தெறிக்க விட்ட சென்னை - டில்லியை வீழ்த்தியது

ஐ.எஸ்.எல்., கால்பந்து போட்டியில் இன்று சென்னை வீரர்கள் 4 கோல் அடித்து டில்லி அணியை  தெறித்து ஓடச் செய்தனர். 

இந்தியன் சூப்பர் லீக் (ஐ.எஸ்.எல்.,) கால்பந்து தொடரின் இரண்டாவது சீசன் தற்போது நடக்கிறது. சென்னை நேரு மைதானத்தில் இன்று நடந்த லீக் போட்டியில் சென்னை, டில்லி அணியை எதிர்கொண்டது.

இதில் ஜேஜே 2, மென்தோஜா 1, பெலிசாரி 1 என, சென்னை அணி 4 கோல் அடித்தது. டில்லி அணி சார்பில் யாரும் கோல் அடிக்கவில்லை. முடிவில் சென்னை அணி 4–0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது. 

சேவக்கை தடுத்த சச்சின்

‘‘கடந்த 2007ல் ஓய்வு பெற்றுவிடலாம் என முடிவு செய்தேன். இதை சக வீரர் சச்சின்தான் தடுத்து விட்டார்,’’ என, இந்திய அணி முன்னாள் வீரர் சேவக் தெரிவித்தார்.

இந்திய அணியின் அதிரடி வீரர் சேவக், 37. டெஸ்ட் அரங்கில் இரு முறை முச்சதம் உள்ளிட்ட அதிக சாதனைகளை எட்டியவர். இந்திய அணியில் தொடர்ந்து வாய்ப்பு மறுக்கப்பட்டதால், சமீபத்தில் சர்வதேச அரங்கிலிருந்து ஓய்வு பெற்றார். அடுத்த ஆண்டு நடக்கவுள்ள மாஸ்டர்ஸ் சாம்பியன்ஸ் லீக் ‘டுவென்டி–20’ தொடரில் விளையாட உள்ளார். 

இது குறித்து சேவக் கூறியது: ஒவ்வொரு வீரரும் சர்வதேச அரங்கில் உயரத்தில் இருக்கும்போது, ஓய்வு பெற்றுவிடுவர். இதன்படிதான் நானும் செயல்பட முடிவு எடுத்திருந்தேன். கடந்த 2007ல் இந்திய அணியிலிருந்து நீக்கப்பட்டபோது, ஓய்வு பெற்றுவிடலாம் என எண்ணினேன். 

ஆனால், சச்சின்தான் இதை தடுத்துவிட்டார். கடந்த 2013ல் ஆஸ்திரேலிய தொடரில் என்னை அணியிலிருந்து நீக்கினர். இது குறித்து எந்த தகவலையும் என்னிடம் முன்பே சொல்லவில்லை. அப்படி தெரிவித்திருந்தால், அப்போதே ஓய்வை அறிவித்திருப்பேன். 


எப்போதும் நேர்மை:

சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து விலகியது எனது மகன்களுக்கு பிடிக்கவில்லை. இதை நான் பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை. என் கிரிக்கெட் வாழ்வில் கும்ளே சிறந்த கேப்டனாக திகழ்ந்தார். 

வீரர்களுக்கு ஊக்கத்தை அளிப்பார். இந்திய கிரிக்கெட் போர்டு அல்லது வர்ணனையாளர் பதவிக்கு யாரேனும் அழைத்தால், பரிசீலனை செய்வேன். என் ‘பேட்டிங்கை’ போல, வர்ணனையும் நேர்மையுடன்தான் இருக்கும். இவ்வாறு சேவக் கூறினார். 

தோனிக்கு எதுவுமே தெரியலை - கவாஸ்கர் திடீர் தாக்கு

இந்திய அணி கேப்டன் தோனியிடம் புதிய திட்டங்களை செயல்படுத்தும் திறன் இல்லை. பவுலர்களை சரியான முறையில் கையாளத் தெரியவில்லை,’’ என, கவாஸ்கர் குற்றம் சுமத்தினார்.

இந்தியா வந்த தென் ஆப்ரிக்க அணி 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை 3-2 என, வென்றது. மும்பையில் நடந்த கடைசி மற்றும் ஐந்தாவது போட்டியில் முதலில் களமிறங்கிய தென் ஆப்ரிக்க அணி 4 விக்கெட்டுக்கு 438 ரன் குவித்தது.

இந்திய பவுலர்கள் சொதப்பல் காரணமாக குயின்டன் டி காக், டுபிளசி, டிவிலியர்ஸ் என, 3 பேர் சதம் அடித்தனர். இமாலய இலக்கைத் துரத்திய இந்திய அணி 224 ரன்னுக்கு ஆல் அவுட்டாகி 214 ரன் வித்தியாசத்தில் வீழ்ந்தது.

இதுகுறித்து இந்திய அணியின் முன்னாள் கேப்டன் கவாஸ்கர் கூறியது:

கேப்டன் தோனியிடம் சூழ்நிலைக்கு ஏற்ப பவுலர்களை எப்படி மாற்ற வேண்டும் எனச் சரியாகத் தெரியவில்லை. மாற்றங்களை எளிதில் விரும்பாத இவரிடம் புதிய திட்டங்கள் செயல்படுத்தும் திறமை இல்லை.

இதற்கு முன்பெல்லாம் பவுலிங்கில் மாற்றம் செய்யும் போது இவரது யோசனைகள் சிறப்பாக இருக்கும். தென் ஆப்ரிக்க அணிக்கு எதிரான கடைசி போட்டியில் ஒட்டுமொத்த பவுலர்களும் சேர்ந்து சொதப்பி விட்டனர்.

இப்போதைய நிலையில் இந்திய அணியின் பவுலிங் பிரிவு தான் மோசமாக உள்ளது. தென் ஆப்ரிக்க அணிக்கு எதிரான டுவென்டி-20, ஒருநாள் தொடரில் எவ்வளவு மந்தமாக செயல்பட்டனர் என்பது அனைவருக்கும் தெரியும்.

வான்கடே ஆடுகளம் நன்கு திருப்பம் தரக் கூடியது. இந்த சூழலுக்கு ஏற்ப நமது பவுலர்கள் செயல்படத் தவறி விட்டனர். வேகப்பந்து வீச்சாளர்கள் தொடர்ந்து ‘ஷார்ட் பிட்ச்’ பந்துகளாக வீசினர் என்றாலும், இதன் வேகம் 135 கி.மீ., என்பதால், எதிரணியினர் ரன் குவிக்க வசதியாக போனது.

ஒருமுறை கூட வேகத்தினால் அவர்களுக்கு தொல்லை தர முடியவில்லை. பவுன்சர்களாக வீச வேண்டும் எனில் பந்தின் வேகம் 145 கி.மீ., ஆக இருக்க வேண்டும்.

கும்ளே முதலிடம்

சேப்பாக்கத்தில் நடந்த டெஸ்டில் அதிக விக்கெட் வீழ்த்தியவர்கள் பட்டியலில் இந்தியாவின் கும்ளே (48 விக்.,), ஹர்பஜன் சிங் (42), கபில்தேவ் (40) ஆகியோர் முதல் மூன்று இடங்களில் உள்ளனர்.

* ஒருநாள் போட்டியில் இங்கு அதிக விக்கெட் கைப்பற்றியவர்கள் வரிசையில் வங்கதேசத்தின் முகமது ரபிக் (8 விக்.,) முதலிடத்தில் உள்ளார். இவரை அடுத்து இந்தியாவின் அகார்கர், தென் ஆப்ரிக்காவின் மார்னே மார்கல் தலா 7 விக்கெட் கைப்பற்றியுள்ளனர்.

 652

கடந்த 1985ல் இந்தியாவுக்கு எதிரான டெஸ்டில் இங்கிலாந்து அணி 652/7 (டிக்ளேர்) ரன்கள் குவித்தது. இதன்மூலம் சேப்பாக்கம் மைதானத்தில் ஒரு இன்னிங்சில் அதிக ரன்கள் எடுத்த அணிகளுக்கான பட்டியலில் முதலிடம் பிடித்தது.

* தென் ஆப்ரிக்காவுக்கு எதிராக 2008ல் நடந்த டெஸ்டில் 627 ரன்கள் குவித்த இந்திய அணி, இம்மைதானத்தில் தனது அதிகபட்ச ஸ்கோரை பதிவு செய்தது.


83

இங்கிலாந்துக்கு எதிராக 1977ல் நடந்த டெஸ்டில் 83 ரன்னுக்கு சுருண்ட இந்திய அணி, சேப்பாக்கம் மைதானத்தில் ஒரு இன்னிங்சில் மிகக் குறைந்த ஸ்கோரை பெற்றது.


337

கடந்த 2007ல் ஆப்ரிக்க லெவன் அணிக்கு எதிரான ஒருநாள் போட்டியில் ஆசிய லெவன் அணி 337 ரன்கள் குவித்தது. இதன்மூலம் சென்னையில் நடந்த ஒருநாள் போட்டிகளில் ஒரு இன்னிங்சில் அதிக ரன்கள் எடுத்த அணிகளுக்கான பட்டியலில் முதலிடம் பிடித்தது.

* பாகிஸ்தானுக்கு எதிராக 1997ல் இங்கு நடந்த போட்டியில் 292 ரன்கள் எடுத்ததே இந்திய அணியின் அதிகபட்ச ஸ்கோர். தென் ஆப்ரிக்காவை பொறுத்தவரை இங்கு அதிகபட்சமாக 165 ரன்கள் (எதிர்–வெஸ்ட் இண்டீஸ், 2011) எடுத்துள்ளது.


307

சேப்பாக்கம் மைதானத்தில் நடந்த ஒருநாள் போட்டிகளில் அதிக ரன்கள் எடுத்த வீரர்கள் பட்டியலில் இந்திய கேப்டன் தோனி முன்னிலை வகிக்கிறார். இவர், 4 போட்டியில் 2 சதம் உட்பட 307 ரன்கள் எடுத்துள்ளார். இவரை அடுத்து இந்தியாவின் யுவராஜ் சிங் (257 ரன், 7 போட்டி) உள்ளார்.


