இந்திய அணியின் பேட்டிங் ஆலோசகரா டிராவிட்

இந்திய கிரிக்கெட் அணி வரும் ஜூலை மாதம் இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் செய்து 5 டெஸ்ட் போட்டிகளிலும், 5 ஒரு நாள் போட்டிகளிலும், ஒரு டி 20 போட்டியிலும் விளையாட உள்ளது. 

அதில் டெஸ்ட் போட்டிகளுக்கான இந்திய அணியின் பேட்டிங் ஆலோசகராக முன்னாள் இந்திய கேப்டனான ராகுல் டிராவிட் நியமிக்கப்பட்டிருக்கிறார். 

இந்திய அணியின் பயிற்சியாளராக உள்ள டங்கன் ப்ளட்சர் கிரிக்கெட் வாரியத்தை தொடர்பு கொண்டு மிகுந்த அனுபவம் உள்ள டிராவிட் அணி வீரர்களுக்கு ஆலோசனை வழங்கினால் சிறப்பாக இருக்கும் என கேட்டுக்கொண்டதை தொடர்ந்து டிராவிட் இப்பொறுப்பில் நியமிக்கப்பட்டுள்ளதாக பி.சி.சி.ஐ.யின் செயலாளரான சஞ்சய் படேல் தெரிவித்தார். 

இந்திய கிரிக்கெட் அணியிலிருந்து ஓய்வு பெற்ற பின், இந்திய அணியின் முக்கிய பொறுப்பை டிராவிட் ஏற்க உள்ளது இது தான் முதன்முறையாகும். 

இந்திய கிரிக்கெட் அணியின் ஜாம்பாவனான சுனில் கவாஸ்கர் கடந்த மார்ச் மாதம் இந்திய அணியின் பயிற்சியாளராக டிராவிட்டை நியமிக்க வேண்டும் என்று கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. 

இந்தியா பங்கேற்கும் 3 நாள் பயிற்சி ஆட்டம் இன்று தொடக்கம்

5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுவதற்காக டோனி தலைமையிலான இந்திய அணி இங்கிலாந்துக்கு சென்றுள்ளது. இந்தியா-இங்கிலாந்து இடையிலான முதலாவது டெஸ்ட் வருகிற 9-ந்தேதி தொடங்குகிறது. டெஸ்ட் தொடருக்கு முன்பாக இந்தியா 2 பயிற்சி ஆட்டங்கள் ஆடுகிறது. 

இதன்படி இந்தியா-லீசெஸ்டர்ஷைர் அணிகள் இடையிலான 3 நாள் பயிற்சி ஆட்டம் இன்று (பிற்பகல் 3.30 மணி முதல்) தொடங்குகிறது. இங்கிலாந்தில் உள்ள சூழலுக்கு ஏற்ப மாற்றிக் கொள்வதற்கும், டெஸ்டுக்கு தயாராவதற்கும் இந்த பயிற்சி ஆட்டம் உதவிகரமாக இருக்கும். 

கவுண்டி அணியான லீசெஸ்டர்ஷைரில் இங்கிலாந்து வீரர்களை தவிர்த்து சர்வான் (கேப்டன்), நியல் ஓ பிரையன், ஸ்டைரிஸ் ஆகிய வெளிநாட்டு வீரர்களும் இடம் பெற்றுள்ளனர்.

இத்தாலி வீரரை கடித்த சுராசுக்கு தடை

உருகுவே அணியின் முன்னணி கால்பந்து வீரர் லுயிஸ் சுராஸ். உலகின் தலைசிறந்த வீரரான அவர் இங்கிலாந்துக்கு எதிரான ஆட்டத்தில் 2 கோல் அடித்து முத்திரை பதித்து இருந்தார்.

இத்தாலிக்கு எதிரான நேற்றைய ஆட்டத்தில் சுராஸ் மிகுந்த சர்ச்சையை ஏற்படுத்தி விட்டார்.

ஆட்டத்தின் 80–வது நிமிடத்தில் இத்தாலி பின்கள வீரர் சிலினியின் தோள்பட்டையில் சுராஸ் கடித்தார். டெலிவிசன் ரீபேளயில் இத்தாலி வீரரை அவர் கடிப்பது தெளிவாக தெரிந்தது.

நடுவரின் கவனத்துக்கு கொண்டு செல்லப்பட்ட போது அதை அவர் கவனிக்காததால் நடவடிக்கை எடுக்கவில்லை. பாதிக்கப்பட்ட சிலினியன் கடித்த பகுதியில் காயம் ஏற்பட்டதை காண்பித்தார்.

சுராஸ் கடித்த விவகாரம் குறித்து சர்வதேச கால்பந்து சம்மேளனத்தின் ஒழுங்கு நடவடிக்கை குழு கவனத்துக்கு கொண்டு செல்லப்பட்டது. இது தொடர்பாக பிபாவின் ஒழுங்கு நடவடிக்கை குழு சுராஸ் மீது அதிகாரபூர்வமான குற்றச்சாட்டை தெரிவித்து உள்ளது.

இதுதொடர்பாக சுராசுக்கு எஞ்சிய போட்டிகளில் தடை விதிக்கப்படலாம் என்று கூறப்படுகிறது. இந்தி நேரப்படி நள்ளிரவு 1.30 மணிக்கு (பிரேசில் நேரம் மாலை 5 மணி) சுராஸ் மீதான தடை குறித்து அறிவிக்கப்படும்.

சுராஸ் எதிர் அணி வீரரை கடிப்பது இது முதல் முறையல்ல. ஏற்கனவே 2 தடவை இது மாதிரி கடித்துள்ளார்.

கடந்த ஆண்டு இங்கிலாந்து பிரிமீயர் ‘லீக்’ போட்டியில் இவானோவிக் என்ற வீரரை கடித்ததற்காக அவருக்கு 10 போட்டியில் விளையாட தடை விதிக்கப்பட்டு இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்தியா–ஆஸ்திரேலியா மோதல் - அட்டவணை அறிவிப்பு

இந்தியா, ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான நான்கு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் வரும் டிசம்பர் மாதம் துவங்குகிறது. இதற்கான அட்டவணையை கிரிக்கெட் ஆஸ்திரேலியா (சி.ஏ.,) நேற்று அறிவித்தது.     

ஆஸ்திரேலியா, நியூசிலாந்தில் அடுத்த ஆண்டு பிப்., 14ம் தேதி முதல் மார்ச் 29ம் தேதி வரை உலக கோப்பை (50 ஓவர்) தொடர் நடக்கவுள்ளது. 

இத்தொடருக்கு முன், இந்திய அணி, ஆஸ்திரேலியாவில் நான்கு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் மற்றும் முத்தரப்பு ஒருநாள் தொடரில் பங்கேற்க உள்ளது. 

