சச்சின் சாதனையை நெருங்கும் குக்



இங்கிலாந்து கேப்டன் அலெஸ்டர் குக், இந்திய "மாஸ்டர் பேட்ஸ்மேன்' சச்சினின் சாதனையை முறியடிப்பார்,'' என, "ஆல்-ரவுண்டர்' கெவின் பீட்டர்சன் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

இந்திய அணியின் "மாஸ்டர் பேட்ஸ்மேன்' சச்சின் (198 டெஸ்ட், 15837 ரன்கள், 51 சதம், 67 அரைசதம்), டெஸ்ட் போட்டியில் அதிக ரன்கள் எடுத்த வீரர்கள் வரிசையில் முன்னிலை வகிக்கிறார். 

இவரை விட, 8313 ரன்கள் குறைவாக இங்கிலாந்து அணி கேப்டன் அலெஸ்டர் குக் (92 டெஸ்ட், 7524 ரன்கள், 25 சதம், 29 அரைசதம்) உள்ளார். சச்சினின் இந்த சாதனையை அலெஸ்டர் குக் விரைவில் முறியடிப்பார் என இங்கிலாந்து அணியின் நம்பிக்கை நட்சத்திரமாக கெவின் பீட்டர்சன் தெரிவித்துள்ளார்.

பீட்டர்சன் கூறியது: இங்கிலாந்து அணியை அலெஸ்டர் குக் சிறப்பாக வழிநடத்துகிறார். இவர், சர்வதேச கிரிக்கெட்டில் நிறைய சாதனைகள் படைப்பார் என நம்புகிறேன். 

குறிப்பாக இந்திய "மாஸ்டர் பேட்ஸ்மேன்' சச்சினின் சாதனைகளை முறியடிக்கும் வாய்ப்பு உள்ளது. இவர், முதன்முதலில் இந்தியாவுக்கு எதிரான தொடருக்கு கேப்டனாக நியமிக்கப்பட்டார். அணியை சிறப்பாக வழிநடத்திய இவர், அணிக்கு வெற்றி தேடித்தந்தார்.

இளம் வீரர் ஜோ ரூட் அருமையாக பேட்டிங் செய்கிறார். இந்தியாவுக்கு எதிராக அறிமுக வீரராக களமிறங்கிய போது, சிறந்த வீரராக வலம் வருவார் என நினைத்தேன். அதற்கேற்ப அசத்தி வருகிறார்.

இவ்வாறு பீட்டர்சன் கூறினார்.

வெஸ்ட் இண்டீசில் சாதிக்குமா இந்தியா

இண்டீசில் நடக்கவுள்ள முத்தரப்பு தொடரில் சாதிக்க, தோனி தலைமையிலான இந்திய அணி ஜமைக்கா சென்றடைந்தது. 

சாம்பியன்ஸ் டிராபி தொடரின் பைனலில் இங்கிலாந்தை வீழ்த்திய, இந்திய அணி சாம்பியன் பட்டம் வென்றது. இரண்டு நாட்கள் ஓய்வு எடுத்த பின், வெஸ்ட் இண்டீசில் நடக்க உள்ள முத்தரப்பு தொடரில் பங்கேற்க நேற்று லண்டனில் இருந்து ஜமைக்கா புறப்பட்டது. 

இதிலும், தோனி தலைமையிலான இளம் அணி சாதித்து, கோப்பை கைப்பற்றும் என எதிர்பார்க்கப்படுகிறது. இத்தொடரில் மூன்றாவது அணியாக இலங்கை கலந்து கொள்கிறது. இந்தியா தனது முதல் போட்டியில் (வரும் 30ம் தேதி) வெஸ்ட் இண்டீஸ் அணியை எதிர்கொள்கிறது. 

இந்தியாவின் ரவிந்திர ஜடேஜா "டுவிட்டர்' சமூகவலைதளத்தில் வெளியிட்ட செய்தியில்,"" எங்களின் அடுத்த திட்டம் தயாராகிவிட்டது. இதற்காக ஜமைக்கா செல்கிறோம். இங்கிலாந்தில் கழிந்த நாட்கள் சிறப்பாக இருந்தது,' என, குறிப்பிட்டுள்ளார். 

அஷ்வின் "டுவிட்டரில்' கூறுகையில்,"ஜமைக்கா செல்லும் எங்களுடன் புதிதாக முகமது ஷமி சேர்ந்துள்ளார்,' என, குறிப்பிட்டுள்ளார். 

2015 உலக கோப்பைக்கு தோனி தான் கேப்டன்



இந்திய கிரிக்கெட்டுக்கு பல்வேறு அதிசயங்கள் நிகழ்த்திய தோனி, வரும் 2015ல் நடக்க உள்ள உலக கோப்பை தொடருக்கும் கேப்டனாக நீடிக்கலாம்,'' என, முன்னாள் கேப்டன் கங்குலி நம்பிக்கை தெரிவித்தார். 

சாம்பியன்ஸ் டிராபியை(மினி உலக கோப்பை)தோனி தலைமையிலான இந்திய அணி கைப்பற்றியது. இதையடுத்து இவரையும் முன்னாள் கேப்டன் கங்குலியையும் ஒப்பிட்டு பேசுகின்றனர். 

இது குறித்து கங்குலி கூறியது:

பொதுவாக ஜூன் மாதம் என்பது இந்திய கிரிக்கெட்டுக்கு பல இனிய நினைவுகளை கொடுத்துள்ளது. 30 ஆண்டுக்கு முன் லார்ட்சில் இந்திய அணி, முதல் உலக கோப்பை கைப்பற்றியது. இதன் பின் இந்திய கிரிக்கெட்டின் முகம் மாறியது. 

இதன் பின் பல்வேறு நிலைகளில் தொடர்ந்து அசத்தியது. இதில் யார் சிறந்த கேப்டன் என்று பார்ப்பது தவறு. ஏனெனில், கிரிக்கெட் என்பது ஒரு அணி விளையாட்டு. இதில் கேப்டன்கள், வீரர்கள் வரலாம், போகலாம். ஆனால், சிறந்த வீரர்களை உருவாக்கினால் தான், நல்ல முடிவு கிடைக்கும்.


ஒப்பிட வேண்டாம்:

இந்நிலையில், தோனியுடன் என்னை ஒப்பிட்டு பேசுகின்றனர். இது ஏன் என்று தான் தெரியவில்லை. என்னை அவருடன் ஒப்பிட முடியும் என்றே நான் நினைக்கவில்லை. ஏனெனில், இதை நான் நம்புவதில்லை. ஒவ்வொருவருக்கும் பல்வேறு சூழ்நிலைகள் அமைந்திருக்கும். 

தோனியை பொறுத்தவரையில் சிறப்பான கேப்டன். தனது பணியில் வியக்கத்தக்க சாதனைகள் செய்துள்ளார். இந்திய கிரிக்கெட்டுக்கு பல்வேறு அதிசயங்கள் நிகழ்த்தியுள்ளார். இன்னும் அவரிடம் ஏராளமான கிரிக்கெட் மீதமுள்ளது. 


பகட்டு இல்லாதவர்:

சாம்பியன்ஸ் டிராபி தொடரில் இந்திய அணி கோப்பை வென்றது மகிழ்ச்சியாக உள்ளது. என்னைப் போல தோனியும் இளம் வீரர்களை நன்கு ஊக்கப்படுத்தி வருகிறார். ரெய்னா, ஜடேஜா, ரோகித் சர்மா உள்ளிட்ட வீரர்கள் தோனியால் அடையாளம் காணப்பட்டவர்கள் தான். 

இவரை பார்ப்பதற்கு அமைதியாக இருப்பது போலத் தெரியும். ஆனால், அவருக்குள் ஏராளமான நெருக்கடிகள் இருக்கத்தான் செய்யும். தேவையற்ற பரபரப்பு, பகட்டு இல்லாதவர். எது எப்படி இருப்பினும், இந்தியாவுக்கு மிகப்பெரிய சாதனைகள் படைத்துள்ளார்.


மீண்டும் கோப்பை:

வரும் 2015 உலக கோப்பை தொடரில் பங்கேற்க வேண்டுமா, வேண்டாமா என்பது அவரது முடிவு தான். இருப்பினும், இந்த தொடரையும் வெல்ல வேண்டும் என்ற எண்ணம், தோனியின் மனதில் இருக்கும் என்று உறுதியாக நம்புகிறேன். 

இன்னும் இளமையாக உள்ள இவர், அசத்தலான ஒருநாள் வீரர். இத்தொடரில் இந்திய அணியின் கேப்டனாக, தோனி இருக்கக்கூடாது என்பதற்கு எந்த காரணமும் இல்லை. 

இவ்வாறு கங்குலி தெரிவித்தார்.

கேப்டன் பதவியில் டோனி சாதனை



சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் போட்டி இங்கிலாந்தில் கடந்த 6-ந்தேதி தொடங்கியது. இதன் இறுதிப்போட்டி நேற்று நடந்தது. இதில் இந்தியா-இங்கிலாந்து அணிகள் மோதின. 

மழையால் ஆட்டம் பாதிக்கப்பட்டது. இதனால் 20 ஓவராக குறைக்கப்பட்டது. 50 ஓவர் போட்டி 20 ஓவர் போட்டியாக மாறியது. 

முதலில் விளையாடிய இந்திய அணி 20 ஓவரில் 7 விக்கெட் இழப்புக்கு 129 ரன் எடுத்தது. வீராட் கோலி 34 பந்தில் 43 ரன்னும் (4 பவுண்டரி, 1 சிக்சர்) ரவிந்திர ஜடேஜா 25 பந்தில் 33 ரன்னும் (2 பவுண்டரி, 2 சிக்சர்) எடுத்தனர். ரவி போபரா 3 விக்கெட்டும், ஆண்டர்சன், பிராட் தலா 1 விக்கெட்டும் கைப்பற்றினார்கள். 

130 ரன் எடுத்தால் வெற்றி என்ற நிலையில் இங்கிலாந்து விளையாடியது. இந்திய வீரர்களின் அபாரமான பந்து வீச்சால் இங்கிலாந்து தொடக்கத்தில் சரிந்தது. 46 ரன் எடுப்பதற்குள் அந்த அணி 4 விக்கெட்டை இழந்தது. 

