கிரிக்கெட்டின் "காந்தி'

கிரிக்கெட்டின் காந்தி என்று அழைக்கப்படுபவர் மேற்கிந்தியத் தீவைச் சேர்ந்த கிரிக்கெட் வீரர் சர் ஃபிராங்க் மார்டைமர் மேக்லின் வோரல்.

1924-ல் பார்படோஸ் தீவிலுள்ள பிரிட்ஜ்டவுனில் பிறந்தார் ஃபிராங்க் வோரல். மேற்கிந்தியத் தீவு மக்களுக்குப் பிடித்தமான விளையாட்டு வோரலுக்கும் பிடித்ததில் ஆச்சர்யமில்லைதான்.

ஆனால் இவர் கிரிக்கெட் விளையாடியது 5 வயது முதலே என்பது குறிப்பிடத்தக்கது. ஆனாலும் தேசிய அணியில் அவர் தனது 23-வது வயதில்தான் இடம்பிடித்தார்.

இங்கிலாந்துக்கு எதிராக 1947-48-ல் போர்ட் ஆஃப் ஸ்பெயினில் நடைபெற்ற போட்டியில் அறிமுகமானார். அபாரமாக விளையாடியபோதும் சதத்துக்கு அருகில் வந்து ஆட்டமிழந்தார். ஆனால் அதே தொடரின் 2-வது டெஸ்டில் சிறப்பாக விளையாடி 131 ரன்கள் குவித்தார்.

மொத்தம் 51 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 3,860 ரன்களைக் குவித்துள்ளார். சராசரி 49.48. இதில் 9 சதங்களும் அடங்கும். அதிகபட்சம் 261. மேலும் 69 விக்கெட்டுகளையும் அவர் கைப்பற்றியுள்ளார். சிறப்பான பந்துவீச்சு 7வி-70.

நடுவரிசை ஆட்டக்காரரான ஃபிராங்க் வோரலின் ஆட்டத்திறன் சிறப்பானது. ஸ்டைலிஷ் பேட்ஸ்மேன் என்ற அனைத்து வர்ணனையாளர்களாலும் புகழப்படுபவர் அவர். தனது இடதுகை மிக வேகப்பந்துவீச்சால் எதிரணி வீரர்களை மிரட்டி வந்தார்.

1951-ல் விஸ்டன் சிறத்த கிரிக்கெட் வீரராகத் தேர்வு செய்யப்பட்டார். கிரிக்கெட் சேவைக்காக அவருக்கு 1964-ல் சர் பட்டம் வழங்கப்பட்டது. மேலும் மேற்கிந்தியத் தீவு அணிக்கு முதன்முதலாக கேப்டன் பொறுப்பேற்ற கருப்பர் என்ற பெருமையையும் வோரல் பெற்றார்.

1960 முதல் 1963 வரை அவர் 15 டெஸ்ட் போட்டிகளுக்கு கேப்டன் பொறுப்பை ஏற்றிருந்தார். அப்போது அந்த நாட்டிலுள்ள பல்வேறு தீவுகளைச் சேர்ந்த வீரர்களை ஒருங்கிணைந்து அணிக்கு வெற்றி தேடித் தந்தார்.

1965-ல் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற்றார். 1967-ல் நோய்வாய்ப்பட்டு அவர் இறந்தார். இறப்பதற்கு சில மாதங்களுக்கு முன்புதான் மேற்கிந்தியத் தீவு பல்கலைக்கழக மானியக் குழுவில் கெüரவ உறுப்பினராக இடம்பெற்று இந்தியாவுக்கு வந்து சென்றார்.

அவரது நினைவாக மேற்கிந்தியத் தீவுகள்-ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான டெஸ்ட் தொடர்களில் ஃபிராங்க் வோரல் கோப்பை வழங்கப்படுகிறது

0 comments:

Post a Comment