இதற்கான அட்டவணையை கிரிக்கெட் ஆஸ்திரேலியா (சி.ஏ.,) நேற்று வௌியிட்டது. இதன்படி முதல் டெஸ்ட், பிரிஸ்பேனில் வரும் டிச., 4ம் தேதி துவங்குகிறது. 

மற்ற போட்டிகள் அடிலெய்டு (டிச., 12–16), மெல்போர்ன் (டிச., 26–30), சிட்னி (2015, ஜன., 3–7) நகரில் நடக்கும்.      

அதன்பின், இந்தியா, ஆஸ்திரேலியா, இங்கிலாந்து அணிகள் பங்கேற்கும் முத்தரப்பு ஒருநாள் தொடர், அடுத்த ஆண்டு ஜன., 16ம் தேதி முதல் பிப்., 1ம் தேதி வரை நடக்கவுள்ளது. 

இதில் ஒவ்வொரு அணிகளும் மற்ற அணிகளுடன் தலா 2 முறை மோதும். முடிவில், புள்ளிப்பட்டியலில் முதலிரண்டு இடங்களை பிடிக்கும் அணிகள், பெர்த்தில் பிப்., 1ல் நடக்கும் பைனலில் விளையாடும்.      

இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் மற்றும் முத்தரப்பு தொடருக்கு முன், ஆஸ்திரேலிய அணி, தென் ஆப்ரிக்காவுடன் மூன்று ‘டுவென்டி–20’ (நவ., 5, 7, 9), ஐந்து ஒருநாள் (நவ., 14, 16, 19, 21, 23) போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்கிறது.      

கடைசி நேரத்தில் டிரா செய்தது போர்ச்சுகல்

அமெரிக்காவுக்கு எதிரான உலக கோப்பதொடரின் லீக் போட்டியை போர்ச்சுகல் அணி ‘டிரா’ செய்தது. 

பிரேசிலில் நடக்கும் உலக கோப்பை கால்பந்து தொடரின் ‘ஜீ’ பிரிவு லீக் போட்டியில் போர்ச்சுகல், அமெரிக்கா அணிகள் மோதின. 

இதில் துவக்கம் முதல் அசத்திய போர்ச்சுகல் அணிக்கு நானி, போட்டியின் 5வது நிமிடத்திலே‌யே முதல் கோல் அடித்து முன்னிலை கொடுத்தார். இதற்கு அமெரிக்க வீரர்களால் முதல் பாதியில் பதிலடி கொடுக்கமுடியவில்லை. 

பின் விறுவிப்பாக நடந்த இரண்டாவது பாதியில் ஆதிக்கம் செலுத்திய அமெரிக்க அணிக்கு ஜோன்ஸ் (64), டெம்ப்சே (81) ஆகியோர் இரட்டை அடி கொடுத்தனர். 

இதற்கு பதிலடி கொடுக்க மும்முரமாக போராடி போர்ச்சுகல் அணிக்கு நட்சத்திர வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோ அடித்த பந்த‌ை மற்றொரு போர்ச்சுகல் வீரர் வரேலா (90+5) கடைசி நிமிடத்தில் தலையால் முட்டி கோலாக மாற்றினார். 

இதையடுத்து அமெரிக்காவின் வெற்றி வாய்ப்பு பரிபோனது. 

இறுதியில் போட்டி 2-2 என ‘டிரா’ ஆனது. 

முத­லி­டத்தை இழந்தார் கோஹ்லி

இந்­தி­யாவின் விராத் கோஹ்லி ஒரு நாள் போட்­டிக்­கான தர­வ­ரி­சையில் ‘நம்பர்–2’ இடத்துக்கு தள்ளப்பட்டார்.

ஒரு நாள் அரங்கில் சிறந்து விளங்கும் வீரர்­க­ளு­க்­கான ‘ரேங்கிங்’ (தர­வ­ரி­சை) பட்­டி­யலை சர்­வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.,) நேற்று வெளியிட்­டது.

இதில் பேட்ஸ்­­மேன்­க­ளுக்­கான தர­வ­ரி­சையில் ‘நம்பர்–1’ இடத்தில் இருந்த இந்­தி­யாவின் கோஹ்லி (868 புள்­ளி), இரண்டாவது இடத்துக்கு தள்ளப்பட்டார்.

இவரை விட கூடு­த­லாக 4 புள்­ளிகள் பெற்ற தென் ஆப்­ரிக்­காவின் டிவி­லியர்ஸ் முதலிடம் பிடித்தார். சமீ­பத்தில் முடிந்த வங்­க­தேச தொடரில் பங்­கேற்­காததால் கோஹ்லிக்கு இந்த பின்னடைவு ஏற்பட்டுள்ளது.

இந்­திய வீரர்­க­ளான தவான் (10), ரோகித் சர்மா (20) முறையே 2, 3 இடங்கள் பின்­தங்­கினர். வங்­க­தேச தொடரில் கேப்­ட­னாக செயல்­பட்டு வெற்­றி­யுடன் முடித்த ரெய்னா இரண்டு இடம் முன்­னேறி 27வது இடம் அடைந்தார்.


பின்னி முன்­னேற்­றம்:

பவு­லர்­க­ளுக்­கான பட்­டி­யலில் இந்­தி­யாவின் ஜடேஜா (7), அஷ்வின் (17) முறையே இரண்டு இடம் பின்­தங்­கினர். இந்­திய வேகப்­பந்­து­வீச்­சா­ள­ரான உமேஷ் யாதவ் 8 இடம் முன்­­னேறி 78வது இடத்தை அடைந்தார்.

வங்­க­தேச தொடரின் இரண்­டா­வது போட்­டி­யில் 6 விக்கெட் வீழ்த்­திய ஸ்டூவர்ட் பின்னி 23 இடம் முன்­னேறி 206வது இடத்தை பிடித்தார். முத­ல் மூன்று இடங்­களில் பாகிஸ்­தானின் சயீத் அஜ்மல், தென் ஆப்­ரிக்­காவின் ஸ்டை­ன், வெஸ்ட் இண்­டீசின் சுனில் நரைன் உள்ளனர்.

‘ஆல்–­ர­வுண்­டர்­க­ள்’ தர­வ­ரி­சை­யில் இந்­தி­யாவின் ஜடே­ஜா 4வது இடத்தை தக்க வைத்துக் கொண்டார். பாகிஸ்­தானின் ஹபீஸ், வங்­க­தே­சத்தின் சாகிப் அல் ஹசன், இலங்­கையின் மாத்யூஸ் முதல் மூன்று இடங்­களில் உள்­ளனர். 

தள்ளாடிய மரகானா மைதானம்

ரசிகர்கள் எடையை தாங்காமல், மரகானா மைதானத்தின் மாடிப்படிக்கட்டுகள் தள்ளாடியது அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

பிரேசிலில் உலக கோப்பை தொடர் நடக்கிறது. இதற்காக மொத்தம் பல மைதானங்கள் புதிதாக கட்டப்பட்டன. ரியோ டி ஜெனிரோவிலுள்ள மரகானா உள்ளிட்ட பல மைதானங்கள் புதுப்பிக்கப்பட்டன. 