5-வது விக்கெட்டான மார்கன்- போபரா ஜோடி நிலைத்து நின்று ஆடி அணியை வெற்றிப் பாதைக்கு அழைத்து சென்றது. 18 பந்தில் அந்த அணிக்கு 28 ரன் தேவைப்பட்டது. இஷாந்த் சர்மா வீசிய ஆட்டத்தின் 18-வது ஓவரில் தான் திருப்பு முனை ஏற்பட்டது. 

முதல் 2 பந்தில் 8 ரன் எடுத்தார். 3-வது பந்தில் மார்கனையும், 4-வது பந்தில் போபராவையும் அடுத்தடுத்து அவுட் ஆக்கினார். ஜடேஜா வீசிய 19-வது ஓவரில் 2 விக்கெட் (பட்லர், பிரெஸ்னென்) விழுந்தது. கடைசி ஓவரில் அந்த அணிக்கு 15 ரன் தேவைப்பட்டது. 

அஸ்வின் கடைசி ஓவரில் 9 ரன்கள் கொடுத்தார். இங்கிலாந்து அணி 20 ஓவரில் 8 விக்கெட் இழப்புக்கு 124 ரன் எடுத்தது. இதனால் 5 ரன்னில் வென்று இந்திய அணி சாம்பியன் பட்டம் பெற்றது. 

மார்கன் 33 ரன்னும், போபரா 30 ரன்னும் எடுத்தனர். இஷாந்த்சர்மா, அஸ்வின், ரவிந்திர ஜடேஜா தலா 2 விக்கெட்டும், உமேஷ் யாதவ் ஒரு விக்கெட்டும் எடுத்தனர். 

ஐ.சி.சி. சாம்பியன்ஸ் டிராபியை கைப்பற்றிய இந்திய அணிக்கு ரூ.12 கோடி பரிசு தொகை வழங்கப்பட்டது. ஜடேஜா ஆட்டநாயகன் விருதையும் தவான் தொடர் நாயகன் விருதையும் கைப்பற்றினார்கள். 

இறுதிப்போட்டியில் தோல்வி அடைந்து 2-வது இடத்தை பிடித்த இங்கிலாந்து அணிக்கு ரூ.6 கோடி கிடைத்தது. அரைஇறுதியில் தோல்வியை தழுவிய இலங்கை, தென்ஆப்பிரிக்கா அணிகளுக்கு தலா ரூ.2.40 கோடியும், 5 மற்றும் 6-வது இடங்களை பிடித்த வெஸ்ட் இண்டீஸ், நியூசிலாந்து அணிகளுக்கு தலா ரூ.60 லட்சமும் கிடைத்தன. 

7-வது மற்றும் கடைசி இடங்களை பிடித்த ஆஸ்திரேலிய, பாகிஸ்தான் அணிகளுக்கு பரிசு தொகை கிடையாது. மொத்தம் ரூ.24 கோடி பரிசு தொகை வழங்கப்பட்டது. ஐ.சி.சி. சாம்பியன்ஸ் கோப்பையை வென்றதன் மூலம் கேப்டன் பதவியில் டோனி புதிய சாதனை படைத்தார். ஐ.சி.சி.யின் அனைத்து கோப்பைகளையும் வென்ற கேப்டன் என்ற மகத்தான சாதனையை டோனி படைத்தார். 

2007-ம் ஆண்டு 20 ஓவர் உலக கோப்பையையும், 2011-ம் ஆண்டு 50 ஓவர் உலக கோப்பையையும் டோனி கைப்பற்றி இருந்தார். தற்போது சாம்பியன்ஸ் கோப்பையையும் வென்று உள்ளார். 

இந்திய அணி தோல்வி எதையும் சந்திக்காமல் 5 ஆட்டத்தில் வென்று கோப்பையை வென்றது. ஐ.பி.எல். ஸ்பாட்பிக்சிங் சர்ச்சைக்கு பிறகு இந்திய அணி விளையாடிய முதல் போட்டித் தொடரிலேயே கோப்பையை வென்று பெருமை பட வைத்தது. இந்த பெருமை எல்லாம் கேப்டன் டோனிக்கு தான் என்பதில் எள்ளவும் சந்தேகம் இல்லை.

வரலாறு படைப்பாரா தோனி



சாம்பியன்ஸ் டிராபி தொடரின் பைனலில் இன்று இந்தியா-இங்கிலாந்து அணிகள் மோதுகின்றன. இதில் வெற்றி பெற்று கோப்பை வெல்ல இந்திய அணி காத்திருக்கிறது. 

பிரிமியர் கிரிக்கெட் தொடரில் சூதாட்ட சர்ச்சை வெடித்த நிலையில், சாம்பியன்ஸ் டிராபி தொடரில்(மினி உலக கோப்பை) பங்கேற்க, இந்திய அணி இங்கிலாந்து சென்றது. 

உள்ளூர் பிரச்னைகளில் இருந்து விரைவாக மீண்ட இந்திய அணியினர் வெற்றி மேல் வெற்றி பெற்றனர். லீக் சுற்றில் நூறு சதவீத வெற்யுடன், அரையிறுதிக்குள் நுழைந்தது. பின் அரையிறுதியில் இலங்கையை வென்று, பைனலுக்கு தகுதி பெற்றது.

இந்த வெற்றிகளுக்கு ஷிகர் தவான், ரோகித் சர்மாவின் சிறப்பான துவக்கம் முக்கிய காரணம். "பவர்-பிளே' ஓவர்களில் (முதல் 10 ஓவர்) இதுவரை அவுட்டாகாத ஜோடி என்ற பெருமை பெற்றது. 

இதில் ஷிகர் தவான் இரண்டு சதம், ஒரு அரைசதத்துடன் மொத்தம் 332 ரன்கள் குவித்து (சராசரி 110.66) மிரட்டுகிறார். ரோகித் சர்மா தன்பங்கிற்கு 168 ரன்கள் (2 அரைசதம்) எடுத்துள்ளார். 


பின்வரிசை பலவீனம்:

இவர்கள் கொடுக்கும் நல்ல துவக்கத்தை, அடுத்து வரும் வீரர்கள் கெட்டியாக பிடித்துக் கொள்கின்றனர். "மிடில் ஆர்டரில்' விராத் கோஹ்லி, தினேஷ் கார்த்திக் இருவரும் நம்பிக்கை தருகின்றனர். அடுத்து ரெய்னா, கேப்டன் தோனி, ரவிந்திர ஜடேஜாவும் பேட்டிங்கில் பலம் சேர்க்கின்றனர்.

அதேநேரம், இந்திய அணி விளையாடிய நான்கு போட்டிகளிலும் "டாப் ஆர்டர்' வீரர்களே விளையாடியதால், பின் வரிசை வீரர்களின் உண்மையான திறமை இத்தொடரில் சோதிக்கப்படாமல் உள்ளது பலவீனம் தான். 


ஜடேஜா நம்பிக்கை:

பவுலிங்கை பொறுத்தவரையில் இங்கிலாந்து மண்ணில் இந்திய வேகப்பந்து வீச்சாளர்கள் சிறப்பான செயல்பாட்டினை வெளிப்படுத்துகின்றனர். துவக்கத்தில் களமிறங்கும் எதிரணியின் இடதுகை வீரர்களுக்கு புவனேஷ்வர் குமார் (6 விக்.,), "சிம்ம சொப்பனமாக' உள்ளார். 

இவரது அசத்தல் தொடரும் பட்சத்தில், துவக்கத்தில் வரும் கேப்டன் அலெஸ்டர் குக்கிற்கு சிக்கல் தான். 

அடுத்து இஷாந்த் சர்மா, இதுவரை 8 விக்கெட் வீழ்த்திய இவருடன், உமேஷ் யாதவும் கலக்குகிறார். சுழற்பந்து வீச்சில் ரவிந்திர ஜடேஜா (10 விக்.,) ரசிகர்களுக்கு நம்பிக்கை தருகிறார். இவருடன் அஷ்வினும் (6 விக்.,) சேர்ந்து, "இரட்டைக் குழல்' துப்பாக்கியாக தொல்லை தருகின்றனர்.


டிராட் மிரட்டல்:

சொந்த மண்ணில் நடந்த முக்கிய தொடர் ஒன்றில், இப்போது தான் இங்கிலாந்து அணி பைனலுக்கு தகுதி பெற்றுள்ளது. அனுபவ வீரர் கெவின் பீட்டர்சன் இல்லாத நிலையிலும், குக், இயான் பெல் சீரான துவக்கம் தருகின்றனர். 

"மிடில் ஆர்டரில்' வரும் டிராட் (209 ரன்கள்), ஜோ ரூட் (166) இருவரும் அசத்தல் பார்மில் உள்ளனர். அதிக ரன்கள் குவித்த இங்கிலாந்து வீரர்களில், முதல் இரு இடத்தில் <உள்ள இவர்களை விரைவில் அவுட்டாக்குவது முக்கியம். பின்வரிசையில் அதிரடி மார்கன், அனுபவ ரவி போபரா, பட்லர் உள்ளனர்.


ஆண்டர்சன் பலம்:

வேகப்பந்து வீச்சில் "சுவிங்' செய்வதில் வல்லவரான ஆண்டர்சன் அசத்துகிறார். இதுவரை 10 விக்கெட் வீழ்த்திய இவரைத் தவிர, நல்ல உயரம் கொண்ட ஸ்டூவர்ட் பிராட்(6.5), ஸ்டீவன்(6.7) "வேகத்தில்' மிரட்டலாம்.

"சுழலில்' அனுபவ சுவான் பல்போன பாம்பாக உள்ளார். இவருக்குப் பதிலாக களமிறக்கப்படும் டிரட்வெல் இன்றும் கைகொடுப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்திய கேப்டன்களில் எனக்கு பிடித்தவர் கங்குலி - லாரா


வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் பிரையன் லாரா மும்பையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பேசியதாவது:-

நான் எதிர்த்து விளையாடிய இந்திய கேப்டன்களில், சவுரவ் கங்குலிதான் எனக்கு பிடித்தமான கேப்டன். ஆஸ்திரேலியாவுக்கு எதிரான போட்டியில் அவரது தலைமை பிரமிப்பாக இருந்தது. அவர் மீது நான் மிகவும் மரியாதை வைத்திருக்கிறேன்.

