இந்தியாவில் ஒரு தினத் தொடர்: உலகக் கோப்பைக்கான முன்னோட்டம்

தற்போதைய தொடர் 2011 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டிக்கான முன்னோட்டம் என ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் ரிக்கி பாண்டிங் தெரிவித்தார்.

இந்தியாவுடன் ஆஸ்திரேலிய அணி 7 ஆட்டங்கள் கொண்ட ஒரு தினத் தொடரில் பங்கேற்பதற்காக இந்தியா வந்துள்ளது.

இந்நிலையில் மும்பையில் செய்தியாளர்களிடம் பாண்டிங் வியாழக்கிழமை கூறியதாவது:

இந்தத் தொடர் எங்கள் அணிக்கு மிக முக்கியமானது. உலகக் கோப்பை போட்டி இந்தியா, இலங்கை, வங்கதேசத்தில் நடைபெற உள்ளது.

இந்நிலையில், இந்தத் தொடர் இந்தியாவைப் பற்றி அறிய இளம் வீரர்களுக்கு உதவிகரமாக இருக்கும்.

இத் தொடரில் எந்த அளவுக்கு கற்றுக் கொள்ள முடியுமோ, அந்த அளவுக்கு இளம் வீரர்கள் கற்றுக் கொள்ள வேண்டும். இந்த வாய்ப்பை நன்றாகப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.

ஆல்ரவுண்டர் ஷேன் வாட்சன் அணிக்கு பலம் சேர்க்கும் வகையில் முன்னேற்றம் கண்டுள்ளார். சாம்பியன்ஸ் டிராபி அரை இறுதி மற்றும் இறுதி ஆட்டங்களில் சதம் அடித்து அணிக்கு வெற்றி தேடித் தந்துள்ளார்.

இங்கிலாந்தில் ஆஷஸ் தொடரிலும் அவர் சிறப்பாகப் பங்காற்றினார். தென் ஆப்பிரிக்காவின் ஜாக்ஸ் காலிஸ், இங்கிலாந்தின் ஆன்ட்ரூ ஃபிளின்டாஃப் ஆகியோர் அந்தந்த அணிகளுக்கு தூணாக விளங்குவதைப் போல வாட்சனும் உருவாகி வருகிறார் என்றார்

0 comments:

Post a Comment