ஓய்வு முடிவு சச்சினின் கையில்


இந்திய கிரிக்கெட்டுக்கு மகத்தான சேவை செய்துள்ளார் சச்சின். அவரை ஓய்வு பெறும்படி யாரும் சொல்ல முடியாது. அவர் நினைக்கும் போது, தனது சொந்த முடிவின்படி விடைபெறுவார்,'' என, இந்தியன் பிரிமியர் லீக் (ஐ.பி.எல்.,) தலைவர் ராஜிவ் சுக்லா தெரிவித்தார்.

இந்திய அணியின் "மாஸ்டர் பேட்ஸ்மேன்' சச்சின், 39. இவர், 198 டெஸ்டில் 15,837 ரன்கள், 463 ஒரு நாள் போட்டிகளில் 18,426 ரன்கள் குவித்துள்ளார். தவிர, சதத்தில் சதம் கண்டது உள்ளிட்ட ஏராளமான சாதனைகளுக்கு சொந்தக்காரர். 

ஒரு நாள் போட்டியிலிருந்து விடைபெற்ற இவர், ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் பெரிதாக சோபிக்கவில்லை. இதையடுத்து டெஸ்ட் அரங்கில் இருந்து விரைவில் ஓய்வு பெறுவார் என கூறப்படுகிறது.
இது குறித்து ராஜிவ் சுக்லா கூறியது: 

இந்திய அணிக்கு சச்சின் அதிக பங்களிப்பை கொடுத்துள்ளார். எப்போது, விடைபெற வேண்டும் என்ற எண்ணம் தோன்றுகிறதோ, அப்போது அவர் செல்லலாம். உலக கிரிக்கெட் அரங்கில், இவரை விட அதிக சாதனைகள் யாரும் தொட்டதில்லை. எனவே, இவரை அவ்வளவு எளிதாக எடுத்துக் கொள்ள முடியாது. 

சென்னையில் நடக்கும் ஐ.பி.எல்., போட்டிகளில், இலங்கை வீரர்கள் பங்கேற்க மாட்டார்கள் என்ற முடிவு, தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் நெருக்கடி காரணமாக, எடுக்கப்படவில்லை. எங்களுக்கு இலங்கை வீரர்களின் பாதுகாப்புதான் மிகவும் முக்கியம். தவிர, இந்த விஷயத்தில் தமிழர்களின் உணர்வுகளுக்கும் மதிப்பு கொடுத்துள்ளோம். 


போட்டி மாற்றமில்லை

சென்னையில் நடக்கும் ஐ.பி.எல்., போட்டிகளை, வேறு இடத்திற்கு மாற்றும் திட்டம் எதுவுமில்லை. ஏனெனில், ஒரு போட்டியை, வேறொரு இடத்திற்கு மாற்ற, இரண்டு மாதங்கள் ஆகும். தவிர, ஆடுகளத்தை தயார்படுத்த, இன்னும் இரண்டு மாதங்கள் தேவைப்படும். இங்கு போட்டிகளை நடத்தக்கூடாது என மக்கள் சொல்லவில்லை. 

இலங்கை வீரர்கள் மட்டும் இங்கு விளையாடக்கூடாது என்றுதான் கூறியுள்ளனர். இதை, இலங்கை கிரிக்கெட் போர்டும் ஏற்றுக் கொண்டு விட்டது. 

இவ்வாறு ராஜிவ் சுக்லா கூறினார். 

0 comments:

Post a Comment