ஓட்டலில் போதை பார்ட்டி - தொடர்கிறது ஐ.பி.எல்., சர்ச்சை

மும்பை ஓட்டலில் நடந்த பார்ட்டியில், போதைப் பொருட்கள் பயன்படுத்தியதாக ஐ.பி.எல்., புனே வாரியர்ஸ் அணி வீரர்கள் ராகுல் சர்மா, பார்னல் உட்பட 94 பேர் சிக்கியுள்ளனர்.

ஐந்தாவது ஐ.பி.எல்., தொடருக்கும் சர்ச்சைகளுக்கும் பஞ்சமே இல்லை. வீரர்கள் சூதாட்டம், ஷாருக்கானுக்கு தடை, செக்ஸ் புகாரில் ஆஸ்திரேலிய வீரர் பாமர்ஸ்பச் கைது வரிசையில், இப்போது போதை மருந்து பயன்படுத்திய சிக்கலும் சேர்ந்து கொண்டுள்ளது.

மும்பை, சபர்பன் ஜுகு பகுதியில் உள்ள ஆக்வுட் ஓட்டலில் பார்ட்டிக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதில் புனே வாரியர்ஸ் அணியின் ராகுல் சர்மா (இந்தியா), பார்னல் (தென் ஆப்ரிக்கா) மற்றும் முக்கிய பிரமுகர்கள், அழகிகள் பங்கேற்றனர். இதில் போதை மருந்து பயன்படுத்தப்படுவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

ஓட்டலில் "ரெய்டு சென்ற போலீசார், 2 கிரிக்கெட் வீரர்கள் <உட்பட 56 ஆண்கள், 38 பெண்களை ஸ்டேஷனுக்கு கொண்டு சென்றனர். இவர்களது ரத்தம், சிறுநீர் மாதிரிகள் சோதனைக்கு எடுக்கப்பட்டு, பின் விடுவிக்கப்பட்டனர். விருந்துக்கு ஏற்பாடு செய்த ஓட்டல் இயக்குனர் விஷாய் ஹண்டா மீது போதை மருந்து பயன்படுத்துதல், தடுத்தல் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டு, கைது செய்யப்பட்டார்.

போலீஸ் கூடுதல் கமிஷனர் விஸ்வாஸ் படேல் கூறுகையில்,"" 110 கிராம் எடையுள்ள கோகைன், எஸ்டசி மற்றும் சாரஸ் என்ற போதைப் பொருட்கள் பிடிபட்டன. இதில் சிக்கியவர்களுக்கு மருத்துவ பரிசோதனை நடத்தப்பட்டது, என்றார்.


எதுவும் தெரியாது:

சம்பவம் குறித்து தென் ஆப்ரிக்க வீரர் பார்னல் கூறியது:

கடந்த தொடரின் போது அறிமுகமான நண்பர் ஒருவரின், பிறந்த நாள் பார்ட்டிக்காக நானும், ராகுல் சர்மாவும் இரவு 7 மணியளவில் அங்கு சென்றோம். போதைப் பொருட்கள் சப்ளை செய்வது, பெரியளவில் பார்ட்டி நடப்பது எங்களுக்கு தெரியாது. ஓட்டலின் மொட்டை மாடியில் தான் பார்ட்டி நடந்தது.

திடீரென போலீசார் வந்து சோதனை செய்தனர். பார்ட்டியில் நாங்கள் மது அருந்தவில்லை. புகை பிடிக்கவில்லை. தண்ணீர் மட்டும் குடித்து விட்டு நடனம் ஆடினோம். இதில் குற்றம் இருப்பதாக தெரியவில்லை. இதனால் தான் போலீசாருடன் செல்லும் போது முகத்தை மறைக்கவில்லை. அப்படி செய்திருந்தால், ஏதோ தவறு செய்தது போல் ஆகிவிடும்.

தவறான நேரத்தில், தவறான இடத்தில் இருந்தது தான் தவறு. இது துரதிருஷ்டவசமானது. இவ்விஷயத்தில் அணி நிர்வாகம் எங்களுக்கு துணையாக உள்ளது.

இவ்வாறு பார்னல் கூறினார்.


""கிரிக்கெட்டை விட்டு விலகுவேன்

இது குறித்து, ராகுல் சர்மா கூறுகையில், ""நான் ஏழ்மையான குடும்பத்தில் இருந்து வந்தவன். எனது வாழ்க்கையில் "பீர் கூட குடித்தது இல்லை. இந்நிலையில், இது போன்ற பார்ட்டியில் நான் பங்கேற்கிறேன் என, எப்படி செய்திகள் வெளியாகின்றன என்றே தெரியவில்லை.

பிறந்தநாள் விருந்து என்ற அழைப்பில் தான் நானும், பார்னலும் சென்றோம். அடுத்த அரைமணி நேரத்தில் என்ன நடந்தது என்றே தெரியவில்லை.

போலீசாரிடம் கேட்டபோது, "ரெய்டு நடப்பதாக கூறினர். நடந்தது அனைத்தையும் அணி நிர்வாகத்திடம் கூறினேன். சோதனை முடிவு வந்த பின் உண்மை தெரியும். நான் போதைப்பொருள் பயன்படுத்தினேன் என தெரிந்தால், கிரிக்கெட்டை விட்டே விலகுகிறேன், என்றார்.

0 comments:

Post a Comment