1018

சென்னையில் நடந்த டெஸ்ட் போட்டிகளில் அதிக ரன்கள் எடுத்த வீரர்கள் வரிசையில் இந்தியாவின் சுனில் கவாஸ்கர் முதலிடத்தில் உள்ளார். இவர், 12 டெஸ்டில் 3 சதம், 3 அரைசதம் உட்பட 1018 ரன்கள் எடுத்துள்ளார். இவரை அடுத்து இந்தியாவின் சச்சின் (970 ரன், 10 போட்டி) உள்ளார்.

இரண்டாவது ஒருநாள் போட்டி - இந்திய அணி அசத்தல் வெற்றி

இரண்டாவது ஒருநாள் போட்டியில் இந்திய பவுலர்கள் அசத்த, 22 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா வெற்றி பெற்றது. 

இந்தியா வந்துள்ள தென் ஆப்ரிக்க அணி, மூன்று சர்வதேச ‘டுவென்டி–20’, ஐந்து ஒருநாள், நான்கு டெஸ்ட் போட்டிகள் கொண்ட 72 நாட்கள் தொடரில் பங்கேற்கிறது. 

முதலில் நடந்த ‘டுவென்டி–20’ தொடரை இந்திய அணி 0–2 என இழந்தது. கான்பூரில் நடந்த முதல் ஒருநாள் போட்டியில் இந்திய அணி வீழ்ந்தது. இரு அணிகள் மோதும் இரண்டாவது போட்டி ம.பி.,யின் இந்துாரில் உள்ள ஹோல்கர் மைதானத்தில் இன்று நடக்கிறது. 

இந்திய அணியில் ஸ்டூவர்ட் பின்னி, அமித் மிஸ்ரா, அஷ்வின் ஆகியோர் நீக்கப்பட்டனர். இவர்களுக்கு பதிலாக ஹர்பஜன் சிங், அக்சர் படேல், மோகித் சர்மா தேர்வு செய்யப்பட்டனர். ‘டாஸ்’ வென்ற இந்திய அணி கேப்டன் தோனி ‘பேட்டிங்’ தேர்வு செய்தார்.

இந்திய அணிக்கு ரோகித் சர்மா, ஷிகர் தவான் ஜோடி துவக்கம் தந்தது. ரபாடா ‘வேகத்தில்’ ரோகித் சர்மா (1) போல்டானார். அடுத்து வந்த அஜின்கியா ரகானே, ஸ்டைன் வீசிய 5வது ஓவரில் 3 பவுண்டரி விளாசினார்.  ஷிகர் தவான் (23) நிலைக்கவில்லை. 

விராத் கோஹ்லி (12) ‘ரன்–அவுட்’ ஆனார். பொறுப்பாக ஆடிய ரகானே (51) அரைசதம் கடந்தார். அடுத்து வந்த ரெய்னா ‘டக்–அவுட்’ ஆனார். அக்சர் படேல் (13), புவனேஷ்வர் குமார் (14) சோபிக்கவில்லை. அபாரமாக ஆடிய தோனி அரைசதம் கடந்தார். ஹர்பஜன் சிங் (22) ஆறுதல் தந்தார். உமேஷ் யாதவ் (4) ஏமாற்றினார்.

இந்திய அணி 50 ஓவரில் 9 விக்கெட்டுக்கு 247 ரன்கள் எடுத்தது. கேப்டன் தோனி (92), மோகித் சர்மா (0) அவுட்டாகாமல் இருந்தனர். தென் ஆப்ரிக்கா சார்பில் ஸ்டைன் 3, மார்னே மார்கல், இம்ரான் தாகிர் தலா 2, ரபாடா ஒரு விக்கெட் வீழ்த்தினர்.

எட்டக்கூடிய இலக்கை விரட்டிய தென் ஆப்ரிக்க அணிக்கு ஆம்லா (17) ஏமாற்றினார். குயின்டன் டி காக் (34), டுமினி (36) ஆறுதல் அளித்தனர். பொறுப்பாக ஆடிய டுபிளசி (51) அரைசதம் கடந்தார். கேப்டன் டிவிலியர்ஸ் (19) சோபிக்கவில்லை. டேவிட் மில்லர் (0) சொதப்பினார். ஸ்டைன் (13) நிலைக்கவில்லை. 

கடைசியில் இம்ரான் (9), மார்கல் (4) அவுட்டாக, தென் ஆப்ரிக்க அணி 43.4 ஓவரில் 225 ரன்னுக்கு ஆல் அவுட்டாகி, 22 ரன் வித்தியாசத்தில் வீழ்ந்தது. இதையடுத்து ஒரு நாள் தொடர் 1–1 என, சமன் ஆனது.

சாரி சென்னை ரசிகர்களே - இந்திய வீரர்கள் உருக்கம்

களத்தில் நான் சிறப்பாக விளையாடி என்ன புண்ணியம். எங்கள் அணி தோற்று விட்டதே,’’என, கனத்த இதயத்துடன் கூறினார் சென்னை அணியின் ஹர்மன்ஜோத் கப்ரா. இவரது ஆதங்கம் நியாயமானது தான். சொந்த மண்ணில் சென்னை வீழ்ந்ததை யாராலும் எளிதில் ஜீரணிக்க முடியவில்லை.                  
சென்னையில், இரண்டாவது இந்தியன் சூப்பர் லீக் கால்பந்து தொடரின் (ஐ.எஸ்.எல்.) முதல் போட்டி நேற்று நடந்தது. இதில், சென்னை அணி, கோல்கட்டாவிடம் 2–3 என்ற கோல் கணக்கில் தோல்வி அடைந்தது. 

சென்னை வசம் 53 சதவீதம் பந்து இருந்த போதும், ‘பினிஷிங்’ இல்லாததால் வெற்றி நழுவியது. இப்போட்டியின் சென்னை அணியின் அன்னிய வீரர்களை காட்டிலும் இந்திய நட்சத்திரங்களான ஹர்மன்ஜோத் கப்ரா, ரால்டே, ஜேஜே அடங்கிய மூவர் கூட்டணி தான் ரசிகர்களின் இதயங்களை கவர்ந்தது.                   
‘இத்தாலி அணியில் விளையாடக்கூடிய திறமை கப்ராவுக்கு உள்ளது’, என, சென்னை அணியின் பயிற்சியாளர் மெடாரசி ஒரு முறை கூறினார். இதை நிரூபிக்கும் வகையில் கப்ராவின் ஆட்டம் இருந்தது. 

மத்திய களத்தில் முழுமையாக ஆதிக்கம் செலுத்தினார். கோல்கட்டாவின் நட்சத்திர வீரரான போர்ஜா பெர்னாண்டசிற்கு கடும் சவால் கொடுத்தார். போட்டி முடிந்ததும் தனது ஆட்டம் குறித்து கப்ரா கூறுகையில்,‘‘அணி தோற்ற நிலையில், நான் சிறப்பாக விளையாடியதில் பலன் இல்லை,’’என்றார்.                  
மற்றொரு வீரரான ரால்டேவும் பம்பரமாக சுழன்று ஆடினார். பந்தை தன் கட்டுப்பாட்டில் வைப்பதில் வல்லவராக இருந்தார்.          
        
மிசோரமை சேர்ந்த ஜேஜே அற்புதமாக கோல் அடித்து, சென்னை ரசிகர்களுக்கு உற்சாகம் தந்தார். ‘அடுத்த பூட்டியா’ என வர்ணிக்கப்படும் இவர், பல முறை கோல் வாய்ப்புகளையும் ஏற்படுத்தி தந்தார். 

இவர் கூறுகையில்,‘‘அரங்கில் திரண்டிருந்த சென்னை ரசிகர்களுக்கு நன்றி. அணி தோல்வி அடைந்ததால், இவர்களிடம் வருத்தத்தை தெரிவித்துக் கொள்கிறேன். சென்னை அணியின் ‘லெவனில்’ வாய்ப்பு கிடைத்தது அதிர்ஷ்டம். கோல் அடித்த போதும், மகிழ்ச்சி கிடைக்கவில்லை,’’என்றார்.                  
வரும் போட்டிகளில் ஜேஜே, கப்ரா, ரால்டே அடங்கிய மூவர் அணி, இன்னும் சிறப்பாக செயல்படும்பட்சத்தில் சென்னை அணி, வெற்றிப்பாதைக்கு திரும்பலாம்.

கிரிக்கெட் மைதானத்தில் தற்கொலை படை தாக்குதல்

ஆப்கனில் கிரிக்கெட் மைதானத்தில் நடந்த தற்கொலை படை தாக்குதலில் 9 பேர் மரணம் அடைந்தனர். 50 க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர்.

ஆப்கனின் தென் கிழக்குப் பகுதியில் உள்ளது பக்டிக்கா பகுதி. பாகிஸ்தானின் எல்லைப்புற பகுதியான இங்கு உள்ளூர் கிரிக்கெட் போட்டி நடந்தது. அப்போது வெடி குண்டு நிரப்பப்பட்ட கார் ஒன்று வேகமாக வந்து பார்வையாளர்கள் இருந்த பகுதியின் மீது மோதியது.

இந்த தற்கொலை படை தாக்குதலில் 9 பேர் கொல்லப்பட்டனர். 50 க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். இத்தாக்குதலுக்கும் தங்களுக்கும் தொடர்பு இல்லை என. தலிபான் அமைப்பினர் மறுத்தனர். 

முதலில் கால்பந்து மைதானத்தில் தாக்குதல் நடந்ததாக செய்திகள் வெளியாகின. பின் தான் கிரிக்கெட் மைதானம் எனத் தெரியவந்தது.

இதுகுறித்து ஆப்கன் உள்துறை அமைச்சகம் வெளியிட்ட செய்தியில்,‘ கிரிக்கெட் போட்டியை பார்வையிட வந்த உள்ளூர் அரசு நிர்வாகிகளை குறி வைத்து இத்தாக்குதல் நடத்தப்பட்டு இருக்கலாம்,’ என, தெரிவித்தது. 

இரண்டாவது முறை:

கடந்த 2001ல் ஆப்கனில் அமெரிக்கா உட்பட பல்வேறு வெளிநாட்டு படைகள் இணைந்து தலிபான் ஆட்சியை அகற்றின. கடந்த ஆண்டு இப்படைகள் விலக்கிக் கொள்ளப்பட்டன.

இதன் பின் ஆப்கன் அரசு தங்களிடம் உள்ள சிறிய அளவிலான பாதுகாப்பு வீரர்களை கொண்டு, தலிபான் பயங்கரவாத அமைப்பை எதிர்த்து வருகின்றது. 

