யுவராஜ் சிங் மீண்டும் விளையாட என்ன காரணம்?

கிரிக்கெட் மீதுள்ள ஆர்வம், மீண்டும் போட்டியில் விளையாட தூண்டியது,'' என, இந்திய வீரர் யுவராஜ் சிங் தெரிவித்தார்.
இந்திய அணியின் நட்சத்திர வீரர் யுவராஜ் சிங், 31. 2011ல் நடந்த உலக கோப்பை போட்டியில், தொடர் நாயகன் விருது வென்றார். 

இதன் பின் ஏற்பட்ட நுரையீரல் "கேன்சரில்' இருந்து மீண்ட இவர், 2012 "டுவென்டி-20' உலக கோப்பை தொடருக்கான இந்திய அணியில் இடம் பெற்றார். 

தற்போது "பார்ம்' இல்லாததால், அணியில் இருந்து நீக்கப்பட்டார். 2015 உலக கோப்பை தொடருக்கான இந்திய அணியில் இடம் பெற வேண்டும் என்பதில் உறுதியாக உள்ள இவர், சமீபத்தில் பிரான்ஸ் சென்று புகழ் பெற்ற டிம் எக்செட்டரிடம் பயிற்சி எடுத்தார். தற்போது இவர், உள்ளூர் போட்டிகளில் விளையாட காத்திருக்கிறார்.

யுவராஜ் சிங் கூறியது: கடந்த ஒரு ஆண்டாக அணியில் இடம் கிடைக்காதது கடினமாக இருந்தது. எனது கிரிக்கெட் வாழ்க்கையில் நிறைய ஏற்றத் தாழ்வுகளை சந்தித்துள்ளேன்.

உலக கோப்பை (2011) தொடருக்கு முன் ஏற்பட்ட காயம், அதன்பின் கேன்சரால் பாதிக்கப்பட்டு மீண்டது, மீண்டும் அணியில் இடம் பிடித்தது, தற்போது அணியில் இடம் கிடைக்காமல் தவிப்பது என, எல்லாமே சோதனை தான். 

இருப்பினும், கிரிக்கெட் மீதுள்ள ஆர்வம், மீண்டும் அணியில் இடம் பிடிக்க தூண்டியது. இதற்காக கடுமையாக பயிற்சி மேற்கொண்டு வருகிறேன். தற்போது உள்ளூர் போட்டிகளில் கவனம் செலுத்தி வருகிறேன். அடுத்த மாதம் நடக்கவுள்ள சாலஞ்சர் டிராபி தொடரில் பங்கேற்க உள்ளேன். 

அதற்கு முன், சில உள்ளூர் போட்டிகளில் விளையாட உள்ளேன். அதன்பின், அக்டோபரில் துலீப் டிராபி தொடரில் பங்கேற்க உள்ளேன். வாய்ப்பு கிடைக்கும் பட்சத்தில், ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒருநாள் தொடரில் விளையாடுவேன். அதன்பின் ரஞ்சி கோப்பை தொடரில் பங்கேற்க திட்டமிட்டுள்ளேன்.

இவ்வாறு யுவராஜ் சிங் கூறினார்.

0 comments:

Post a Comment