சதம் அடிக்காமல் சாதனை

இந்திய "மாஸ்டர் பேட்ஸ்மேன்' சச்சின், "சதத்தில் சதம்' அடித்து உலக சாதனை படைத்தார். ஆனால் பாகிஸ்தான் கேப்டன் மிஸ்பா, சதம் அடிக்காமல் புதிய சாதனை நிகழ்த்தினார்.
கடந்த 2001ல் சர்வதேச கிரிக்கெட் போட்டியில் அறிமுகமான மிஸ்பா, 39, 2002ல் முதன்முதலில் ஒருநாள் போட்டியில் களமிறங்கினார். இதுவரை 39 டெஸ்ட், 125 ஒருநாள், 39 சர்வதேச "டுவென்டி-20' போட்டிகளில் விளையாடி உள்ளார். 

"மிடில்-ஆர்டரில்' களமிறங்கும் இவர், டெஸ்டில் மூன்று சதம் அடித்துள்ளார். ஆனால் ஒருநாள் போட்டியில் ஒரு சதம் கூட அடிக்கவில்லை. ஒருநாள் போட்டியில் இவரது அதிகபட்சமாக ரன் 96 (எதிர்-வெஸ்ட் இண்டீஸ், 2013, இடம்-ஓவல்).

மிஸ்பா, இதுவரை விளையாடிய 125 ஒருநாள் போட்டியில் 29 அரைசதம் உட்பட 3819 ரன்கள் எடுத்துள்ளார். இதன்மூலம் ஒருநாள் போட்டி வரலாற்றில், ஒரு சதம் கூட அடிக்காமல் அதிக ரன்கள் எடுத்த வீரர்கள் வரிசையில் முதலிடம் பிடித்தார். 

இவரை அடுத்து பாகிஸ்தானின் வாசிம் அக்ரம் (356 போட்டி, 3717 ரன், 6 அரைசதம்), மோயின் கான் (219 போட்டி, 3266 ரன், 12 அரைசதம்), ஜிம்பாப்வேயின் சிகும்புரா (150 போட்டி, 2996 ரன், 15 அரைசதம்) ஆகியோர் உள்ளனர். 

இந்தியா சார்பில் ஒருநாள் போட்டியில் ஒரு சதம் கூட அடிக்காமல் அதிக ரன்கள் எடுத்த வீரர்களில் இர்பான் பதான் (120 போட்டி, 5 அரைசதம், 1544 ரன்கள்) உள்ளார்.

சமீபத்தில் வெஸ்ட் இண்டீஸ் சென்ற பாகிஸ்தான் அணி, ஐந்து போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை கைப்பற்றியது. இத்தொடரில் பேட்டிங்கில் அசத்திய மிஸ்பா, 4 அரைசதம் உட்பட 260 ரன்கள் எடுத்து, தொடர் நாயகன் விருது வென்றார். 

இதன்மூலம் இரண்டு அணிகள் மட்டும் மோதிய ஒருநாள் தொடரில் அதிக அரைசதம் அடித்த கேப்டன் வரிசையில் முதலிடத்தை ஆஸ்திரேலியாவின் ரிக்கி பாண்டிங் (எதிர்-இலங்கை, 4 அரைசதம், 2004), தென் ஆப்ரிக்காவின் டிவிலியர்ஸ் (எதிர்-பாகிஸ்தான், 4 அரைசதம், 2013) ஆகியோருடன் பகிர்ந்து கொண்டார். இந்திய கேப்டன்களில், அசார், கங்குலி, தோனி ஆகியோர் ஒரே தொடரில் அதிகபட்சமாக தலா 3 அரைசதம் அடித்துள்ளனர்.

0 comments:

Post a Comment