கடந்த ஆண்டு வாலிபால் போட்டியின் போதும் இதேபோன்று நடந்த தாக்குதல் சம்பவத்தில் 50 பேர் கொல்லப்பட்டனர்.

ஜென்டில்மேன் ஆட்டமா கிரிக்கெட்?

கிரிக்கெட்டை ‘ஜென்டில்மேன்’ விளையாட்டு என அழைப்பார்கள். ஆனால், களத்தில் வீரர்களின் செயல்பாடு மோசமாகவே உள்ளது.

* 1981ல் பெர்த்தில் நடந்த டெஸ்டில் ஆஸ்திரேலியாவின் டெனிஸ் லில்லி, பாகிஸ்தானின் ஜாவித் மியாண்தத்தை உதைத்ததாக கூறப்பட்டது. பதிலுக்கு மியாண்தத், பேட்டை உயர்த்திக் கொண்டு வர ‘டென்ஷன்’ ஏற்பட்டது.

* 1992, உலக கோப்பை தொடரில் இந்தியாவின் கிரண் மோரே, மியாண்தத் மோதல், 1996, உலக கோப்பை தொடரில் அமிர் சோகைல், பிரசாத் உரசல், 2008ல் நடந்த சிட்னி டெஸ்டில் ஹர்பஜன்–சைமண்ட்ஸ் சர்ச்சை, 2010ல் நடந்த ஆசிய கோப்பை தொடரில் கம்ரான் அக்மல், காம்பிர் முறைத்துக் கொண்டது என ஏராளமான சம்பவங்களை குறிப்பிடலாம்.

முதல் வீரர்:

ஆனாலும் பெர்முடா சம்பவம் தான் மிக மோசமானது. 

இங்கு,  குத்துச்சண்டை, கிக் பாக்சிங், மல்யுத்தம் போல வீரர்கள் மோதிக் கொண்டனர். களத்தில் எதிரணி வீரருடன் மோதலில் ஈடுபட்டு, வாழ்நாள் தடை பெறும் முதல் வீரரானார் ஜேசன் ஆண்டர்சன். 

ரெய்னா சதம் - தொடரை வென்றது இந்தியா ‘ஏ’

வங்கதேச ‘ஏ’ அணிக்கு எதிரான அதிகாரப்பூர்வமற்ற 3வது ஒரு நாள் போட்டியில் ரெய்னா சதம் அடிக்க, இந்திய ‘ஏ’ அணி ‘டக்வொர்த்– லீவிஸ்’ முறைப்படி வெற்றி பெற்றது. 

இதன் மூலம் தொடரை 2–1 என கைப்பற்றியது.
இந்தியா ‘ஏ’, வங்கதேசம் ‘ஏ’ அணிகள் மூன்று போட்டிகள் கொண்ட அதிகாரப்பூர்வமற்ற ஒருநாள் தொடரில் மோதின. முதலிரண்டு போட்டிகளின் முடிவில் தொடர் 1–1 என சமநிலை வகித்தது. 

இரு அணிகள் மோதிய கடைசி மற்றும் மூன்றாவது போட்டி நேற்று பெங்களூருவில் நடந்தது. ‘டாஸ்’ வென்ற இந்திய கேப்டன் உன்முக்த் சந்த், ‘பேட்டிங்’ தேர்வு செய்தார். 

ரெய்னா சதம்:

இந்திய ‘ஏ’ அணிக்கு உன்முக்த் 41 ரன்கள் எடுத்தார். இதன் பின் இணைந்த சாம்சன் (90), ரெய்னா (104) ஜோடி அசத்தியது. கேதர் ஜாதவ், குர்கீரத் சிங் தலா 4 ரன்களில் ஆட்டமிழந்தனர். முடிவில், இந்திய ஏ அணி 50 ஓவரில் 6 விக்கெட்டுக்கு 297 ரன்கள் எடுத்தது. 

இதன் பின் வங்கதேச ‘ஏ’ அணி களமிறங்கியது. மழை குறுக்கிட 46 ஓவரில் 297 ரன்கள் எடுக்க வேண்டுமென இலக்கு மாற்றப்பட்டது. சவுமியா சர்கார் (1), அனாமுல் (1) சொதப்பினர். கேப்டன் மோமினுல் (37) நிலைக்கவில்லை. 

நாசிர் ஹொசைன் 22 ரன்கள் எடுத்தார். வங்கதேச ‘ஏ’ அணி 32 ஓவரில் 6 விக்கெட்டுக்கு 141 ரன்கள் எடுத்திருந்த நிலையில், மீண்டும் மழை பெய்ய ஆட்டம் நிறுத்தப்பட்டது. 

‘டக்வொர்த்–லீவிஸ்’ முறைப்படி வங்கதேச ‘ஏ’ அணி 32 ஓவரில் 217 ரன்கள் எடுத்திருக்க வேண்டும். ஆனால் இலக்கை எட்டவில்லை. இதையடுத்து இந்தியா ‘ஏ’ அணி 75 ரன்கள் வித்தியாசத்தில் வென்றதாக அறிவிக்கப்பட்டது.

இதன் மூலம் தொடரை இந்திய அணி 2–1 என கைப்பற்றியது. 

இந்திய அணி அறிவிப்பு - குர்கீரத் சிங் வாய்ப்பு

தென் ஆப்ரிக்காவுக்கு எதிரான முதல் 3 ஒரு நாள் போட்டிகளுக்கான இந்திய அணியில் ‘ஆல்–ரவுண்டர்’ குர்கீரத் சிங் அறிமுக  வாய்ப்பு பெற்றுள்ளார். 

இந்தியா வரவுள்ள தென் ஆப்ரிக்க அணி, மூன்று சர்வதேச ‘டுவென்டி–20’, ஐந்து ஒருநாள் மற்றும் நான்கு டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்கிறது. முதல் ‘டுவென்டி–20’ போட்டி வரும் அக்., 2ல் தரம்சாலாவில் நடக்கவுள்ளது. 

மீதமுள்ள போட்டிகள் கட்டாக் (அக்., 5,), கோல்கட்டா (அக்., 8) நகரங்களில் நடக்கவுள்ளன. ஐந்து ஒருநாள் போட்டிகள் முறையே கான்பூர் (அக்., 11), இந்துார் (அக்., 14), ராஜ்காட் (அக்., 18), சென்னை (அக்., 22), மும்பை (அக்., 25) நகரங்களில் நடக்கவுள்ளன. 

நான்கு டெஸ்ட் போட்டிகள் முறையே சண்டிகர் (நவ., 5–9), பெங்களூரு (நவ., 14–18), நாக்பூர் (நவ., 25–29), டில்லி (டிச.,3–7) ஆகிய இடங்களில் நடக்கின்றன.

முதற்கட்டமாக ‘டுவென்டி–20’ மற்றும் 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடருக்கான வீரர்களை தேர்வு செய்ய, சந்தீப் பாட்டீல் தலைமையில் பி.சி.சி.ஐ., தேர்வுக்குழு கமிட்டி கூட்டம் பெங்களூருவில் நடந்தது. இதன் பின் 15 வீரர்கள் கொண்ட அணி அறிவிக்கப்பட்டது. 

குர்கீரத் சிங் வாய்ப்பு:

ஒரு நாள் மற்றும் ‘டுவென்டி–20’ அணியை வழக்கம்போல, தோனி வழிநடத்துகிறார். ஒரு நாள் அணியில், சமீபத்திய வங்கதேச ‘ஏ’ அணிக்கு எதிராக சிறப்பாக செயல்பட்ட ‘ஆல்–ரவுண்டர்’ குர்கீரத் சிங் வாய்ப்பு பெற்றுள்ளார். மற்றபடி தவான், கோஹ்லி, ரெய்னா, ரகானே, அஷ்வின், அமித் மிஸ்ரா, பின்னி, ராயுடு உள்ளிட்டோர் இடம்பிடித்துள்ளனர். ‘ஆல்–ரவுண்டர்’ ஜடேஜாவுக்கு இடம் கிடைக்கவில்லை. 

‘டுவென்டி–20’ அணியில் பந்துவீச்சாளர் ஸ்ரீநாத் அரவிந்த் அறிமுக வாய்ப்பு பெற்றுள்ளார். ரெய்னா, ராயுடு, ஹர்பஜன், அக்சர் படேல், மோகித் சர்மா, புவனேஷ்வர், உள்ளிட்டோருக்கும் இடம் கிடைத்துள்ளது. 

ஒரு நாள் அணி: தோனி (கேப்டன்), அஷ்வின், பின்னி, தவான், கோஹ்லி, புவனேஷ்வர், அக்சர் படேல், ரகானே, ரெய்னா, ராயுடு, மோகித் சர்மா, ரோகித், உமேஷ், குர்கீரத் சிங், அமித் மிஸ்ரா. 

‘டுவென்டி–20’ அணி: தோனி (கேப்டன்), அஷ்வின், பின்னி, தவான், கோஹ்லி, புவனேஷ்வர், அக்சர் படேல், ரகானே, ரெய்னா, ராயுடு, மோகித் சர்மா, ரோகித், ஸ்ரீநாத் அரவிந்த், ஹர்பஜன், அமித் மிஸ்ரா

சிங் தான் ‘கிங்’ * இந்தியா ‘ஏ’ அசத்தல் வெற்றி

முதலாவது அதிகாரப்பூர்வமற்ற ஒருநாள் போட்டியில் அசத்திய இந்தியா ‘ஏ’ அணி, வங்கதேச ‘ஏ’ அணியை 96 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது. ‘ஆல்–ரவுண்டராக’ மிரட்டிய குர்கீரத் சிங்(65 ரன், 5 விக்.,) வெற்றிக்கு பெரிதும் கைகொடுத்தார்.

இந்தியா ‘ஏ’, வங்கதேச ‘ஏ’ அணிகள் மூன்று போட்டிகள் கொண்ட அதிகாரப்பூர்வமற்ற ஒருநாள் தொடரில் மோதுகின்றன. இதன் முதல் போட்டி பெங்களூருவில் உள்ள சின்னசாமி மைதானத்தில் நேற்று நடந்தது. ‘டாஸ்’ வென்ற வங்கதேச ‘ஏ’ அணி கேப்டன் மோமினுல் ஹக் ‘பீல்டிங்’ தேர்வு செய்தார்.

