எதுவுமே சரியில்லை: வார்ன் புலம்பல்

சச்சின் கொடுத்த "கேட்ச்' வாய்ப்பை கோட்டை விட்டது, பேட்டிங், பீல்டிங் மற்றும் பவுலிங் என அனைத்திலும் சொதப்பியதே, தோல்விக்கு காரணமாக அமைந்து விட்டது,'' என, ராஜஸ்தான் ராயல்ஸ் அணி கேப்டன் ஷேன் வார்ன் சோகத்துடன் தெரிவித்துள்ளார்.


மூன்றாவது ஐ.பி.எல்., "டுவென்டி-20' தொடரில் நேற்று முன்தினம் நடந்த முக்கிய லீக் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணி, ராஜஸ்தான் அணியை வீழ்த்தி, அரையிறுதிக்கு முன்னேறியது.

12 போட்டிகளின் முடிவில், 12 புள்ளிகள் (6 வெற்றி, 6 தோல்வி) பெற்றுள்ள ராஜஸ்தான் அணி அரையிறுதிக்கு முன்னேறுவதில் சிக்கல் நீடிக்கிறது. அடுத்து வரவுள்ள இரண்டு போட்டிகளிலும் வென்றாக வேண்டிய கட்டாயத்தில் இந்த அணி உள்ளது.

இதுகுறித்து ராஜஸ்தான் கேப்டன் வார்ன் கூறியது: மும்பை அணிக்கு எதிரான போட்டியில், சச்சின் 45 ரன்கள் எடுத்திருந்த போது கொடுத்த "கேட்ச்' வாய்ப்பை தவறவிட்டதால், அவர் 89 ரன்கள் குவித்தார். தவிர, கடைசி நான்கு ஓவரில் 60 ரன்களை விட்டுக்கொடுத்தோம். கடைசி நேரத்தில் இது நடக்கும் என எதிர்பார்த்தது தான்.

ஆனால் 175 ரன்கள் என்ற இலக்கை "சேஸ்' செய்ய எங்கள் அணிக்கு, முதல் ஆறு ஓவர்களில் அதிக தடுமாற்றம் ஏற்பட்டது. இதனால் ஏற்பட்ட குழப்பத்தில் நான்கு விக்கெட்டுகளை, விரைவாக இழந்து விட்டோம். இருப்பினும், கடைசி நேரத்தில் ஆதித்யா டோல், அபிஷேக் ராத் இணைந்து எடுத்த ரன்கள், தோல்வி வித்தியாசத்தை குறைத்தது.

எங்களது மோசமான துவக்கம் மற்றும் ஒரு சில எதிர்பாராத "ரன் அவுட்கள்' போன்றவைகள், தோல்விக்கு காரணமாக அமைந்து விட்டது. மொத்தத்தில் பவுலிங், பேட்டிங் மற்றும் பீல்டிங்கில் சொதப்பியதால் வெற்றி வாய்ப்பை இழந்து விட்டோம். அடுத்த போட்டியில், தவறுகளை சரி செய்து வெற்றி பெறுவோம்.

இவ்வாறு வார்ன் தெரிவித்தார்.

0 comments:

Post a Comment