தோனிக்கு முதல் மரியாதை


ஆறாவது ஐ.பி.எல்., தொடரின் துவக்க விழா நேற்று கோல்கட்டாவில் வண்ணமயமாக நடந்தது. இதில், பாலிவுட் நட்சத்திரங்கள் ஷாருக் கான், கத்ரினா கைப், தீபிகா படுகோனே உள்ளிட்டோர் ஆடிப் பாடி அசத்தினர்.

ஆறாவது ஐ.பி.எல்., "டுவென்டி-20' தொடர் (ஏப்.3-மே 26) இன்று துவங்குகிறது. இதில், சென்னை சூப்பர் கிங்ஸ், மும்பை இந்தியன்ஸ், டில்லி டேர்டெவில்ஸ் உட்பட 9 அணிகள் பங்கேற்கின்றன. 

இதன் துவக்கவிழா நேற்று கோல்கட்டாவில் உள்ள "சால்ட் லேக்' மைதானத்தில் கோலாகலமாக நடந்தது. முதலில் மிகப் பெரிய சிவப்பு பட்டனை மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி அழுத்த, மறுபக்கம் குத்துவிளக்குகள் ஜொலிக்க, விழா அமர்க்களமாக துவங்கியது. 

தொடர்ந்து "டிரம்சில்' பறந்தவாறு கலைஞர்கள் சாகசம் நிகழ்த்த, சீனப் பெண்கள் "மெகா' முரசு அடித்து முழக்கம் எழுப்ப, அரங்கில் ஐ.பி.எல்., கோப்பையுடன் அழகிய பெண் ஒருவர் பலூனில் தலைகீழாக பறந்து வந்தார். 

பின் கடந்த முறை சாம்பியன் பட்டம் வென்ற கோல்கட்டா அணி கேப்டன் காம்பிர் வசம் கோப்பையை அந்த பெண் வழங்கினார். அப்போது 9 அணிகளும் 9 கிரகங்கள் போல காட்சி அளிக்கும் வகையில் பலூன்கள் இடம் பெற்றிருந்தன. 

அடுத்து "பாலிவுட்' நடிகை தீபிகா படுகோனே அசத்தலாக நடனமாடினார். அடுத்து ராணி போல் பவனி வந்த கத்ரினா கைப் "ஷீலா கா ஜவானி' என்ற பிரபல பாடலுக்கு கவர்ச்சி உடையில் நடனமாடி ரசிகர்களை கிறங்கடித்தார். 

கோல்கட்டா அணி உரிமையாளரும் நடிகருமான ஷாருக் கானும் அசத்தலாக ஆடி ரசிகர்களை மகிழ்வித்தார். பிரபல பாடகி உஷா உதுப், அமெரிக்காவை சேர்ந்த "ராப்' பாடகர் பிட் புல் ஆகியோர் ரம்மியமாக பாடி உற்சாகம் அளித்தனர். கண்கவர் வாணவேடிக்கை, "லேசர் ÷ஷா'வுடன் துவக்க விழா இனிதே நிறைவு பெற்றது.


தோனிக்கு  முதல் மரியாதை

துவக்க விழாவில் அனைத்து அணிகளின் கேப்டன்களும் அரங்கில் அணிவகுத்து நின்றனர். பின் போட்டிகளின் போது விளையாட்டு உணர்வுடன் நடந்து கொள்வோம் என்று உறுதி அளிக்கும் வகையில் மைதானத்தில் இருந்து தொடு திரையில் விரலால் தொட்டு கையெழுத்திட்டனர். 

இதில் முதல் நபராக சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் தோனி அழைக்கப்பட்டார். அவர் கையெழுத்திட, ரசிகர்கள் உற்சாக கரகோஷம் எழுப்பினர்.

0 comments:

Post a Comment