பயிற்சியாளர் பதவி - ரவி சாஸ்திரி புலம்பல்


‘‘இந்திய அணி பயிற்சியாளராக தேர்வு செய்யப்படாதது ஏமாற்றம் தான். அதேநேரம் பி.சி.சி.ஐ.,யின் இச்செயல் ஆச்சரியம் தரவில்லை,’’ என, ரவி சாஸ்திரி தெரிவித்தார். 

இந்திய அணியின் ‘இயக்குனராக’ கடந்த 18 மாதங்கள் இருந்தவர் ரவி சாஸ்திரி. இவர் புதிய பயிற்சியாளராக தேர்வு செய்யப்படுவார் என, பெரிதும் எதிர்பார்க்கப்பட்டது. 

புதிய திருப்பமாக ‘சுழல்’ ஜாம்பவான் கும்ளேயும், போட்டியில் குதித்தார். கடைசியில் வாய்ப்பு கும்ளேவுக்கு சென்றது. இதுகுறித்து ரவி சாஸ்திரி கூறியது: கடந்த 2014 ஆக., மாதம் ‘இயக்குனராக’ பொறுப்பேற்ற போது, வீரர்கள் மிகவும் பலவீனமாக இருந்தனர். 

கொஞ்சம் கொஞ்சமாக வலிமையாக மீண்டு வந்தோம். டெஸ்ட், ‘டுவென்டி–20’ போட்டிகளில் ‘நம்பர்–1’, ஒருநாள் தரவரிசையில் ‘நம்பர்–2’ இடத்தை பிடித்தோம். அன்னிய மண்ணில் கடுமையாக போராடினோம். இங்கிலாந்து மண்ணில் 24 ஆண்டுக்குப் பின் ஒருநாள் தொடரை வென்றோம். 

1993க்குப் பின் இலங்கை மண்ணில் டெஸ்ட் கோப்பை கைப்பற்றினோம். 50 ஓவர், ‘டுவென்டி–20’ உலக கோப்பை தொடரில் அரையிறுதிக்கு முன்னேறினோம், ஆசிய கோப்பை சாம்பியன் என, பல வெற்றிகள் கிடைத்தது. இதை எல்லாம் தோல்விகள் என்று கூறினால், அப்புறம் என்னத்த சொல்றது. பயிற்சியாளர் ஆகாதது ஏமாற்றமே. 

அதேநேரம் எதிர்பார்த்தது தான். ஒரு செடியை ஊன்றி, தண்ணீர் ஊற்றி மரமாக வளர்த்து, அது பழம் கொடுக்கும் நிலையில், பறிக்க விடாமல் செய்வது போன்றது தான் இச்செயல். வரும் வெஸ்ட் இண்டீஸ் தொடருக்குப் பின், இந்திய அணி சொந்தமண்ணில் தான் நிறைய டெஸ்டில் பங்கேற்கவுள்ளது. இதில் எப்படியும் சாதிக்கலாம். 

ஆனால் அணி வீரர்களுடன் நான் இல்லை. இது தான் வாழ்க்கை. நான் பதவிக்கு வந்த போது, பி.சி.சி.ஐ.,யை கோர்ட், மீடியா, ரசிகர்கள் என, பல தரப்பும் விளாசிக் கொண்டிருந்தது. 

இந்திய அணி மட்டும் வெற்றி பெற்று வந்தது. கடைசியில் இப்படி ஆகிவிட்டது. இந்திய கிரிக்கெட் என்று வரும் போது இது எனக்கு ஆச்சரியத்தை தரவில்லை.

தெறிக்க விட்ட சென்னை - டில்லியை வீழ்த்தியது

ஐ.எஸ்.எல்., கால்பந்து போட்டியில் இன்று சென்னை வீரர்கள் 4 கோல் அடித்து டில்லி அணியை  தெறித்து ஓடச் செய்தனர். 

இந்தியன் சூப்பர் லீக் (ஐ.எஸ்.எல்.,) கால்பந்து தொடரின் இரண்டாவது சீசன் தற்போது நடக்கிறது. சென்னை நேரு மைதானத்தில் இன்று நடந்த லீக் போட்டியில் சென்னை, டில்லி அணியை எதிர்கொண்டது.

இதில் ஜேஜே 2, மென்தோஜா 1, பெலிசாரி 1 என, சென்னை அணி 4 கோல் அடித்தது. டில்லி அணி சார்பில் யாரும் கோல் அடிக்கவில்லை. முடிவில் சென்னை அணி 4–0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது. 

சேவக்கை தடுத்த சச்சின்

‘‘கடந்த 2007ல் ஓய்வு பெற்றுவிடலாம் என முடிவு செய்தேன். இதை சக வீரர் சச்சின்தான் தடுத்து விட்டார்,’’ என, இந்திய அணி முன்னாள் வீரர் சேவக் தெரிவித்தார்.