அகர்வால் ஆறுதல்:

இந்தியா ‘ஏ’ அணிக்கு கேப்டன் உன்முக்த் சந்த் (16) ஏமாற்றினார். அடுத்து வந்த மணிஷ் பாண்டே (1), ரெய்னா (16), கேதர் ஜாதவ் (0) நிலைக்கவில்லை. இந்தியா ‘ஏ’ அணி 4 விக்கெட்டுக்கு 76 ரன்கள் எடுத்து திணறியது. பொறுப்பாக ஆடிய துவக்க வீரர் மயங்க் அகர்வால் (56) அரைசதம் கடந்தார்.

சாம்சன் அபாரம்:

பின் இணைந்த சஞ்சு சாம்சன், குர்கீரத் சிங் ஜோடி அசத்தியது. வங்கதேச ‘ஏ’ அணி பந்துவீச்சை வெளுத்துவாங்கிய இவர்கள் இருவரும் அரைசதத்தை பதிவு செய்தனர். ஆறாவது விக்கெட்டுக்கு 102 ரன்கள் சேர்த்த போது குர்கீரத் சிங் (65) அவுட்டானார். சஞ்சு சாம்சன் (73) நம்பிக்கை தந்தார். கடைசி நேரத்தில் அதிரடி காட்டிய ரிஷி தவான் 34 பந்தில் 56 ரன்கள் எடுத்தார்.

இந்தியா ‘ஏ’ அணி 50 ஓவரில் 7 விக்கெட்டுக்கு 322 ரன்கள் குவித்தது. ரிஷி தவான் (56), கரண் சர்மா (11) அவுட்டாகாமல் இருந்தனர்.

குர்கீரத் அசத்தல்:

கடின இலக்கை விரட்டிய வங்கதேச ‘ஏ’ அணிக்கு சவுமியா சர்க்கார் (9), தாலுக்தார் (13) ஏமாற்றினர். கேப்டன் மோமினுல் ஹக் (19), சபிர் ரஹ்மான் (25) சோபிக்கவில்லை. பின் குர்கீரத் சிங் ‘சுழலில்’ வங்கதேசம் ‘ஏ’ அணி பேட்ஸ்மேன்கள் தடுமாறினர்.

இவரது பந்துவீச்சில் நாசிர் ஹொசைன் (52), லிட்டன் தாஸ் (75), ருபெல் ஹொசைன் (3), அராபட் சன்னி (6), டஸ்கின் அகமது (0) அவுட்டாகினர். வங்கதேச ‘ஏ’ அணி 42.3 ஓவரில் 226 ரன்களுக்கு ‘ஆல்–அவுட்’ ஆனது. ஷபியுல் இஸ்லாம் (2) அவுட்டாகாமல் இருந்தார். இந்தியா ‘ஏ’ அணி சார்பில் குர்கீரத் சிங் 5, ஸ்ரீநாத் அரவிந்த் 3, ரிஷி தவான் 2 விக்கெட் கைப்பற்றினர்.

இந்த வெற்றியின்மூலம் இந்தியா ‘ஏ’ அணி 1–0 என முன்னிலை பெற்றது. இரண்டாவது போட்டி பெங்களூருவில் நாளை நடக்கிறது.

தோனிக்கு எதிரான வழக்கு - உச்சநீதிமன்றம் தடை

கேப்டன் தோனிக்கு எதிரான வழக்கை விசாரிக்க கர்நாடக உயர் நீதிமன்றத்துக்கு, உச்சநீதிமன்றம் தடை விதித்துள்ளது.

இந்திய ஒருநாள், ‘டுவென்டி–20’ அணி கேப்டன் தோனி, 34. கடந்த 2013ல் வெளியான ஆங்கில பத்திரிகை அட்டைப் படத்தில் விஷ்ணு போல சித்தரிக்கப்பட்டு இருந்தார். 

இவரது கைகளில் ‘ஷூ’ உட்பட பல விளம்பர பொருட்கள் இருந்தது சர்ச்சையை கிளப்பியது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, சமூகநல ஆர்வலர் ஜெயக்குமார், கர்நாடக உயர்நீதி மன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். 

இதை ஏற்றுக் கொண்ட நீதிமன்றம், தோனிக்கு கடும் கண்டனம் தெரிவித்தது. இதனிடையே இந்த வழக்கை தள்ளுபடி செய்ய வேண்டும் என, தோனி உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.

இந்த மனு மீதான விசாரணை இன்று நடந்தது. இதனை விசாரித்த நீதிபதிகள் பினாகி சந்திரபோஸ், என்.வி.ரமணா அடங்கிய ‘பென்ச்’, தோனிக்கு எதிரான வழக்கை விசாரிக்ககூடாது என தடை விதித்து கர்நாடக உயர் நீதிமன்றத்துக்கு உத்தரவிட்டுள்ளது.

தோனியா...கோஹ்லியா - கேப்டன் தேர்வில் புது குழப்பம்

ஒருநாள் தொடருக்கான இந்திய அணிக்கு தோனிக்குப் பதில் கோஹ்லியை கேப்டனாக்க திட்டம் வகுக்கப்பட்டு வருகிறது.    
                     
இந்தியா வரும் தென் ஆப்ரிக்க அணி 3 ‘டுவென்டி–20’, 5 ஒருநாள் மற்றும் 4 டெஸ்ட் என, 72 நாட்கள் கொண்ட தொடரில் பங்கேற்கிறது.                                                                         
முதலில் ‘டுவென்டி–20’ போட்டிகள் வரும் அக்., 2ல் தரம்சாலா, 5ல் கட்டாக், 8ல் கோல்கட்டாவில் நடக்கின்றன. பின் ஒருநாள் மற்றும் டெஸ்ட் தொடர் நடக்கும். தற்போதைய நிலையில் கடந்த ஆண்டு டெஸ்ட் அரங்கில் இருந்து விடைபெற்ற தோனி, ‘டுவென்டி–20’, ஒருநாள் அணிக்கு கேப்டனாக தொடர்கிறார்.                         

டெஸ்ட் அணி கேப்டனாக தேர்வு செய்யப்பட்ட கோஹ்லி, வித்தியாசமான திட்டங்களுடன் இலங்கை மண்ணில் தொடரை வென்று அசத்தினார்.                         
புதிய கோரிக்கை: இதையடுத்து, ‘டுவென்டி–20’, ஒருநாள் அணிக்கும் கோஹ்லியை கேப்டனாக நியமிக்க வேண்டும் என்ற கோரிக்கை வலுத்து வருகிறது. இதனால், தென் ஆப்ரிக்க தொடரில் ஒருநாள் போட்டி அணிக்கு, தோனியை நீக்கிவிட்டு கோஹ்லியை கேப்டனாக கொண்டு வரலாமா என இந்திய கிரிக்கெட் போர்டு (பி.சி.சி.ஐ.,) தேர்வாளர்கள் யோசித்து வருகின்றனர்.                         

இதுகுறித்து வெளியான செய்தி:      
                  
கோஹ்லி, ரகானே, அஷ்வின், ரோகித் சர்மா, ஷிகர் தவான் உள்ளிட்டோர் மூன்று வித அணியிலும் முக்கிய பங்கு வகிக்கின்றனர். இதில் டெஸ்ட் அணிக்கு கேப்டனாக இருக்கும் கோஹ்லி, திடீரென தோனி அணியில் விளையாடும் போது சற்று வித்தியாசமான உணர்வைத் தரலாம்.      
                  
விரைவில் முடிவு: இதுகுறித்து கடந்த தேர்வாளர்கள் கூட்டத்திலேயே விவாதிக்கப்பட்டது. அதேநேரம் தோனியை பொறுத்தவரையில் இந்திய அணி கேப்டன்களில் மிகவும் வெற்றிகரமானவராக உள்ளார். கோஹ்லி இப்போது தான் கேப்டனாக அடி எடுத்து வைக்கிறார்.       

உறுதி இல்லை: கடந்த 8 ஆண்டுகளாக தொடர்ந்து கேப்டனாக இருந்த போதும், தோனியின் பேட்டிங் திறன் சிறப்பாகத் தான் இருந்தது. இருப்பினும், கிரிக்கெட் வீரர்களைப் பொறுத்தவரையில் எல்லோரும் அணிக்கு வருவதும் போவதுமாகத் தான் இருப்பர். இது கேப்டனாக இருப்பவருக்கும் பொருந்தும்.                        
தோனி, தனது கிரிக்கெட் வாழ்க்கையின் கடைசிக் கட்டத்தில் தற்போது உள்ளார். டெஸ்டில் இருந்து விலகிய இவர், 2016 உலக கோப்பை தொடருக்குப் பின், தொடர்ந்து போட்டிகளில் பங்கேற்பாரா என உறுதியாகத் தெரியவில்லை. இதனால் சொந்தமண்ணில் நடக்கவுள்ள தென் ஆப்ரிக்க அணிக்கு எதிரான ஒருநாள் தொடருக்கு, கோஹ்லியை கேப்டனாக்க இது தான் சரியான தருணமாக பார்க்கப்படுகிறது. ஒருவேளை இந்த மாற்றம் நிகழ்ந்தாலும், 2016 உலக கோப்பை வரை ‘டுவென்டி–20’ அணியின் கேப்டன் பதவி விஷயத்தில் தோனிக்கு எவ்வித சிக்கலும் இருக்காது என்று கூறப்படுகிறது.       

இவ்வாறு அந்த செய்தியில் கூறப்பட்டுள்ளது.

விரைவில் ‘டுவென்டி–20’ அணி       

இந்தியா வரும் தென் ஆப்ரிக்க அணி முதலில் 3 ‘டுவென்டி–20’ போட்டிகளில் விளையாடுகிறது. இதற்குத் தயாராகும் வகையில் செப்., 29ல் பிரசிடென்ட் லெவன் அணியுடன் பயிற்சி போட்டியில் (20 ஓவர்) பங்கேற்கிறது. இதற்கான இந்திய அணி, வங்கதேச ‘ஏ’ அணிக்கு எதிரான தொடரின் (செப்., 16, 18 மற்றும் 20) போது செப்., 18ல் தேர்வு செய்யப்படும் எனத் தெரிகிறது. அதே தினத்தில் பயிற்சி ‘டுவென்டி–20’ போட்டிக்காக அணியும் அறிவிக்கப்படவுள்ளது.

