இக்கட்டான சூழ்நிலையில் பொறுப்பற்ற முறையில் செயல்பட்ட டோனி

ஐ.பி.எல் கிரிக்கெட்டின் இரண்டாவது அரையிறுதி போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியும் மோதின. 

முதலில் ஆடிய பஞ்சாப் அணி அதிரடியாக ஆடி 226 ரன்கள் குவித்தது. அந்த அணியின் துவக்க ஆட்டக்காரரான வீரேந்தர் சேவாக் நீண்ட நாட்களுக்கு பிறகு தனது வாணவேடிக்கையை காண்பித்தார். 

அவர் சென்னை அணி வீரர்கள் வீசிய பந்துகளை சிக்சர்களாகவும், பவுண்டரிகளாகவும் விளாசி தள்ளினார். பின்னர் வெற்றிக்கு 227 ரன்கள் தேவை என்ற கடினமான இலக்குடன் சென்னை அணி களமிறங்கியது. 

கேப்டன் டோனி ஆரம்பத்திலேயே பேட்டிங் ஆர்டர் தேர்வில் சொதப்பினார். சர்வதேச அரங்கில் துவக்க ஆட்டக்காரராக களமிறங்கிய மெக்கல்லத்தை துவக்க வீரராக களமிறக்காமல் மத்திய வரிசையில் களமிறங்கும் டு பிளெசிஸ்சை துவக்க ஆட்டக்காரராக களமிறக்கினார். 

அவர் டக் அவுட்டாக வெளியேறி டோனி எடுத்தது மோசமான முடிவு என நிரூபித்தார். துவக்க ஆட்டக்காரராக களமிறங்க வேண்டிய மெக்கல்லம் மத்திய வரிசையில் களமிறங்கியதால் ரன் குவிக்க தடுமாறினார். 

அதேசமயம், அதிரடியாக விளையாடி 25 பந்துகளில் 87 ரன் குவித்த ரெய்னாவை ரன் அவுட்டாக்கியதுடன் தானும் ரன் அவுட்டாகி சென்னை அணி ரசிகர்களுக்கு அதிர்ச்சி கொடுத்தார். 

பஞ்சாப் அணி வீரர் அவானா வீசிய ஆட்டத்தின் 6வது ஓவரில் இரண்டு சிக்ஸர் ஐந்து பவுண்டரிகள் விளாசி 33 ரன்களை குவித்து ரெய்னா அசத்தியது ஆட்டத்தின் சிறப்பம்சமாகும். 

இந்த இக்கட்டான தருணத்தில் கேப்டன் என்ற பொறுப்பை உணர்ந்து அணியை வெற்றி பெற வைக்கவேண்டும் என்ற எண்ணத்துடன் களமிறங்குவதை தவிர்த்த டோனி 5வது விக்கெட்டுக்கு ஜடேஜாவை களமிறக்கினார். 

சரி அடுத்த வீரராகவாவது களமிறங்குவார் என பார்த்தால் டேவிட் ஹசியை 6வது விக்கெட்டுக்கு களமிறக்கினார். அதன் பிறகு 7வது வீரராக 13வது ஓவரின் போது தான் டோனி களமிறங்கினார். 

அப்போது அணியின் ஸ்கோர் 140 ரன்னாக ஆக இருந்தது. வெற்றிக்கு 48 பந்துகளில் 87 ரன்கள் தேவைப்பட்டது. கேப்டன் என்ற முறையில் இக்கட்டான நிலையில் அணி இருக்கும்போது அதனை தூக்கி நிறுத்தாமல் ஒடி ஒளிவது போல் இருந்தது டோனியின் செயல். ஜான்சன் வீசிய 17வது ஒவரில் யார்க்கர் பந்தில் மிடில் ஸ்டம்ப்பை பறிகொடுத்தார் டோனி. 

ஆனால் அது நோ பால் என அறிவிக்கப்பட்டதால் கண்டத்தில் இருந்து தப்பினார். கடைசி ஓவர் வரை களத்தில் நின்று 31 பந்துகளில் 42 ரன்களை சந்தித்து ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்ததுடன் அணியையும் தோல்விக்கு அழைத்துச் சென்று சாதனை படைத்தார் டோனி. 

தான் பொறுப்பற்ற முறையில் ஆடிவிட்டு பரிசு வழங்கும் நிகழ்ச்சியில் சர்வதேச கிரிக்கெட் வீரர்கள் பொறுப்பற்ற முறையில் ஆடியதால் தான் தோற்றோம் என்று டோனி கூறியது தான் மிகப்பெரிய நகைச்சுவையாக இருந்தது.

சுரேஷ் ரெய்னா கேப்டன் - டெஸ்ட் அணியில் மீண்டும் காம்பிர்

வங்கதேசத்துக்கு எதிரான ஒருநாள் தொடரில் பங்கேற்கும் இந்திய அணியின் கேப்டனாக சுரேஷ் ரெய்னா நியமிக்கப்பட்டார். இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் விளையாடும் இந்திய அணியில் கவுதம் காம்பிர் மீண்டும் இடம் பிடித்தார்.

