சேவக்குடன் என்னை ஒப்பிடுவதில்லை: காம்பிர்

சேவக் போல அதிரடியாக விளையாட முயற்சிக்காமல், தனது சொந்த "ஸ்டைலில்' பேட் செய்வதாக இந்திய வீரர் காம்பிர் தெரிவித்துள்ளார்

இந்திய அணியின் "சூப்பர்' துவக்க வீரர் கவுதம் காம்பிர் (28). டெஸ்ட், ஒருநாள் போட்டிகளின் போது இக்கட்டான நிலையில் இருக்கும் அணியை தனது சிறப்பான பேட்டிங்கினால் மீட்பதில் வல்லவர். கடந்த ஆண்டின் ஐ.சி.சி., சிறந்த டெஸ்ட் வீரர் விருதை வென்ற இவர் தனது பேட்டிங் குறித்து கூறியது:

பேட்டிங்கில் எப்போதும் நான் நானாகவே இருக்க முயற்சிக்கிறேன். என்னைப்பொறுத்த வரையில் எனது திறமை எனக்குத் தெரியும். அதற்கு தகுந்தாற்போல் எனது "ஸ்டைலில்', வழக்கமான ஆட்டத்தை வெளிப்படுத்தவே விரும்புகிறேன். எனது சக்திக்கு மீறிய ஆட்டத்தை, முடியாத செயல்களை நினைத்துப் பார்ப்பதில்லை. என்னால் என்ன முடியுமோ அதை மட்டும் செய்து வருகிறேன்.


கடினமான பணி: மைதானத்தில் எந்த பகுதியில் அதிக ரன்களை என்னால் எடுக்க முடியும் என எனக்குத் தெரியும். அதேபோல சேவக்கும் எப்படி விளையாடுவார் என்பதும் தெரியும். அவருடன் என்னை ஒப்பிட்டுப் பார்ப்பதில்லை. சச்சின் இருப்பதால் ஒருநாள் போட்டிகளில் நான் 3வதாக களமிறங்குகிறேன். இது கடினமான வேலை.


ஒருவேளை முதல் விக்கெட் விரைவில் அவுட்டாகும் போது, அணியை மீட்கவேண்டும். "பவர்பிளே'யிலும் (15 ஓவர்கள்) ஆதிக்கம் செலுத்தி, தொடர்ந்து ஆட்டத்தை நம் பக்கம் கொண்டு செல்ல வேண்டும். இப்படி அனைத்தையும் செய்யக்கூடிய திறமை இருந்தால் தான் 3வதாக களமிறங்க முடியும்.


வீணடிக்க கூடாது: அதேநேரம் துவக்க வீரராக இறங்கினால் எவ்வித பயமும் இன்றி துணிச்சலாக அடித்து விளையாடலாம். ஏனெனில் அடுத்து வரும் வீரர்கள் பொறுப்பெடுத்துக் கொள்வார்கள். ஆனால் 3வதாக களமிறங்கும் போது நேரத்தையும், பந்துகளையும் வீணடிக்காமல், நல்ல பார்ட்னர்ஷிப்பையும் உருவாக்க வேண்டும்.

கடந்த காலங்களில் அடித்து விளையாட முயற்சி செய்தேன். ஆனால் இப்போது சிறந்த போராட்டத்தை வெளிப்படுத்தி அணியின் வெற்றிக்காக பாடுபடுகிறேன்.

இவ்வாறு காம்பிர் கூறினார்.

0 comments:

Post a Comment