ஐ.பி.எல்., சீசன் 3 போட்டிகள் : மும்பையில் கோலாகல துவக்கம்

மிகவும் எதிர்பார்க்கப்பட்ட ஐ.பி.எல்.,-3 டுவென்டி-20 கிரிக்கெட் தொடர், மும்பையில் கோலாகலமாக துவங்கியது. மொத்தம் 8 அணிகள் இந்த தொடரில் கலந்து கொள்கின்றனர். மூன்றாவது ஐ.பி.எல்., 'டுவென்டி-20' கிரிக்கெட் தொடர் இந்தியாவில் நடக்கிறது.


இதன் துவக்க விழா, நவி மும்பையில் உள்ள டி.ஒய்.பாட்டீல் மைதானத்தில் இன்று மாலை 6.45 மணிக்கு துவங்கியது. முதலில் 8 அணிகளின் கேப்டன்கள் சேர்ந்து அம்பயர்கள் மற்றும் எதிரணி வீரர்களுக்கு உரிய மரியாதை அளிக்கப்படும் என உறுதி மொழி எடுத்துக் கொண்டனர்.


ஐ.நா., சபையின் சுற்றுச்சூழல் பாதுகாப்பு திட்டத்தின் சிறப்புத் தூதராக நியமிக்கப்பட்டுள்ள சச்சின் டெண்டுல்கர் தலைமையில், சுற்றுச்சூழல் பாதுகாப்பை வலியுறுத்தியும், கிரிக்கெட் உணர்வுடன் நடந்து கொள்வோம் என்று வலியுறுத்தியும் உறுதிமொழி எடுத்துக்கொள்ளப்பட்டது.


பின்னர், பாலிவுட் நட்சத்திரம் தீபிகா படுகோனேவின் நடனம், உள்ளிட்ட கலைநிகழ்ச்சிகள் ஆரம்பமாகின. பிரிட்டனை சேர்ந்த முன்னணி பாடகர் அலி கேம்பல் தனது குழுவினருடன் சேர்ந்து ஆடிப் பாடினார். ஆஸ்திரேலியாவை சேர்ந்த பிஜோர்ன் அகேன் தனது "டேன்சிங் குயின்' பாடலை பாடி ரசிகர்களை மகிழ்வித்தார்.

ஐ.பி.எல்., தொடர் மீண்டும் இந்தியாவில் நடப்பதை குறிக்கும் விதமாக 240 கலைஞர்கள் சேர்ந்து அசோக சக்கரத்தை போல அணிவகுக்க உள்ளனர். பாலிவுட் கவர்ச்சி நாயகி தீபிகா படுகோனே மற்றும் 40 கலைஞர்கள் சேர்ந்து இந்தி பாடல்களுக்கு ஏற்ப நடனம் ஆடி, ரசிகர்களை பரவசத்தில் ஆழ்த்தினர்.


பலத்த பாதுகாப்பு:


பயங்கரவாதிகளின் மிரட்டலை தொடர்ந்து துவக்க விழா மற்றும் முதல் போட்டி நடக்கும் டி.ஒய்.பாட்டீல் மைதானத்துக்கு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. 2 ஆயிரம் போலீசார் தவிர, ஆயிரம் தனியார் பாதுகாப்பு வீரர்கள் கண்காணிப்பு பணியில் ஈடுபட உள்ளனர். தண்ணீர் பாட்டில், தீப்பெட்டி, கூர்மையான மற்றும் எலக்ட்ரானிக் பொருட்கள், பெரிய "பேக்' போன்றவற்றை மைதானத்துக்குள் எடுத்து வர ரசிகர்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.



கங்குலி-கில்கிறிஸ்ட் அணிகள் மோதல்:


துவக்க விழா முடிந்ததும், இத்தொடரின் முதல் மோதலில் நடப்பு சாம்பியனான டெக்கான் சார்ஜர்ஸ் அணி, கடந்த முறை கடைசி இடம் பெற்ற கோல்கட்டா நைட் ரைடர்ஸ் அணியை சந்திக்கிறது. இரு அணிகளிலும் முன்னணி வெளிநாட்டு வீரர்கள் இடம் பெற முடியாதது பின்னடைவான விஷயம். கங்குலி மீண்டும் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளதால் கோல்கட்டா அணி உற்சாகமாக காணப்படுகிறது.


ஆனாலும் பிரண்டன் மெக்கலம்(நியூசி.,), கிறிஸ் கெய்ல்(வெ.இ.,), டேவிட் ஹசி(ஆஸி.,), ஷேன் பாண்ட்(நியூசி.,) போன்றவர்கள் பங்கேற்க முடியாதது ஏமாற்றமே. இவர்கள் தற்போது, தங்களது நாட்டு அணிக்காக சர்வதேச போட்டிகளில் பங்கேற்று வருகின்றனர். அஜித் அகார்கர் காயத்தால் அவதிப்படுகிறார். இதனால் கோல்கட்டா அணி இலங்கையின் "சுழல் மாயாவி' மெண்டிசை தான் அதிகம் சார்ந்துள்ளது.



டெக்கான் அணியின் பலம் கேப்டன் கில்கிறிஸ்ட் தான். கிப்ஸ், வாஸ், சைமண்ட்ஸ் போன்ற அனுபவ வீரர்கள் உள்ளனர். ஆர்.பி.சிங், பிரக்யான் ஓஜா இருப்பதால் பந்துவீச்சும் வலுவாக இருக்கிறது. கடந்த 2008ல் நடந்த முதலாவது தொடரில் கோல்கட்டா அணி, டெக்கான் அணியை இரு முறையும் வீழ்த்தியது.


இதற்கு பதிலடியாக 2009ல் நடந்த இரண்டாவது தொடரில் டெக்கான் அணி இரு போட்டிகளிலும் கோல்கட்டாவை வீழ்த்தியது. இம்முறை முதல் வெற்றியை பெற இரு அணிகளுமே கடுமையாக போராடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

0 comments:

Post a Comment