முதல் மூன்று பந்தில் ஹாட்ரிக்

இங்கிலாந்தில் நடக்கும் கவுன்டி ஒருநாள் போட்டியில், வொர்செஸ்டர்ஷைர் அணியின் ஜோ லீச் முதல் மூன்று பந்தில் ‘ஹாட்ரிக்’ சாதனை படைத்தார்.

இங்கிலாந்தில் உள்ளூர் கிளப் அணிகள் பங்கேற்கும் கவுன்டி ஒருநாள் போட்டி நடக்கிறது. லண்டனில் நடந்த ‘குரூப்–ஏ’ போட்டியில் வொர்செஸ்டர்ஷைர், நார்தாம்ப்டன்ஷைர் அணிகள் மோதின.


இரண்டாவது முறை:

‘டாஸ்’ வென்ற நார்தாம்ப்டன்ஷைர் அணி முதலில் ‘பேட்’ செய்தது. ஜோ லீச் வீசிய ஆட்டத்தின் முதல் ஓவரின் முதல் மூன்று பந்தில் ரிச்சர்டு லீவி, ராப் கியோக், பென் டக்கெட் ஆகியோர் ‘டக்–அவுட்’ ஆனார்கள். 

இதன்மூலம் ஒட்டுமொத்த கிரிக்கெட் அரங்கில் ஆட்டத்தின் முதல் ஓவரில் முதல் மூன்று பந்தில் ‘ஹாட்ரிக்’ சாதனை படைத்த சம்பவம் 2வது முறையாக அரங்கேறியது. 

இதற்கு முன், 2003ல் வங்கதேசத்துக்கு எதிரான உலக கோப்பை லீக் போட்டியில் இலங்கையின் சமிந்தா வாஸ் இச்சாதனை படைத்தார்.


சாதனை வீண்:

இப்போட்டியில் நார்தாம்ப்டன்ஷைர் அணி 35.1 ஓவரில் 126 ரன்னுக்கு ‘ஆல்–அவுட்’ ஆனது. ஜோ லீச் 4 விக்கெட் வீழ்த்தினார். ஆனால் சுலப இலக்கை விரட்டிய வொர்செஸ்டர்ஷைர் அணி 31 ஓவரில் 105 ரன்களுக்கு சுருண்டு, 21 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது. 

இதன்மூலம் ஜோ லீச்சின் சாதனை வீணானது.

கோஹ்லி கேப்டனாவதை தடுத்த சீனிவாசன்

சீனிவாசன் மட்டும் தடுக்காமல் இருந்திருந்தால் மூன்று ஆண்டுக்கு முன்பே கோஹ்லி இந்திய ஒருநாள் அணியின் கேப்டனாகி இருப்பார்,’’ என, முன்னார் தேர்வாளர் ராஜா வெங்கட் தெரிவித்தார்.

கடந்த 2011ல் இந்திய அணி உலக கோப்பை வென்றது. இதன் பின் இங்கிலாந்து, ஆஸ்திரேலிய மண்ணில் மோசமான தோல்விகளை பெற்றது. இதனால் இந்திய அணி கேப்டன் தோனியை மாற்ற பல்வேறு முயற்சிகள் நடந்ததாக செய்திகள் வெளியாகின.

இது உண்மை தான் என்கிறார் அப்போதைய தேர்வுக்குழு உறுப்பினர் ராஜா வெங்கட், 56. இதுகுறித்து கோல்கட்டா பத்திரிகையில் வெளியான செய்தி:

கடந்த 2011–12 ஆஸ்திரேலிய டெஸ்ட் தொடரில் இந்திய அணி 0–3 என, பின்தங்கி இருந்தது. நான்காவது டெஸ்ட் துவங்கும் முன், இதுகுறித்து அறிய மொகிந்தர் அமர்நாத், ஹிர்வானி அங்கு சென்று திரும்பினர்.

அப்போது,‘ பல்வேறு காரணங்களால் இந்திய அணி பிளவுபட்டுள்ளது. விளையாட்டு உணர்வுகளே இல்லாமல் வீரர்கள் உள்ளதாக,’ தெரிவித்தனர்.

இதனால் ‘ஒருநாள் தொடருக்கு முன் புதிய கேப்டனை நியமிக்க வேண்டும். மீண்டும் விளையாட்டு உணர்வை கொண்டு வர கோஹ்லி தான் சரியான நபர்,’ என முடிவு செய்தோம்.

இதையடுத்து 3 ஆண்டுக்கு முன்பே கோஹ்லியை கேப்டனாக்குவது குறித்து தேர்வாளர்கள் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டன.

ஆனால் அன்னிய மண்ணில் தொடர் நடந்து கொண்டிருக்கும் போது கேப்டனை மாற்ற வேண்டும் எனில் இந்திய கிரிக்கெட் போர்டு (பி.சி.சி.ஐ.,) தலைவர் அனுமதி பெற வேண்டும் என்ற நிலை உள்ளது.

எங்களின் முடிவுக்கு அப்போதைய தலைவர் சீனிவாசன் சம்மதிக்கவில்லை. எங்கள் முயற்சியை தொடர்ந்த போதும், சீனிவாசன் கடைசி வரை பதில் தெரிவிக்கவில்லை. 

இவ்வாறு அந்த பத்திரிகையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்திய அணியில் சேவக், ஜாகிர், யுவராஜ் - வங்கதேச தொடரில் வாய்ப்பு

வங்கதேச தொடருக்கான இந்திய அணியில் சேவக், ஜாகிர் கான், யுவராஜ் சிங், ஹர்பஜன் உள்ளிட்ட , ‘சீனியர்களுக்கு’ வாய்ப்பு தரப்படும் எனத் தெரிகிறது.       

எட்டாவது ஐ.பி.எல்., தொடர் முடிந்த பின், ஜூன் 7ல் இந்திய அணி வங்கதேசம் செல்கிறது. இங்கு ஒரு டெஸ்ட், 3 ஒரு நாள் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்கிறது.    
   
இதற்கான இந்திய அணி வரும் 20ம் தேதி தேர்வு செய்யப்படுகிறது. கோஹ்லி உள்ளிட்ட பல வீரர்கள், இத்தொடரில் இருந்து தங்களுக்கு ஓய்வு தர வேண்டும் என, கோரிக்கை விடுத்துள்ளனர்.       

இத்தொடரில் சேவக், ஜாகிர் கான், யுவராஜ் சிங் மற்றும் ஹர்பஜன் சிங் என, ‘சீனியர்’ வீரர்களுக்கு வாய்ப்பு தரப்படும் எனத் தெரிகிறது.       

2011 உலக கோப்பை தொடரில் இந்திய அணி கோப்பை வெல்ல உதவியாக இருந்தவர்கள் இவர்கள் தான். பின் மோசமான ‘பார்ம்’, போதிய உடற்தகுதியின்மை போன்ற காரணங்களால் அணியில் சேர்க்கப்படவில்லை.      
இருப்பினும், ஐ.பி.எல்., தொடரில் தொடர்ந்து பங்கேற்று வருகின்றனர். இவர்களுக்கு கவுரமான முறையில் விடைகொடுக்கும் பொருட்டு,  வங்கதேச தொடருக்கான அணியில் சேர்க்க இந்திய கிரிக்கெட் போர்டு (பி.சி.சி.ஐ.,) திட்டமிட்டுள்ளது.      

இதுகுறித்து பி.சி.சி.ஐ., அதிகாரி ஒருவர் கூறியது:      

இந்திய அணி 2011ல் உலக கோப்பை வென்றதில் இந்த நான்கு வீரர்களுக்கும் முக்கிய பங்கு உள்ளது. இதனால், இவர்களுக்கு வங்கதேச தொடரில் வாய்ப்பு கொடுத்து, கவுரமான முறையில் விடை கொடுக்க திட்டமிட்டுள்ளோம்.  
     
சிலர் இது உணர்ச்சி வசமான முடிவு என்கின்றனர். என்னைப் பொறுத்தவரையில் ஏன் அப்படி செய்யக் கூடாது. இம்முடிவு தற்போது தேசிய தேர்வுக்குழுவுக்கு அனுப்பப்பட்டுள்ளது.       

அவர்களது முடிவைப் பொறுத்து முழு தொடரிலும் விளையாடுவதா அல்லது ஒரு சில போட்டிகளில் மட்டும் பங்கேற்பதா என முடிவாகும். இருப்பினும், சிலர் டெஸ்ட் போட்டிக்கு மட்டும், வேறு சிலர் ஒருநாள் தொடருக்கும் தேர்வு செய்யப்படுவர்.       


இது சரியா?      

இந்த நான்கு வீரர்களுக்கும் மீண்டும் வாய்ப்பு தருவது சரியாக இருக்குமா எனத் தெரியவில்லை. ஏனெனில், இந்த ஐ.பி.எல்., தொடரில் யுவராஜ் சிங், 13 போட்டியில் 237 ரன்தான் எடுத்துள்ளார்.       

8 போட்டியில் 99 ரன் மட்டும் எடுத்ததால், பஞ்சாப் அணியில் சேவக்கை சேர்க்க மறுக்கின்றனர். இருப்பினும், டெஸ்ட் அரங்கில் இரு முறை 300க்கும் மேல் எடுத்த ஒரே இந்திய வீரர் என்ற அடிப்படையில் வாய்ப்பு கிடைக்கலாம்.      
ஜாகிர் கானை பொறுத்தவரையில் காயத்தில் இருந்து மீண்டு, ஐ.பி.எல்., தொடரில் (6 போட்டி, 7 விக்.,) நன்றாக செயல்படுகிறார். மும்பை அணியில் ஹர்பஜன் சிங்கும் (12ல் 13 விக்.,) பரவாயில்லை என்பதால், வாய்ப்பு கிடைக்கும் எனத் தெரிகிறது.

ஏணி வைத்தாலும் எட்டாது - 632 மடங்கு அதிகம்

உலக கோப்பை தொடரின் அரையிறுதியுடன் திரும்பிய இந்திய அணிக்கு பரிசுத் தொகையாக ரூ. 5.4 கோடி கிடைத்தது. அதேநேரம் கடந்த 1983ல் கோப்பை வென்ற இந்திய அணிக்கு ரூ. 18.8 லட்சம் தான் கிடைத்தது.