இந்திய அணியின் அதிரடி வீரர் சேவக், 37. டெஸ்ட் அரங்கில் இரு முறை முச்சதம் உள்ளிட்ட அதிக சாதனைகளை எட்டியவர். இந்திய அணியில் தொடர்ந்து வாய்ப்பு மறுக்கப்பட்டதால், சமீபத்தில் சர்வதேச அரங்கிலிருந்து ஓய்வு பெற்றார். அடுத்த ஆண்டு நடக்கவுள்ள மாஸ்டர்ஸ் சாம்பியன்ஸ் லீக் ‘டுவென்டி–20’ தொடரில் விளையாட உள்ளார். 

இது குறித்து சேவக் கூறியது: ஒவ்வொரு வீரரும் சர்வதேச அரங்கில் உயரத்தில் இருக்கும்போது, ஓய்வு பெற்றுவிடுவர். இதன்படிதான் நானும் செயல்பட முடிவு எடுத்திருந்தேன். கடந்த 2007ல் இந்திய அணியிலிருந்து நீக்கப்பட்டபோது, ஓய்வு பெற்றுவிடலாம் என எண்ணினேன். 

ஆனால், சச்சின்தான் இதை தடுத்துவிட்டார். கடந்த 2013ல் ஆஸ்திரேலிய தொடரில் என்னை அணியிலிருந்து நீக்கினர். இது குறித்து எந்த தகவலையும் என்னிடம் முன்பே சொல்லவில்லை. அப்படி தெரிவித்திருந்தால், அப்போதே ஓய்வை அறிவித்திருப்பேன். 


எப்போதும் நேர்மை:

சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து விலகியது எனது மகன்களுக்கு பிடிக்கவில்லை. இதை நான் பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை. என் கிரிக்கெட் வாழ்வில் கும்ளே சிறந்த கேப்டனாக திகழ்ந்தார். 

வீரர்களுக்கு ஊக்கத்தை அளிப்பார். இந்திய கிரிக்கெட் போர்டு அல்லது வர்ணனையாளர் பதவிக்கு யாரேனும் அழைத்தால், பரிசீலனை செய்வேன். என் ‘பேட்டிங்கை’ போல, வர்ணனையும் நேர்மையுடன்தான் இருக்கும். இவ்வாறு சேவக் கூறினார். 

தோனிக்கு எதுவுமே தெரியலை - கவாஸ்கர் திடீர் தாக்கு

இந்திய அணி கேப்டன் தோனியிடம் புதிய திட்டங்களை செயல்படுத்தும் திறன் இல்லை. பவுலர்களை சரியான முறையில் கையாளத் தெரியவில்லை,’’ என, கவாஸ்கர் குற்றம் சுமத்தினார்.

இந்தியா வந்த தென் ஆப்ரிக்க அணி 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை 3-2 என, வென்றது. மும்பையில் நடந்த கடைசி மற்றும் ஐந்தாவது போட்டியில் முதலில் களமிறங்கிய தென் ஆப்ரிக்க அணி 4 விக்கெட்டுக்கு 438 ரன் குவித்தது.

இந்திய பவுலர்கள் சொதப்பல் காரணமாக குயின்டன் டி காக், டுபிளசி, டிவிலியர்ஸ் என, 3 பேர் சதம் அடித்தனர். இமாலய இலக்கைத் துரத்திய இந்திய அணி 224 ரன்னுக்கு ஆல் அவுட்டாகி 214 ரன் வித்தியாசத்தில் வீழ்ந்தது.

இதுகுறித்து இந்திய அணியின் முன்னாள் கேப்டன் கவாஸ்கர் கூறியது:

கேப்டன் தோனியிடம் சூழ்நிலைக்கு ஏற்ப பவுலர்களை எப்படி மாற்ற வேண்டும் எனச் சரியாகத் தெரியவில்லை. மாற்றங்களை எளிதில் விரும்பாத இவரிடம் புதிய திட்டங்கள் செயல்படுத்தும் திறமை இல்லை.

இதற்கு முன்பெல்லாம் பவுலிங்கில் மாற்றம் செய்யும் போது இவரது யோசனைகள் சிறப்பாக இருக்கும். தென் ஆப்ரிக்க அணிக்கு எதிரான கடைசி போட்டியில் ஒட்டுமொத்த பவுலர்களும் சேர்ந்து சொதப்பி விட்டனர்.

இப்போதைய நிலையில் இந்திய அணியின் பவுலிங் பிரிவு தான் மோசமாக உள்ளது. தென் ஆப்ரிக்க அணிக்கு எதிரான டுவென்டி-20, ஒருநாள் தொடரில் எவ்வளவு மந்தமாக செயல்பட்டனர் என்பது அனைவருக்கும் தெரியும்.

