மீடியா மீது யுவராஜ் பாய்ச்சல்!

உண்மைக்கு புறம்பாக, தவறான தகவல்களை வெளியிடும் மீடியாக்களுக்கு, கண்டனம் தெரிவித்துள்ளார் யுவராஜ்.

கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி சார்பில், ஐ.பி.எல்., போட்டிகளில் விளையாடி வருகிறார் யுவராஜ் சிங். மூன்றாவது ஐ.பி.எல்., தொடரில் இவரது செயல்பாடுகள், அணிக்கு பெரும் ஏமாற்றம் அளித்துள்ளன. இதனால் பஞ்சாப் அணி அரையிறுதி வாய்ப்பை இழந்து விட்டது.

மோசமான பார்ம், பாதுகாப்பு விதிமீறல், கேப்டன் சங்ககராவுடன் மோதல் என அடிக்கடி மீடியாக்களில் யுவராஜ் பற்றிய செய்திகள் வெளியாயின. இதனால் கடும் அதிருப்தியில் உள்ளார் யுவராஜ். இது குறித்து அவர் கூறியது:

மீடியாக்களில் என்னைப் பற்றி தவறான கருத்துக்கள் வெளிவருவது வருத்தம் அளிக்கிறது. எனது தனிப்பட்ட சுதந்திரத்தில் மீடியாக்கள் தலையிடுவது கண்டிக்கத்தக்கது. மீடியாக்கள், போலீஸ் போல தன்னிச்சையாக செயல்பட்டு வருகின்றன.

விளையாட்டு வீரர்களுக்கு காயம் ஏற்படுவது தவிர்க்க முடியாதது. இதன் காரணமாக ஒரு சில போட்டிகளில், சிறப்பாக ஆடி ரன் குவிக்க முடியாமல் போய் விடுகிறது. "பார்ம்' இன்றி தவித்து வரும் சமயத்தில், தங்களால் முயன்ற வரை மீடியாக்கள் குற்றம் சாட்டி வருகின்றன.

ஐ.பி.எல்., தொடரில், நான் மட்டுமா "பார்ட்டிகளில்' பங்கேற்று வருகிறேன். அனைத்து வீரர்களும் "பார்ட்டிகளில்' பங்கேற்கிறார்கள். அவர்களை எல்லாம் விட்டுவிட்டு, என்னை மட்டும் குறி வைத்து செய்திகள் வெளியிடுகின்றனர்.

ஐ.பி.எல்., போட்டிகளில் சிறப்பாக ஆடி ரன் குவித்திருந்தால், என்னைப் பற்றிய பொய்யான செய்திகள் வெளிவந்திருக்காது. விரைவில் "பார்மை' மீட்டு, விமர்சனங்களுக்கு பதிலடி கொடுப்பேன். இவ்வாறு யுவராஜ் கூறினார்.

0 comments:

Post a Comment