அடுத்த மாதம் இறுதியில் (ஜூன் 26 – செப்., 7) இங்கிலாந்து செல்லும் இந்திய அணி, ஐந்து டெஸ்ட், ஐந்து ஒருநாள் மற்றும் ஒரே ஒரு சர்வதேச ‘டுவென்டி–20’ தொடரில் பங்கேற்கிறது. இத்தொடருக்கு தயாராகும் விதமாக, இந்திய அணி, மூன்று போட்டிகள் (ஜூன் 15, 7, 19) கொண்ட ஒருநாள் தொடரில் பங்கேற்க அடுத்த மாதம் வங்கதேசம் செல்கிறது.


ரெய்னா கேப்டன்: 

வங்கதேசதுக்கு எதிரான ஒருநாள் தொடரில் பங்கேற்கும் இந்திய அணி நேற்று அறிவிக்கப்பட்டது. இதில் கேப்டன் தோனி, விராத் கோஹ்லி, ரோகித் சர்மா, ஷிகர் தவான், அஷ்வின், ரவிந்திர ஜடேஜா, புவனேஷ்வர் குமார், ஷமி அகமது உள்ளிட்டோருக்கு ஓய்வு அளிக்கப்பட்டது. 

இத்தொடருக்கு கேப்டனாக சுரேஷ் ரெய்னா நியமிக்கப்பட்டார். ஏழாவது ஐ.பி.எல்., தொடரில் பேட்டிங்கில் அசத்திய கோல்கட்டா அணியின் ராபின் உத்தப்பா, மீண்டும் தேசிய அணியில் இடம் பிடித்தார். 

ஆசிய கோப்பையில் விளையாடிய வருண் ஆரோன், ஸ்டூவர்ட் பின்னி, அமித் மிஸ்ரா, புஜாரா, அஜின்கியா ரகானே, அம்பதி ராயுடு ஆகியோர் தங்களது இடத்தை தக்கவைத்துக் கொண்டனர். 

விக்கெட் கீப்பராக விரிதிமன் சகா தேர்வு செய்யப்பட்டார். மனோஜ் திவாரி, கேதர் ஜாதவ் ஆகியோருக்கும் இடம் கிடைத்தது. பர்வேஸ் ரசூல், அக்சர் படேல், வினய் குமார், மோகித் சர்மா, உமேஷ் யாதவ் உள்ளிட்ட பவுலர்கள் வாய்ப்பு பெற்றனர்.


மீண்டும் காம்பிர்: 

இங்கிலாந்துக்கு எதிரான ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்கும் இந்திய அணியும் நேற்று அறிவிக்கப்பட்டது. இதில் வேகப்பந்துவீச்சாளர் ஜாகிர் கான் நீக்கப்பட்டார். ஏழாவது ஐ.பி.எல்., போட்டியில் இவர், முதுகுப்பகுதியில் ஏற்பட்ட காயம் காரணமாக பாதியில் விலகினார். 

துவக்க வீரர் கவுதம் காம்பிர், மீண்டும் டெஸ்ட் அணியில் இடம் பிடித்தார். கடைசியாக இவர், 2012ம் ஆண்டு டிசம்பர் மாதம் இந்தியாவில் நடந்த டெஸ்ட் போட்டியில் விளையாடினார். இதேபோல இளம் வேகப்பந்துவீச்சாளர் பங்கஜ் சிங் வாய்ப்பு பெற்றார்.


ஒருநாள் அணி: 

சுரேஷ் ரெய்னா (கேப்டன்), ராபின் உத்தப்பா, அஜின்கியா ரகானே, புஜாரா, அம்பதி ராயுடு, மனோஜ் திவாரி, கேதர் ஜாதவ், விரிதிமன் சகா (விக்கெட் கீப்பர்), பர்வேஸ் ரசூல், அக்சர் படேல், வினய் குமார், உமேஷ் யாதவ், ஸ்டூவர்ட் பின்னி, மோகித் சர்மா, அமித் மிஸ்ரா.


டெஸ்ட் அணி: 

தோனி (கேப்டன்), முரளி விஜய், ஷிகர் தவான், காம்பிர், புஜாரா, விராத் கோஹ்லி, அஜின்கியா ரகானே, ரோகித் சர்மா, ரவிந்திர ஜடேஜா, அஷ்வின், புவனேஷ்வர் குமார், முகமது ஷமி, ஈஷ்வர் பாண்டே, இஷாந்த் சர்மா, ஸ்டூவர்ட் பின்னி, வருண் ஆரோன், விரிதிமன் சகா, பங்கஜ் சிங்.

IPL 7 - சென்னை-மும்பை நாளை எலிமினேட்டர் ஆட்டம்

7–வது ஐ.பி.எல். கிரிக்கெட்டில் முதல் 2 இடங்களை பஞ்சாப், கொல்கத்தா பிடித்தன. 3–வது இடத்தை சென்னை சூப்பர் கிங்சும், 4–வது இடத்தை மும்பை இந்தியன்சும் பிடித்தன.

இந்த இரு அணிகளும் மும்பையில் நாளை இரவு 8 மணிக்கு நடக்கும் வெளியேற்றுதல் சுற்று (எலிமினேட்டர்) ஆட்டத்தில் மோதுகின்றன. இதில் தோற்கும் அணி வெளியேற்றப்படும்.

ஜெயிக்கும் அணி குவாலிபையர் ஆட்டத்தில் தோற்ற அணியுடன் 2–வது தகுதி சுற்று ஆட்டத்தில் மோதும். இதில் வெல்லும் அணி இறுதிப்போட்டிக்குள் நுழையும்.

