அசாருதீன் மீதான தடை நீக்கப்படுமா?


சூதாட்டப் புகாரில் சிக்கிய இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் அசாருதீனுக்கு, கடந்த 2000-ம் ஆண்டு இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் வாழ்நாள் தடை விதித்தது.

இதனை எதிர்த்து அசாருதீன் ஆந்திர மாநில ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். இவ்வழக்கு இன்று விசாரணைக்கு வந்தபோது அசாருதீனுக்கு வாழ்நாள் தடை விதித்தது சட்டவிரோதம் என்றும், இந்த தடை விலக்கப்பட வேண்டும் என்றும் கோர்ட் தெரிவித்தது.

இதனால் அசாருதீன் இப்போது நிம்மதி அடைந்தபோதும், ஏற்கனேவே பட்ட காயத்தில் இருந்து இன்னமும் மீளவில்லை என்றே தெரிகிறது. 

இதுதொடர்பாக தனது இல்லத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த அசாருதீன், ‘கடந்த 11 ஆண்டுகளாக இந்த வழக்கிற்காக போராடியாதால் மிகவும் வேதனை அடைந்துள்ளேன். 

இருப்பினும் இறுதியாக வந்த தீர்ப்பில் எனக்கு விதிக்கப்பட்ட தடையை நீக்க வேண்டும் என்று கூறியதால் மகிழ்ச்சி அடைந்துள்ளேன்.

எல்லாம் விதிப்படி நடந்திருக்கிறது. நடந்தது நடந்துவிட்டது. இதற்காக யாரையும் குற்றம் சொல்ல விரும்பவில்லை. யார் மீதும் புகார் அளிக்க மாட்டேன்’ என்றார்.

இதுபற்றி பி.சி.சி.ஐ. மூத்த அதிகாரி ராஜீவ் சுக்லாவிடம் நிருபர்கள் கேட்டபோது, ‘கோர்ட் தீர்ப்பின் முழு விவரங்களையும் எங்கள் சட்டக்குழு ஆய்வு செய்யும். அதன்பின்னர் உரிய நடவடிக்கை எடுக்கப்படும்’ என்றார்.

0 comments:

Post a Comment