டிராவிட்டுடன் என்னை ஒப்பீடுவது தவறு - புஜாரா


இந்திய டெஸ்ட் அணியில் விளையாடும் முன்னணி பேட்ஸ்மேன்களில் ஒருவர் புஜாரா. இங்கிலாந்துக்கு எதிராக மும்பையில் நடைபெற்று வரும் 2-வது டெஸ்டில் அவர் சிறப்பாக விளையாடி சதம் (135 ரன்) அடித்தார். 

ஏற்கனவே அகமதாபாத்தில் நடந்த முதல் டெஸ்டில் புஜாரா இரட்டை சதம் (206 ரன்) அடித்து இருந்தார். 7 டெஸ்டில் விளையாடிய அவர் 3 செஞ்சூரி அடித்து உள்ளார். தூண் என்று அழைக்கப்படும் ராகுல் டிராவிட் ஓய்வு பெற்ற பிறகு அவரது இடமான 3-வது வரிசையில்தான் புஜாரா ஆடுகிறார். 

டிராவிட் ஓய்வுக்கு பிறகே அவர் இந்த 3 செஞ்சூரியையும் அடித்துள்ளார். புஜாரா நிலைத்து நின்று ஆடுவதால் அவரை டிராவிட்டுடன் ஏற்கனவே ஒப்பிடப்பட்டு வந்தனர். புஜாராவை இப்போதே டிராவிட்டுடன் ஓப்பீட வேண்டாம் என்று முன்னாள் கேப்டன் கபில்தேவ் கடந்த வாரம் கருத்து தெரிவித்து இருந்தார். 

இந்த நிலையில் டிராவிட்டுடன் என்னை ஒப்பீடுவது தவறு என்று புஜாரா கூறியுள்ளார். இதுதொடர்பாக அவர் கூறியதாவது:-

டிராவிட் டெஸ்ட் மற்றும் ஒருநாள் போட்டிகளில் 10 ஆயிரம் ரன்களுக்கு மேல் எடுத்துள்ளார். நான் இப்போது தான் ஆட்டத்தை தொடங்கியுள்ளேன். இதனால் அவருடன் என்னை ஒப்பிடுவது தவறானது. கூடுதல் நெருக்கடியை நான் விரும்பவில்லை. நீண்டகாலமாக விளையாடும் திட்டம் எதுவும் என்னிடம் இல்லை. 

அகமதாபாத்தில் அடித்த இரட்டை சதத்தைவிட மும்பையில் அடித்த சதமே சிறந்தது. இரட்டை சதத்தைவிட இது மிகுந்த திருப்தி அளிக்கிறது. இக்கட்டான நிலையில் இந்த சதத்தை அடித்துள்ளேன். எனது ஆட்டம் மூலம் இந்திய அணி ரன் சேர்க்க முடிந்தது. இந்த ஆடுகளத்தில் பேட்டிங் செய்வது கடினமாக இருந்தது. இதனால் இக்கட்டான நிலையில் அடித்த இந்த சதமே திருப்தி அளிக்கிறது. 

இவ்வாறு புஜாரா கூறியுள்ளார்.

0 comments:

Post a Comment