உலக கோப்பை தொடரில் சாதிப்பேன்: யுவராஜ்

உலக கோப்பை ("டுவென்டி-20') கிரிக்கெட் தொடரில் சாதிப்பேன்,'' என, இந்திய வீரர் யுவராஜ் சிங் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

வெஸ்ட் இண்டீசில், 3வது உலக கோப்பை கிரிக்கெட் தொடர் வரும் 30ம் தேதி துவங்குகிறது. இதில் இந்தியா, ஆஸ்திரேலியா உள்ளிட்ட 12 அணிகள் பங்கேற்கின்றன.

இத்தொடருக்கு தேர்வு செய்யப்பட்டுள்ள இந்திய வீரர் யுவராஜ் சிங், 3வது ஐ.பி.எல்., தொடரில் சோபிக்கவில்லை. இதனால் பஞ்சாப் அணி, படுதோல்வி அடைந்து கடைசி இடம் பிடித்தது.

இது குறித்து யுவராஜ் கூறியதாவது: ஐ.பி.எல்., தொடரில் சோபிக்காதது வருத்தமளிக்கிறது. மணிக்கட்டு பகுதியில் ஏற்பட்ட காயத்திலிருந்து மீண்ட நான், உடனடியாக ஐ.பி.எல்., தொடரில் பங்கேற்றது, நெருக்கடியாக அமைந்தது. இதனால் நூறு சதவீத ஆட்டத்தை வெளிப்படுத்த முடியவில்லை.

தற்போது எனது கவனம் முழுவதும், "டுவென்டி-20' உலக கோப்பை தொடர் மீது திரும்பியுள்ளது. இத்தொடரில் சாதிக்க பயிற்சி மேற்கொண்டு வருகிறேன். "டுவென்டி-20' போட்டிகளில் பீல்டிங் முக்கிய பங்குவகிக்கும் என்பதால், இதற்காக சிறப்பு பயிற்சி மேற்கொண்டு வருகிறேன்.

கடந்த ஆண்டு இங்கிலாந்தில் நடந்த உலக கோப்பை தொடரில் இந்திய அணி, பெரிதளவில் சாதிக்கவில்லை. இம்முறை பேட்டிங், பவுலிங், பீல்டிங் என அனைத்திலும் சிறந்த வீரர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளதால், கோப்பை வெல்ல அதிக வாய்ப்பு உள்ளது.

துவக்க வீரர் சேவக் இல்லாதது, பின்னடைவான விஷயம். இருப்பினும், மாற்றுவீரராக தேர்வு செய்யப்பட்டுள்ள முரளி விஜய், நம்பிக்கை அளிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.
இவ்வாறு யுவராஜ் கூறினார்

0 comments:

Post a Comment