மவுனம் கலைப்பாரா சச்சின்


ஓய்வு உள்ளிட்ட எதிர்கால திட்டம் குறித்து சச்சின் விரைவில் முடிவு எடுக்க வேண்டும்,'' என, முன்னாள் கேப்டன் கபில்தேவ் தெரிவித்தார்.

இந்திய அணியின் "மாஸ்டர் பேட்ஸ்மேன்' சச்சின், 39. சதத்தில் சதம் உள்ளிட்ட பல்வேறு சாதனைகள் படைத்த இவர், சமீபகாலமாக மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார். இவரது "பார்ம்' குறித்து முன்னாள் வீரர்கள் சிலர் விமர்ச்சனம் செய்து வருகின்றனர்.

முன்னாள் இந்திய கேப்டன் கபில்தேவ் கூறியது: சச்சினின் சமீபத்திய "பார்ம்' கவலை அளிக்கிறது. இதனால் இவர், நிறைய விமர்சனங்களை சந்திக்க வேண்டியுள்ளது. இதற்கு தீர்வு காண இரண்டு வழிகள் உள்ளன. 

ஓய்வு உள்ளிட்ட எதிர்கால திட்டம் குறித்து இவரிடம், தேர்வுக்குழு உறுப்பினர்கள் பேச முன்வர வேண்டும் அல்லது சச்சின் மவுனத்தை கலைக்க வேண்டும். எதிர்கால திட்டம் குறித்து சச்சின் எதுவும் வெளிப்படையாக தெரிவிக்காததால், தேர்வுக் குழுவினரும் அமைதியாக உள்ளனர். சச்சினிடம் உள்ள குறைகளை நேரடியாக தெரிவிக்க வேண்டும்.

மும்பை டெஸ்டில், இந்திய அணி தோல்வி அடைந்தது வருத்தம் அளிக்கிறது. இது மோசமான தோல்வியாகவே கருதப்படும். சொந்த மண்ணில் திறமையான வீரர்களை கொண்டு வெற்றி பெற முடியாதது ஏமாற்றமான விஷயம். 

சமீபத்திய டெஸ்ட் போட்டிகளில் கேப்டன் தோனியின் செயல்பாடு மோசமாக உள்ளது. ஒரு அணியின் வெற்றியில் கேப்டனின் பங்களிப்பு முக்கியமாக கருதப்படுவது போல, தோல்விக்கும் அவர் தான் பொறுப்பேற்க வேண்டும். 

விரைவில் இவர், கேப்டன் பதவியில் இருந்து விலகி, பேட்டிங் மற்றும் கீப்பர் பணியில் கவனம் செலுத்தினால் நல்லது.

மும்பை டெஸ்டில் செய்த தவறுகளை திருத்திக் கொண்டு, மீதமுள்ள இரண்டு டெஸ்டில் முழுத்திறமையை வெளிப்படுத்தி இந்திய வீரர்கள் சாதிப்பார்கள் என நம்புகிறேன்.

இவ்வாறு கபில்தேவ் கூறினார்.

0 comments:

Post a Comment