இதேபோல் கபில்தேவின் தலைமைப் பண்பும் சிறப்பாக இருந்தது. சச்சின் டெண்டுல்கர் எனது நண்பர். அவர் இந்திய கிரிக்கெட்டுக்கும், உலக கிரிக்கெட்டுக்கும் செய்த பங்களிப்பை அளவிட முடியாது. 

தற்போதுள்ள கேப்டன் டோனியின் தலைமை பற்றி அவருடன் விளையாடிய பிராவோவிடம் கேட்டேன். அப்போது மற்றவர்கள் சொல்வதை கேட்டு நடப்பதுதான டோனியின் மிகப்பெரிய பலம் என்று பிராவோ கூறினார்.

இவ்வாறு அவர் பேசினார்.

44 வயதான பிரையன் லாரா, 131 சர்வதேச டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 11953 ரன்களும், 299 ஒருநாள் போட்டிகளில் 10405 ரன்களும் எடுத்துள்ளார். டெஸ்ட் போட்டியில் ஆட்டமிழக்காமல் அதிகபட்சமாக 400 ரன்கள் எடுத்தது குறிப்பிடத்தக்கது.

இந்தியா-ஜிம்பாப்வே ஒரு நாள் தொடர் அட்டவணை வெளியீடு

இந்திய கிரிக்கெட் அணியின் ஜிம்பாப்வே சுற்றுப்பயணத்திற்கான போட்டி அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது. இதன்படி இந்திய அணி ஜூலை 24-ந்தேதி முதல் ஆகஸ்டு 3-ந்தேதி வரை ஜிம்பாப்வேயில் சுற்றுப்பயணம் செய்து 5 போட்டி கொண்ட ஒரு நாள் தொடரில் விளையாடுகிறது. 

ஜூலை 24-ந்தேதி, ஜூலை 26, ஜூலை 28, ஜூலை 31 மற்றும் ஆகஸ்டு 3-ந்தேதி ஆகிய நாட்களில் ஒரு நாள் போட்டிகள் நடக்கின்றன. இதில் முதல் 3 ஆட்டங்கள் ஹராரே நகரிலும், கடைசி இரு ஆட்டங்கள் புலவாயோவிலும் நடைபெறுகிறது. 

இந்த போட்டிக்கு, முன்னணி வீரர்களுக்கு ஓய்வு கொடுத்து விட்டு 2-ம் தர அணியை அனுப்ப இந்திய கிரிக்கெட் வாரியம் திட்டமிட்டுள்ளது. 2010-ம் ஆண்டு அங்கு நடந்த முத்தரப்பு தொடரில் இந்திய அணி சுரேஷ் ரெய்னா தலைமையில் பங்கேற்றது நினைவு கூரத்தக்கது.  

பைனலில் இந்திய அணி - இலங்கையை விரட்டியது



சாம்பியன்ஸ் டிராபி தொடரின் பைனலுக்கு முன்னேறியது இந்திய அணி. நேற்று நடந்த அரையிறுதியில், இலங்கை அணியை 8 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது. பேட்டிங், பவுலிங்கில் சொதப்பிய இலங்கை அணி தொடரில் இருந்து வெளியேறியது. 

இங்கிலாந்தில் கடைசி சாம்பியன்ஸ் டிராபி தொடர் நடக்கிறது. நேற்று இரண்டாவது அரையிறுதி போட்டியில் இந்தியா, இலங்கை அணிகள் மோதின. மைதானம் ஈரப்பதமாக இருந்ததால், 40 நிமிடம் தாமதமாக போட்டி துவங்கியது. "டாஸ்' வென்ற இந்திய கேப்டன் தோனி, "பீல்டிங்' செய்வது என, சரியான முடிவெடுத்தார்.


தில்ஷன் காயம்:

இலங்கை அணிக்கு தில்ஷன், குசால் பெரேரா ஜோடி துவக்கம் கொடுத்தது. வேகத்தில் அசத்திய புவனேஷ்வர் குமார், குசால் பெரேராவை (4) விரைவில் வெளியேற்றினார். உமேஷ் யாதவ் ஓவரில் இரு பவுண்டரி அடித்த தில்ஷன் (12), காயம் காரணமாக "ரிட்டையர்டு ஹர்ட்' முறையில் பெவிலியன் திரும்பினார்.

சங்ககரா, திரிமான்னே இணைந்து மந்தமாக ஆடினர். 31 பந்தில் 7 ரன்கள் எடுத்த திரிமான்னே, இஷாந்த் வேகத்தில் அவுட்டானார். தொடர்ந்து அசத்திய இஷாந்த் சர்மா, "அனுபவ' சங்ககராவையும் (17) நீடிக்க விடவில்லை. 


மாத்யூஸ் அரைசதம்:

இலங்கை அணியின் "நிதான' ஆட்டத்தினால், 20.5வது ஓவரில் தான், ஸ்கோர் 50 ரன்களை தாண்டியது. கேப்டன் மாத்யூஸ், அணிக்காக முதல் சிக்சர் அடித்தார். அவ்வப்போது பவுண்டரி அடித்த ஜெயவர்தனா (38 ரன், 63 பந்து), ஜடேஜா சுழலில் சிக்கி போல்டானார்.

பின் மாத்யூசுடன், ஜீவன் மெண்டிஸ் இணைந்தார். பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய மாத்யூஸ், ஒருநாள் அரங்கில் 14வது அரைசதம் கடந்தார். இவர் 51 (89 பந்து) ரன்னுக்கு அஷ்வினிடம் வீழ்ந்தார். திசரா பெரேரா வந்த வேகத்தில் "டக்' அவுட்டானார்.

குலசேகராவை (1) போல்டாக்கிய அஷ்வின், அடுத்து மெண்டிசையும் (25) திருப்பி அனுப்பினார். இலங்கை அணி 50 ஓவரில், 8 விக்கெட்டுக்கு 181 ரன்கள் மட்டும் எடுத்தது. மீண்டும் வந்த தில்ஷன் (18), மலிங்கா (7) அவுட்டாகாமல் இருந்தனர். இந்தியா சார்பில் இஷாந்த் சர்மா, அஷ்வின் தலா 3 விக்கெட் வீழ்த்தினர்.


எளிய இலக்கு:

போகிற போக்கில் எட்டிவிடும் இலக்கைத் துரத்திய இந்திய அணிக்கு ரோகித் சர்மா, ஷிகர் தவான் ஜோடி மீண்டும் அசத்தல் துவக்கம் கொடுத்தது. மலிங்கா பந்தில் பவுண்டரி அடித்த தவான், ஒரு சிக்சரும் விளாசினார். 18 ரன்னில் இரண்டு முறை தப்பிப்பிழைத்த இவர், திசரா பெரேரா ஓவரில் இரு பவுண்டரிகள் அடித்தார். 


தவான் அரைசதம்:

குலசேகரா பந்துகளில் பவுண்டரிகள் அடித்த ரோகித் சர்மா (33) நிலைக்கவில்லை. தவானுடன் சேர்ந்த கோஹ்லி, நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். மறுமுனையில் அசத்தலை தொடர்ந்த தவான், அரைசதம் கடந்தார். இவர் 68 ரன்னுக்கு அவுட்டனார்.


கோஹ்லி அபாரம்:

மலிங்கா ஓவரில் இரு பவுண்டரி அடித்த கோஹ்லி, மெண்டிஸ் பந்தை சிக்சருக்கு அனுப்பி, ஒருநாள் அரங்கில் 23வது அரைசதம் கடந்தார். கடைசியில் ரெய்னா ஒரு "சூப்பர்' பவுண்டரி அடிக்க, இந்திய அணி 35 ஓவரில் 2 விக்கெட்டுக்கு, 182 ரன்கள் எடுத்து, 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. கோஹ்லி (58), ரெய்னா (7) அவுட்டாகாமல் இருந்தனர். ஆட்ட நாயகன் விருதை இந்தியாவின் இஷாந்த் சர்மா வென்றார். 


தோனி "பவுலிங்'

கடந்த 2009ல் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக, முதன் முதலில் பவுலிங் செய்தார் இந்திய அணி கேப்டன் தோனி. இதில் 2 ஓவர்கள் வீசிய இவர் ஒரு விக்கெட் (டவ்லின்) கைப்பற்றினார். நேற்று மீண்டும் பவுலிங் செய்த இவர், 4 ஓவரில் 17 ரன்கள் கொடுத்து விக்கெட் வீழ்த்தவில்லை.


 சபாஷ் புவனேஷ்வர்

சாம்பியன்ஸ் டிராபி தொடரில் எதிரணியின் இடதுகை துவக்க வீரர்களை "குறி' வைத்து தாக்குகிறார் புவனேஷ்வர் குமார். லீக் சுற்றில் தென் ஆப்ரிக்காவின் இங்ராம் (6 ரன்), வெஸ்ட் இண்டீசின் கெய்ல் (21), பாகிஸ்தானின் ஜாம்ஷெத்தை (2) அவுட்டாக்கினார். நேற்றைய அரையிறுதியில் இலங்கை அணியின் இடதுகை துவக்க வீரர் பெரேராவையும் (4), விரைவில் "அவுட்' செய்தார்.

* இந்த நான்கு விக்கெட்டில், ரெய்னா மூன்று முறை "கேட்ச்' செய்துள்ளார்.

தீவை வெல்லுமா தீபகற்பம் - அரையிறுதியில் இன்று விறுவிறு



சாம்பியன்ஸ் டிராபி தொடரில் இன்று நடக்கும் அரையிறுதியில் தீபகற்ப நாடான இந்தியா, தீவு நாடான இலங்கை மோதுகின்றன. இதில் இந்தியா வெற்றி பெற்று பைனலுக்கு முன்னேறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இங்கிலாந்தில் சாம்பியன்ஸ் டிராபி தொடர்(மினி உலக கோப்பை) நடக்கிறது. கார்டிப்பில் இன்று நடக்கும் இரண்டாவது அரையிறுதி போட்டியில் இந்திய அணி, இலங்கையை சந்திக்கிறது. 

கடந்த 2011 உலக கோப்பை பைனலுக்கு பின், இரு அணிகளும் முக்கிய தொடரில் மோதுகின்றன. இந்திய அணியில் கேப்டன் தோனி, ரெய்னா, கோஹ்லி தவிர மற்றவர்கள் புதுமுகங்களாக உள்ளனர். 