சென்னை அணியில் வெய்ன் சுமித், டுபெலிசிஸ், ரெய்னா, டோனி போன்ற அதிரடி பேட்ஸ்மேன்களும் உள்ளனர். பந்துவீச்சில் முன்னேற்றம் காண்பது அவசியம். அதில் மாற்றம் செய்வது கட்டாயமாக உள்ளது. எனவே நாளைய ஆட்டத்தில் ஹில்பெனாஸ் களம் இறங்க வாய்ப்பு உள்ளது.

மும்பை அணி தனது கடைசி ‘லீக்’ ஆட்டத்தில் ராஜஸ்தானுக்கு எதிராக அதிரடியாக விளையாடி வென்று பிளேஆப் சுற்றுக்கு தகுதி பெற்றது. இதனால் மிகுந்த நம்பிக்கையுடன் களம் இறங்குகிறது.

அந்த அணியில் மைக்ஹஸ்சி, ஆண்டர்சன், ரோகித்சர்மா, அம்பதி ராயுடு, போல்லார்ட் போன்ற பேட்ஸ்மேன்கள் உள்ளனர். இரு அணிகளும் லீக் ஆட்டத்தில் மோதிய 2 போட்டியிலும் சென்னை அணியே வெற்றி பெற்றது.

துபாயில் நடந்த ஆட்டத்தில் 7 விக்கெட் வித்தியாசத்திலும், மும்பையில் நடந்த போட்டியில் 4 விக்கெட் வித்தியாசத்திலும் சென்னை வெற்றி பெற்றது. நாளைய ஆட்டத்தில் தோற்றால் வெளியேறும் நிலை ஏற்படும் என்பதால் வெற்றிக்கு இரு அணிகளும் கடுமையாக போராடும். இதனால் ஆட்டம் விறுவிறுப்பாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மீண்டும் இந்தியா–பாக்., தொடர் : அக்ரம் வலியுறுத்தல்

இந்தியா, பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான கிரிக்கெட் தொடர் மீண்டும் நடத்தப்பட வேண்டும்,’’ என, கோல்கட்டா அணியின் பவுலிங் பயிற்சியாளர் வாசிம் அக்ரம் வலியுறுத்தினார்.

பாகிஸ்தான் அணியின் முன்னாள் கேப்டன் வாசிம் அக்ரம், 47. சிறந்த வேகப்பந்துவீச்சாளரான இவர், 104 டெஸ்ட் (414 விக்கெட்), 356 ஒருநாள் (502 விக்கெட்) போட்டிகளில் விளையாடினார். தற்போது இவர், 7வது ஐ.பி.எல்., தொடரில் விளையாடும் கோல்கட்டா அணிக்கு பவுலிங் பயிற்சியாளராக உள்ளார்.

இந்தியா, பாகிஸ்தான் அணிகளுக்கு இடையில் கிரிக்கெட் தொடர் நடத்தப்படுவது குறித்து அக்ரம் கூறியது: அரசியல் காரணங்களுக்காக, இந்தியா, பாகிஸ்தான் அணிகளுக்கு இடையில் கிரிக்கெட் தொடர் நடத்தப்படாதது வருத்தம் அளிக்கிறது. 

நான் எப்போதும் விளையாட்டையும், அரசியலையும் ஒன்றாக பார்க்க மாட்டேன். இவ்விரு அணிகளுக்கு இடையில் கிரிக்கெட் தொடர் விரைவில் நடத்தப்படும் என நம்புகிறேன்.

ஐ.பி.எல்., தொடரில் விளையாட பாகிஸ்தான் வீரர்கள் தேர்வு செய்யப்படாதது ஏமாற்றம் அளிக்கிறது. இவர்களுக்கு வாய்ப்பு கொடுக்கும் பட்சத்தில், ஒவ்வொரு அணிகளும் பலம் பெறும். 

தவிர, பாகிஸ்தானிலும் ஐ.பி.எல்., போட்டி பிரபலமடையும். எனவே அடுத்து வரும் தொடர்களில் பாகிஸ்தான் வீரர்கள் விளையாடுவார்கள் என எதிர்பார்க்கிறேன்.

இம்முறை கோல்கட்டா அணியில் நிறைய மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளது. அனுபவ வீரர்களுடன், திறமையான இளம் வீரர்கள் நிறைய பேர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். ஒவ்வொரு வீரரும் அணியின் வெற்றிக்காக கடுமையாக போராடுகின்றனர்.

கோல்கட்டா அணியை வழிநடத்தும் கவுதம் காம்பிர், வீரராக மட்டுமல்லாமல், கேப்டன் பொறுப்பிலும் சிறப்பாக செயல்படுகிறார். இத்தொடரின் துவக்கத்தில் லேசான சரிவை சந்தித்த இவர், மனவலிமை மற்றும் தன்நம்பிக்கையால் எழுச்சி கண்டார். சர்வதேச போட்டிகளில் விளையாடிய அனுபவம், அணியை முன் நின்று வழிநடத்த உதவுகிறது.

அடுத்த ஆண்டு நடக்கவுள்ள உலக கோப்பை தொடரில் சேவக், காம்பிர், யுவராஜ், ஜாகிர் கான் ஆகியோருக்கு இடம் கொடுக்க வேண்டும். ஆஸ்திரேலிய மண்ணில் நிறைய போட்டிகளில் விளையாடிய அனுபவம், இவர்களுக்கு நிச்சயம் கைகொடுக்கும். அங்குள்ள ஆடுகளத்தின் தன்மை மற்றும் தட்பவெப்பநிலை குறித்து இவர்கள் நன்கு அறிந்திருப்பதால், அதற்கேற்ப சிறப்பாக செயல்படுவார்கள்.

