எல்லாமே கில்லி தான்

கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியின் உரிமையாளர்களில் ஒருவர் பாலிவுட் நடிகை பிரித்தி ஜிந்தா. மைதானத்தில் தனது அணி வீரர்களை "கட்டிப்பிடி' வைத்தியத்தின் மூலம் கிறங்கடித்தவர்.

இம்முறை சினிமாவுக்கு முக்கியத்துவம் கொடுத்து, ஐ.பி.எல்., தொடரில் அதிக ஆர்வம் காட்டாமல் இருப்பதாக தெரிகிறது. தனது அணி குறித்த பல்வேறு விஷயங்கள் குறித்து பிரித்தி ஜிந்தா அளித்த பேட்டி:

* கடந்த ஆண்டு போல அணியில் அதிகம் ஆர்வம் காட்டவில்லை என்று தெரிகிறதே?

அப்படியெல்லாம் ஒன்றுமில்லை. இந்த ஒரு ஆண்டில் எனது வாழ்க்கையில் நிறைய விஷயங்கள் நடந்துள்ளன. எனது படக் கம்பெனி சார்பில் தயாரிக்கப்படும் பட வேலைகளில் "பிசி'யாக உள்ளேன்.

* இந்த ஆண்டு ஐ.பி.எல்., தொடரில் என்ன திட்டம் வைத்துள்ளீர்கள்?

என்ன செய்வது, என்ன செய்யக் கூடாது என, கடந்த நான்கு ஆண்டுகளாக உரிமையாளர்களாக நாங்கள் பல திட்டங்களை வகுத்து விட்டோம். இம்முறை மிகவும் "சிம்பிள்' திட்டம். அதாவது அணியின் பயிற்சியாளர் மற்றும் கேப்டனாக கில்கிறிஸ்ட்(செல்லமாக கில்லி) உள்ளார். என்ன செய்வது என அவருக்குத் தெரியும் என்பதால், அனைத்து பொறுப்புகளையும் அவரிடமே விட்டுவிட்டோம்.

* உங்கள் அணியின் முன்னாள் கேப்டன் யுவராஜ் சிங் இப்போது எப்படி உள்ளார்?

முதலில் "கேன்சர்' குறித்து என்னிடம் பேசினார். அவர் "ஜோக்' அடிக்கிறார் என்று நினைத்து நம்பவே இல்லை. கடைசியில் இது உண்மை என தெரிந்தவுடன் மிகவும் வருத்தம் அடைந்தேன். அமெரிக்காவில் சிகிச்சையில் இருந்த போது, அவருக்கு வாழ்த்துச் செய்தி அனுப்பினேன். இதிலிருந்து மீண்ட இவர், மிக விரைவில் கிரிக்கெட்டுக்கு திரும்புவார் என்று <உறுதியாக நம்புகிறேன்.

*பஞ்சாப் அணியை விற்கப் போவதாக வந்த செய்தி குறித்து...

வருமான வரி மற்றும் சில பிரச்னைகளால் அணியை விற்கப் போவதாக வந்த செய்தி வதந்தி. ஏனெனில் இது என் குழந்தை. இதற்காக கடினமாக பாடுபட்டுள்ளேன். கிரிக்கெட்டில் உள்ள அனைத்தையும் கற்றுக்கொண்டுள்ள நான், எப்போதும் அணியை விட்டுப் போகமாட்டேன்.

*தலாய் லாமாவின் சந்தித்த போது என்ன கூறினார்?

தர்மசாலாவில் எங்கள் அணி பங்கேற்கும் போட்டிகள் அனைத்திற்கும் வந்துவிடுவார். ஒருமுறை எங்கள் அணி போட்டியில் தோற்றிருந்த போது மிகவும் சோகமாக இருந்தேன். அப்போது அவரிடம்,"" வெற்றிபெறவே விளையாடினோம். ஆனால் தோற்று விட்டோமே,'' என்றேன்.

அதற்கு தலாய் லாமா,"" உண்மையில் நீ வெற்றி பெற விரும்பினால், உனக்குத் தெரிந்த சினிமாவில் தான் விளையாடி இருக்க வேண்டும்,'' என்றார். நான் ஒருநாளும் களத்தில் இறங்கி "பேட்' பிடித்து விளையாடியது இல்லை. இந்நிலையில், அவர் சொன்ன வார்த்தைகளில் உள்ள உண்மையை தெரிந்து கொண்டேன். இதன் பின் சினிமாவில் கூடுதல் கவனம் செலுத்த துவங்கினேன்.

0 comments:

Post a Comment