இந்திய அணியில் இஷாந்த், கார்த்திக்

இலங்கை அணிக்கு எதிராக அடுத்து நடக்க உள்ள இரண்டு ஒரு நாள் போட்டிக்கான இந்திய அணி நேற்று அறிவிக்கப்பட்டது. இதில் இஷாந்த் சர்மா, தினேஷ் கார்த்திக் மீண்டும் வாய்ப்பு பெற்றுள்ளனர்.

இந்தியா வந்துள்ள இலங்கை அணி 5 ஒரு நாள் போட்டிகளில் பங்கேற்கிறது. முதல் போட்டியில் இந்தியா வென்றது. நாக்பூரில் நடந்த போட்டியில் இலங்கை வெற்றி பெற, தொடர் 1-1 என சமநிலையை எட்டியுள்ளது. மூன்றாவது போட்டி நாளை ஒரிசாவில் உள்ள கட்டாக்கில் நடக்கிறது.

நான்காவது போட்டி வரும் 24ம் தேதி கோல்கட்டாவின் ஈடன் கார்டன் மைதானத்தில் நடக்க உள்ளது.

இவ்விரு போட்டிகளுக்கான இந்திய அணியை தேர்வு செய்வதற்கான கூட்டம் சென்னையில் நேற்று நடந்தது. இதில் தமிழக வீரர் தினேஷ் கார்த்திக் மற்றும் இஷாந்த் சர்மா புதிதாக சேர்க்கப்பட்டனர்.

தடை விதிக்கப்பட்டுள்ள தோனிக்கு பதிலாக விக்கெட் கீப்பராக தினேஷ் கார்த்திக் செயல்படுவார். பன்றிக் காய்ச்சலால் அவதிப்பட்ட ஸ்ரீசாந்த் நீக்கப்பட்டுள்ளார். இவருக்கு பதில் இஷாந்த் சர்மா வாய்ப்பு பெற்றுள்ளார். விரல் காயம் மற்றும் வைரஸ் காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ள யுவராஜ் அணியில் நீடிக்கிறார். அடுத்து வரும் போட்டிகளில் இவர் பங்கேற்க வாய்ப்பு உள்ளது.

இலங்கை அணிக்கு எதிரான மூன்று, நான்காவது போட்டிக்கான இந்திய அணி:

சேவக்(கேப்டன்), காம்பிர், சச்சின், யுவராஜ், தினேஷ் கார்த்திக், சுரேஷ் ரெய்னா, ரவிந்திர ஜடேஜா, ஹர்பஜன், ஜாகிர் கான், நெஹ்ரா, இஷாந்த் சர்மா, விராத் கோஹ்லி, சுதிப் தியாகி, பிரவீண் குமார், பிரக்யான் ஓஜா.

0 comments:

Post a Comment