உலக கோப்பையில், இந்திய அணிக்கு ‘நடப்பு சாம்பியன்’ அந்தஸ்தை தக்கவைத்துக் கொள்ளும் வாய்ப்பு அதிகம் உள்ளது. அணியில் திறமையான இளம் வீரர்கள் உள்ளனர். கேப்டன் தோனி, விராத் கோஹ்லி உள்ளிட்டோர் அணியின் வெற்றிக்கு முக்கிய பங்குவகிப்பார்கள்.

இதேபோல பாகிஸ்தான் அணியிலும் சிறந்த வீரர்கள் இடம் பெற்றிருப்பதால், ஆஸ்திரேலிய மண்ணில் சிறப்பாக செயல்பட்டு உலக கோப்பை வெல்ல முயற்சிப்பார்கள்.

உலக கோப்பை தொடருக்கு தயாராக இனிவரும் நாட்களில் கடுமையான பயிற்சி மேற்கொள்ள வேண்டும். அங்குள்ள ஆடுகளத்தின் தன்மைக்கேற்ப வீரர்களுக்கு பயிற்சி கொடுக்கும் பட்சத்தில், சிறந்த முறையில் தயாராகலாம்.
இவ்வாறு வாசிம் அக்ரம் கூறினார்.

2012-ம் ஆண்டில் உமர்அக்மலை அணுகிய சூதாட்ட தரகர்?

பாகிஸ்தான் அணி 2012–ம் ஆண்டு ஐக்கிய அரபு எமிரேட்சில் இங்கிலாந்துடன் விளையாடியது, அப்போது அந்த அணி வீரர் உமர் அக்மலை சூதாட்ட தரகர் ஒருவர் அணுகியதாக தகவல் வெளியாகி உள்ளது. 

இந்தியாவில் உள்ள சூதாட்ட தரகர் ஒருவர் அவருடன் தொடர்பு கொண்டு மேட்ச் பிக்சிங்கில் ஈடுபடுமாறு 3 முறை வலியுறுத்தி உள்ளார். 

சூதாட்டத்தில் ஈடுபட மறுத்து உமர்அக்மல் இது குறித்து ஊழல் தடுப்பு அதிகாரியிடம் உடனே தகவல் கொடுத்து இருக்கிறார். இதேபோல ஐ.சி.சி.க்கும் தகவல் கொடுக்கப்பட்டுள்ளது.

உலக கோப்பை கவுன்ட் டவுண்

உலக கோப்பை வரலாற்றில் முதல் முறையாக இரு நாடுகள் (தென் கொரியா, ஜப்பான்) இணைந்து 17வது தொடரை 2002ல் நடத்தின. 

அதுவும் ஆசிய மண்ணில் முதன்முறையாக நடந்த இத்தொடரில் மொத்தம் 32 அணிகள், எட்டு பிரிவுகளாக பிரிக்கப்பட்டு, முதல் சுற்றில் மோதின.

இத்தொடரில் அதிர்ச்சி தோல்விகளுக்கு பஞ்சமில்லை. ‘நடப்பு சாம்பியன்’ அந்தஸ்துடன் களமிறங்கிய பிரான்ஸ் அணி, முதல் சுற்றின் 3 போட்டியிலும் தோல்வியடைந்து வெளியேறியது. 

இதேபோல முன்னாள் சாம்பியன்கள் அர்ஜென்டினா, உருகுவே  அணிகளும், முதல் சுற்றுடன் திரும்பின.


கொரியா சாதனை

காலிறுதியில் அசத்திய தென் கொரியா, ஸ்பெயின் அணியை வீழ்த்தி அரையிறுதிக்கு தகுதி பெற்றது. இதன்மூலம் உலக கோப்பை அரங்கில், அரையிறுதிக்கு முன்னேறிய முதல் ஆசிய அணி என்ற சாதனை படைத்தது.
ஆனால் அரையிறுதியில், ஜெர்மனியிடம் தோல்வி அடைந்த தென் கொரியா, கடைசியில் 4வது இடம் பிடித்து ஆறுதல் அடைந்தது.

ஐ.சி.சி.,க்கு திறமை இல்லை - மெக்கலம் வக்கீல் தாக்கு

சூதாட்டம் குறித்து தெரிவித்த போதும், போதிய நடவடிக்கை எடுக்கும் திறமை ஐ.சி.சி.,க்கு இல்லை,’’ என, பிரண்டன் மெக்கலத்தின் வக்கீல் கரேத் கலோவே தெரிவித்தார்.  

கடந்த 2008ல் இந்தியாவில் முதல் ஐ.பி.எல்., தொடர் நடந்தது. இதில் கோல்கட்டா அணிக்காக பங்கேற்றார் நியூசிலாந்தின் பிரண்டன் மெக்கலம்.