இங்கு கடந்த வாரம் அர்ஜென்டினா, போஸ்னியா அணிகள் மோதிய போட்டி நடந்தது. இதைக்காண 74,738 பேர் திரண்டனர். அப்போது ரசிகர்கள் சென்றுவர அமைக்கப்பட்டிருந்த மாடிப்படிக்கட்டுகள், பாரம் தாங்காமல் தள்ளாடியது.

பல்வேறு நாடுகளில் இருந்து வந்திருந்தவர்கள், மரத்தினால் ஆன இந்த படிக்கப்பட்டுகள் எப்போது இடிந்து விழுமோ என்ற பயத்துடன் காணப்பட்டனர்.

இதுகுறித்து மெக்சிகோவை சேர்ந்த ஜார்ஜ் மார்டினஸ் கூறுகையில்,‘‘ ஆயிரக்கணக்கான மக்கள் இதில் நடந்து சென்ற போது, எப்படியும் விபத்து ஏற்பட்டு விடுமோ என்று பயந்தேன்,’’ என்றார்.


வேலை முடியலை:

சிலியை சேர்ந்த மிரண்டா கூறுகையில்,‘‘ ஸ்பெயின் அணிக்கு எதிரான போட்டிக்கு டிக்கெட்டுகள் பெற, மரத்தினால் ஆன, படிக்கட்டுகளில் உட்கார்ந்து இருந்தேன். அப்போது, கட்டுமான பணியாளர்கள், ஆடிக்கொண்டிருந்த படிகளை ‘வெல்டிங்’ வைத்துக் கொண்டிருந்ததை பார்த்தேன்,’’ என்றார்.


மீண்டும் சோதனை:

அதேநேரம், இம்மைதானத்தில் உள்ள முக்கிய நபர்கள் வந்து செல்லும் பகுதி, கான்கிரீட் தளத்தினால் இருந்தது. 

இதுகுறித்து ரியோ டி ஜெனிரோ மாநில அரசு வௌியிட்ட அறிக்கையில்,‘ எங்களுக்கு வந்த புகார்கள் அடிப்படையில் இவைகள் ஆய்வு செய்யப்பட்டன. ரசிகர்கள் பாதுகாப்பு கருதி, மறுபடியும் சோதனை செய்துள்ளோம்,’ என, தெரிவித்துள்ளது.

தொடரை வென்றது இந்தியா - வங்கதேச அணிக்கு ஏமாற்றம்

வங்கதேச அணிக்கு எதிரான இரண்டாவது ஒரு நாள் போட்டியில் பந்துவீச்சில் மிரட்டிய இந்திய அணி 47 வித்தியாசத்தில் ‘டக்வொர்த் லீவிஸ்’ முறைப்படி வெற்றி பெற்று தொடரை கைப்பற்றியது. 

வங்கதேசம் சென்றுள்ள இந்திய அணி 3 ஒரு நாள் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்கிறது. முதல் போட்டியில் இந்தியா வென்றது. இரண்டாவது போட்டி இன்று மிர்புரில் நடந்தது. 

‘டாஸ்’ வென்ற வங்கதேச அணி கேப்டன் முஷ்பிகுர் ரகிம் ‘பவுலிங்’ தேர்வு செய்தார். வங்கதேச அணியில் தஷ்கின் அகமது, மிதுன் அறிமுக வாய்ப்பு பெற்றனர். 

இந்திய அணிக்கு ரகானே டக்–அவுட் ஆகி அதிர்ச்சி தந்தார். மழை பெய்ததால், 5.2 ஓவரில் ஆட்டம் நிறுத்தப்பட்டு, பின் மீண்டும் போட்டி 41 ஓவராக குறைக்கப்பட்டு துவங்கியது. 

அகமது வேகத்தில் உத்தப்பா (14), ராயுடு (1) அவுட்டானர். புஜாரா (11), பின்னி (3), மிஸ்ரா (4) என அடுத்தடுத்து அகமதுவிடம் சிக்கினர். கேப்டன் ரெய்னா 27 ரன்களில் ஆட்டமிழந்தார். பின் வந்தவர்களும் சொதப்ப, இந்திய அணி 25.3 ஓவரில் 105 ரன்களுக்கு ஆல்–அவுட்டானது. வங்கதேச அணி சார்பில் தஷ்கின் அகமது 5 விக்கெட் வீழ்த்தினார். 

வங்கதேச அணிக்கு துவக்கத்திலேயே மோகித், பின்னி தொல்லை தந்தனர். தமிம் இக்பால் (4), அனாமுல் (0) மோகித் வேகத்தில் அவுட்டானர். முஷ்பிகுர் (11), மிதுனை (26) பின்னி ஆட்டமிழக்க செய்தார். 

சாகிப் அல் ஹொசைன் (4), ஜியார் (0) மோகித்திடம் சிக்கினர். மற்றவர்களும் ஏமாற்ற, வங்கதேச அணி 17.4 ஓவரில் 58 ரன்களுக்கு ஆல்–அவுட்டாகி 47 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது. இந்திய அணி சார்பில் பின்னி 6, மோகித் 4 விக்கெட் வீழ்த்தினர். 

 இதன் மூலம் இந்திய அணி 3 போட்டிகள் கொண்ட தொடரை 2–0 என கைப்பற்றியது. 

இந்திய அணி அசத்தல் துவக்கம்

வங்கதேசத்துக்கு எதிரான ஒருநாள் தொடரை இந்திய அணி வெற்றியுடன் துவக்கியது. மழையால் பாதிக்கப்பட்ட முதலாவது ஒருநாள் போட்டியில், உத்தப்பா, ரகானேவின் அரைசதம் கைகொடுக்க,  7 விக்கெட் வித்தியாசத்தில் ‘டக்வொர்த் லீவிஸ்’ முறையில் வெற்றி பெற்றது.   
   
வங்கதேசம் சென்றுள்ள இந்திய அணி, மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் பங்கேற்கிறது. முதல் போட்டி மிர்புரில் நேற்று நடந்தது. இந்திய அணியில் பர்வேஸ் ரசூல், அக்சர் படேல் அறிமுக வீரர்களாக களமிறங்கினர். ‘டாஸ்’ வென்ற வங்கதேச கேப்டன் முஷ்பிகுர் ரஹிம், ‘பேட்டிங்’ தேர்வு செய்தார்.                 


முஷ்பிகுர் அபாரம்: 

வங்கதேச அணிக்கு தமிம் இக்பால் (0), மோமினுல் ஹேக் (6) ஏமாற்றினர். மற்றொரு துவக்க வீரர் அனாமுல் ஹேக் (44) அரைசத வாய்ப்பை இழந்தார். அபாரமாக ஆடிய கேப்டன் முஷ்பிகுர் ரஹிம் (59)அரைசதம் அடித்தார். 


