தோனிக்கு பதில் கோஹ்லி - கேப்டனை மாற்ற நேரம் வந்தாச்சு


தோனிக்குப்பதில் கேப்டன் பதவியில் விராத் கோஹ்லியை அமர்த்த நேரம் வந்துவிட்டது,'' என, கவாஸ்கர் தெரிவித்தார்.

டெஸ்ட் அரங்கில் தோனி தலைமையில் இந்திய அணி தொடர்ந்து தோல்வியை சந்திக்கிறது. இங்கிலாந்து, ஆஸ்திரேலிய மண்ணில் 8 போட்டிகளில் தோற்றது. 

தற்போது இந்திய மண்ணிலும் இங்கிலாந்திடம் தொடரை இழந்துள்ளது. இதையடுத்து கேப்டன் பதவியில் இருந்து தோனியை நீக்க வேண்டும் என்ற கோரிக்கை வலுத்து வருகிறது. நாக்பூர் டெஸ்டில் சதம் அடித்து அசத்திய இளம் விராத் கோஹ்லி வசம் கேப்டன் பதவியை ஒப்படைக்க வேண்டும் என வலியுறுத்தப்படுகிறது.

இது குறித்து இந்திய கிரிக்கெட் ஜாம்பவான் கவாஸ்கர் கூறியது: 

நாக்பூர் டெஸ்டின், நான்காவது நாள் வரை, தோனிக்கு மாற்று வீரர் யாரும் இல்லை என்று தான் கூறினேன். ஆனால், கோஹ்லி சதம் அடித்து பின், இவரிடம் உள்ள திறமை வெளிப்பட்டுள்ளது. 

என்னைப் பொறுத்தவரையில், இவர் கேப்டன் பதவிக்கு தயாராகிவிட்டார். இங்கிலாந்து அணி சிறப்பாக "பேட்டிங்' செய்தது. நமது பவுலர்கள் திறமையில்லாமல் இருந்தனர். தவிர, பேட்ஸ்மேன்களும் எதிர்பார்த்த அளவிற்கு செயல்படவில்லை. 

சச்சின் ஓய்வு:

நம்மை விட, இங்கிலாந்து அணியினர் சிறப்பாக விளையாடுவார்கள் என நான் சிந்தித்து பார்க்கவில்லை. ஆமதாபாத் டெஸ்டில் தோற்றவுடன், அவர்கள் நம்பிக்கை இழக்கவில்லை. அதிக உழைப்புடன் வெற்றி பெற்றுள்ளனர். எந்தவொரு வீரரும் எந்தளவிற்கு, விளையாட்டை உற்சாகத்துடன் விளையாடுகிறார்கள் என்பது முக்கியம். 

"பீல்டிங்' போன்றவற்றில் எப்போது உற்சாகம் குறைகிறதோ, அப்போது விலகிவிட வேண்டும். இது எப்போது, நடக்கும் என்பது சச்சினுக்குத்தான் தெரியும். இவருக்கு இத்தொடர் சிறப்பாக அமையவில்லை. ஆஸ்திரேலியா தொடருக்கு முன், இவர் எதிர்காலம் பற்றி முடிவெடுப்பார் என நினைக்கிறேன். 

இவ்வாறு கவாஸ்கர் கூறினார்.

 நீக்கலாம்:

முன்னாள் வீரர் ஸ்ரீகாந்த் கூறுகையில்,""டெஸ்ட் கேப்டன் பதவியில் தோனி நீடிக்கக்கூடாது. நான் தேர்வுக்குழுவின் தலைவராக இருந்தால், இவரை விக்கெட் கீப்பராக, பேட்ஸ்மேனாக தேர்வு செய்வேன். 

ஏனெனில் இவரின் பங்களிப்பு அணிக்கு தேவை. ஆனால், கேப்டன் பதவி இல்லாமல் இருந்தால், அணிக்கு இன்னும் அதிக பங்களிப்பை கொடுப்பார். ஓய்வு குறித்து தேர்வாளர்கள் சச்சினிடம் பேச வேண்டும்,'' என்றார்.

0 comments:

Post a Comment