அப்போது, சூதாட்டத்தில் ஈடுபட இவரிடம் ஒருவர் அணுகியதாக, சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலிடம் (ஐ.சி.சி.,) மெக்கலம், வாக்குமூலம் கொடுத்திருந்தார்.
இத்தகவல், இங்கிலாந்து ‘மீடியாவில்’ வெளியானது. இதுகுறித்து மெக்கலம் வக்கீல் கரேத் கலோவே கூறியது:

சூதாட்டம் குறித்த தகவல்களை, வீரர்கள் வெளிப்படையாக, தானாக முன்வந்து வாக்குமூலம் கொடுக்கவேண்டும் என்று ஐ.சி.சி., எதிர்பார்க்கிறது. கடைசியில் இந்த தகவல்கள் ‘மீடியாவில்’ வந்து விடுகிறது.

சூதாட்ட விஷயத்தில் போதிய நடவடிக்கை எடுக்கும் திறமை ஐ.சி.சி.,க்கு இல்லை என்று தான் நினைக்கிறேன். மெக்கலம் வாக்குமூலம் வெளியானது தொடர்பாக, தொடர்ந்து அமைதி காக்கிறது. இது வெட்கக்கேடான செயல்.

இதனால், சூதாட்டம் குறித்த விசாரணைகளை, விரைவில் நடத்தி முடிக்க வேண்டும்.

இவ்வாறு கரேத் கலோவே கூறினார்.

அசத்தும் அறுவா மீசை

பஞ்சாபி குடும்பத்தில் இருந்து வந்து, முறுக்கு மீசை வைத்திருப்பது மிகவும் பிடித்துள்ளது,’’ என, ஷிகர் தவான் தெரிவித்தார்.

இந்திய அணியின் துவக்க வீரர் ஷிகர் தவான், 28. கடந்த ஆண்டு ஆஸ்திரேலியாவுக்கு எதிரான அறிமுக டெஸ்ட் போட்டியில், 187 ரன்கள் குவிக்க, ஒரே இரவில் பிரபலம் ஆகிவிட்டார்.

இத்துடன் சேர்த்து, ஷிகர் தவானின் முறுக்கு மீசையும் பிரலம் ஆனது. இவரைப் போல ரவிந்திர ஜடேஜாவும் மீசையுடன் தான் வலம் வருகிறார். இப்போது தேசிய அளவில் இளைஞர்களிடம் ‘மீசை’ பிரபலமாகி வருகிறது.

ஐ.பி.எல்., தொடரில் ஐதராபாத் அணி கேப்டனாக உள்ள ஷிகர் தவான், இதுகுறித்து கூறியது:

பஞ்சாபி குடும்பத்தில் இருந்து வந்த நான், முறுக்கு மீசை ‘வைத்துள்ளேன். இது எனக்கு மிகவும் பிடித்துள்ளது. இந்த ஸ்டைலை அனைவரும் விரும்புவது உற்சாகமாக உள்ளது.

இந்த ‘அருவா’ மீசை இவ்வளவு வேகத்தில் பிரபலம் ஆகும் என்று எதிர்பார்க்கவே இல்லை. 

இளைஞர்களிடம் இது இப்படி வேகமாக பரவியதற்கு கடவுளுக்குத் தான் நன்றி சொல்ல வேண்டும்.

இவ்வாறு ஷிகர் தவான் கூறினார்.

IPL 7 அடுத்த சுற்று வாய்ப்பு யாருக்கு?

மீதமுள்ள போட்டிகளில் சிறப்பாக விளையாடி ‘பிளே ஆப்’ சுற்றுக்கு முன்னேற முயற்சிப்போம்,’’ என,  யுவராஜ் சிங் தெரிவித்தார்.      

ஏழாவது ஐ.பி.எல்., தொடரில் பாதிக்கும் மேற்பட்ட லீக் போட்டிகள் முடிந்தவிட்டன. பஞ்சாப், சென்னை அணிகள் பங்கேற்ற 9 போட்டிகளில், தலா 7ல் வெற்றி பெற்று, 14 புள்ளிகளுடன் ‘பிளே ஆப்’ சுற்று வாய்ப்பை பிரகாசப்படுத்திக் கொண்டன.       

மீதமுள்ள 5 போட்டிகளில் இந்த அணிகள் ஏதாவது ஒன்றில் வென்றால் கூட, அடுத்த சுற்றுக்கு சென்று விடும். இதேபோல, ராஜஸ்தான் அணி 9ல் 6 வெற்றியுடன், 12 புள்ளிகள் பெற்றுள்ளது. இந்த அணி இன்னும் 2 வெற்றி பெற்றால் போதும்.       

இதனால், ‘டாப்–4’ இடத்தில் 3 இடங்கள் உறுதியான நிலையில், மீதமுள்ள ஒரு இடத்துக்கு கோல்கட்டா, ஐதராபாத், மும்பை மற்றும் பெங்களூரு அணிகள் போட்டியிடுகின்றன.       

டில்லி அணி (9 போட்டி, 2 வெற்றி, 4 புள்ளி) ஏறக்குறைய வெளியேறிவிட்டது.       
இதில் பெங்களூரு அணியை பொறுத்தவரையில் இதுவரை 9 போட்டிகளில் 3 வெற்றியுடன் 6 புள்ளிகள் மட்டும் தான் பெற்றுள்ளது. இதனால், இந்த அணி அடுத்து விளையாடும் 5 போட்டிகளிலும் அசத்த வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.       

