந்த அணி கோல் அடித்தது. 107–வது நிமிடத்தில் மாற்று வீரரான ஜூலியன் கிரீன் இந்த கோலை அடித்தார். இதனால் ஆட்டத்தில் பரபரப்பு ஏற்பட்டது.

2–வது கோலை அடித்து சமன் செய்ய அமெரிக்க ஆட்டத்தின் இறுதி வரை போராடியது. ஆனால் முடியவில்லை. இறுதியில் பெல்ஜியம் 2–1 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்று கால் இறுதியில் நுழைந்தது.

அமெரிக்கா போராடி இந்த தோல்வியை அடைந்தது. அந்த அணி தொடர்ந்து 3–வது முறையாக 2–வது சுற்றில் தோற்று வெளியேற்றப்பட்டது.

பெல்ஜியம் அணி 28 ஆண்டுகளுக்கு பிறகு கால் இறுதியில் நுழைந்துள்ளது. கடைசியாக 1986–ம் ஆண்டு உலக கோப்பையில் 4–வது இடத்தை பிடித்து இருந்தது.

அதன்பிறகு 3 உலக கோப்பையில் 2–வது சுற்று வரையே வந்தது. தற்போது 28 ஆண்டுகளுக்கு பிறகு கால் இறுதியில் முன்னேற்றம் கண்டுள்ளது. பெல்ஜியம் கால்இறுதியில் அர்ஜென்டினாவை எதிர் கொள்கிறது.

1986 உலக கோப்பை அரை இறுதியில் இந்த இரு அணிகளும் மோதி இருந்தன. இதில் அர்ஜென்டினா வெற்றி பெற்று இருந்தது.