பாக்., அணியில் புகைச்சல் ஆரம்பம்


இலங்கைக்கு எதிரான முக்கியமான அரையிறுதியில் கேப்டன் முகமது ஹபீஸ் தான் என்னை நீக்கினார். இதற்கு அணி நிர்வாகம் காரணம் அல்ல,'' என, அப்துல் ரசாக் பகிரங்கமாக குற்றம்சாட்டியுள்ளார்.

நான்காவது "டுவென்டி-20' உலக கோப்பை அரையிறுதியில் பாகிஸ்தான் அணி, இலங்கையிடம் தோல்வி அடைந்து, பைனல் வாய்ப்பை பறிகொடுத்தது. இப்போட்டியில் அனுபவ வீரர் அப்துல் ரசாக்கை சேர்க்காதது குறித்து கடும் விமர்சனம் எழுந்தது. 

இது குறித்து பாகிஸ்தான் கேப்டன் முகமது ஹபீஸ் கூறுகையில்,""கூடுதலாக ஒரு பவுலரை சேர்க்க அணி நிர்வாகம் முடிவு செய்ததால் தான் அப்துல் ரசாக்கை நீக்கினோம்,''என்றார்.

இதனை மறுத்த ரசாக் கூறியது: 

இலங்கைக்கு எதிரான அரையிறுதியில் பங்கேற்க மனதளவில் தயாராக இருந்தேன். ஆனால், வாய்ப்பு மறுக்கப்பட, மிகுந்த ஏமாற்றம் அடைந்தேன். இதற்கு அணி நிர்வாகம் காரணம் அல்ல. 

கேப்டன் முகமது ஹபீசின் தன்னிச்சையான முடிவால் தான் நீக்கப்பட்டேன். இதனை அவர் ஒத்துக் கொள்ள வேண்டும். மற்றவர்கள் மீது பழி சுமத்தக் கூடாது. 

அரையிறுதி போட்டியை வெளியே இருந்து கவனித்தேன். ஒருவேளை அதில் விளையாடியிருந்தால், எனது சிறப்பான பங்களிப்பை கொடுத்திருப்பேன். 

இந்திய அணியின் முன்னாள் கேப்டன் கங்குலி கூட, நான் இடம் பெற்றிருந்தால் கடைசிக் கட்டத்தில் பாகிஸ்தானுக்கு மிகவும் பயனுள்ளதாக இருந்திருக்கும் என கருத்து தெரிவித்தார்.

இவ்வாறு ரசாக் கூறினார்.

0 comments:

Post a Comment