சாகிப் அரைசதம்: 

‘மிடில்–ஆர்டரில்’ வந்த சாகிப் அல் ஹசன் (52), தன்பங்கிற்கு அரைசதம் அடிக்க அணியின் ஸ்கோர் உயர்ந்தது. பின் களமிறங்கிய மகமதுல்லா (41), நசிர் ஹொசைன் (22) ஓரளவு கைகொடுத்தனர். ஜியாவுர் ரஹ்மான் (2), மொர்டசா (18) நிலைக்கவில்லை.        
          
வங்கதேச அணி 50 ஓவரில் 9 விக்கெட்டுக்கு 272 ரன்கள் எடுத்தது. அப்துர் ரசாக் (16), அல்–அமின் ஹொசைன் (1) அவுட்டாகாமல் இருந்தனர். இந்தியா சார்பில் உமேஷ் யாதவ் 3, அக்சர் படேல், பர்வேஸ் ரசூல் தலா 2 விக்கெட் கைப்பற்றினர்.             


சூப்பர் துவக்கம்: 

எட்டக்கூடிய இலக்கை விரட்டிய இந்திய அணிக்கு ராபின் உத்தப்பா, அஜின்கியா ரகானே ஜோடி நல்ல துவக்கம் கொடுத்தது. அபாரமாக ஆடிய உத்தப்பா, ஒருநாள் அரங்கில் தனது 6வது அரைசதம் அடித்தார். முதல் விக்கெட்டுக்கு 99 ரன்கள் சேர்த்த போது உத்தப்பா (50) அவுட்டானார்.     


மழை குறுக்கீடு: 

இந்திய அணி 16.4 ஓவரில் ஒரு விக்கெட்டுக்கு 100 ரன்கள் எடுத்திருந்த போது மழை குறுக்கிட, ஆட்டம் நிறுத்தி வைக்கப்பட்டது. பின், இரண்டு மணி நேரத்துக்கு மேல், மீண்டும் போட்டி துவங்கியது. இந்திய அணியின் வெற்றிக்கு ‘டக்வொர்த் லீவிஸ்’ முறைப்படி 26 ஓவரில் 150 ரன்கள் என இலக்கு நிர்ணயிக்கப்பட்டது.    
   
எளிய இலக்கை விரட்டிய இந்திய அணிக்கு புஜாரா (0) ஏமாற்றினார். மறுமுனையில் அசத்திய ரகானே, தன்பங்கிற்கு அரைசதம் அடித்தார். இவர், 64 ரன்களுக்கு அவுட்டானார். அடுத்து வந்த கேப்டன் ரெய்னா, மகமதுல்லாவில் 25வது ஓவரில் அடுத்தடுத்து இரண்டு பவுண்டரி அடித்து வெற்றியை உறுதி செய்தார்.      

இந்திய அணி 24.5 ஓவரில் 3 விக்கெட்டுக்கு 153 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. ரெய்னா (15), அம்பதி ராயுடு (16) அவுட்டாகாமல் இருந்தனர். வங்கதேசம் சார்பில் சாகிப் அல் ஹசன் 2 விக்கெட் வீழ்த்தினார்.      

இந்த வெற்றியின் மூலம் இந்திய அணி மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் 1–0 என முன்னிலை வகிக்கிறது. இரண்டாவது போட்டி மிர்புரில் நாளை (ஜூன் 17) நடக்கிறது.

அஷ்வின் 8 வது இடம்

ஐ.சி.சி., டெஸ்ட் பவுலர்களுக்கான ரேங்கிங்கில் (தரவரிசை) இந்தியாவின் அஷ்வின் 8வது இடத்தில் நீடிக்கிறார்.

டெஸ்ட் போட்டியில் சிறந்து விளங்கும் வீரர்களுக்கான ரேங்கிங் (தரவரிசை) பட்டியலை, சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.,) துபாயில் நேற்று வௌியிட்டது. 

பவுலர்களுக்கான ரேங்கிங்கில் இந்தியாவின் அஷ்வின் 8வது இடத்தை தக்கவைத்துக் கொண்டார். 

முதலிடத்தில் தென் ஆப்ரிக்காவின் ஸ்டைன் நீடிக்கிறார். வெஸ்ட் இண்டீசுக்கு எதிராக வேகத்தில் அசத்திய நியூசிலாந்தின் டிம் சவுத்தி, 8வது இடத்தில் இருந்து 5வது இடத்துக்கு முன்னேறினார். 

வெஸ்ட் இண்டீசின் கீமர்  ரோச் 15வது, பென் 35வது, ஜெரோம் டெய்லர் 75வது இடங்களை பிடித்தனர்.

பேட்ஸ்மேன்களுக்கான ரேங்கிங்கில் இந்தியாவின் புஜாரா 7வது இடத்துக்கு முன்னேறினார். விராத் கோஹ்லி 10வது இடத்தில் நீடிக்கிறார். முதலிடத்தில் தென் ஆப்ரிக்காவின் டிவிலியர்ஸ் உள்ளார்.

அணிகளுக்கான தரவரிசையில் ஆஸ்திரேலியா ‘நம்பர்–1’ இடத்தை தக்கவைத்துக் கொண்டது. அடுத்த நான்கு இடங்களில் தென் ஆப்ரிக்கா, இங்கிலாந்து, பாகிஸ்தான், இந்தியா அணிகள் உள்ளன.

ஆஸ்கார் விருது விழாவை மிஞ்சிய உலக கோப்பை தொடக்க ஆட்டம்

உலக கோப்பை கால்பந்து போட்டியின் தொடக்க ஆட்டத்தில் பிரேசில் 3-1 என்ற கோல் கணக்கில் குரோஷியாவை தோற்கடித்தது. இந்த ஆட்டத்தை பற்றி ‘பேஸ்புக்’ சமூக வலைதளத்தில் 5.8 கோடி கருத்துகள் பரிமாறப்பட்டுள்ளன. 

இது இந்த ஆண்டில் நடந்த ஆஸ்கார் விருது குறித்து பேஸ்புக்கில் கருத்துகளை பரிமாறியவர்களின் எண்ணிக்கையை விட 5 மடங்கு அதிகமாகும். பிரேசில் ‘ஹீரோ’ நெய்மார் அடித்த முதல் கோல் பற்றி தான் பெரும்பாலானோர் வர்ணித்துள்ளனர். 

இதே போல் சர்ச்சைக்கு மத்தியில் வழங்கப்பட்ட ‘பெனால்டி’ குறித்தும் அதிகமாக விவாதிக்கப்பட்டிருக்கிறது. இதில் 1.6 கோடி கருத்துகள் பிரேசிலில் இருந்து பதிவு செய்யப்பட்டவை. அடுத்த இடங்களில் அமெரிக்கா, இங்கிலாந்து உள்ளன.