வான்கடே ஆடுகளம் நன்கு திருப்பம் தரக் கூடியது. இந்த சூழலுக்கு ஏற்ப நமது பவுலர்கள் செயல்படத் தவறி விட்டனர். வேகப்பந்து வீச்சாளர்கள் தொடர்ந்து ‘ஷார்ட் பிட்ச்’ பந்துகளாக வீசினர் என்றாலும், இதன் வேகம் 135 கி.மீ., என்பதால், எதிரணியினர் ரன் குவிக்க வசதியாக போனது.

ஒருமுறை கூட வேகத்தினால் அவர்களுக்கு தொல்லை தர முடியவில்லை. பவுன்சர்களாக வீச வேண்டும் எனில் பந்தின் வேகம் 145 கி.மீ., ஆக இருக்க வேண்டும்.

கும்ளே முதலிடம்

சேப்பாக்கத்தில் நடந்த டெஸ்டில் அதிக விக்கெட் வீழ்த்தியவர்கள் பட்டியலில் இந்தியாவின் கும்ளே (48 விக்.,), ஹர்பஜன் சிங் (42), கபில்தேவ் (40) ஆகியோர் முதல் மூன்று இடங்களில் உள்ளனர்.

* ஒருநாள் போட்டியில் இங்கு அதிக விக்கெட் கைப்பற்றியவர்கள் வரிசையில் வங்கதேசத்தின் முகமது ரபிக் (8 விக்.,) முதலிடத்தில் உள்ளார். இவரை அடுத்து இந்தியாவின் அகார்கர், தென் ஆப்ரிக்காவின் மார்னே மார்கல் தலா 7 விக்கெட் கைப்பற்றியுள்ளனர்.

 652

கடந்த 1985ல் இந்தியாவுக்கு எதிரான டெஸ்டில் இங்கிலாந்து அணி 652/7 (டிக்ளேர்) ரன்கள் குவித்தது. இதன்மூலம் சேப்பாக்கம் மைதானத்தில் ஒரு இன்னிங்சில் அதிக ரன்கள் எடுத்த அணிகளுக்கான பட்டியலில் முதலிடம் பிடித்தது.

* தென் ஆப்ரிக்காவுக்கு எதிராக 2008ல் நடந்த டெஸ்டில் 627 ரன்கள் குவித்த இந்திய அணி, இம்மைதானத்தில் தனது அதிகபட்ச ஸ்கோரை பதிவு செய்தது.


83

இங்கிலாந்துக்கு எதிராக 1977ல் நடந்த டெஸ்டில் 83 ரன்னுக்கு சுருண்ட இந்திய அணி, சேப்பாக்கம் மைதானத்தில் ஒரு இன்னிங்சில் மிகக் குறைந்த ஸ்கோரை பெற்றது.


337

கடந்த 2007ல் ஆப்ரிக்க லெவன் அணிக்கு எதிரான ஒருநாள் போட்டியில் ஆசிய லெவன் அணி 337 ரன்கள் குவித்தது. இதன்மூலம் சென்னையில் நடந்த ஒருநாள் போட்டிகளில் ஒரு இன்னிங்சில் அதிக ரன்கள் எடுத்த அணிகளுக்கான பட்டியலில் முதலிடம் பிடித்தது.

* பாகிஸ்தானுக்கு எதிராக 1997ல் இங்கு நடந்த போட்டியில் 292 ரன்கள் எடுத்ததே இந்திய அணியின் அதிகபட்ச ஸ்கோர். தென் ஆப்ரிக்காவை பொறுத்தவரை இங்கு அதிகபட்சமாக 165 ரன்கள் (எதிர்–வெஸ்ட் இண்டீஸ், 2011) எடுத்துள்ளது.


307

சேப்பாக்கம் மைதானத்தில் நடந்த ஒருநாள் போட்டிகளில் அதிக ரன்கள் எடுத்த வீரர்கள் பட்டியலில் இந்திய கேப்டன் தோனி முன்னிலை வகிக்கிறார். இவர், 4 போட்டியில் 2 சதம் உட்பட 307 ரன்கள் எடுத்துள்ளார். இவரை அடுத்து இந்தியாவின் யுவராஜ் சிங் (257 ரன், 7 போட்டி) உள்ளார்.


1018

சென்னையில் நடந்த டெஸ்ட் போட்டிகளில் அதிக ரன்கள் எடுத்த வீரர்கள் வரிசையில் இந்தியாவின் சுனில் கவாஸ்கர் முதலிடத்தில் உள்ளார். இவர், 12 டெஸ்டில் 3 சதம், 3 அரைசதம் உட்பட 1018 ரன்கள் எடுத்துள்ளார். இவரை அடுத்து இந்தியாவின் சச்சின் (970 ரன், 10 போட்டி) உள்ளார்.