ஆஸ்திரேலியா, நியூசிலாந்து மண்ணில் சமீபத்தில் உலக கோப்பை தொடர் நடந்தது. இதில் கோப்பை வென்ற ஆஸ்திரேலிய அணிக்கு ரூ. 24.7 கோடி (லீக் சுற்று செயல்பாடு சேர்த்து) கிடைத்தது. பைனலில் வீழ்ந்த நியூசிலாந்து அணி ரூ. 12.6 கோடி பெற்றது.

லீக் சுற்றில் தொடர்ச்சியான 6 வெற்றியுடன் காலிறுதியில் அசத்திய இந்திய அணி, அரையிறுதியில் வீழ்ந்தது. இதையடுத்து, இந்திய அணிக்கு பரிசுத் தொகையாக ரூ.5.4 கோடி கிடைத்தது. மற்றொரு அரையிறுதியில் வீழ்ந்த தென் ஆப்ரிக்கா, லீக் சுற்றில் இந்தியாவுடன் தோற்றது. இதனால், இந்த அணிக்கு ரூ. 4.9 கோடி மட்டும் கிடைத்தது.

காலிறுதியில் தோற்ற பாகிஸ்தான், இலங்கை அணிகள் தலா ரூ. 3 கோடி பெற்றன. மற்ற இரண்டு காலிறுதியில் வீழ்ந்த வங்கதேசம், வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு லீக் சுற்று வெற்றி, தோல்வியையும் சேர்த்து ரூ. 2.9 கோடி, ரூ. 2.7 கோடி கிடைத்தன.

லீக் சுற்றுடன் திரும்பிய அணிகளில் அயர்லாந்துக்கு அதிகபட்சமாக ரூ. 1.1 கோடி கிடைத்தது. இங்கிலாந்து ரூ. 78 லட்சம், ஜிம்பாப்வே, ஆப்கன் தலா ரூ. 50 லட்சம் பெற்றன. இத்தொடரில் ஒரு வெற்றி கூட பெறாத ஸ்காட்லாந்து, ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அணிகளுக்கு ரூ. 22 லட்சம் கிடைத்தன.


எட்டாத உயரம்:

அதேநேரம், 1975ல் முதல் உலக கோப்பை தொடரில் கோப்பை வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு ரூ. 3.7 லட்சம் கிடைத்தது. 1983ல் சாம்பியன் பட்டம் வென்ற இந்தியா ரூ. 18.8 லட்சம் மட்டும் பெற்றது.

அதேநேரம். இப்போது சாம்பியன் ஆன ஆஸ்திரேலிய அணி, முதல் உலக கோப்பை வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணியை விட, 632 மடங்கு அதிகமாக பரிசுத் தொகையை தட்டிச் சென்றது. முதல் மற்றும் தற்போதைய தொடர் பரிசுப் பணத்தை பார்த்தால் ஏணி வைத்தாலும் எட்டாது.

உலக கோப்பை பைனலில் அரங்கேறிய சாதனைகள்

கடந்த 1987ல் இந்தியா, 1999ல் இங்கிலாந்து, 2003ல் தென் ஆப்ரிக்கா, 2007ல் வெஸ்ட் இண்டீஸ், 2015ல் ஆஸ்திரேலியா என உலகின் பல்வேறு பகுதிகளில் நடந்த உலக கோப்பை தொடரில் சாம்பியன் பட்டம் வென்ற ஒரே அணி என்ற சாதனை படைத்தது ஆஸ்திரேலியா.

* தவிர, சொந்த மண்ணில் நடந்த உலக கோப்பையில் சாம்பியன் பட்டம் வென்ற இரண்டாவது அணி என்ற பெருமை பெற்றது. கடந்த 2011ல் இந்திய அணி, சொந்த மண்ணில் கோப்பை வென்றது.


நான்காவது கேப்டன்

ஆஸ்திரேலியாவுக்கு உலக கோப்பை வென்று தந்த 4வது கேப்டன் என்ற பெருமை பெற்றார் மைக்கேல் கிளார்க். இதற்கு முன், ஆலன் பார்டர் (1987), ஸ்டீவ் வாக் (1999), ரிக்கி பாண்டிங் (2003, 2007) தலைமையிலான ஆஸ்திரேலிய அணி உலக சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது.


 7

இதுவரை நடந்த 11 உலக கோப்பை பைனலில், 7 முறை (1975, 79, 83, 99, 2003, 2011, 2015) ‘டாஸ்’ வென்ற அணி தோல்வியை சந்தித்தது. நான்கு முறை (1987, 1992, 1996, 2007) வெற்றி பெற்றன.


‘டக்–அவுட்’ சோகம்

இம்முறை அதிக முறை ‘டக்–அவுட்’ ஆனவர்கள் பட்டியலில் ஐக்கிய அரபு எமிரேட்சின் (யு.ஏ.இ.,) கிருஷ்ண சந்திரன் முதலிடம் பிடித்தார். இவர், 5 போட்டியில் 3 முறை ஒரு ரன் கூட எடுக்காமல் ஆட்டமிழந்தார். 

ஆஸ்திரேலியாவின் மிட்சல் ஸ்டார்க், இங்கிலாந்தின் இயான் மார்கன், வெஸ்ட் இண்டீசின் ராம்தின், இலங்கையின் தில்ஷன் உள்ளிட்டோர் தலா 2 முறை ‘டக்–அவுட்’ ஆனார்கள்.


ஹாடின் ‘டாப்’

அதிக விக்கெட் வீழ்ச்சிக்கு வித்திட்ட விக்கெட் கீப்பர்கள் பட்டியலில், ஆஸ்திரேலியாவின் பிராட் ஹாடின் முதலிடம் பிடித்தார். இவர், 8 போட்டியில் 16 முறை விக்கெட் வீழ்ச்சிக்கு காரணமாக இருந்தார். 

இவரை அடுத்து இந்தியாவின் தோனி (15), வெஸ்ட் இண்டீசின் ராம்தின் (13), நியூசிலாந்தின் ரான்கி (13) ஆகியோர் அதிக விக்கெட் வீழ்ச்சிக்கு வித்திட்டனர்.


9

அதிக ‘கேட்ச்’ பிடித்த வீரருக்கான பட்டியலில் தென் ஆப்ரிக்காவின் ரூசோவ் முதலிடத்தை கைப்பற்றினார். இவர், 6 போட்டியில் 9 ‘கேட்ச்’ பிடித்தார். இந்தியாவின் உமேஷ் யாதவ் (8), இங்கிலாந்தின் ஜோ ரூட் (7), ஷிகர் தவான் (7) உள்ளிட்டோரும் பீல்டிங்கில் அசத்தினர்.


‘ஸ்டார்’ ஸ்டார்க்

இம்முறை சிறந்த வீரருக்கான தொடர் நாயகன் விருதை ஆஸ்திரேலியாவின் மிட்சல் ஸ்டார்க் வென்றார். இவர், 8 போட்டியில் 22 விக்கெட் கைப்பற்றி, அதிக விக்கெட் வீழ்த்தியவருக்கான பட்டியலில் முதலிடம் பிடித்தார். 

இதன்மூலம் உலக கோப்பை வரலாற்றில் தொடர் நாயகன் விருது வென்ற இரண்டாவது ஆஸ்திரேலிய வீரரானார். கடந்த 2007ல் ஆஸ்திரேலியாவின் மெக்ராத் (26 விக்.,) இவ்விருது வென்றார்.


இரண்டு ‘ஹாட்ரிக்’

இம்முறை இரண்டு பவுலர்கள் ‘ஹாட்ரிக்’ சாதனை படைத்தனர். ஆஸ்திரேலியாவுக்கு எதிரான லீக் போட்டியில் இங்கிலாந்தின் ஸ்டீவன் பின், இலங்கைக்கு எதிரான காலிறுதியில் தென் ஆப்ரிக்காவின் டுமினி, இம்மைல்கல்லை எட்டினர்.

* இதுவரை, உலக கோப்பை அரங்கில் 9 முறை ‘ஹாட்ரிக்’ சாதனை படைக்கப்பட்டுள்ளது. இதில் இலங்கையின் லசித் மலிங்கா இரண்டு முறை (2007, 2011) இந்த இலக்கை எட்டினார்.

உலக கோப்பை வென்றது ஆஸி - 5 முறை சாம்பியனாகி சாதனை

உலக கோப்பை கிரிக்கெட் பைனல் போட்டியில் நியூசி., நிர்ணயித்த குறைந்த இலக்கான 183 ரன்னை ஆஸி., மிக எளிதாக அடைந்து உலக கோப்பையை தட்டி சென்றது. இதன் மூலம் 5வது முறையாக ஆஸி., உலக கோப்பையை வென்றுள்ளது.

உலக கோப்பை கிரிக்கெட் பைனல் போட்டியில் , ஆஸி.,க்கு மிக சொற்ப அளவிலான இலக்கையே நியூஸிலாந்து நிர்ணயித்து. இதனால் ஆஸி., மிக எளிதாக எதிர்கொள்ளும் என்ற சூழலே ஏற்பட்டது. நியூஸிலாந்து விக்கெட்டுகளை ஆஸி., வீரர்கள் மள,மளவென சரித்தனர். 

நியூஸி 44.5 ஓவரில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 183 ரன் எடுத்தது. ஆஸி,.க்கு ரன் இலக்கு 184 ஆக நிர்ணயிக்கப்பட்டது. தொடர்ந்து களம் இறங்கிய ஆஸி., நிதானமாக ஆடியது. 33.1 வது ஓவரில் ஆஸி., 3 விக்கெட் இழந்து 184 ரன் எடுத்து வெற்றி பெற்றது. இதன் மூலம் நியூசி 7 விக்கெட் வித்தியாசத்தில் தோற்றது.


(1987, 1999, 2003, 2007, 2015):  

சுலப இலக்கை விரட்டிய ஆஸ்திரேலிய அணிக்கு ஆரோன் பி்ன்ச் (0) ஏமாற்றினார். பொறுப்பாக ஆடிய டேவிட் வானர் (45) அரைசத வாய்ப்பை இழந்தார். அபாரமாக ஆடிய கேப்டன் மைக்கேல் கிளார்க் (74), ஸ்டீவ் ஸ்மித் (55*) அரைசதமடித்தனர்.

ஆஸ்திரேலிய அணி 33. ஓவரில் 3 விக்கெட்டுக்கு 186 ரன்கள் எடுத்திருந்தது. ஸ்டீவ் ஸ்மித் (55), வாட்சன் (2) அவுட்டாகாமல் இருந்தனர். நியூசிலாந்து சார்பில் ஹென்ரி 2, பவுல்ட் ஒரு விக்கெட் வீழ்த்தினர்.