இருப்பினும், சூதாட்ட சர்ச்சை, பி.சி.சி.ஐ., ஏற்பட்ட குழப்பம் என அனைத்தையும் மீறி, இந்திய அணி அசத்துகிறது. இரண்டு பயிற்சி மற்றும் லீக் சுற்றில் தென் ஆப்ரிக்கா, வெஸ்ட் இண்டீஸ், பாகிஸ்தானை வீழ்த்தி, 100 சதவீத வெற்றியுடன் அரையிறுதிக்குள் நுழைந்துள்ளது.

இந்திய அணியின் வெற்றிநடை இன்றும் தொடரும் என நம்பப்படுகிறது. துவக்கத்தில் ஷிகர் தவான், ரோகித் சர்மா அசத்தலாம். இத்தொடரில் அதிக ரன்கள் (264) குவித்த வீரர்களில் முதலிடத்தில் உள்ள ஷிகர் தவான், 2 சதம் அடித்துள்ளார். ரோகித் சர்மா, 2 அரைசதம் உட்பட 135 ரன்கள் எடுத்துள்ளார். 

தவிர, தினேஷ் கார்த்திக், விராத் கோஹ்லி, ரவிந்திர ஜடேஜா, ரெய்னா என, "பேட்டிங்' படை வலுவாக உள்ளது. பயிற்சியில் ஏற்கனவே இலங்கை அணியை வீழ்த்தியுள்ள இந்திய அணி, மீண்டும் அசத்த காத்திருக்கிறது. 


ஜடேஜா நம்பிக்கை:

பவுலிங்கில் இளம் வேகப்பந்து வீச்சாளர் புவனேஷ்வர் குமாருடன், இஷாந்த் சர்மா, உமேஷ் யாதவ் ஆகியோர் இலங்கைக்கு சிக்கல் தரலாம். சுழற்பந்து வீச்சை பொறுத்தவரையில் இதுவரை 9 விக்கெட் வீழ்த்திய ரவிந்திர ஜடேஜா, அஷ்வின் ஆகியோர் ரசிகர்களுக்கு மீண்டும் நம்பிக்கை தர வேண்டும்


"சீனியர்' பலம்:

இலங்கை அணியின் பேட்டிங்கில் "சீனியர்' வீரர்கள் சங்ககரா (205 ரன்கள், ஒரு சதம்), ஜெயவர்தனா (130) இருவரும்முதுகெலும்பாக உள்ளனர். இந்தியாவுக்கு எதிரான பயிற்சி போட்டியில் 333 ரன்கள் சேர்க்க உதவிய துவக்க வீரர்கள் பெரேரா, தில்ஷன் நல்ல "பார்மில்' உள்ளனர். பின்வரிசையில் கைகொடுக்க கேப்டன் மாத்யூஸ், சண்டிமால், திரிமான்னே உள்ளனர்.


மலிங்கா மிரட்டல்:

வேகப்பந்து வீச்சில் "யார்க்கர்' மலிங்கா (7 விக்.,) உள்ளது பெரும் பலம். தவிர, குலசேகரா, எரங்காவும் கைகொடுப்பர் எனத் தெரிகிறது. சுழலில் அனுபவ வீரர்கள் ஹெராத், தில்ஷன் தொல்லை தரலாம்.

கடந்த 2011ல் மும்பையில் நடந்த உலக கோப்பை பைனலில் இந்திய அணி, இலங்கையை வீழ்த்தியது. இதே போல இன்றும் அசத்தி, மினி உலக கோப்பை பைனலுக்கு செல்லக் காத்திருக்கிறது. அதேநேரம், உலக கோப்பை தோல்விக்கு பழி தீர்க்க இலங்கை காத்திருப்பதால், கடும் போட்டியை எதிர்பார்க்கலாம்.

விளம்பர உலகின் விருப்ப நாயகன்



சர்வதேச கிரிக்கெட்டில் "ஹாட்ரிக்' சதம் அடித்த ஷிகர் தவானை ஒப்பந்தம் செய்ய, விளம்பர நிறுவனங்கள் இடையே கடும் போட்டி காணப்படுகிறது.

கடந்த மார்ச் மாதம் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான மொகாலி டெஸ்டில், இந்தியாவின் ஷிகர் தவான் சதம் (187) அடித்தார். அடுத்து, சாம்பியன்ஸ் டிராபி தொடரில் தென் ஆப்ரிக்கா (114), வெஸ்ட் இண்டீஸ் (102) அணிகளுக்கு எதிராக அடுத்தடுத்த போட்டிகளில் சதம் விளாசினார். 

இப்படி "ஹாட்ரிக்' சதம் அடித்ததால், இவரது மதிப்பு உயர்ந்து விட்டது. பல்வேறு விளம்பர நிறுவனங்கள் இவரை "மாடலாக' ஒப்பந்தம் செய்ய துடிக்கின்றன. விராத் கோஹ்லி, ரோகித் சர்மா, முரளி விஜய் ஆகியோரை ஒப்பந்தம் செய்துள்ள "கார்னர்ஸ்டோன் ஸ்போர்ட்ஸ்' நிறுவனத்தின் தலைமை அதிகாரி பன்ட்டி சாய்தே கூறியது:

கிடைத்த வாய்ப்பை கெட்டியாக பிடித்துக் கொண்ட ஷிகர் தவான், சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார். சர்வதேச கிரிக்கெட்டில் இப்போது தான் தனது வாழ்க்கையை துவக்கியுள்ளார். எதிர்காலத்தில் சிறந்த வீரராக இருப்பது உறுதி. இவரை எங்கள் நிறுவனத்தில் ஒப்பந்தம் செய்ய முயற்சித்து வருகிறோம். 

இவரது கிரிக்கெட் பயணம் அடுத்த ஆறு மாதத்தில் எப்படி இருக்கும் என்று தெரியாது. ஏனெனில், விளையாட்டு வீரர்களைப் பொறுத்தவரையில் எப்போதும் ஒரே மாதிரியாக இருக்க முடியாது. இதற்குள் அவர் வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ள வேண்டும். 

எங்களைத் தவிர, மூன்று முதல் நான்கு நிறுவனங்கள், ஷிகர் தவானை ஒப்பந்தம் செய்து விட வேண்டும் என துடிக்கின்றன. 

இவ்வாறு சாய்தே கூறினார்.


மீசைக்கு கிராக்கி

ஷிகர் தவானை விட பெரியளவில் முறுக்கு மீசை வைத்திருந்த ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் மெர்வ் ஹியுஸ் கூறுகையில்,"" ஷிகர் தவானின் மீசை அவரது ஆளுமைத் தன்மையை உணர்த்தலாம். 

ஆனால் வாழ்நாள் முழுவதும் இது அவருக்கு சோறு போடும் என்பதற்கு எந்த உத்தரவாதமும் இல்லை. இப்போதுள்ள நிலையில், இவரது மீசைக்கு பணம் தர எதாவது நிறுவனங்கள் வந்தால், அதை வரவேற்க வேண்டும்,'' என்றார்.

இந்தியாவுக்கு இன்னும் இரண்டு சவால்



சாம்பியன்ஸ் டிராபியை கைப்பற்ற இந்திய அணி, இன்னும் இரண்டு போட்டிகளில் சாதிக்க வேண்டியுள்ளது. இதனை இலக்காக கொண்டு வீரர்கள் செயல்பட வேண்டும்,''என, கேப்டன் தோனி வலியுறுத்தினார்.

இங்கிலாந்தில் சாம்பியன்ஸ் டிராபி தொடர் நடக்கிறது. இம்முறை லீக் சுற்றில் அசத்திய இந்திய அணி "ஹாட்ரிக்' வெற்றியுடன் அரையிறுதிக்குள் நுழைந்தது. அடுத்து, வரும் 20ம் தேதி நடக்கும் அரையிறுதியில் இந்திய அணி வெற்றி பெற வேண்டும். பின் 23ம் தேதி நடக்கும் பைனலில் வென்றால், முதல் முறையாக கோப்பை கைப்பற்றலாம். 

நேற்று முன் தினம் நடந்த லீக் போட்டியில் பாகிஸ்தானை வென்ற இந்திய அணியினர் அதே வேகத்துடன் செயல்பட வேண்டும் என தோனி கூறினார். 


தோனி கூறியது: 

பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் புவனேஷ்வர் சிறப்பாக செயல்பட்டார். எதிரணிக்கு கடும் நெருக்கடி கொடுத்தார். புதிய பந்துகளிலும் "சுவிங்' செய்கிறார். குறைவான ஒரு நாள் போட்டிகளிலேயே விளையாடியுள்ள இவர், இன்னும் நல்ல வளர்ச்சி அடைவார். 


சிறப்பான அணி:

"மிடில்-ஆர்டர்' பலத்துடன் உள்ளது. நான், ரெய்னா, ஜடேஜாவின் ஆட்டம் நிலையானது. அதே நேரம் ரெய்னா வலைப்பயிற்சியில் இன்னும் அதிகமாக ஈடுபட வேண்டும். பேட்டிங், பவுலிங், பீல்டிங் என மூன்று துறைகளிலும் திறமையாக இருக்கிறோம். 

உலக கிரிக்கெட் அரங்கில் பீல்டிங்கில் நமது அணிதான் சிறப்பாக உள்ளது. ஒவ்வொரு வீரரும் தனக்குரிய பொறுப்புகளுடன் விளையாடுகின்றனர். நான் "கிளவுஸ்' அணிந்து செயல்படுகிறேன். ஆனால் இங்கு நிலவும் குளிரான சூழ்நிலையிலும் மற்ற வீரர்கள், வெறும் கையுடன் "கேட்ச்' பிடிக்கின்றனர்.

கோப்பை கைப்பற்ற இன்னும் இரண்டு சவால் பாக்கி உள்ளது. இதில், கடந்த போட்டிகளை போல அசத்தல் ஆட்டத்தை தொடர வேண்டும்.

 இவ்வாறு தோனி கூறினார். 


புவனேஷ்வர் உற்சாகம்

புவனேஷ்வர் குமார் கூறுகையில்,""என் பயிற்சியாளர், கேப்டன் தோனி என்ன சொன்னார்களோ அதன்படி நடந்தேன். பயிற்சி போட்டியின்போது "சுவிங்' செய்ய அதிக சிரமப்பட்டேன். ஆனால் கடினமான உழைப்பின் மூலம், இதை சாத்தியமாக்கினேன். 