சென்னைக்கு நோ - பெங்களூருவில் பைனல்

ஏழாவது ஐ.பி.எல்., தொடரின் பைனல், மும்பையில் இருந்து பெங்களூருவுக்கு மாற்றப்பட்டது. சென்னையில் நடக்க இருந்த நான்கு போட்டிகளும் இடம் மாறின.

ஏழாவது ஐ.பி.எல்., தொடரில், பல்வேறு போட்டிகள் திட்டமிட்ட இடங்களில் இருந்து வேறிடங்களுக்கு மாற்றப்படுகின்றன. 

காலரி தொடர்பான பிரச்னை தீராத நிலையில், சென்னையில் மே 18 (சென்னை–பெங்களூரு), மே 22ல் (சென்னை–ஐதராபாத்), நடக்க இருந்த லீக் போட்டிகள் ராஞ்சிக்கு மாற்றப்பட்டன.

தவிர, மே 27, 28ல் சென்னையில் நடக்க இருந்த இரண்டு ‘பிளே ஆப்’ போட்டிகளும் (‘தகுதி சுற்று 1’, ‘எலிமினேட்டர்’ ), கோல்கட்டா, மும்பை (பிரபோர்ன்) மைதானங்களுக்கு மாற்றப்பட்டன. 


பைனலும் மாற்றம்:

இதேபோல, மும்பை வான்கடே மைதானத்தில் ஜூன் 1ல் நடக்க இருந்த பைனலை, பெங்களூரு சின்னச்சாமி மைதானத்துக்கு, இந்திய கிரிக்கெட் போர்டு மாற்றியது.


காரணம் என்ன:   

கடந்த மே 3ல் பஞ்சாப் அணிக்கு எதிரான போட்டியின் போது சில சிக்கல்கள் ஏற்பட்டது. அடுத்து மே 6ல், மும்பை–பெங்களூரு அணிகள் மோதிய போது, வான்கடே மைதானத்தில் ரசிகர்கள் பெரும் கூச்சலிட்டனர்.

தவிர, கடந்த 2011ல் உலக கோப்பை பைனல் நடந்த போதும், மும்பை கிரிக்கெட் சங்கம், டிக்கெட் விற்பனை உட்பட பல விஷயங்களில் குளறுபடிகள் செய்தது.

இருப்பினும், தற்காலிகமாக ஒதுங்கிய பி.சி.சி.ஐ., தலைவர் சீனிவாசனுடன், மும்பை கிரிக்கெட் சங்கம் (எம்.சி.ஏ.,) மோதலில் ஈடுபட்டதே, பைனல் மாற்றப்பட்டதற்கு காரணம் என, கூறப்படுகிறது. 

விராத் கோஹ்லி நம்பர் 1

ஐ.சி.சி., ஒருநாள் போட்டி பேட்ஸ்மேன்களுக்கான ரேங்கிங்கில், இந்தியாவின் விராத் கோஹ்லி ‘நம்பர்–1’ இடத்தில் நீடிக்கிறார். பவுலர்களுக்கான ரேங்கிங்கில் இந்தியாவின் ரவிந்திர ஜடேஜா 5வது இடத்தில் உள்ளார்.

சர்வதேச ஒருநாள் போட்டியில் சிறந்து விளங்கும் வீரர்களுக்கான ரேங்கிங் (தரவரிசை) பட்டியலை, சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.,) துபாயில் நேற்று வௌியிட்டது. 

இதில் பேட்ஸ்மேன்களுக்கான ரேங்கிங்கில், இந்தியாவின் விராத் கோஹ்லி 881 புள்ளிகளுடன் முதலிடத்தை தக்கவைத்துக் கொண்டார். 

தென் ஆப்ரிக்காவின் டவிலியர்ஸ் (872 புள்ளி) இரண்டாவது இடத்தில் நீடிக்கிறார். 

இந்திய கேப்டன் தோனி (783 புள்ளி) 6வது இடத்திலும், ஷிகர் தவான் (723 புள்ளி) 8வது இடத்திலும் உள்ளனர்.

பவுலர்களுக்கான ரேங்கிங்கில், இந்தியாவின் ரவிந்திர ஜடேஜா 676 புள்ளிகளுடன் 5வது இடத்தில் நீடிக்கிறார். 

இவர், ‘ஆல்–ரவுண்டர்’களுக்கான ரேங்கிங்கில் 4வது இடத்தில் உள்ளார். பவுலர்களுக்கான பட்டியலில் மற்றொரு இந்திய சுழற்பந்துவீச்சாளர் அஷ்வின் 14வது இடத்தில் உள்ளார்.

ஒருநாள் போட்டி அணிகளுக்கான ரேங்கிங்கில் இந்திய அணி 112 புள்ளிகளுடன் இரண்டாவது இடத்தை தக்கவைத்துக் கொண்டது. முதலிடத்தில் 115 புள்ளிகளுடன் ஆஸ்திரேலிய அணி உள்ளது.

கோஹ்லி, புஜாரா முக்கியப்பங்கு

இங்கிலாந்துக்கு எதிரான தொடரில் இந்திய அணியின் கோஹ்லி, புஜாரா முக்கியப்பங்கு வகிப்பார்கள்,’’ என, இங்கிலாந்து அணி முன்னாள் வீரர் பீட்டர்சன் தெரிவித்தார். 

