கங்குலி தான் சிறந்த கேப்டன்

ஐ.பி.எல்., கோல்கட்டா நைட்ரைடர்ஸ் அணிக்கு கேப்டனாகும் தகுதி கங்குலியிடம் நிறைய உள்ளது,'' என அந்த அணியின் வெளிநாட்டு வீரர்கள் புகழாரம் சூட்டியுள்ளனர்.

இந்தியன் பிரிமியர் லீக் (ஐ.பி.எல்.,) அமைப்பு ஆண்டுதோரும் "டுவென்டி-20' தொடரை நடத்துகிறது. இதில் சென்னை சூப்பர் கிங்ஸ் உள்ளிட்ட எட்டு அணிகள் பங்கேற்கின்றன. பாலிவுட் நடிகர் ஷாருக்கான், கோல்கட்டா நைட்ரைடர்ஸ் அணியின் உரிமையாளராக உள்ளார்.

கடந்த 2008ல் நடந்த முதலாவது ஐ.பி.எல்., தொடரில் கோல்கட்டா அணிக்கு, கங்குலி கேப்டனாக இருந்தார். சமீபத்தில் தென் ஆப்ரிக்காவில் நடந்த இரண்டாவது ஐ.பி.எல்., தொடரில் நியூசிலாந்தின் பிரண்டன் மெக்கலம் கேப்டனாக நியமிக்கப்பட்டார்.

இத்தொடரில் கோல்கட்டா அணி கடைசி இடம் பிடித்து ஏமாற்றியதை அடுத்து, கேப்டன் மற்றும் பயிற்சியாளரை மாற்றியது. புதிய கேப்டனை விரைவில் அறிவிக்கப்போவதாக கோல்கட்டா அணி நிர்வாகம் தெரிவித்தது.

அடுத்த ஆண்டு நடக்கவுள்ள மூன்றாவது ஐ.பி.எல்., தொடருக்கு, மீண்டும் கங்குலி கேப்டனாகும் வாய்ப்பு பிரகாசமாக உள்ளது.

இதுகுறித்து கோல்கட்டா அணியின் மோர்னே வான் விக் (தென் ஆப்ரிக்கா), பிராட் ஹாட்ஜ் (ஆஸ்திரேலியா) கூறியதாவது: கோல்கட்டா அணிக்கு கேப்டனாகும் தகுதி கங்குலியிடம் நிறைய உள்ளது.

எனவே, அடுத்து வரவிருக்கும் ஐ.பி.எல்., தொடரில் கங்குலி தலைமையில் விளையாட ஆர்வமாக இருக்கிறோம். இவர், இந்திய அணியின் கேப்டனாக இருந்ததால், கேப்டன் பொறுப்பில் போதிய அனுபவம் உள்ளது.

ஐ.பி.எல்., போட்டிகள் இந்தியாவில் நடக்கும் என்பதால், இங்குள்ள மைதானங்களின் தன்மை இவருக்கு நன்கு தெரியும். தவிர, உள்ளூர் வீரர்களையும் இவருக்கு நன்றாக தெரியும்.

முன்னாள் பாகிஸ்தான் கேப்டன் வாசிம் அக்ரம், கோல்கட்டா அணியின் பவுலிங் ஆலோசகராக நியமிக்கப்பட்டால், அணியின் வேகப்பந்துவீச்சு கூடுதல் பலம் பெறும். கோல்கட்டா அணியில் கங்குலி, அக்ரம் இணைந்து செயல்படும் பட்சத்தில், இவர்களது அனுபவம் இனிவரும் தொடரில் கோல்கட்டா அணியை வெற்றிப்பாதையில் கொண்டு செல்லும். ஆனால், இதுகுறித்த முடிவு அணி நிர்வாகம்தான் முடிவு செய்ய வேண்டும்.

இரண்டாவது ஐ.பி.எல்., தொடரின் துவக்கத்தில் அடுத்தடுத்து கண்ட தோல்வி, அரையிறுதிக்கு முன்னேறும் வாய்ப்பை தடுத்தது. புக்கானனின் "கேப்டன் பார்முலா' கோல்கட்டா அணிக்கு சாதகமாக அமையவில்லை.

இவ்வாறு வான் விக், ஹாட்ஜ் கூறினர்

0 comments:

Post a Comment