இதற்கு நல்ல பலன் கிடைத்தது. "சுவிங்' செய்வதை என் பலமாக கருதுகிறேன். அதே நேரம் சீனியர் வீரர்களுடன் பேசுவதனால், இன்னும் கற்றுக் கொண்டே இருக்கிறேன்,'' என்றார். 

இந்தியா முதல் வெற்றி பெற்று அசத்தல்



சாம்பியன்ஸ் டிராபி வரலாற்றில் பாகிஸ்தானுக்கு எதிராக முதல் வெற்றி பெற்று அசத்தியது இந்திய அணி. நேற்று நடந்த லீக் போட்டியில் 8 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது. 

மழையால் போட்டி அடிக்கடி பாதிக்கப்பட சுவாரஸ்யம் குறைந்து போனது. பேட்டிங், பவுலிங்கில் பாகிஸ்தான் சொதப்ப, வழக்கமான ஆக்ரோஷத்தை காண முடியவில்லை.

இங்கிலாந்தில் சாம்பியன்ஸ் டிராபி தொடர் நடக்கிறது. இதன் "பி' பிரிவில் நடந்த லீக் போட்டியில் "பரம எதிரிகளான' இந்தியா, பாகிஸ்தான் அணிகள் மோதின. 

ஏற்கனவே இந்தியா அரையிறுதிக்கு முன்னேறி விட்டது. பாகிஸ்தான் வெளியேறிய நிலையில், இப்போட்டி பெரிய அளவில் முக்கியத்துவம் பெறவில்லை.  "டாஸ்' வென்ற இந்திய கேப்டன் தோனி, "பீல்டிங்' தேர்வு செய்தார். 


புவனேஷ்வர் மிரட்டல்:

பாகிஸ்தான் அணி, புவனேஷ்வர் குமார் "வேகத்தில்' துவக்கத்திலேயே ஆட்டம் கண்டது. இவரது, பந்தில் "அபாய' ஜாம்ஷெத்(2) வெளியேறினார். 12 ஓவரில் ஒரு விக்கெட்டுக்கு 50 ரன்கள் எடுத்த போது மழை குறுக்கிட்டது. 16 நிமிட தாமதத்துக்குப் பின், போட்டி துவங்கியதும் புவனேஷ்வரின் பந்தில் முகமது ஹபீஸ் (27), தோனியின் "தீயான' கேட்ச்சில் அவுட்டானார்.


40 ஓவர்கள்:

நீண்ட நேரம் களத்தில் நின்ற கம்ரான் அக்மல் (21 ரன், 38 பந்து), அஷ்வின் "சுழலில்' சிக்கினார். 19 ஓவரில் பாகிஸ்தான் அணி 3 விக்கெட்டுக்கு 70 ரன்கள் எடுத்த போது, பலத்த மழை பெய்தது. 

அடுத்து 2 மணி நேரம், 37 நிமிட தாமதத்துக்குப் பின் போட்டி துவங்கியது. இம்முறை தலா 40 ஓவர்களாக மாற்றப்பட்டது. 


சுழல் ஜாலம்:

பின் அஷ்வின், ரவிந்திர ஜடேஜா இருவரும் சுழற்பந்து வீச்சில் அசத்தினர். இவர்களது நெருக்கடியால் பாகிஸ்தான் வீரர்கள் ரன் சேர்க்க திணறினர். கேப்டன் மிஸ்பா உல் ஹக் (22), ஜடேஜா பந்தில் போல்டானார். 

சுதாரித்து விளையாடிய ஆசாத் சபிக், ஜடேஜா ஓவரில் அடுத்தடுத்து இரு பவுண்டரிகள் விளாசினார். இவர் 41 ரன்கள் எடுத்தார். இரண்டு பவுண்டரி அடித்த சோயப் மாலிக்கை (17), ஜடேஜா வெளியேற்றினார். 

பாகிஸ்தான் அணி 39.4 ஓவரில் 165 ரன்களுக்கு சுருண்டது. உமர் அமின் (27) அவுட்டாகாமல் இருந்தார். 


இலக்கு மாற்றம்:

"டக்வொர்த்-லீவிஸ்' விதிப்படி, இந்திய அணி 40 ஓவரில் 168 ரன்கள் எடுக்க வேண்டும் என இலக்கு மாற்றப்பட்டது. 

இந்தியாவுக்கு ஷிகர் தவான், ரோகித் சர்மா மீண்டும் ஒருமுறை நல்ல துவக்கம் தந்தனர். முகமது இர்பான் பந்துகளை ரோகித் சர்மா, அடுத்தடுத்து பவுண்டரிக்கு அனுப்பினார். தன் பங்கிற்கு தவானும் பவுண்டரிகள் அடித்தார். 8.1 ஓவரில் விக்கெட் இழப்பின்றி, 47 ரன்கள் எடுத்த போது மழையால், போட்டி தடைபட்டது. பின் ஆட்டம் துவங்கியதும், அஜ்மல் வலையில் ரோகித் சர்மா(18) சிக்கினார். 11.3 ஓவரில் மீண்டும் மழை குறுக்கிட்டது. 


102 ரன்கள் இலக்கு:

பின் மழை நின்றதும், 22 ஓவரில் 102 ரன்கள் எடுக்க வேண்டும் என இலக்கு மீண்டும் மாற்றப்பட்டது. தனது அபார ஆட்டத்தை தொடர்ந்த தவான், ரியாஸ் ஓவரில் வரிசையாக இரண்டு பவுண்டரி அடித்தார். 

இவர் 48 ரன்களுக்கு அவுட்டாகி அரைசதத்தை நழுவவிட்டார். தினேஷ் கார்த்திக்(11*), கோஹ்லி(22*) சேர்ந்து வெற்றியை உறுதி செய்தனர். இந்திய அணி 19.1 ஓவரில் 2 விக்கெட்டுக்கு 102 ரன்கள் எடுத்து சுலப வெற்றி பெற்றது. 
ஆட்ட நாயகன் விருதை புவனேஷ்வர் குமார் வென்றார்.


புதிய வரலாறு

 சாம்பியன்ஸ் டிராபி தொடரில்(மினி உலக கோப்பை) பாகிஸ்தானுக்கு எதிராக 2004 (பர்மிங்காம்), 2009 (செஞ்சுரியன்) என, இரு முறை மோதிய போட்டியில் இந்திய அணி தோற்றது. நேற்று முதல் முறையாக வென்ற தோனி தலைமையிலான அணி புதிய வரலாறு படைத்தது.

* தவிர, இம்முறை லீக் சுற்றில் தென் ஆப்ரிக்கா, வெஸ்ட் இண்டீஸ், பாகிஸ்தானை வீழ்த்திய இந்தியா "ஹாட்ரிக்' வெற்றி பெற்றது. 

நூறு சதவீத வெற்றியுடன் அரையிறுதிக்குள் நுழைந்துள்ளது. பாகிஸ்தான் அணி லீக் சுற்றில் 3 போட்டிகளிலும் தோல்வி அடைந்து வெளியேறியது.

வரலாறு படைக்குமா இந்தியா?



சாம்பியன்ஸ் டிராபி(மினி உலக கோப்பை) வரலாற்றில் இந்திய அணி இதுவரை பாகிஸ்தானை வென்றதில்லை. இந்தக் குறையை போக்க, இன்றைய பரபரப்பான லீக் போட்டியில் இந்திய கேப்டன் தோனி "தீயாக' செயல்பட்டு, வெற்றி வரலாறு படைப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.

இங்கிலாந்தில் கடைசி சாம்பியன்ஸ் டிராபி தொடர் நடக்கிறது. "பி' பிரிவில் இடம் பெற்றுள்ள இந்திய அணி, இரு வெற்றியுடன் (தென் ஆப்ரிக்கா, வெஸ்ட் இண்டீஸ்) அரையிறுதிக்கு தகுதி பெற்று விட்டது.

 இரு தோல்வியடைந்த பாகிஸ்தான் அணி, கோப்பை வெல்லும் போட்டியில் இருந்து வெளியேறியது. 

இன்று நடக்கும் லீக் போட்டியில் இந்தியா, பாகிஸ்தான் அணிகள் மோதுகின்றன. இப்போட்டியின் முடிவு எவ்வித பாதிப்பும் ஏற்படுத்தாது. எனினும், கிரிக்கெட் <உலகின் "பரம எதிரிகள்' மோதுவதால், மொத்தமுள்ள 25 ஆயிரம் இருக்கைகளும் நிரம்பி வழிவது உறுதி. 

இந்திய அணியின் பேட்டிங் எப்போதும் போல வலுவாக உள்ளது. இங்கு விளையாடிய நான்கு போட்டிகளில் (2 பயிற்சி) மூன்றில் 300க்கும் அதிகமான ரன்களை எடுத்தது. துவக்க வீரர் ஷிகர் தவான், அடுத்தடுத்து சதம் அடித்து "பார்மில்' உள்ளார். 

இவருக்கு இரு அரைசதம் அடித்த ரோகித் சர்மாவும் கைகொடுப்பதால், ரன்கள் எளிதாக வருகின்றன. இவர்களுடன் தினேஷ் கார்த்திக், விராத் கோஹ்லி, கேப்டன் தோனி ஆகியோரும் பேட்டிங்கில் நம்பிக்கை தருகின்றனர்.


ஜடேஜா நம்பிக்கை:

வேகப்பந்து வீச்சில் புவனேஷ்வர் குமார், இஷாந்த் சர்மா உள்ளனர். உமேஷ் யாதவுக்குப் பதில், பாகிஸ்தானுக்கு எதிராக எப்போதும் சிறப்பாக விளையாடும் இர்பான் பதானை களமிறக்கினால் நல்லது. 

"சுழலில்' அஷ்வினுக்கு பெரும் உதவியாக உள்ளார் "சர்'ரவிந்திர ஜடேஜா. கடந்த போட்டியில் 5 விக்கெட் வீழ்த்திய இவர், இன்றும் தோனிக்கு உதவ காத்திருக்கிறார்.


