புஜாரா அசத்தல் சதம் - 100வது டெஸ்டில் சேவக் ஏமாற்றம்


இங்கிலாந்து அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்டில் காம்பிர், சேவக்,சச்சின், போன்ற துவக்க வீரர்கள் சொதப்பினர். புஜாரா சதம் அடித்து கைகொடுக்க இந்திய அணி சரிவில் இருந்து மீண்டது.

இந்தியா, இங்கிலாந்து அணிகள் நான்கு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்கின்றன. ஆமதாபாத்தில் நடந்த முதல் டெஸ்டில் இந்திய அணி 9 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. 

இரு அணிகள் மோதும் இரண்டாவது டெஸ்ட் மும்பையில் இன்று துவங்கியது. இதில் "டாஸ் வென்ற இந்திய கேப்டன் தோனி "பேட்டிங் தேர்வு செய்தார். 

இந்திய அணியில் காயம் காரணமாக உமேஷ் யாதவ் பங்கேற்கவில்லை. இதையடுத்து மூன்றாவது "சுழற்பந்து வீச்சாளராக நீண்ட இடைவேளைக்கு பின் ஹர்பஜன் சிங் இடம் பிடித்தார். 

இங்கிலாந்து அணியில் சொந்த காரணங்களுக்காக பெல் தாயகம் திரும்பியதால் ஜானி பேர்ஸ்டோவ் இடம் பிடித்தார். பிரஸ்னனுக்கு பதிலாக "சுழற்பந்து வீச்சாளர் மான்டி பனேசர் வாய்ப்பு பெற்றார்.


காம்பிர் ஏமாற்றம்:

முதல் இன்னிங்சை துவங்கிய இந்திய அணிக்கு சேவக், காம்பிர் ஜோடி துவக்கம் கொடுத்தது. ஆண்டர்சன் வீசிய போட்டியின் முதல் பந்தில் பவுண்டரி அடித்த காம்பிர் (4), அடுத்த பந்தில் அவுட்டானார். 

100வது டெஸ்டில் சதம் அடிக்கும் கனவுடன் களமிறங்கிய சேவக் (30) பனேசர் "சுழலில் போல்டானார். பின் வந்த சச்சினும் (8) பனேசரிடம் சிக்கினார்.

கோஹ்லி (19) நிலைக்கவில்லை. யுவராஜ் "டக் அவுட்டானார். ஒருபுறம் விக்கெட் சரிந்தாலும் மறுபுறம் தூணாக நின்ற புஜாரா டெஸ்ட் அரங்கில் தனது 3வது சதம் கடந்தார். தோனி(29) அதிக நேரம் தாக்குபிடிக்கவில்லை. 

பின் புஜாராவிற்கு நல்ல "கம்பெனி கொடுத்த அஷ்வின், டெஸ்ட் அரங்கில் 2வது அரைசதம் கடந்தார். முதல் நாள் ஆட்ட நேர முடிவில்  இந்திய அணி முதல் இன்னிங்சில் 6 விக்கெட்டுக்கு 266 ரன்கள் எடுத்திருந்தது. புஜாரா(114), அஷ்வின் (60) அவுட்டாகாமல் இருந்தனர்.

0 comments:

Post a Comment