இந்த வெற்றியின்மூலம், உலக கோப்பை அரங்கில் ஆஸ்திரேலிய அணி 5வது முறையாக (1987, 1999, 2003, 2007, 2015) சாம்பியன் பட்டத்தை கைப்பற்றி சாதித்தது.

ஆஸ்திரேலியாவின் மெல்போர்ன் நகரில் இன்று நடக்கும் பைனலில், ஆஸ்திரேலியா, நியூசிலாந்து அணிகள் மோதுகின்றன. இரு அணிகளிலும் மாற்றம் எதுவும் செய்யப்படவில்லை. 'டாஸ்' வென்ற நியூசிலாந்து அணி கேப்டன் பிரண்டன் மெக்கலம், 'பேட்டிங்' தேர்வு செய்தார்.


விறு விறுப்பு இல்லாத உலக கோப்பை : 

முதலில் களம் இறங்கிய நியூஸி., வீரர்கள் மிட்சல் ஸ்டார்க் 'வேகத்தில்' கேப்டன் பிரண்ட மெக்கலம் (0) போல்டானார். மேக்ஸ்வெல்' கப்டில் (15) சிக்கினார். ஜான்சன் பந்தில் வில்லியம்சன் (12) நடையை கட்டினார். 

பொறுப்பாக விளையாடும் எலியட் அரைசதமடித்தார். நான்காவது விக்கெட்டுக்கு 111 ரன்கள் சேர்த்த போது பால்க்னர் பந்தில் ராஸ் டெய்லர் (40) அவுட்டானார். அடுத்து வந்த கோரி ஆண்டர்சன் (0), பால்க்னர் பந்தில் போல்டானார் மெக்கலம், ஆண்டர்சன், ராங்கி , ஹென்றி, போல்ட் தலா ஒரு ரன் கூட எடுக்காமல் அவுட்டாயினர்.

நியூசிலாந்து அணி 44.5 ஓவரில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து விக்கெட்டுக்கு 183 ரன்கள் எடுத்துள்ளது. ஆஸ்திரேலியா சார்பில் பால்க்னர், ஜான்சன் தலா 3, ஸ்டார்க் 2, மேக்ஸ்வெல் ஒரு விக்கெட் கைப்பற்றினர்.


1983லும் 183- 2015 லும் 183 : 

மூன்றாவது உலகக்கோப்பை ( 1983ல் ) இறுதிப்போட்டியில், கபில்தேவ் தலைமையிலான இந்திய அணி, இருமுறை சாம்பியனான வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு, 183 ரன்களை இலக்காக நிர்ணயித்தது. சுலப இலக்கை விரட்டிய வெஸ்ட் இண்டீஸ் 140 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.

 குறைந்த ரன் அடித்து, பவுலிங்கில் அசத்திய இந்திய வீரர்கள் கோப்பையை வென்று சாதித்தனர். மூன்றாவது உலகக்கோப்பை இறுதிப்போட்டிக்கு முதல் முறையாக தகுதிபெற்ற இந்திய அணி, தான் பங்கேற்ற முதல் இறுதிப்போட்டியிலேயே குறைந்த ரன்கள் அடித்தும், பவுலிங்கில் விஸ்வரூபம் எடுத்து எதிரணியை 140 ரன்களுக்கு ஆல்அவுட் செய்தது போன்று, தற்போது முதல் முறையாக இறுதிப்போட்டியில் பங்கேற்கும் நியூ., அணியும் 183 ரன்கள் எடுத்துள்ளது.


இறுதிப்போட்டியில் கேப்டன்கள் இன்னிங்ஸ்

உலகக்கோப்பை போட்டியில், தொடர் வெற்றி பெற்ற வந்த நியூ., அணியின் கேப்டன் மெக்கலம், முக்கியமான இறுதிப்போட்டியில், 3 பந்துகளை சந்தித்து, டக் அவுட்டாகி அதிர்ச்சி தந்தார். 

ஆஸி., கேப்டன் கிளார்க், 72 பந்துகளை சந்திந்து 74 ரன்கள் குவிந்து, அணி பதற்றமின்றி வெற்றிபெற வழிவகுத்தார்,***
கடைசி போட்டியில் அசத்திய கிளார்க்


மெல்போர்ன்: 

ஆஸி. அணி இதற்கு முன் நான்கு முறை உலகக்கோப்பையை வென்றுள்ளது. 87ல் ஆலன்பார்டர் தலைமையிலும், 99ல் ஸ்டீவ் வாக் தலைமையிலும், 2003 மற்றும் 2007ல் ரிக்கி பாண்டிங் தலைமையிலும் கோப்பை வென்றுள்ளது. 

இந்த வரிசையில், தற்போது ஆஸி.,க்காக உலகக்கோப்பை வென்று தந்த கேப்டன்கள் வரிசையில், மைக்கேல் கிளார்க்கின் பெயரும் இடம்பெறுகிறது. இறுதிப்போட்டியில், இவர் 72 பந்துகளில் 74 ரன்கள் அடித்து, அவுட்டாகி, தனது கடைசி போட்டியை வெற்றிகரமாக நிறைவு செய்தார்.

ரெய்னாவின் புது வியூகம் - பவுன்சரை சமாளிக்க பயிற்சி

உலக கோப்பை தொடரின் அரையிறுதியில் சாதிக்க, இந்திய அணி பல்வேறு வியூகங்களை வகுத்து வருகிறது. ஸ்டார்க், ஜான்சன் உள்ளிட்ட ஆஸ்திரேலிய பவுலர்களின் ‘பவுன்சர்களை’ சமாளிக்க, டென்னிஸ் பந்துகளை எகிறச் செய்து ரெய்னா பயிற்சியில் ஈடுபட்டார்.

ஆஸ்திரேலிய மண்ணில் நடக்கும் உலக கோப்பை தொடர் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இத்தொடரில் ஒவ்வொரு அணிக்கு எதிராகவும், விஷேச திட்டத்துடன் இந்திய வீரர்கள் பயிற்சி செய்கின்றனர். 

பாகிஸ்தானின் 7.1 அடி உயரம் கொண்ட முகமது இர்பானை சமாளிக்க, இரண்டு சிறிய நாற்காலி ‘பார்முலாவை’ பயன்படுத்தி பயிற்சி செய்தனர்.


புதிய திட்டம்:

அடுத்து, சிட்னியில் 26ம் தேதி நடக்கும் இரண்டாவது அரையிறுதியில் ஆஸ்திரேலியாவை சந்திக்க, ‘நடப்பு சாம்பியன்’ இந்தியா ஆயத்தமாகிறது.

இங்கு ஆடுகளம் வேகத்துக்கு சாதகமாக இருக்குமா அல்லது சுழலுக்கு சாதகமாக தொடருமா என, இன்னும் உறுதியாக தெரியவில்லை. இருப்பினும், டெஸ்ட் தொடரில் இந்திய வீரர்களுக்கு ‘பவுன்சர்’ வீசிய ஸ்டார்க், ஜான்சன், ஹேசல்வுட்டின் அச்சுறுத்தலை எதிர்கொள்ள இந்திய அணி பயிற்சியாளர் பிளட்சர், 66, நேற்று புதிய திட்டத்தை கையாண்டார். 

பயிற்சியின் போது ரெய்னாவை மட்டும் தனியாக அழைத்துச் சென்றார். டென்னிஸ் ‘ராக்கெட்டை’ மூலம் ரெய்னாவை நோக்கி டென்னிஸ் பந்தை வேகமாக அடித்தார். இந்த பந்தின் எடை குறைவு என்பதால் தரையில் பட்டு நன்கு உயரமாக முகத்தை நோக்கி வந்தது. 

இதை எப்படி சமாளிப்பது என, பயிற்சியில் ஈடுபட்டார் ரெய்னா. உடலில் படும் படி வந்த பந்துகளை ‘ஹூக் ஷாட்’ அடித்து பழகினார். ஸ்டார்க் வீசுவதைப் போல வேகமாக வந்த பந்துகளை சமாளிக்க முடியாமல்  தடுமாறினார். இதையடுத்து, ரெய்னாவுக்கு உரியா ஆலோசனைகள் வழங்கினார் கேப்டன் தோனி.

இந்த பயிற்சி ரெய்னாவின் ‘ஷார்ட் பிட்ச்’ பலவீனத்தை சரியாக்க உதவும் என, நம்பப்படுகிறது.

பைனலில் நியூசிலாந்து அணி - வெளியேறியது தென் ஆப்ரிக்கா

பந்துக்கு பந்து பதட்டத்தை ஏற்படுத்திய உலக கோப்பை அரையிறுதியில் நியூசிலாந்து அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் ‘திரில்’ வெற்றி பெற்று, பைனலுக்கு முன்னேறியது. தென் ஆப்ரிக்கா அணி சோகத்துடன் வெளியேறியது. 

உலக கோப்பை தொடரில் இன்று நடந்த முதல் அரையிறுதியில் நியூசிலாந்து, தென் ஆப்ரிக்கா அணிகள் மோதின. ‘டாஸ்’ வென்ற தென் ஆப்ரிக்க அணி கேப்டன் டிவிலியர்ஸ் பேட்டிங் தேர்வு செய்தார். தென் ஆப்ரிக்க அணியில் அபாட்டுக்குப்பதில் பிலாண்டர் வாய்ப்பு பெற்றார். 

தென் ஆப்ரிக்க அணிக்கு துவக்கத்திலேயே பவுல்ட் தொல்லை தந்தார். இவரது ‘வேகத்தில்’ ஆம்லா (10), குயின்டன் (14) அடுத்தடுத்து வெளியேறினர். ரூசோவ் 39 ரன்கள் எடுத்தார். சிறப்பாக செயல்பட்ட டுபிளசி அரை சதம் அடித்தார். தன் பங்கிற்கு கேப்டன் டிவிலியர்சும் அரை சதம் எட்டினார். 


மில்லர் அதிரடி:

தென் ஆப்ரிக்க அணி 38 ஓவரில் 3 விக்கெட்டுக்கு 216 ரன்கள் எடுத்திருந்தபோது, மழையால் போட்டி நிறுத்தப்பட்டது. மழையால் ஆட்டம் சுமார் 2 மணி நேரம் பாதிக்கப்பட்டதால், போட்டி 43 ஓவர்களாக குறைக்கப்பட்டது. டுபிளசி 82 ரன்கள் எடுத்தார். 