மிஸ்பா அசத்தல்:

பாகிஸ்தான் அணிக்கு "பேட்டிங்' தான் பெரும் தொல்லை. முதல் இரு போட்டிகளில் 170 (வெஸ்ட் இண்டீஸ்), 167 (தென் ஆப்ரிக்கா) என, 200 ரன்களை எட்டவில்லை. கேப்டன் மிஸ்பா உல் ஹக் மட்டும், இரு அரைசதம் அடித்து ஆறுதல் தந்தார். மற்றபடி, இம்ரான் பர்கத், ஹபீஸ், சோயப் மாலிக் என, யாரும் நீடிப்பதில்லை. இந்தியாவுக்கு எதிராக "ஹாட்ரிக்' சதம் அடித்த நாசிர் ஜாம்ஷெத், எழுச்சி பெற முயற்சிக்கலாம்.


அஜ்மல் பலம்:

பவுலிங்கில் 7 அடி, ஒரு அங்குல உயரமுள்ள முகமது இர்பான், ஜுனைடு கான், வகாப் ரியாஸ் வேகத்தில் மிரட்டுவர். சுழற்பந்து வீச்சை பொறுத்தவரையில் "அனுபவ' சயீத் அஜ்மல், முகமது ஹபீஸ் ஆகியோருடன் சோயப் மாலிக்கும் தொல்லை தருவார் எனத் தெரிகிறது.


போட்டி எப்படி:

இந்திய அணியின் பேட்ஸ்மேன்களுக்கும், பாகிஸ்தானின் பவுலர்களுக்கும் இடையிலான சவாலாக, இன்றைய போட்டி பார்க்கப்படுகிறது. இரண்டவதாக பவுலிங் செய்யும் அணிக்கு, வேகப்பந்து வீச்சு நன்றாக எடுபடும் என்பதால், இன்று "டாஸ்' முக்கிய பங்கு வகிக்கும்.



யார் அதிகம்

இந்தியா, பாகிஸ்தான் அணிகள் இதுவரை 124 ஒருநாள் போட்டிகளில் மோதியுள்ளன. இதில் இந்திய அணி 49 ல் வெற்றி பெற்றது. பாகிஸ்தான் அணி 71ல் வென்றது. 4 போட்டிகளுக்கு முடிவில்லை.


கடைசி வாய்ப்பு

 உலக கோப்பை (50 ஓவர், 5 முறை), "டுவென்டி-20' உலக கோப்பை (3 முறை) வரலாற்றில் இந்திய அணி, பாகிஸ்தானிடம் தோற்றதில்லை. ஆனால், சாம்பியன்ஸ் டிராபி தொடரை(மினி உலக கோப்பை) பொறுத்தவரையில், 2004 (பர்மிங்காம்), 2009 (செஞ்சுரியன்) என, இரு முறை மோதிய போட்டியிலும், இந்திய அணி தோற்றுள்ளது. இது கடைசி தொடர் என்பதால், இந்த வாய்ப்பை இந்திய அணி "மிஸ்' பண்ணாமல் பாகிஸ்தானை வீழ்த்த வேண்டும்.


மழை வருமா

இன்று போட்டி நடக்கும் பர்மிங்காமில், வானிலை மேகமூட்டமாக காணப்படும். மழை வர வாய்ப்பு குறைவு. ஆடுகளம் பேட்டிங்கிற்கு சாதகமாக இருக்காது எனத் தெரிகிறது. 


சாதிப்பாரா தவான்

சாம்பியன்ஸ் டிராபி தொடரில் இம்முறை ஷிகர் தவான், தென் ஆப்ரிக்கா (114), வெஸ்ட் இண்டீசுக்கு (102) எதிராக தொடர்ந்து இரு சதம் விளாசினார். இன்று பாகிஸ்தானுக்கு எதிராக அசத்தினால், ஒருநாள் அரங்கில் "ஹாட்ரிக்' சதம் அடித்த முதல் இந்திய வீரர் என்ற சாதனை படைக்கலாம்.

ஏற்கனவே, பாகிஸ்தானின் ஜாகிர் அபாஸ், சயீத் அன்வர், தென் ஆப்ரிக்காவின் கிப்ஸ், டிவிலியர்ஸ் ஆகிய நான்கு பேர் "ஹாட்ரிக்' சதம் அடித்துள்ளனர். 


ரசிகர்களுக்காக...

பாகிஸ்தான் அணி கேப்டன் மிஸ்பா கூறுகையில்,"" தொடரை விட்டு வெளியேறி விட்டோம் என்றாலும், உலக சாம்பியன் இந்தியாவுக்கு எதிராக வெல்வது என்பது, பெரிய ஆறுதலாக அமையும். இது பைனல் போல. எங்கள் திறமை நிரூபிக்க இது தான் கடைசி வாய்ப்பு. இதனால் ரசிகர்கள் மகிழ்ச்சி அடைவர்,'' என்றார்.


சவாலான போட்டி: தோனி

இந்திய அணி கேப்டன் தோனி கூறுகையில்,"" இது சவாலான போட்டி தான். யாருக்கு எதிராக விளையாடுகிறோம் என்பது பொருட்டல்ல. ஏனெனில், சர்வதேச அணி என்பது போதிய திறமையுடன் தான் இருக்கும். பாகிஸ்தான் என்பதால், கூடுதல் நெருக்கடியை ஏற்படுத்திக் கொள்ள மாட்டோம். இப்போட்டியின் முடிவால் எந்த பாதிப்பும் ஏற்படாது. ஆனால், இந்தியாவுக்கு ஆறுதல் வெற்றி பெற பாகிஸ்தான் முயற்சிக்கும். இதற்கு நாங்கள் அனுமதிக்க மாட்டோம்,'' என்றார்.

சாம்பியன்ஸ் டிராபி - இந்தியா ஹாட்ரிக் வெற்றி பெறுமா?



சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் போட்டியில் 10-வது லீக் ஆட்டம் நாளை (சனிக்கிழமை) நடக்கிறது. இதில் இந்தியா-பாகிஸ்தான் அணிகள் மோதுகின்றன. டோனி தலைமையிலான இந்திய அணிதான் மோதிய 2 ஆட்டத்திலும் வெற்றி பெற்றது. 

தென்ஆப்பிரிக்காவை 26 ரன்னிலும், வெஸ்ட் இண்டீசை 8 விக்கெட் வித்தியாசத்திலும் வென்றது. இதன்மூலம் இந்தியா அரை இறுதிக்கு முன்னேறியது. பாகிஸ்தான் அணிதான் மோதிய 2 ஆட்டத்திலும் தோற்றது. அரைஇறுதிக்கு தகுதி பெறும் வாய்ப்பை இழந்து விட்டது. 

இந்த ஆட்டத்தின் முடிவு எந்த பாதிப்பையும் ஏற்படுத்தாது. ஆனால் இந்தியா - பாகிஸ்தான் போட்டி என்பதால் அனைவரது எதிர்பார்ப்பும் அதிகமாக இருக்கிறது. இந்திய அணி பாகிஸ்தானையும் வீழ்த்தி “ஹாட்ரிக்” வெற்றியை பெறுமா? என்று ரசிகர்கள் ஆவலுடன் எதிர் நோக்கி உள்ளனர். இந்தியாவின் ஹாட்ரிக் வெற்றியோடு ஷிகார் தவானின் ஒருநாள் ஹாட்ரிக் சதமும் நடக்குமா? என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

தென்ஆப்பிரிக்காவுக்கு எதிராக 114 ரன்னும், வெஸ்ட்இண்டீசுக்கு எதிராக 102 ரன்னும் எடுத்த அவர் பாகிஸ்தானுக்கு எதிராகவும் ஆதிக்கம் செலுத்தலாம். டெஸ்ட் மற்றும் ஒரு நாள் போட்டிகளில் தவான் தொடர்ந்து 3 சதம் அடித்து இருந்தார். மார்ச் மாதம் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்டில் தவான் 187 ரன் எடுத்தார். தற்போது சாம்பியன்ஸ் டிராபி ஒருநாள் போட்டியில் அடுத்தடுத்து இரண்டு சதம் அடித்துள்ளார். இது தவிர ரோகித்சர்மா, தினேஷ்கார்த்திக், வீராட் கோலி, கேப்டன் டோனி ஆகியோரும் பேட்டிங்கில் நல்ல நிலையில் உள்ளனர். 

ரவீந்திர ஜடேஜாவின் சுழற்பந்தும் அணிக்கு பலத்தை ஏற்படுத்தி உள்ளது. வெஸ்ட்இண்டீசுக்கு எதிராக அவர் 5 விக்கெட் கைப்பற்றி முத்திரை பதித்தார். பாகிஸ்தான் அணி சாம்பியன்ஸ் டிராபி போட்டியில் ஆறுதல் வெற்றி பெற போராடும். இரு அணிகளும் கடைசியாக டெல்லியில் கடந்த ஜனவரி மாதம் 6-ந்தேதி மோதிய போட்டியில் இந்தியா 10 ரன்னில் வெற்றி பெற்றது. 

இரு அணிகளும் 124 ஒருநாள் போட்டியில் விளையாடியுள்ளன. இதில் இந்தியா 49 ஆட்டத்திலும், பாகிஸ்தான் 71 ஆட்டத்திலும் வெற்றி பெற்றுள்ளன. 4 ஆட்டம் முடிவு இல்லை. நாளைய ஆட்டம் இந்திய நேரப்படி பிற்பகல் 3 மணிக்கு தொடங்குகிறது. ஸ்டார் கிரிக்கெட், தூர்தர்சன் டெலிவிசனில் இந்தப் போட்டி நேரடியாக ஒளிபரப்பு செய்யப்படுகிறது. 


இரு அணி வீரர்கள் வருமாறு:- 

இந்தியா: டோனி (கேப்டன்), ஷிகார் தவான், ரோகித்சர்மா, வீராட்கோலி, தினேஷ்கார்த்திக், ரெய்னா, ரவீந்திர ஜடேஜா, அஸ்வின், புவனேஸ்வர்குமார், உமேஷ் யாதவ், இஷாந்த் சர்மா, முரளி விஜய், இர்பான்பதான், அமித் மிஸ்ரா, வினய்குமார். 

பாகிஸ்தான்: மிஸ்பா- உல்-ஹக் (கேப்டன்), இம்ரான்பர்கத், நாசிர் ஜாம்ஷெட், முகமது ஹபீஸ், சோயிப் மாலிக், உமர் அமின், கமரன் அக்மல், வகாப் ரியாஸ், அஜ்மல், ஜூனைத்கான், முகமது இர்பான், அப்துர் ரகுமான், ஆசாத் சபீக், ஆசாத் அலி, அதில்.

