அஜய் ஜடேஜாவின் ஆசை

சூதாட்ட அஜய் ஜடேஜாவுக்கு மீண்டும் கிரிக்கெட் மீது ஆசை பிறந்துள்ளது. இவர், ரஞ்சி கோப்பை தொடரில் விளையாட தயாராக இருக்கிறாராம்.
இந்திய கிரிக்கெட் வீரர் அஜய் ஜடேஜா, 42. கடந்த 1992ல் சர்வதேச ஒருநாள் மற்றும் டெஸ்ட் போட்டியில் முதன்முதலில் களமிறங்கிய இவர், 2000ம் ஆண்டு வரை விளையாடினார். 

இதுவரை இவர், 15 டெஸ்ட் (576 ரன்கள்), 196 ஒருநாள் (5359 ரன்கள்) போட்டிகளில் விளையாடி உள்ளார். அதன்பின் சூதாட்டப்புகாரில் சிக்கிய இவருக்கு, ஐந்து ஆண்டுகள் போட்டியில் விளையாட தடை விதிக்கப்பட்டது. 

இதை எதிர்த்து அப்பீல் செய்த இவருக்கு, 2003ல் டில்லி கோர்ட் வழங்கிய தீர்ப்பில், தடை நீக்கப்பட்டு, உள்ளூர் மற்றும் சர்வதேச போட்டிகளில் விளையாடலாம் என தெரிவிக்கப்பட்டது. 

இருப்பினும் வயது, "பார்ம்', உடற்தகுதி காரணமாக இந்திய அணியில் அணியில் இடம் கிடைக்கவில்லை. கடந்த 2005ல் ரஞ்சி கோப்பைக்கான ராஜஸ்தான் அணியின் கேப்டன் மற்றும் பயிற்சியாளராக களமிறங்கினார். அதன்பின் 2007ல், ஹாங்காங் சர்வதேச சிக்சஸ் தொடரில் விளையாடினார். 

இந்நிலையில் சமீபத்தில் இவர், சென்னையில் நடந்த புச்சிபாபு கிரிக்கெட் தொடரில் அரியானா அணியின் கேப்டனாக விளையாடினார். இதன்மூலம் ஆறு ஆண்டுகளுக்கு பின், மீண்டும் உள்ளூர் கிரிக்கெட் போட்டியில் பங்கேற்றார். 

இதனையடுத்து இவர், அடுத்தாண்டு நடக்கவுள்ள ஏழாவது பிரிமியர் கிரிக்கெட் தொடரில் விளையாடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதுகுறித்து அஜய் ஜடேஜா கூறியது: இந்தியாவில் நடக்கும் பிரிமியர் கிரிக்கெட் தொடரில் விளையாடும் எண்ணம் கிடையாது. ஏனெனில் "டுவென்டி-20' போட்டியில் விளையாடுவதற்கேற்ப உடற்தகுதி என்னிடம் இல்லை. 

டெஸ்ட், ஒருநாள் போட்டிகளில் இருந்து "டுவென்டி-20' போட்டி முற்றிலும் மாறுபட்டது. எனவே பிரிமியர் கிரிக்கெட் தொடரின் போது, "டிவி' சேனலின் நிகழ்ச்சி தொகுப்பாளராகவே தொடர விரும்புகிறேன்.

அதேவேளையின் உள்ளூர் தொடர்களில் ஒன்றான வரலாற்று சிறப்புமிக்க ரஞ்சி கோப்பை தொடரில் அரியானா அணிக்காக விளையாட விரும்புகிறேன். இத்தொடரில் விளையாடுவதற்குரிய தகுதியும், திறமையும் என்னிடம் உள்ளது. 

வாய்ப்பு கிடைக்கும் பட்சத்தில், இளம் வீரர்களுடன் இணைந்து விளையாட தயாராக உள்ளேன். ஆனால் அணியில் தேர்வு செய்யப்படுவது என் கையில் இல்லை. இது, அரியானா அணி நிர்வாகத்திடம் உள்ளது. புச்சிபாபு தொடர் மூலம், மீண்டும் கிரிக்கெட் போட்டியில் விளையாடியது மகிழ்ச்சி அளிக்கிறது.

இவ்வாறு அஜய் ஜடேஜா கூறினார்.

0 comments:

Post a Comment