ஒரு நாள் போட்டிகளில் மாற்றம்

ஒரு நாள் போட்டிகளில் அதிரடி மாற்றங்கள் கொண்டு வரப்பட உள்ளன. தற்போது உள்ள 50 ஓவர்களை 40 ஆக குறைக்க ஐ.சி.சி., ஆலோசித்து வருகிறது.

கிரிக்கெட்டின் புதிய பரிமாணமான "டுவென்டி-20' போட்டிகளின் வருகைக்குப் பின், ஒரு நாள் மற்றும் டெஸ்ட் போட்டிகளுக்கு ரசிகர்கள் மத்தியில் ஆர்வமில்லை. இதனால் புதிய மாற்றங்களை கொண்டு வர வேண்டிய கட்டாயத்தில் சர்வதேச கிரிக்கெட் கவுன்சில்(ஐ.சி.சி.,) உள்ளது.

ஒரு நாள் போட்டிகளின் விறுவிறுப்பை அதிகரிக்கும் நோக்கில் அதிரடி மாற்றங்களை கொண்டுவர ஐ.சி.சி., கிரிக்கெட் கமிட்டி முடிவு செய்துள்ளது. 12 பேர் கொண்ட இக்கமிட்டியின் தலைவராக முன்னாள் வெஸ்ட் இண்டீஸ் வீரர் கிளைவ் லாயிட் உள்ளார்.

ஓவர்கள் குறைப்பு: தற்போது நடைமுறையில் உள்ள 50 ஓவர்களை 40 ஆக குறைக்க ஐ.சி.சி., ஆலோசித்து வருகிறது. இதன் மூலம் 25 ஓவர் முதல் 40 ஓவர் வரை உள்ள மந்த நிலையை மாற்ற முடியும். தவிர, "டுவென்டி-20' போட்டிகளை போல, பேட்டிங் மற்றும் பவுலிங் என இரண்டிற்கும் சாதகமான சூழ்நிலை உருவாகும்.

12 ஓவர்கள்: ஒரு நாள் போட்டிகளில் பவுலர்கள் அதிகபட்சமாக 10 ஓவர் மட்டுமே வீச முடியும். இதனை மாற்றம் செய்து, இரண்டு பவுலர்கள் மட்டும் தலா 12 ஓவர்களை வீச அனுமதி வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

அடுத்த இரண்டு பவுலர்களுக்கு தலா 10 ஓவர்களும், ஐந்தாவது பவுலர் 6 ஓவர் மட்டுமே வீச முடியும். இதன் மூலம் திறமையான பவுலர்களை அணியின் கேப்டன்கள் கூடுதலாக பயன்படுத்திக் கொள்ள முடியும்.

மேலும் 25 ஓவர்களுக்கு ஒரு முறை புதிய பந்தை பயன்படுத்தவும் முடிவு செய்யப்பட்டுள்ளது. ஐ.சி.சி.,கிரிக்கெட் கமிட்டி எடுத்துள்ள இம்முடிவுகள், விரைவில் நடைமுறைப்படுத்தப்பட அதிக வாய்ப்புகள் உள்ளது.

0 comments:

Post a Comment