பின் களமிறங்கிய மில்லர் அதிரடியாக விளையாடினார். இவர் 18 பந்தில் 49 ரன்கள் விளாசினார். தென் ஆப்ரிக்க அணி 43 ஓவரில் 5 விக்கெட்டுக்கு 281 ரன்கள் எடுத்தது. டிவிலியர்ஸ் (65), டுமினி (8) அவுட்டாகாமல் இருந்தனர். 


மெக்கலம் அரை சதம்:

நியூசிலாந்து அணிக்கு ‘டக்–வொர்த் லீவிஸ்’ முறைப்படி 43 ஓவரில் 298 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டது. நியூசிலாந்து அணிக்கு பிரண்டன் மெக்கலம், கப்டில் ஜோடி சிறப்பான துவக்கம் தந்தது. 

மார்னே மார்கல் பந்துவீச்சில் 3 பவுண்டரி விளாசிய மெக்கலம் அரை சதம் அடித்தார். இவர் 59 ரன்களில் அவுட்டானார். 


ஆண்டர்சன் அசத்தல்:

வில்லியம்சன் (6) நிலைக்கவில்லை. கப்டில் 34 ரன்கள் எடுத்தார். டுமினி பந்தில் ராஸ் டெய்லர் (30) ஆட்டமிழந்தார். இதன் பின் கைகோர்த்த கோரி ஆண்டர்சன், எலியாட் ஜோடி சிறப்பாக செயல்பட்டது. 

இருவரும் அரை சதம் கடந்தனர். இந்த நேரத்தில், ஆண்டர்சன் 58 ரன்களில் அவுட்டாக, சற்று பதட்டம் ஏற்பட்டது. ரான்கியும் 8 ரன்களில் கிளம்ப, நெருக்கடி அதிகரித்தது. 

இருப்பினும், எலியாட் போராடினார். கடைசி 2 பந்தில் 5 ரன்கள் தேவைப்பட்ட நிலையில், ஸ்டைன் பந்தை சிக்சருக்கு அனுப்பிய எலியாட் வெற்றியை உறுதி செய்தார். 

நியூசிலாந்து அணி 42.5 ஓவரில் 6 விக்கெட்டுக்கு 299 ரன்கள் எடுத்திருந்தது. எலியாட் (84), வெட்டோரி (7) அவுட்டாகாமல் இருந்தனர். 


முதல் முறை

உலக கோப்பை அரங்கில் நியூசிலாந்து அணி முதல் முறையாக பைனலுக்கு முன்னேறியுள்ளது. இதற்கு முன், 6 முறை (1975, 79, 92, 99, 2007, 2011) அரையிறுதிக்குள் நுழைந்தபோதும், ஒரு முறை கூட வெற்றி பெறவில்லை. 


தென் ஆப்ரிக்கா சோகம்

இதன் மூலம், தென் ஆப்ரிக்கா அணி உலக கோப்பை தொடரில் நான்காவது முறையாக அரையிறுதியில் தோல்வியடைந்தது. இதற்கு முன், 1992, 99, 2007ல் அரையிறுதியில் வீழ்ந்தது. 


பவுல்ட் சாதனை

ஒரு உலக கோப்பை தொடரில் அதிக (21) விக்கெட் வீழ்த்திய நியூசிலாந்து பவுலர் என்ற சாதனை படைத்தார் பவுல்ட். இதற்கு முன், கடந்த 1999 உலக கோப்பையில் ஜெப் அலாட் 20 விக்கெட் கைப்பற்றியதே அதிகமாக இருந்தது. 

தென் ஆப்ரிக்கா சாதனை வெற்றி - வெளியேறியது இலங்கை அணி

இலங்கைக்கு எதிரான உலக கோப்பை காலிறுதியில் தாகிர், டுமினி ‘சுழலில்’ மிரட்ட, தென் ஆப்ரிக்க அணி 9 விக்கெட் வித்தியாசத்தில் வென்று, அரையிறுதிக்கு முன்னேறியது. தவிர, உலக கோப்பை ‘நாக்–அவுட்’ சுற்றில் தென் ஆப்ரிக்க அணி முதல் வெற்றி பெற்று சாதித்தது. 

உலக கோப்பை தொடரின் காலிறுதி சுற்று இன்று துவங்கியது. சிட்னியில் நடந்த முதல் காலிறுதியில் இலங்கை, தென் ஆப்ரிக்க அணிகள் மோதின. ‘டாஸ்’ வென்ற இலங்கை அணி கேப்டன் மாத்யூஸ் ‘பேட்டிங்’ தேர்வு செய்தார். 

தென் ஆப்ரிக்க அணியில் பெகர்டியனுக்குப்பதில் அபாட் இடம்பிடித்தார். இலங்கை அணியில் சுழல் வீரர் கவுசால் அறிமுக வாய்ப்பு பெற்றார். 


தாகிர் அசத்தல்:

இலங்கை அணிக்கு குசல் பெரேரா (3) ஏமாற்றினார். ஸ்டைன் ‘வேகத்தில்’ தில்ஷன் டக்–அவுட் ஆனார். இம்ரான் தாகிர் ‘சுழலில்’ திரிமான்னே (41), ஜெயவர்தனா (4) ஆட்டமிழந்தனர். மாத்யூஸ் (19), குலசேகரா (1), கவுசால் (0) ஆகியோரை அவுட்டாக்கிய டுமினி ‘ஹாட்ரிக்’ விக்கெட் வீழ்த்தினார். 

சங்ககரா 45 ரன்களில் அவுட்டானார். மலிங்காவும் 3 ரன்களில் திரும்ப, இலங்கை அணி 37.2 ஓவரில் 133 ரன்களுக்கு ஆல்–அவுட்டானது. தென் ஆப்ரிக்கா சார்பில் அதிகபட்சமாக இம்ரான் தாகிர் 4, டுமினி 3 விக்கெட் வீழ்த்தினர். 


குயின்டன் அரை சதம்:

எளிய இலக்கை துரத்திய தென் ஆப்ரிக்க அணிக்கு ஆம்லா 16 ரன்கள் எடுத்தார். சிறப்பாக செயல்பட்ட குயின்டன் அரை சதம் அடித்தார். தென் ஆப்ரிக்க அணி 18 ஓவரில், ஒரு விக்கெட்டுக்கு 134 ரன்கள் எடுத்து, வெற்றி பெற்றது. குயின்டன் (78), டுபிளசி(21) அவுட்டாகாமல் இருந்தனர். 


சாதித்த தென் ஆப்ரிக்கா

கடந்த 1992 முதல் 2011 வரை நடந்த உலக கோப்பை தொடரின், ‘நாக்–அவுட்’ சுற்றில் ஒரு முறை கூட, தென் ஆப்ரிக்கா வென்றது கிடையாது. இந்த வெற்றியின் மூலம், தென் ஆப்ரிக்க அணி முதல் முறையாக உலக கோப்பையின், ‘நாக்–அவுட்’ சுற்றில் வெற்றி பெற்று, சாதனை படைத்தது.


சங்ககரா 500

இன்றைய போட்டியில் 4 ரன்கள் எடுத்தபோது, இந்த உலக கோப்பை தொடரில் 500 ரன்கள் எட்டிய முதல் வீரரானார் சங்ககரா. ஒட்டுமொத்தமாக, 7 போட்டியில் விளையாடியுள்ள இவர் 541 ரன்கள் குவித்துள்ளார். 

* ஒரு  உலக கோப்பை தொடரில் 500 அல்லது அதற்கு மேல் ரன் குவித்த வீரர்கள் பட்டியலில் 6வது இடத்தை சங்ககரா அடைந்தார். 

* ஒட்டுமொத்த உலக கோப்பை அரங்கில் அதிக ரன்கள் எடுத்தவர்கள் பட்டியலில் 3வது இடத்தை (1532 ரன்கள்) சங்ககரா பிடித்தார். முதலிரண்டு இடங்களில் இந்தியாவின் சச்சின் (2278), ஆஸ்திரேலியாவின் பாண்டிங் (1743) உள்ளனர். 

ரெய்னாவுக்கு திருமணம் - தோழியை கரம்பிடிக்கிறார்

இந்திய கிரிக்கெட் அணி இளம் வீரரான ரெய்னாவுக்கு அடுத்த மாதம் திருமணம் நடக்கவுள்ளது. இந்திய அணியின் இளம் வீரர் ரெய்னா, 28. 

இதுவரை 18 டெஸ்ட் (768 ரன்கள்) , 213 ஒரு நாள் (5316), 44 ‘டுவென்டி–20’ (947) போட்டிகளில் விளையாடி உள்ளார். உலக கோப்பை தொடரில், ஜிம்பாப்வே அணிக்கு எதிரான லீக் போட்டியில் சதம் அடித்தார். 

இவருக்கு விரைவில் திருமணம் நடக்கவுள்ளது. இது குறித்து ரெய்னாவின் நெருங்கிய நண்பர் ஒருவர் கூறுகையில்,‘‘ ரெய்னா தாயாரின் தோழியின் மகள் பிரியங்கா சவுத்ரி. 

சிறு வயதிலிருந்தே ரெய்னாவும், பிரியங்காவும் நெருங்கிய நண்பர்கள். உ.பி., மாநிலம் மீரட்டை சேர்ந்த பிரியங்கா நெதர்லாந்தில் உள்ள வங்கியில் பணிபுரிந்து வருகிறார். இந்திய அணி வீரர்கள், உலக கோப்பை தொடரை முடித்து, மார்ச்30ம் தேதி தாயகம் திரும்புகின்றனர். 

ஏப்ரல் 1ம் தேதி ரெய்னா, தனது நண்பர்களுக்கு விருந்து அளிக்கிறார். டில்லியில் உள்ள நட்சத்திர ஓட்டலில் ஏப்ரல் 3ம் தேதி காலை நிச்சயதார்த்தமும், அன்று மாலையில் ரெய்னாவுக்கும், பிரியங்காவுக்கும் திருமணம் நடக்கவுள்ளது. இதில் இந்திய வீரர்கள், உறவினர்கள் பங்கேற்க உள்ளனர். இவ்வாறு அவர் கூறினார்.