ஸ்ரீசாந்த்துக்கு ஜாமின் கிடைக்குமா?



ஸ்ரீசாந்த் ஜாமின் மனு மீதான விசாரணை, நாளை டில்லி கோர்ட்டில் தொடர்ந்து நடக்கவுள்ளது. இதில் இவருக்கு ஜாமின் கிடைக்கும் எனத் தெரிகிறது.

பிரிமியர் தொடரில் சூதாட்டத்தில் ஈடுபட்ட ராஜஸ்தான் அணியின் ஸ்ரீசாந்த், சண்டிலா, அங்கித் சவான் மற்றும் பிடிபட்ட அனைவரும், திகார் சிறையில் உள்ளனர். இவர்களுக்கு "நிழல் உலக தாதா' தொடர்பு இருப்பதாக தெரிவித்து, "மொகோகா' எனும், பயங்கரவாத தடுப்பு சட்டத்தின் கீழ் புதிய வழக்கு பதியப்பட்டது.

இதனிடையே, ஸ்ரீசாந்த் ஜாமின் மனு மீதான விசாரணை டில்லி கோர்ட்டில் நடந்தது. இவருக்கு ஆதரவாக வாதாடிய பினகி மிஸ்ரா, போலீஸ் தரப்பு சாட்சியங்களை உண்டு, இல்லை என்று செய்தார்.


இதன் விவரம்:

* ஸ்ரீசாந்த் இடுப்பில் "டவல்' வைத்திருந்தது குற்றமே இல்லை. ஒரு வேகப்பந்து வீச்சாளர், 38 முதல் 42 டிகிரி செல்சியஸ் வெப்பநிலையில் பவுலிங் செய்யும் போது, ஏற்படும் வேர்வையை துடைத்துக்கொள்ள இப்படிச் செய்யலாம். 

இதே போட்டியில் விளையாடிய டிராவிட் கூட "டவல்' வைத்திருந்தார். தவிர, இந்திய அணிக்காக டெஸ்ட் போட்டிகளில் விளையாடும் போதும், ஸ்ரீசாந்த் "டவல்' பயன்படுத்தினார் (இதற்கான போட்டோக்கள் சமர்ப்பிக்கப்பட்டது).

* கடவுளின் மீது பற்றுக்கொண்டவர் ஸ்ரீசாந்த். இவர், பவுலிங் செய்யும் முன், கடவுளை வேண்டிக்கொள்வார். இதை "சிக்னல்' கொடுத்தாக எடுத்துக் கொள்ளக் கூடாது. 

* தவிர, ஒரு ஓவரில் 14 ரன்களை கொடுக்க சம்மதித்தார் என்று கூறப்பட்டது. இதில் முதல் நான்கு பந்தில், 5 ரன்கள் தான் விட்டுத்தந்தார். கடைசி 2 பந்தில் 9 ரன்கள் தேவை. எப்படியும் ஒரு சிக்சர் அடிக்க வேண்டும். ஆனால், 5வது பந்தை ஸ்ரீசாந்த் "ஷார்ட் பிட்ச்' ஆக வீசிய நிலையில் எப்படி சாத்தியமாகும். எதிர்முனையில் அனுபவ வீரர் (கில்கிறிஸ்ட்) இருந்ததால், பவுண்டரியாக மாற்றினார். 

இந்த ஓவரில் "நோ-பால்', "வைடு' மற்றும் தேவையற்ற முறையில் பந்தை எறிவது என, எதையும் செய்யவில்லை. பிரிமியர் தொடரில் இவரது "எக்கானமி ரேட்' 9 ரன்கள். இந்நிலையில் 13 ரன்கள் கொடுத்தது என்பது பெரிய வித்தியாசம் இல்லை.

* அடுத்து, "புக்கி'களிடம் இருந்து பெற்ற பணத்தில் தான் இஷ்டம் போல செலவு செய்தார் என்று புகார் கூறுகின்றனர். இது தவறு. தனது வங்கிக்கணக்கில் ரூ. 10,000 வீதம் 5 முறை எடுத்துள்ளார். மற்ற நேரங்களில் "டெபிட் கார்டை' பயன்படுத்தி பொருட்கள் வாங்கியுள்ளார். 

இவ்வாறு பினகி மிஸ்ரா வாதாடினார். 

அதிகம் சம்பாதிக்கும் தோனி



அதிகம் சம்பாதிக்கும் விளையாட்டு வீரர்கள் பட்டியலில், 31வது இடத்தில் இருந்து, 16வது இடத்துக்கு முன்னேறியுள்ளார் தோனி. 

டெஸ்ட், ஒருநாள் மற்றும் "டுவென்டி-20' என, அனைத்துவித, இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டனாக உள்ளவர் தோனி. கடந்த 2007 ("டுவென்டி-20'), 2011 ல் உலக கோப்பை வென்று தந்தார். 

சமீபகாலமாக அதிக சர்ச்சைகளிலும் சிக்கி வருகிறார். இவர் சுயநலத்துடன் செயல்பட்டு சம்பாதிப்பதில் ஆர்வம் உள்ளதாக செய்திகள் வெளியாகின. இதை உண்மையாக்கும் வகையில், பிரபல "போர்ப்ஸ்' பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது. 

இதன்படி, உலகில் அதிகம் சம்பாதிக்கும் விளையாட்டு வீரர்கள் வரிசையில், கடந்த ஆண்டினை விட, 15 இடங்கள் முன்னேறி, 16வது இடத்தை பெற்றுள்ளார் தோனி. இந்திய அளவில் "டாப்பில்' உள்ள இவரது ஆண்டு வருமானம் ரூ. 179 கோடி. இதில் போட்டிகளில் கிடைத்த சம்பளம் ரூ. 20 கோடி தான். மற்ற அனைத்தும் பல்வேறு தொழில்கள் மூலம் கிடைத்த வரவு. 


முதலிடத்தில் உட்ஸ்:

கடந்த முதலிடத்தில் இருந்த டென்னிஸ் வீரர் சுவிட்சர்லாந்தின் ரோஜர் பெடரரை (ரூ. 406 கோடி), பின் தள்ளி முதலிடத்தை பிடித்துள்ளார் அமெரிக்க கோல்ப் வீரர் டைகர் உட்ஸ் (ரூ. 444 கோடி). 

கால்பந்து வீரர்கள் இங்கிலாந்தின் டேவிட் பெக்காம் (ரூ. 268 கோடி), போர்ச்சுகலின் கிறிஸ்டியானோ ரொனால்டோ (ரூ. 250 கோடி), அர்ஜென்டினாவின் மெஸ்சி (ரூ. 235 கோடி) ஆகியோர் 8, 9, 10வது இடத்தில் உள்ளனர்.


சச்சின் "51':

ரஷ்ய டென்னிஸ் வீராங்கனை ஷரபோவா (ரூ. 165 கோடி), செர்பிய வீரர் ஜோகோவிச் (ரூ. 153 கோடி), ஸ்பெயினின் நடால் (ரூ. 150 கோடி) முறையே 22, 28, 30வது இடத்தை பெற்றுள்ளனர். 

ரூ. 138 கோடி சம்பாதிக்கும் தடகள வீரர் உசைன் போல்ட் (ஜமைக்கா), 40வது இடத்திலுள்ளார். இந்திய கிரிக்கெட் வீரர் சச்சின், 51வது இடம் தான் (ரூ. 125 கோடி) கிடைத்துள்ளது. 

சச்சினை மறக்க செய்த தவான்



சாம்பியன்ஸ் டிராபி தொடரில் ஷிகர் தவானை பற்றி தான் அனைவரும் பேசினர். சச்சின், சேவக் இல்லாததை ரசிகர்கள் உணரவில்லை,'' என, கபில்தேவ் தெரிவித்தார். 

தென் ஆப்ரிக்காவுக்கு எதிரான சாம்பியன்ஸ் டிராபி லீக் போட்டியில் இந்தியாவின் ஷிகர் தவான், ஒரு நாள் அரங்கில் தனது முதல் சதத்தை பதிவு செய்தார். 

இது குறித்து இந்திய கிரிக்கெட் ஜாம்பவான் கபில்தேவ் கூறியது: 

இந்திய அணியின் எதிர்கால நட்சத்திரமாக ஷிகர் தவான் திகழ்கிறார். தென் ஆப்ரிக்காவுக்கு எதிராக துணிச்சலாக ஆடினார். 

துவக்க வீரராக ரோகித் ஆட்டமும் சிறப்பாக இருந்தது. இதனால், நல்ல ஸ்கோரை எட்ட முடிந்தது. தற்போது, இந்திய அணி இளம் வீரர்களின் வசம் சென்று விட்டது.

அணியில் சச்சின், சேவக் இல்லை என்பதை என்னால் உணர முடியவில்லை. அந்தளவுக்கு, தவானின் ஆட்டம் இருந்தது. 

தவிர, ரசிகர்களும் இவரை பற்றி மட்டுமே பேசினர். மற்ற வீரர்களைப்பற்றி பேசுவதில்லை. 

இவ்வாறு கபில்தேவ் கூறினார். 

ஸ்ரீசாந்துக்கு மேலும் சிக்கல் - பாயப்போகிறது புதிய வழக்கு



கிரிக்கெட் சூதாட்டத்தில் நிழல் உலக தாதா தாவூத் இப்ராகிம், சோட்டா ஷகீலுக்கு தொடர்பு உள்ளதாக போலீசார் சந்தேகிக்கின்றனர். இதனால், ஸ்ரீசாந்த், சண்டி, அங்கித் சவான் மீது ஜாமினில் வெளி வர முடியாத புதிய வழக்கு பதியப்பட உள்ளது. 

ஆறாவது பிரிமியர் தொடரில், "ஸ்பாட்-பிக்சிங்கில்' ஈடுபட்ட ஸ்ரீசாந்த், சண்டிலா, அங்கித் சவான் உள்ளிட்ட 25 பேர், டில்லி போலீசாரால் கைது செய்யப்பட்டனர். இவர்கள் திகார் சிறையில் அடைக்கப்பட்டனர். திருமணத்துக்காக ஜாமினில் சென்ற அங்கித் சவான், இன்று சிறைக்கு திரும்ப உள்ளார்.