திவாரி, உத்தப்பா புதிய கேப்டன் - இளம் இந்திய அணி அறிவிப்பு

ஆஸ்திரேலியா செல்லும் இந்திய அணிக்கு மனோஜ் திவாரி (நான்கு நாள் போட்டி), ராபின் உத்தப்பா (ஒருநாள் போட்டி) ஆகியோர் புதிய கேப்டனாக நியமிக்கப்பட்டனர்.

அடுத்த மாதம் ஆஸ்திரேலியா செல்லவுள்ள இந்திய ‘ஏ’ அணி, நான்கு நாட்கள் விளையாடும் இரண்டு போட்டிகள் மற்றும் நான்கு அணிகள் பங்கேற்கும் ஒருநாள் தொடரில் விளையாடுகிறது.

நான்கு நாட்கள் நடக்கும் இரண்டு போட்டிகள் (ஜூலை 6–9, 13–16) குயீன்ஸ்லாந்தில் நடக்கிறது. நான்கு அணிகள் பங்கேற்கும் ஒருநாள் தொடர், ஜூலை 20 முதல் ஆக., 2 வரை நடக்கிறது. இதில் இந்தியா ‘ஏ’, ஆஸ்திரேலியா ‘ஏ’, தென் ஆப்ரிக்கா ‘ஏ’ மற்றும் கிரிக்கெட் ஆஸ்திரேலியா லெவன் அணிகள் பங்கேற்கின்றன.

இதில் பங்கேற்கும் இந்திய அணி வீரர்களின் தேர்வு மும்பையில் நேற்று நடந்தது. இதில் நான்கு நாட்கள் நடக்கும் இரண்டு போட்டிகளுக்கு மனோஜ் திவாரி கேப்டனாக நியமிக்கப்பட்டார். நான்கு அணிகள் பங்கேற்கும் ஒருநாள் தொடருக்கு ராபின் உத்தப்பா கேப்டனாக அறிவிக்கப்பட்டார்.

ராகுல், கருண் நாயர், அனுரீத் சிங், ரஜாத் பாலிவால், உமேஷ் யாதவ், அமித் மிஸ்ரா ஆகியோருக்கு நான்கு நாட்கள் நடக்கும் போட்டிக்கு மட்டும் தேர்வு செய்யப்பட்டனர். ரஞ்சி சீசனில் 1223 ரன்கள் எடுத்த கேதர் ஜாதவ், நான்கு நாட்கள் நடக்கும் போட்டிக்கு தேர்வு செய்யப்படாதது ஆச்சர்யம். இவர், ஒருநாள் தொடருக்கான அணியில் மட்டும் இடம் பிடித்தார்.

உன்முக்த் சந்த், அக்சர் படேல், மனன் வோரா, ரிஷி தவான், மனிஷ் பாண்டே ஆகியோருக்கு ஒருநாள் தொடருக்கான அணியில் மட்டும் இடம் கிடைத்தது.


நான்கு நாட்கள் அணி: 

மனோஜ் திவாரி (கேப்டன்), ராகுல், ஜிவான்ஜோத் சிங், ராபின் உத்தப்பா, அம்பதி ராயுடு, கருண் நாயர், நமன் ஓஜா (விக்கெட் கீப்பர்), பிரக்யான் ஓஜா, உமேஷ் யாதவ், தவால் குல்கர்னி, அனுரீத் சிங், ரஜத் பாலிவால், அமித் மிஸ்ரா, சந்தீப் சர்மா, ஜாஸ்பிரீத் பம்ரா, பாபா அபராஜித்.


ஒருநாள் அணி: 

ராபின் உத்தப்பா (கேப்டன்), உன்முக்த் சந்த், மனிஷ் பாண்டே, அம்பதி ராயுடு, மனோஜ் திவாரி, கேதர் ஜாதவ், சஞ்சு சாம்சன், பர்வேஸ் ரசூல், அக்சர் படேல், தவால் குல்கர்னி, ரிஷி தவான், மோகித் சர்மா, கரண் சர்மா, ராகுல் சுக்லா, மனன் வோரா, ஜெயதேவ் உனத்கத்.

வங்காளதேசத்தில் கிரிக்கெட் ஸ்டேடியம் இடிந்து விழுந்து 3 பேர் பலி

வங்காளதேசத்தில் உலகக்கோப்பை டி20 கிரிக்கெட் போட்டி நடைபெற்ற சில்ஹெத் ஸ்டேடியத்தின் சுவர் இடிந்து விழுந்தது. 

ஸ்டேடியத்தின் சுற்றுச்சுவர் ஓரத்தில் தகர கொட்டகை அமைத்து சிலர் தங்கியிருந்தனர். மழையில் நனைத்து ஊறிப்போயிருந்த அந்த சுவர் நேற்று அதிகாலையில் இடிந்து கொட்டகை மீது விழுந்தது. 

அப்போது உள்ளே தூங்கிக்கொண்டிருந்த 3 சிறுவர்கள் உயிரிழந்தனர். இவர்கள் அனைவரும் அருகில் உள்ள தேயிலைத் தோட்டத்தில் பணியாற்றுவோரின் பிள்ளைகள் ஆவர்.

வங்காளதேசத்தில் சில்ஹெத் உள்ளிட்ட 3 ஸ்டேடியங்களில் உலகக்கோப்பை டி20 போட்டிகள் நடைபெற்றன. இதற்காக சில்ஹெத் ஸ்டேடியத்தில் சீரமைக்கும் பணிகள் தாமதமானது. 

ஐசிசி ஆய்வாளர்கள் அங்கு பலமுறை ஆய்வு செய்ததையடுத்து பணிகள் முடுக்கி விடப்பட்டு உலகக்கோப்பை போட்டி நடத்த அனுமதி அளிக்கப்பட்டது.

ஐ.பி.எல் பெட்டிங்: விசாரணைக் குழுவில் கங்குலிக்கு இடம்

கடந்த வருடம் நடைபெற்ற ஐ.பி.எல் போட்டிகளில் பெட்டிங் மற்றும் ஸ்பாட் பிக்சிங்கில் ஈடுபட்டதாக ஐ.பி.எல் அணி உரிமையாளர்கள் மீது குற்றஞ்சாட்டப்பட்டது. 

இது தொடர்பாக விசாரணை நடத்தி அறிக்கை தர நீதிபதி முத்கல் தலைமையிலான குழுவை நியமித்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.

இதை தொடர்ந்து முத்கல் தலைமையிலான குழுவினர் 07.06.2014 முதல் 08.06.2014 வரை மும்பையில் கூடி ஆலோசித்தனர். பின்னர் பெட்டிங் மற்றும் ஸ்பாட் பிக்சிங் தொடர்பான தங்கள் விசாரணைக்கு உதவ பல்வேறு வீரர்களின் பெயர்களை பரிசீலனை செய்தனர். 

இறுதியில் தங்களுடைய விசாரணைக்கு உதவ முன்னாள் கிரிக்கெட் கேப்டனான சவுரவ் கங்குலியை நியமித்து அவர்கள் அறிக்கை வெளியிட்டனர்.

