இந்திய அணியின் அடுத்த "தாதா'

முன்னதாக, இந்திய அணியின் அதிரடி பேட்ஸ்மேன் சேவக்கை, அடுத்த சச்சின் என பாராட்டினர். இதேபோல, தற்போது "டுவென்டி-20' போட்டியில் அசத்திக் கொண்டிருக்கும் இந்திய வீரர் சுரேஷ் ரெய்னாவை, அடுத்த சவுரவ் கங்குலி என, முன்னாள் பாகிஸ்தான் கேப்டன் வாசிம் அக்ரம் புகழாரம் சூட்டியுள்ளார்.


சமீபத்தில் இந்தியாவில் நடந்த மூன்றாவது ஐ.பி.எல்., "டுவென்டி-20' தொடரில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணி கோப்பை வென்று அசத்தியது. இதற்கு இளம் வீரர் சுரேஷ் ரெய்னாவின் பொறுப்பான பேட்டிங் முக்கிய காரணமாக கூறப்படுகிறது.


இதேபோல, தற்போது வெஸ்ட் இண்டீசில் நடக்கும், மூன்றாவது "டுவென்டி-20' உலக கோப்பை கிரிக்கெட் தொடரில் இந்திய அணி, "சூப்பர்-8' சுற்றுக்கு முதல் அணியாக முன்னேறியது. இதில் தென் ஆப்ரிக்கா அணிக்கு எதிரான லீக் போட்டியில், இந்தியாவின் சுரேஷ் ரெய்னா, அதிரடி சதம் கடந்து அசத்தினார்.


இதன்மூலம், சர்வதேச "டுவென்டி-20' அரங்கில் சதம் கடந்த முதலாவது இந்தியர் என்ற புதிய சாதனை படைத்தார். தவிர, இம்மைல் கல்லை எட்டிய மூன்றாவது சர்வதேச வீரர் என்ற பெருமை பெற்றார்.


ரெய்னாவின் "பார்ம்' குறித்து, முன்னாள் பாகிஸ்தான் கேப்டன் வாசிம் அக்ரம் கூறியதாவது: உலகின் தலைசிறந்த இளம் பேட்ஸ்மேனாக, இந்தியாவின் சுரேஷ் ரெய்னாவை கூறலாம். ஏனெனில், சமீபத்தில் நடந்த ஐ.பி.எல்., தொடரில் அசத்திய இவர், வெஸ்ட் இண்டீசில் நடக்கும் "டுவென்டி-20' உலக கோப்பை தொடரிலும் சாதித்து வருகிறார்.


இவரது "பார்ம்' இந்திய அணியின் வெற்றிக் முக்கிய பங்குவகிப்பது சிறப்பம்சம். இதன்மூலம் இவரை இந்திய அணியின் அடுத்த சவுரவ் கங்குலி என்று கூறலாம்.


இருப்பினும் ரெய்னா, தற்போது ஒருநாள் மற்றும் "டுவென்டி-20' போட்டிகளில் மட்டும் விளையாடி வருகிறார். இவரது அபார ஆட்டம் டெஸ்ட் அரங்கிலும் தொடரும் பட்சத்தில் இவரை, அடுத்த "தாதா' என்று உறுதியாக கூறலாம். தவிர இவரை, இந்திய அணிக்கு கிடைத்த மதிப்பிட முடியாத "பொக்கிஷம்' என்று கூறினால் மிகையாகாது.

இவ்வாறு வாசிம் அக்ரம் கூறினார்.

0 comments:

Post a Comment