இதனிடையே, ஸ்ரீசாந்த், சண்டிலா ஆகியோரது நீதிமன்ற காவல் முடிந்து, நேற்று டில்லி கோர்ட்டில் ஆஜர் படுத்தப்பட்டனர். அப்போது இருவரது ஜாமின் மனு மீதான விசாரணையும் நடந்தது. ஸ்ரீசாந்த், சண்டிலா உள்ளிட்டோரின் ஜாமின் மனுக்களை நிராகரித்த நீதிபதி, ஜூன் 18 ம் தேதி வரை நீதிமன்ற காவலை நீட்டித்து உத்தரவிட்டார். 

இதனிடையே, ஸ்ரீசாந்த் உள்ளிட்டோர் மீதும், மகாராஷ்டிரா கன்ட்ரோல் ஆப் ஆர்கனைஸ்டு கிரைம் (எம்.சி.ஓ.சி.ஏ.,) சட்டத்தின் மீது வழக்குப் பதிவு செய்ய முடிவு செய்யப்பட்டது. 

சட்ட விரோதமாக பயங்கரவாதத்துக்கு பணம் செல்வதை தடுக்க, 1994ல் இந்த சட்டம் மகாராஷ்டிராவில் கொண்டு வரப்பட்டது. 


பயங்கரவாத தொடர்பு:

புக்கிகளிடம் நடத்தப்பட்ட விசாரணையில், நிழல் <உலக தாதாக்கள் சோட்டா ஷகீல், தாவூத் இப்ராகிம் உடன் தொடர்புள்ளது அம்பலமானது. இதற்கான ஆதாரங்கள் போலீசிடம் உள்ளதாக தெரிகிறது.

இதனால், ஸ்ரீசாந்த் உள்ளிட்டோர் மீது, ஜாமினில் வெளிவர முடியாத, எம்.சி.ஓ.சி.ஏ., சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்ய அனுமதி கொடுக்கப்பட்டது.


ஜாமின் இல்லை

இதன் படி, தொடர்ந்து 30 நாட்கள் கூட போலீஸ் காவலில் வைத்திருக்க முடியும். ஜாமின் கிடைக்காது. இவர்கள் தொடர்பான வழக்கு தனி நீதிமன்றத்தில் நடக்கும். குற்றம் நிரூபிக்கப்பட்டால் 7 ஆண்டு சிறை அல்லது ஆயுள் தண்டனை வரை கிடைக்க வாய்ப்புள்ளது.

ஸ்ரீசாந்த் வக்கீல் ரெபெக்கா ஜான் கூறுகையில்,"" ஸ்ரீசாந்த்துக்கு ஜாமின் கொடுக்கக் கூடாது என்பதற்காகவே, கடுமையான சட்டத்தின் கீழ் வழக்கு தொடர்கின்றனர்,'' என்றார். இதனிடையே, ஸ்ரீசாந்த் தாக்கல் செய்த புதிய ஜாமின் மனு, ஜூன் 8ம் தேதி விசாரணைக்கு வருகிறது. 

தோனிக்கு பங்கு - கிளம்பியது புதிய சர்ச்சை



கேப்டன் தோனியின் விளம்பர ஒப்பந்தங்களை கவனித்து வரும், "ரிதி ஸ்போர்ட்ஸ்' நிறுவனத்தில் அவருக்கு 15 சதவீத பங்குகள் உள்ளதாம். 

இதே நிறுவனம் தான் ரெய்னா, ரவிந்திர ஜடேஜா, பிரக்யான் ஓஜா போன்றோரை ஒப்பந்தம் செய்துள்ளது. இதனால், இவர்களுக்கு அணி தேர்வில் தோனி சாதகமாக செயல்பட்டிருக்கலாம் என்ற சந்தேகம் கிளம்பியுள்ளது.

இந்திய டெஸ்ட், ஒருநாள் மற்றும் "டுவென்டி-20' போட்டி அணிகளின் கேப்டனாக இருப்பவர் தோனி. கடந்த 2007 ("டுவென்டி-20'), 2011 ல் உலக கோப்பை வென்று தந்தார். 

இவரது 15 ஆண்டு கால நண்பர் அருண் பாண்டே, "ரிதி ஸ்போர்ட்ஸ் மேனேஜ்மெண்ட்' என்ற விளையாட்டு நிறுவனத்தை நடத்தி வருகிறார். கடந்த 2010ல், இந்நிறுவனம் தோனியை ரூ. 210 கோடிக்கு மூன்றாண்டு ஒப்பந்தம் செய்தது. 

அதாவது ஆண்டுக்கு ரூ. 70 கோடி வழங்கும். இந்நிறுவனம் பரிந்துரை செய்யும் விளம்பரங்களில் தோனி தோன்ற வேண்டும். 


பங்கு எப்படி

கடந்த 2012-13ல் 15.1 சதவீத பங்குகளை ஒதுக்கியுள்ளது. தவிர, ரிதி ஸ்போர்ட்ஸ் தொடர்புடைய நான்கு நிறுவனத்தில் தோனிக்கு பங்குள்ளதாம். இதில் ஒன்று தான் "ரிதி-எம்.எஸ்.டி-என் மோட்டார் ஸ்போர்ட்ஸ்'. இது தான் "மகி ரைசிங்' என்ற பெயரில் பைக் பந்தய நிறுவனத்தை செயல்படுத்துகிறது.

வீரர்கள் தொடர்பு: இதே ரிதி ஸ்போர்ட்ஸ் நிறுவனம் தான் ரெய்னா, ரவிந்திர ஜடேஜா, பிரக்யான் ஓஜா மற்றும் ஆர்.பி.சிங் ஆகியோருடன் விளம்பர ஒப்பந்தம் செய்துள்ளது. இந்திய அணியின் கேப்டனாக தோனி உள்ளதால், இந்த வீரர்களை அணியில், இடம் பெறச் செய்து, தோனி "சுயலாபம்' பார்ப்பதாக சர்ச்சை கிளம்பியுள்ளது.

தேர்வு செய்ய முடியுமா: ஆனாலும், அணித் தேர்வில் கேப்டன் என்ற முறையில் மட்டுமே, தோனி தனது கருத்துக்களை கூற முடியும். ஐந்து பேர் கொண்ட தேர்வாளர்கள் குழு தான் இறுதி முடிவெடுக்கும். இவர்கள் கேப்டன் கருத்தை மீறி செயல்பட முடியாது என்பது தான் நிதர்சனமான உண்மை. 

உதாரணமாக, பெரும்பாலான போட்டிகளில் சோபிக்காத போதும், ரவிந்திர ஜடேஜாவுக்கு தொடர்ந்து வாய்ப்பு கொடுத்தார் தோனி. சென்னை அணியிலும் ரவிந்திர ஜடேஜாவை (ரூ. 10.66 கோடி) சேர்த்தார். ஹர்பஜன் சிங்கை வெளியேற்றி அஷ்வினுடன், பிரக்யான் ஓஜாவை டெஸ்ட் அணியில் இடம் பெறச் செய்தார். இவர்கள் இருவரும் "ரிதி' நிறுவனத்தை சேர்ந்தவர்கள் என்பதால் சலுகை காட்டியிருக்கலாம்.

காரணம் என்ன: தவிர, "ரிதியுடன்' சென்னை அணிக்கும் ஒப்பந்தம் உள்ளது. இந்த அணியின் கேப்டனாகவும் தோனி உள்ளார். இதன் "கவுரவ' உறுப்பினர் குருநாத் தற்போது சிறையில் உள்ளார். இந்த ஒப்பந்தம் காரணமாகத் தான், சமீபத்திய சூதாட்டம் குறித்து தோனி வாய்திறக்க மறுப்பதாக கூறப்படுகிறது

பிச்சுக்கிச்சு பி.சி.சி.ஐ., - அவுட் ஆகிறார் சீனிவாசன்



உலகின் பணக்கார விளையாட்டு அமைப்பான இந்திய கிரிக்கெட் போர்டு(பி.சி.சி.ஐ.,) சூதாட்ட விவகாரத்தில் சிதறிப் போயிருக்கிறது. 

நேற்று பிரிமியர் கிரிக்கெட் தலைவர் பதவியில் இருந்து ராஜிவ் சுக்லா அதிரடியாக ராஜினாமா செய்தார். இன்று பி.சி.சி.ஐ., தலைவர் பதவியில் இருந்து சீனிவாசன் விலகுவார் என தெரிகிறது.

ஆறாவது பிரிமியர் கிரிக்கெட் தொடரில் "ஸ்பாட் பிக்சிங்' செய்த ஸ்ரீசாந்த், சண்டிலா, அங்கித் சவான் சிக்கினர். பின் சென்னை அணியின் "கவுரவ' உறுப்பினரும் பி.சி.சி.ஐ., தலைவர் சீனிவாசனின் மருமகனுமான குருநாத் மெய்யப்பன் பிடிபட்டார். 

இதனால் சீனிவாசன் பதவிக்கு ஆபத்து ஏற்பட்டது. மொத்தமுள்ள 30 ("டை' ஏற்பட்டால், தலைவரின் ஒரு ஓட்டு தனி) உறுப்பினர்களில் 18 பேர், இவருக்கு எதிராக திரும்பியுள்ளதாக தெரிகிறது. 

ஆனால், மூன்றில் இரு பங்கு மெஜாரிட்டி(24 பேர்) இருந்தால் தான், சீனிவாசனை பதவியில் இருந்து நீக்க முடியும். இருப்பினும், எதிர்ப்பு அதிகரித்ததால், வேறுவழியின்றி வரும் 8ம் தேதி அவசர செயற்குழு கூட்டத்துக்கு சீனிவாசன் அழைப்பு விடுத்தார். 

அதேநேரம், இவருக்கு எதிர்ப்பு தெரிவித்து, பி.சி.சி.ஐ., பொருளாளர் அஜய் ஷிர்கே, செயலர் சஞ்சய் ஜக்டலே ராஜினாமா செய்தனர். செயற்குழுவை உடனடியாக கூட்டும்படி சீனிவாசனுக்கு நெருக்கடி கொடுக்கப்பட்டது. 

இதையடுத்து, சென்னையில் உள்ள ஒரு ஓட்டலில் இன்று மதியம் 2.30 மணிக்கு செயற்குழு கூடும் என, இமாச்சல பிரதேச கிரிக்கெட் சங்கத் தலைவர் அனுராக் தாகூரிடம், சீனிவாசன் தெரிவித்தார். இக்கூட்டத்தில் இவர் பதவி விலகலாம்.