முத்கல் கமிட்டியின் முடிவை கங்குலி ஏற்றுக்கொள்வதாக தெரிவித்துள்ளார் என அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. முத்கல் குழு தனது விசாரணை அறிக்கையை வரும் ஆகஸ்ட் மாதத்திற்குள் உச்சநீதிமன்றத்தில் சமர்ப்பிக்க உள்ளது. 

இக்குழுவில் முத்கல்லை தவிர இந்தியாவின் கூடுதல் சொலிசிட்டர் ஜெனரலான நாகேஸ்வர ராவ் மற்றும் மூத்த வழக்கறிஞரான நிலோய் தத்தா ஆகியோர் இடம்பெற்றுள்ளனர். இது தவிர இக்குழுவிற்கு உதவி செய்ய மூத்த போலீஸ் அதிகாரியான பி.பி. மிஸ்ராவும் நியமிக்கப்பட்டுள்ளார்.

உலககோப்பை கால்பந்தில் வெல்லும் அணிக்கு ரூ.210 கோடி பரிசு

உலகம் முழுவதும் ஆவலுடன் எதிர்பார்க்கப்படும் உலக கோப்பை கால்பந்து போட்டி வருகிற 12–ந் தேதி பிரேசிலில் தொடங்குகிறது.

ஜூலை 13–ந் தேதி வரை இந்த கால்பந்து திருவிழா அங்குள்ள 12 நகரங்களில் நடக்கிறது.

இந்த போட்டியில் மொத்தம் நடப்பு சாம்பியன் ஸ்பெயின், பிரேசில், ஜெர்மனி, அர்ஜென்டினா, இத்தாலி, இங்கிலாந்து, போர்ச்சுக்கல், பிரான்ஸ் போன்ற முன்னணி அணிகள் உள்பட 32 நாடுகள் பங்கேற்கின்றன. அவை 8 பிரிவாக பிரிக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு பிரிவிலும் 4 அணிகள் இடம் பெற்று உள்ளன.

ஒவ்வொரு பிரிவில் உள்ள அணியும் தங்கள் பிரிவில் உள்ள மற்ற அணிகளுடன் தலா ஒரு முறை மோத வேண்டும்.

‘லீக்’ முடிவில் புள்ளிகள் அடிப்படையில் ஒவ்வொரு பிரிவிலும் முதல் 2 இடங்களை பிடிக்கும் அணிகள் ‘நாக்அவுட்’ சுற்றான 2–வது சுற்றுக்கு தகுதி பெறும். அதில் இருந்து கால்இறுதி, அரை இறுதி, இறுதிப்போட்டிக்கு அணிகள் முன்னேறும்.

உலக கோப்பையை வெல்லும் அணிக்கு ரூ.210 கோடி பரிசு தொகை வழங்கப்படும். கடந்த முறை உலக கோப்பையை வென்ற ஸ்பெயின் அணிக்கு வழங்கப்பட்ட பரிசு தொகையை விட இது 17 சதவீதம் கூடுதலாகும்.

சாம்பியன் பட்டம் பெறும் அணிக்கு 4927 கிராம் எடை கொண்ட தங்க கோப்பையும் வழங்கப்படும்.

2–வது இடத்தை பிடிக்கும் அணிக்கு ரூ.150 கோடியும், 3–வது இடத்தை பிடிக்கும் நாட்டுக்கு ரூ.132 கோடியும், 4–வது இடத்துக்கு ரூ.120 கோடியும் பரிசு தொகையாக வழங்கப்படும்.

கால் இறுதியில் வெளியேறும் 4 அணிகளுக்கு தலா ரூ.84 கோடியும், 2–வது சுற்றில் வெளியேறும் 8 அணிகளுக்கு தலா ரூ.54 கோடியும், முதல் சுற்றில் வெளியேறும் 16 அணிகளுக்கு தலா ரூ.48 கோடியும் பரிசாக வழங்கப்படும்.

இந்த போட்டியின் மொத்த பரிசு தொகை ரூ.3456 கோடியாகும். கடந்த உலக கோப்பையில் (2010) வழங்கப்பட்ட பரிசு தொகையில் இருந்து 37 சதவீதம் கூடுதலாகும். 

ஐ.பி.எல்., வெற்றிவிழாவில் போலீஸ் தடியடி

ஐ.பி.எல்., கோப்பை வென்ற கோல்கட்டா அணிக்கு நேற்று பாராட்டு விழா நடந்தது. இதனை காண ஒன்றரை லட்சத்துக்கும் அதிகமான ரசிகர்கள் திரண்டதால், போலீசார் தடியடி நடத்த, பெரும் அமளி ஏற்பட்டது.

ஏழாவது ஐ.பி.எல்., தொடரின் பைனலில் அசத்திய  கோல்கட்டா அணி, பஞ்சாப்பை வீழ்த்தி, கோப்பை வென்றது. 

இதைக் கொண்டாடும் வகையில், கோல்கட்டா ஈடன் கார்டன் மைதானத்தில், கோல்கட்டா கிரிக்கெட் சங்கம் (சி.ஏ.பி.,) மற்றும் மேற்கு வங்க அரசு இணைந்து விழா நடத்தின.

இதைக் காண ரசிகர்களுக்கு இலவச அனுமதி என்பதால், நேற்று காலையில் இருந்தே ரசிகர்கள் திரண்டனர். மைதானத்தில் 65 ஆயிரம் பேருக்கு மட்டுமே இடம் என்ற நிலையில், ஒன்றரை லட்சம் பேர் குவிந்தனர். 

ஆனால், கோல்கட்டா போலீஸ் தரப்பில் இருந்து வழங்கப்பட்ட ‘சிறப்பு அனுமதி டிக்கெட்’ வைத்திருப்பவர்கள் மட்டும், மைதானத்துக்குள் அனுமதிக்கப்பட, குழப்பம் ஏற்பட்டது. 


போலீஸ் தடியடி:

சிலர் அங்கிருந்த தடுப்புகளை தாண்டிக் குதித்து, மைதானத்துக்குள் அத்துமீறி நுழைய முயன்றனர். இதனால் பெரும் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதைக் கட்டுப்படுத்த அதிரடிப்படை போலீசார் தடியடி நடத்தினர். இதில் 6 பேருக்கு காயம் ஏற்பட்டது.


கோப்பை இல்லை:

மதியம் 3 மணிக்கு வீரர்கள் மைதானத்துக்கு  வந்து சேர்ந்தனர். வரும் போது கோப்பையை கொண்டு வராமல் விட்டுவிட, லேசான குழப்பம் ஏற்பட்டது. பின், போலீசாரை ஓட்டலுக்கு அனுப்பி, கோப்பையை கொண்டு வர ஏற்பாடு செய்யப்பட்டது.