இந்திய அணி கடந்த 2011ல் இங்கிலாந்து சென்றது. டெஸ்ட் தொடரை 0–4 என இந்தியா மோசமாக பறிகொடுத்தது. இதன் முதல் டெஸ்டில் இங்கிலாந்தின் கெவின் பீட்டர்சன் இரட்டை சதம் அடித்து அசத்தினார். 

இந்நிலையில், இந்தியா (ஜூலை 9– செப்.7) மீண்டும் இங்கிலாந்து சென்று 5 டெஸ்ட், 5 ஒரு நாள், 1 ‘டுவென்டி–20’யில் பங்கேற்கிறது. 

இது குறித்து பீட்டர்சன் கூறியது: இங்கிலாந்து அணி புத்துணர்வுடன் உள்ளது. இந்திய அணியின் பேட்டிங் வியக்கத்தக்க முறையில் உள்ளது. எனவே இவர்கள் மோதவுள்ள தொடர் சிறப்பானது. 

கடந்த முறை டிராவிட் மட்டுமே நிலைத்து நின்று விளையாடினார். தற்போது, இந்திய அணியில் கோஹ்லி, புஜாரா, முரளி விஜய் உள்ளிட்டோர் ரன் சேர்க்கும் தொழில்நுட்பம் அறிந்தவர்கள். இத்தொடரில் இவர்கள் முக்கியப்பங்கு வகிப்பார்கள். தவிர, இவர்கள் அங்கு ரன் குவிக்காவிட்டால் பிரச்னைதான். 


இங்கிலாந்துக்கு இழப்பு:

இங்கிலாந்து அணியின் சுழற்பந்துவீச்சாளர் சுவான், ஆஷஸ் தொடரின் பாதியில் ஓய்வை அறிவித்தார். இவர் இல்லாதது அணிக்கு பெரும் இழப்புதான். 

ஆஸ்திரேலியா, நியூசிலாந்தில் 2015ல் நடக்கவுள்ள உலக (50 ஓவர்) கோப்பை தொடரில், சாம்பியன் பட்டம் வெல்ல ஒவ்வொரு அணியும் தகுதியானதுதான். 

ஆஸ்திரேலிய அணியின் பவுலிங் சிறப்பாக உள்ளது. இவ்வாறு பீட்டர்சன் கூறினார். 

சேப்பாக்கம் மைதானத்தில் ஐ.பி.எல்., போட்டி நடக்குமா?

சென்னையில் நடக்கும் ‘பிளே ஆப்’ போட்டிகளை வேறு இடத்துக்கு மாற்ற முடிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிகிறது.       

ஏழாவது ஐ.பி.எல்., தொடரில் சென்னையில் மே 18 (சென்னை–பெங்களூரு), மே 22ல் (சென்னை–ஐதராபாத்), இரு லீக் போட்டிகள் நடக்கின்றன. மே 27, 28ல் ‘பிளே ஆப்’ போட்டிகள், அதாவது தகுதிச்சுற்று 1 மற்றும் எலிமினேட்டர் என, மொத்தம் இந்த ஆண்டு 4 போட்டிகள் மட்டுமே நடக்கவுள்ளன.   
    
போட்டி நடக்கும் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் புதியதாக கட்டப்பட்ட மூன்று காலரிகள் குறித்து  குறித்து தமிழக கிரிக்கெட் சங்கத்துக்கும், சென்னை மாநகராட்சிக்கும் பிரச்னை உள்ளது. 

தவிர, இலங்கை வீரர்கள் சென்னையில் விளையாட தமிழக அரசு எதிர்ப்பு தெரிவித்தது. இதுபோன்ற காரணங்கள், கடந்த ஆண்டு ‘பிளே ஆப்’ போட்டிகள் கடைசி நேரத்தில் டில்லிக்கு மாற்றப்பட்டது.       

இதுதொடர்பான வழக்கை, வரும் மே 6ம் தேதிக்கு சுப்ரீம் கோர்ட் தள்ளி வைத்தது. இதனால், இம்முறை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, மே 27, 28ல் நடக்கும் இரண்டு ‘பிளே ஆப்’ போட்டிகளை, மும்பை பிரபோர்ன் மைதானத்துக்கு மாற்ற இருப்பதாக, இந்திய கிரிக்கெட் போர்டு (பி.சி.சி.ஐ.,) செயலர் சஞ்சய் படேல், சூசகமாக தெரிவித்தார்.       

காரணம் என்ன: கடந்த ஆண்டு இதுதொடர்பான பிரச்னையால், சென்னை–டில்லி அணிகள் மோதிய போட்டிக்கு, ஆட்டம் துவங்கும் சில மணி நேரத்துக்குப் பின் தான் அனுமதி கிடைத்தது.       

இம்முறையும் தாமதமாக அனுமதி கிடைத்தால், இங்குள்ள மூன்று காலரிகளின் 21 ஆயிரம் டிக்கெட்டுகளை பயன்படுத்த முடியாமல் இழப்பு ஏற்படலாம். இதை தவிர்க்கவே, போட்டிகளை மாற்றும் முடிவில் இருப்பதாக தெரிகிறது.

20 ஓவர் கிரிக்கெட்டில் டோனி சாதனை

ஐ.பி.எல். கிரிக்கெட்டில் நேற்று முன்தினம் நடந்த ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி கொல்கத்தாவை சாய்த்து 5-வது வெற்றியை பதிவு செய்தது.

