கேப்டன் பதவியை தாரைவார்த்தார் சச்சின்

மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டன் பதவியை ஹர்பஜன் வசம் ஒப்படைத்தார் சச்சின். நட்சத்திர வீரரான இவர், கேப்டன் பொறுப்பில் இருந்து திடீரென விலகியது பல்வேறு சந்தேகத்தை கிளப்பியுள்ளது.

ஐந்தாவது ஐ.பி.எல்., "டுவென்டி-20 கிரிக்கெட் தொடர் சென்னையில் நாளை துவங்குகிறது. இதில் மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டனாக சச்சின் இருந்தார். இவர், திடீரென கேப்டன் பதவியை ஹர்பஜன் சிங்கிடம் வழங்கும்படி, உரிமையாளர் நீடா அம்பானியிடம் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து சச்சின் கூறுகையில், ""மும்பை இந்தியன்ஸ் அணியை, எனது குடும்பமாக கருதுகிறேன். தற்போது எனக்கு கேப்டன் பொறுப்பில் இருந்து சிறிது ஓய்வு தேவைப்படுகிறது. அணி உரிமையாளர்கள் முகேஷ், நீடா அம்பானியிடம் ஆலோசித்தேன்.

கேப்டன் பொறுப்பை ஹர்பஜன் சிங்கிடம் வழங்கும்படி தெரிவித்தேன். சிறந்த அனுபவ வீரரான ஹர்பஜன், அணியை திறம்பட வழிநடத்துவார் என நம்புகிறேன். மும்பை அணிக்கு கேப்டனாகும் தகுதி இவரிடம் உள்ளது, என்றார்.

மும்பை இந்தியன்ஸ் அணி உரிமையாளர் நீடா அம்பானி கூறுகையில், ""கேப்டன் பொறுப்பில் இருந்து சச்சின் விலகியது வருத்தமான விஷயம். இவரது முடிவு சரியாக இருக்கும் என்பதால், அதனை ஏற்றுக் கொள்ள வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது, என்றார்.

மிகப்பெரிய கவுரவம்:

ஹர்பஜன் சிங் கூறுகையில், ""மும்பை அணியின் கேப்டன் பொறுப்பை சச்சின், எனக்கு வழங்கியதை மிகப் பெரும் கவுரவமாக கருதுகிறேன். மும்பை அணியில் திறமையான வீரர்கள் நிறைய பேர் உள்ளனர். இளம் வீரர்களுக்கு முன்னோடியாக திகழ்ந்து, அணியை திறம்பட வழிநடத்தி வெற்றிப் பாதையில் அழைத்துச் செல்ல முயற்சிப்பேன், என்றார்.

பின்னணி என்ன?

சச்சின் நீண்ட காலமாக கால் காயத்தால் அவதிப்பட்டு வருகிறார். இதன் காரணமாக ஐ.பி.எல்., தொடரில் முழுமையாக பங்கேற்க இயலாது என்ற நிலையில், கேப்டன் பதவியில் இருந்து விலகும் முடிவை எடுத்திருக்கலாம்.

* மும்பை இந்தியன்ஸ் அணிக்கு கடந்த நான்கு முறை கேப்டனாக இருந்த சச்சினால், ஒருமுறை கூட கோப்பை வெல்ல முடியவில்லை. அதே நேரத்தில் 2011ல் நடந்த சாம்பியன்ஸ் லீக் தொடரில் ஹர்பஜன் தலைமையில் மும்பை அணி, கோப்பை வென்று அசத்தியது. இதையடுத்து இவரே கேப்டன் பதவியில் தொடர வேண்டுமென மும்பை அணி நிர்வாகம் விரும்பியிருக்கலாம். இதனை அறிந்து கொண்டு சச்சினும் தானாகவே பதவியில் இருந்து விலகியிருக்கலாம் என கூறப்படுகிறது.

100 தங்க நாணயம்

சர்வதேச கிரிக்கெட்டில் 100 சதங்கள் அடித்த சச்சின், தங்க மழையில் நனையப் போகிறார். இவரது சாதனையை கவுரவிக்கும் வகையில், மும்பை கிரிக்கெட் சங்கம்(எம்.சி.ஏ.,) 100 தங்க நாணயங்களை பரிசாக வழங்க உள்ளது.

இது குறித்து எம்.சி.ஏ., இணைச் செயலர் நிதின் தலால் கூறுகையில்,"" பாராட்டு விழாவுக்கு சச்சின் ஒப்புக்கொண்டுள்ளார். இன்னும் தேதி முடிவு செய்யப்படவில்லை. 100 தங்க நாணயங்களின் மதிப்பு ரூ. 25 லட்சம் இருக்கும்,என்றார்.

0 comments:

Post a Comment