ஐ.பி.எல். கனவு அணியில் சகா, மொகித்சர்மா

7–வது ஐ.பி.எல். போட்டியின் அடிப்படையில் கிரிக்இன்போ இணையதளம் கனவு அணியை வெளியிட்டுள்ளது. 

இதில் பஞ்சாப் அணி வீரர் விர்த்திமான் சகா, சென்னை சூப்பர்கிங்ஸ் வீரர் மொகித்சர்மா இடம் பெற்று உள்ளனர். ஐ.பி.எல்.கனவு அணி வருமாறு:–

1. உத்தப்பா (கொல்கத்தா), 2. டேவிட் வார்னர் (ஐதராபாத்), 3. ரெய்னா (சென்னை), 4. விர்த்திமான் சகா (பஞ்சாப்), 5. மேக்ஸ்வெல் (பஞ்சாப்), 6. டோனி (சென்னை), 7. அக்ஷர்படேல் (பஞ்சாப்), 8. புவனேஸ்வர்குமார் (ஐதராபாத்), 9. மொகித்சர்மா (சென்னை), 10. மலிங்கா (மும்பை), 11. சுனில்நரின் (கொல்கத்தா). 12–வது வீரர் சகிப்அல்ஹசன் (கொல்கத்தா),

கோல்கட்டாவுக்கு கோப்பை - கடைசி ஓவரில் வீழ்ந்தது பஞ்சாப்

பந்துக்கு பந்து நெஞ்சம் படபடத்த பரபரப்பான ஐ.பி.எல்., பைனலில் அசத்திய கோல்கட்டா அணி 3 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் ‘திரில்’ வெற்றி பெற்றது. இதன் மூலம் கோப்பையை இரண்டாவது முறையாக கைப்பற்றியது. 

கடைசி ஓவரில் பவுண்டரி அடித்த பியுஸ் சாவ்லா, சாம்பியன் கனவை நனவாக்கினார். போராடிய பஞ்சாப் அணி, இரண்டாவது இடத்தை பிடித்தது. சகாவின் சதம் வீணானது. 

பெங்களூருவில் நேற்று இரவு நடந்த ஏழாவது ஐ.பி.எல்., தொடரின் பைனலில் கோல்கட்டா, பஞ்சாப் அணிகள் மோதின. பஞ்சாப் அணியில் சந்தீப் சர்மா நீக்கப்பட்டு, பாலாஜி இடம் பெற்றார். கோல்கட்டா அணியில் மாற்றம் எதுவும் செய்யப்படவில்லை. ‘டாஸ்’ வென்ற கோல்கட்டா கேப்டன் காம்பிர், துணிச்சலாக ‘பவுலிங்’ தேர்வு செய்தார்.


சேவக் ஏமாற்றம்:

பஞ்சாப் அணிக்கு எதிர்பார்த்த துவக்கம் கிடைக்கவில்லை. சென்னைக்கு எதிரான கடந்த போட்டியில் புலியாக உறுமிய சேவக், இம்முறை பூனையாக பம்மினார். இவர், உமேஷ் யாதவ் ‘வேகத்தில்’ வெறும் 7 ரன்களுக்கு நடையை கட்டினார். 

அடுத்து ‘பேட்டிங்’ வரிசையில் தேவையில்லாமல் மாற்றம் செய்யப்பட்டது. மேக்ஸ்வெல்லுக்கு பதில் முன்னதாக வந்த கேப்டன் ஜார்ஜ் பெய்லி(1), ‘சுழல் மாயாவி’ சுனில் நரைனின் முதல் பந்தில் போல்டானர்.

பின் சகா, மனன் வோரா சேர்ந்து அசத்தினர். யார் பந்துவீசினாலும் விளாசித் தள்ளிய இவர்கள், மின்னல் வேகத்தில் ரன் சேர்த்தனர். நரைன் கைநழுவ கண்டம் தப்பிய சகா, தனது அதிரடியை தொடர்ந்தார். உமேஷ் யாதவ் ஓவரில் 2 பவுண்டரி, ஒரு சிக்சர் விளாசினார். சாவ்லா வலையில் வோரா(67) சிக்கினார். ‘அபாய’ மேக்ஸ்வெல்(0) ஏமாற்றினார். 

நரைன் ஓவரில் சிக்சர் அடித்த சகா, சதம் கடந்து அசத்தினார். முதல் 10 ஓவரில் 58 ரன்கள் தான் எடுக்கப்பட்டன. அடுத்த 10 ஓவரில் 141 ரன்கள் கிடைத்தன. பஞ்சாப் அணி 20 ஓவரில் 4 விக்கெட்டுக்கு 199 ரன்கள் எடுத்தது. சகா 115 ரன்களுடன்(55 பந்து, 10 பவுண்டரி, 8 சிக்சர்) அவுட்டாகாமல் இருந்தார்.ஆட்ட நாயகன் விருதை மணிஷ் பாண்டே வென்றார். 


பாண்டே நம்பிக்கை:

கடின இலக்கை விரட்டிய கோல்கட்டா அணி எடுத்த எடுப்பிலேயே ஆட்டம் கண்டது. ஜான்சன் வீசிய முதல் ஓவரில் உத்தப்பா(5) அவுட்டானார். கேப்டன் காம்பிர்(23) அதிக நேரம் நீடிக்கவில்லை. 

அடுத்து வந்த யூசுப் பதான், கரண்வீர் சிங் ஓவரில் வரிசையாக 2 சிக்சர்கள் விளாசி நம்பிக்கை தந்தார். மறுபக்கம் அபார ஆட்டத்தை தொடர்ந்த மணிஷ் பாண்டே, அவானா ஓவரில் 2 சிக்சர், பவுண்டரி விளாசினார். 

இந்த நேரத்தில் கரண்வீர் சிங் பந்தில் யூசுப்(36) அவுட்டாக, சிக்கல் ஏற்பட்டது. சாகிப்(12), டஸ்காட்டே(4) நிலைக்கவில்லை. தனிநபராக போராடிய மணிஷ் பாண்டே, 94 ரன்களுக்கு வெளியேற, பதட்டம் அதிகரித்தது. சூர்ய குமார் யாதவ்(5) அணியை கைவிட்டார்.


சபாஷ் சாவ்லா:

ஜான்சன் வீசிய போட்டியின் 19வது ஓவரில் பியுஸ் சாவ்லா ஒரு இமாலய சிக்சர் அடிக்க, மீண்டும் நம்பிக்கை துளிர் விட்டது.

கடைசி ஓவரில் வெற்றிக்கு 5 ரன்கள் தேவைப்பட்டன. அவானா பந்துவீசினார். முதல் பந்தில் ரன் இல்லை. இரண்டாவது பந்தில் நரைன் ஒரு ரன் எடுத்தார். 3வது பந்தில் பியுஸ் சாவ்லா ஒரு ‘சூப்பர்’ பவுண்டரி அடித்து, கோப்பையை உறுதி செய்தார். கோல்கட்டா அணி 19.3 ஓவரில் 7 விக்கெட்டுக்கு 200 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. சாவ்லா(13), நரைன்(2) அவுட்டாகாமல் இருந்தனர்.