சென்னை கேப்டன் டோனிக்கு ஒட்டுமொத்த 20 ஓவர் கிரிக்கெட் வரலாற்றில் இது 100-வது (169 ஆட்டத்தில்) வெற்றியாக அமைந்தது. 

ஐ.பி.எல். கிரிக்கெட்டில் சென்னை சூப்பர் கிங்சுக்காக 63 வெற்றிகள், சாம்பியன்ஸ் லீக்கில் சென்னை சூப்பர் கிங்சுக்காக 10 வெற்றிகள், சர்வதேச 20 ஓவர் கிரிக்கெட்டில் இந்திய அணிக்காக 27 வெற்றிகளை அவர் தேடித் தந்துள்ளார்.

இந்த மைல் கல்லை எட்டிய முதல் வீரர் இவர் தான். இந்த சாதனை பட்டியலில் டோனிக்கு அடுத்தபடியாக பாகிஸ்தான் முன்னாள் கேப்டன் சோயிப் மாலிக் (50 வெற்றி) இருக்கிறார்.

டுவென்டி–20 ரேங்கிங்கில் இந்தியா முதலிடம்

ஐ.சி.சி., ‘டுவென்டி–20’ தரவரிசையில் இந்திய அணி ‘நம்பர்–1’ இடத்துக்கு முன்னேறியது. டெஸ்ட் ரேங்கிங்கில் (தரவரிசை) 5வது இடத்துக்கு தள்ளப்பட்டது.        
     
டெஸ்ட், ஒருநாள் மற்றும் சர்வதேச ‘டுவென்டி–20’ போட்டியில் சிறந்து விளங்கும் அணிகளுக்கான மேம்படுத்தப்பட்ட ஆண்டு இறுதி ரேங்கிங் (தரவரிசை) பட்டியலை, சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.,) துபாயில் நேற்று வௌியிட்டது.      
       
இதில் ‘டுவென்டி–20’ போட்டி ஆண்டு இறுதி தரவரிசையில், இந்திய அணி 131 புள்ளிகளுடன் மீண்டும் முதலிடத்துக்கு முன்னேறியது.      
       
சமீபத்தில் வங்கதேசத்தில் முடிந்த ‘டுவென்டி–20’ உலக கோப்பை பைனலில் இலங்கையிடம் தோல்வி கண்ட இந்தியா, இரண்டாவது இடத்துக்கு தள்ளப்பட்டது. கடந்த 12 மாதங்களில் இந்திய அணி, ஒரே ஒரு ‘டுவென்டி–20’ போட்டியில் மட்டும் தோல்வி அடைந்ததால் மீண்டும் ‘நம்பர்–1’ இடத்துக்கு முன்னேறியது.             

நான்கு போட்டியில் தோல்வி கண்ட இலங்கை அணி 130 புள்ளிகளுடன் இரண்டாவது இடத்துக்கு தள்ளப்பட்டது. அடுத்த மூன்று இடங்களில் பாகிஸ்தான் (123 புள்ளி), தென் ஆப்ரிக்கா (121), ஆஸ்திரேலியா (112) அணிகள் உள்ளன.           
       
இந்தியா ‘நம்பர்–2’: ஒருநாள் போட்டிக்கான மேம்படுத்தப்பட்ட ஆண்டு இறுதி ரேங்கிங்கில், இந்திய அணி 112 புள்ளிகளுடன் இரண்டாவது இடத்தை தக்கவைத்துக் கொண்டது. ஆஸ்திரேலிய அணி 115 புள்ளிகளுடன் முதலிடத்தில் நீடிக்கிறது.           
  
இப்பட்டியலில் அடுத்த மூன்று இடங்களில் இலங்கை (111 புள்ளி), இங்கிலாந்து (110), தென் ஆப்ரிக்கா (109) அணிகள் உள்ளன.       
          
ஐந்தாவது இடம்: டெஸ்ட் அணிகளுக்கான தரவரிசையில், சமீபத்தில் தென் ஆப்ரிக்கா, நியூசிலாந்து மண்ணில் டெஸ்ட் தொடரை இழந்த இந்திய அணி 102 புள்ளிகளுடன் மூன்றாவது இடத்தில் இருந்து ஐந்தாவது இடத்துக்கு தள்ளப்பட்டது.     
             
இங்கிலாந்துக்கு எதிரான ஆஷஸ் மற்றும் தென் ஆப்ரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் தொடரை கைப்பற்றிய ஆஸ்திரேலிய அணி 8 ரேட்டிங் புள்ளிகள் கூடுதலாக பெற்று 123 புள்ளிகளுடன் ‘நம்பர்–1’ இடத்துக்கு முன்னேறியது.  
     
இதன்மூலம் டிசம்பர் 2008க்கு பின் முதன்முறையாக, டெஸ்ட் மற்றும் ஒருநாள் போட்டிக்கான ரேங்கி்ங்கில் ஆஸ்திரேலிய அணி ‘நம்பர்–1’ இடம் பிடித்தது.       

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரை இழந்த தென் ஆப்ரிக்க அணி, 4 ரேட்டிங் புள்ளிகள் குறைவாக பெற்று (123 புள்ளி), தசம புள்ளிகள் வித்தியாசத்தில் இரண்டாவது இடம் பிடித்தது. அடுத்த இரண்டு இடங்களில் இங்கிலாந்து (104 புள்ளி), பாகிஸ்தான் (103 புள்ளி) அணிகள் உள்ளன.