தமிழருக்கு பெருமை சேர்த்தவர்

மகாராஷ்டிரத்தில் பிறந்த தன்ராஜ் பிள்ளையின் பெற்றோர் தமிழர். அவருடைய தந்தை நாகலிங்கம், தாய் ஆண்டாளம்மாள். பிழைப்புக்காக மகாராஷ்டிரத்தில் நிரந்தரமாக தங்கிவிட்டபடியால் புணே அருகிலுள்ள கிர்கீயில் 1968-ல் பிறந்தார். 

குடும்பத்தில் நான்காவது மகனாக பிறந்தாலும், குழந்தைகள் ஐவருக்கும் அவருடைய தாய் உணவுடன் விளையாட்டையும் ஊட்டி ஊக்குவித்தார்.


இளமை பருவத்தில் வீட்டுக்கு அருகில் இருந்த மைதானத்தில் தனது சகோதரர்கள் மற்றும் நண்பர்களுடன் விளையாடி ஹாக்கியை வளர்த்துக் கொண்டார். இவர் முன்னாள் இந்திய வீரர் முகமது ஷாஹித்தின் ஆட்டத்தை விரும்பியதால், அவரைப் போலவே முன்கள ஆட்டக்காரராக விளங்கினார்.


1980-களில் மும்பைக்கு இடம்பெயர்ந்து மஹிந்திரா மற்றும் மஹிந்திரா அணிக்காக விளையாடினார். இவருடைய சகோதரர் ரமேஷ், இந்திய அணிக்காக பல சர்வதேச போட்டிகளில் பங்கேற்றுள்ளார். அவருடைய தீவிர பயிற்சி காரணமாக 1989ல் முதல் சர்வதேச போட்டிகளில் தன்ராஜ் பிள்ளை பங்கேற்றார்.


1989 டிசம்பர் முதல் 2004 ஆகஸ்ட் வரை, இந்திய அணி சார்பில் 339 சர்வதேச போட்டிகளில் விளையாடியுள்ளார். அந்த சமயத்தில் எண்ணற்ற கோல்களை அடித்துள்ளார்.


நான்கு ஒலிம்பிக் போட்டிகளில் (1992, 1996, 2000, 2004) பங்கேற்று இந்தியாவுக்கு பெருமை சேர்த்துள்ளார். அதேபோல் நான்கு உலகக் கோப்பை போட்டிகள், நான்கு சாம்பியன்ஸ் டிராபி போட்டிகள், நான்கு ஆசியப் போட்டிகளில் விளையாடியுள்ளார். ஆசியக் கோப்பை மற்றும் ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் இவரது தலைமையில் பங்கேற்ற இந்திய அணி கோப்பையை வென்றது.


பாங்காக் ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் அதிக கோல் அடித்த பெருமையை பெற்றுள்ளார். 1994-ல் சிட்னியில் நடந்த உலகக் கோப்பை போட்டியில் உலக லெவன் அணியில் இடம்பெற்ற ஒரு இந்திய வீரர் என்ற பெருமையைப் பெற்றார்.


பல வெளிநாட்டு கிளப்புகளுக்காக விளையாடியுள்ளார். பிரீமியர் ஹாக்கி லீக் போட்டியில் மராத்தா வாரியர்ஸ் அணிக்காக இரண்டு முறை விளையாடியுள்ளார். ராஜீவ் காந்தி கேல் ரத்னா, பத்மஸ்ரீ உள்ளிட்ட உயரிய விருதுகளைப் பெற்றுள்ளார்.  இந்திய ஹாக்கி சம்மேளனத்தின் இடைக்கால கமிட்டியின் உறுப்பினராக இருந்துவருகிறார்

0 comments:

Post a Comment