ரூ. 15 கோடி பரிசு

நேற்றைய ஐ.பி.எல்., பைனலில் வெற்றி பெற்ற கோல்கட்டா அணிக்கு, கோப்பையுடன் ரூ. 15 கோடி பரிசு வழங்கப்பட்டது. இரண்டாவது இடம் பிடித்த பஞ்சாப் அணிக்கு ரூ. 10 கோடி பரிசு கொடுக்கப்பட்டது. ‘பிளே–ஆப்’ சுற்று வரை முன்னேறி, பைனல் வாய்ப்பை இழந்த சென்னை, மும்பை அணிகளுக்கு தலா ரூ. 7.5 கோடி வழங்கப்பட்டது.


அழுதார் பிரித்தி

நேற்றைய பைனலில் நடிகர் ஷாருக்கானின் கோல்கட்டா, நடிகை பிரித்தி ஜிந்தாவின் பஞ்சாப் அணிகள் மோதியதால், பாலிவுட் ‘டென்ஷனை’ காண முடிந்தது. இருவரும் மைதானத்துக்கு வந்து போட்டியை ரசித்தனர். கோல்கட்டா வென்றதும் ஷாருக் சிரித்து மகிழ்ந்தார். கோப்பை நழுவிய சோகத்தில் பிரித்தியின் கண்கள் குளமாகின. 


9வது வெற்றி

லீக் சுற்றில் துவக்கத்தில் சொதப்பிய கோல்கட்டா அணி, முதல் 7 போட்டியில் 2ல் மட்டும் வென்றது. அதன்பின் தொடர்ச்சியாக 7 லீக் போட்டியில் வெற்றி பெற்றது. பின், ‘பிளே–ஆப்’ முதலாவது தகுதிச் சுற்றில் பஞ்சாப்பை வீழ்த்தி, தொடர்ந்து 8வது வெற்றியை பெற்றது. இதன்மூலம் ஐ.பி.எல்., அரங்கில் தொடர்ச்சியாக அதிக வெற்றி பெற்ற அணிகள் வரிசையில் முதலிடத்தை பஞ்சாப்புடன் (2013–14, 8 வெற்றி) பகிர்ந்து கொண்டது.

நேற்றைய பைனலில் மீண்டும் பஞ்சாப் அணியை வீழ்த்திய கோல்கட்டா அணி, வரிசையாக 9வது வெற்றியை பதிவு செய்து, தொடர்ச்சியாக அதிக வெற்றி பெற்ற அணி என்ற புதிய சாதனை படைத்தது. பெங்களூரு (2011), சென்னை (2013) அணிகள் தொடர்ச்சியாக 7 வெற்றி பெற்றன.


சிறந்த ‘சேஸ்’

பஞ்சாப் அணி நிர்ணயித்த 200 ரன்களை எட்டிய கோல்கட்டா அணி, ஐ.பி.எல்., தொடரின் பைனலில் சிறந்த ‘சேஸிங்கை’ பதிவு செய்து, தனது சொந்த சாதனையை முறியடித்தது. முன்னதாக 2012ல் நடந்த பைனலில், சென்னை அணி நிர்ணயித்த 191 ரன்கள் என்ற வெற்றி இலக்கை விரட்டிய கோல்கட்டா அணி 192 ரன்கள் எடுத்து சிறந்த ‘சேஸிங்’ செய்தது.


இதெல்லாம் அதிசயம்

மேற்கு வங்கத்தை சேர்ந்த சகா முதலாவது ஐ.பி.எல்., தொடரில் கோல்கட்டா அணிக்காக தான் விளையாடினார். நேற்று, தன்னை புறக்கணித்த அதே கோல்கட்டா அணிக்கு எதிராக சதம் அடித்த இவர், பஞ்சாப் அணிக்கு கைகொடுத்தார்.

* பஞ்சாப் அணிக்கு கடந்த போட்டிகளில் கைகொடுத்த வெளிநாட்டு வீரர்களான மேக்ஸ்வெல்(0), மில்லர்(1) இம்முறை ஏமாற்றிய நிலையில், இந்திய வீரர்களான வோரா(67), சகா(115) அசத்தினர்.

* சகா சதம் அடித்ததும், எதிரணியான கோல்கட்டாவின் உரிமையாளரான ஷாருக் கான் எழுந்து நின்று கைதட்டி தனது பெருந்தன்மையுடன் நடந்து கொண்டார்.

* கர்நாடகாவை சேர்ந்த உத்தப்பாவுக்கு பெங்களூரு சின்னசாமி மைதானம் பழக்கப்பட்டது. இத்தொடரில் அதிக ரன் எடுத்தவர் என்பதால் அசத்துவார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் 5 ரன்களில் வெளியேறினார்.


முதல் வீரர்

நேற்று அபாரமாக ஆடிய பஞ்சாப் அணியின் சகா சதம் அடித்தார். இதன்மூலம் ஐ.பி.எல்., பைனலில் சதம் அடித்த முதல் வீரர் என்ற சாதனை படைத்தார்.  முன்னதாக 2011ல் நடந்த பெங்களூரு அணிக்கு எதிரான பைனலில், சென்னை அணியின் முரளி விஜய் 95 ரன்கள் எடுத்தது அதிகபட்சமாக இருந்தது.

* இது, இம்முறை பதிவு செய்யப்பட்ட 3வது சதம். முன்னதாக மும்பை அணியின் லெண்டில் சிம்மன்ஸ் (100*, எதிர்–பஞ்சாப்), பஞ்சாப் அணியின் சேவக் (122, எதிர்–சென்னை) ஆகியோர் இம்மைல்கல்லை எட்டினர்.

* தவிர இது, ஐ.பி.எல்., வரலாற்றில் பதிவு செய்யப்பட்ட 31வது சதம். இதில் அதிகபட்சமாக பெங்களூரு அணியின் கிறிஸ் கெய்ல் 4 சதம் அடித்துள்ளார்.

* ஐ.பி.எல்., வரலாற்றில் சதம் அடித்த இரண்டாவது விக்கெட் கீப்பர் என்ற பெருமை பெற்றார் சகா. முன்னதாக டெக்கான் (109*), பஞ்சாப் (106) அணிகளுக்காக விளையாடிய கில்கிறிஸ்ட் இச்சாதனை படைத்தார்.


இரண்டாவது அதிகபட்சம்

நேற்று 199 ரன்கள் எடுத்த பஞ்சாப், ஐ.பி.எல்., பைனலில் அதிக ரன்கள் சேர்த்த அணிகள் வரிசையில் 2வது இடம் பிடித்தது. சென்னையில் 2011ல் நடந்த பெங்களூருவுக்கு எதிரான பைனலில், சென்னை அணி அதிகபட்சமாக 205 ரன்கள் குவித்தது.