ஆடுகள பராமரிப்பாளருடன் காம்பிர் மோதல்



டில்லி மைதான ஆடுகள பராமரிப்பாளர், இந்திய அணியின் முன்னாள் வீரர் வெங்கட் சுந்தரத்தை, அடிக்கப் பாய்ந்துள்ளார் காம்பிர்.

இந்திய  அணியின் துவக்க வீரர் காம்பிர், 32. மோசமான ‘பார்ம்’ காரணமாக அணியில் இருந்து கடந்த ஆண்டு நீக்கப்பட்டார். களத்தில் ஆக்ரோஷமாக நடந்து கொள்ளும் இவர், கடந்த பிரிமியர் தொடரின் போது, ‘சீனியர்’ டிராவிட், கோஹ்லியுடன் மோதலில் ஈடுபட்டார்.

இப்போது மீண்டும் சர்ச்சையில் சிக்கியுள்ளார். கடந்த 24ம் தேதி ஆடுகள பராமரிப்பாளர், இந்திய அணியின் முன்னாள் வீரர் வெங்கட் சுந்தரம், டில்லி பெரோஷா கோட்லா மைதான பராமரிப்பு பணியில் ஈடுபட்டிருந்தார்.

அப்போது அங்கு பயிற்சியில் இருந்த காம்பிர், வெங்கட் சுந்தரத்துடன் வார்த்தைப் போரில் ஈடுபட்டு, பேட்டினை கொண்டு கோபத்துடன் அடிக்க பாய்ந்துள்ளார். 

இதுகுறித்து வெங்கட் சுந்தரம், டில்லி கிரிக்கெட் சங்க நிர்வாகத்திடம் முறைப்படி, புகார் அளித்துள்ளாராம். நடவடிக்கை எடுக்கவில்லை எனில், அடுத்த சில நாட்களில், இந்திய கிரிக்கெட் போர்டிடம் (பி.சி.சி.ஐ.,) முறையிட உள்ளார் என்று தெரிகிறது.


வெங்கட் சுந்தரம் கூறியது:

வழக்கமாக எனது வேலை குறித்து பேசிக் கொண்டிருந்தேன். அங்கு வந்த காம்பிர், எனது உத்தரவுகளை பின்பற்ற வேண்டாம் என, பணியாளர்களிடம் தெரிவித்தார், என்னைப் பார்த்து,‘போய் பத்திரிகையாளர்களுக்கு பேட்டி கொடு. இங்கு வந்து தலையிடாதே,’ என கத்தினார். இது எல்லோருக்கும் தெரியும். ஆனால், அடிக்க வரவில்லை. தவிர, காம்பிர் மீது புகார் கொடுக்கவும் இல்லை. 

இவ்வாறு அவர் கூறினார்.


காம்பிர் மறுப்பு:

சம்பவம் குறித்து காம்பிர் கூறுகையில்,‘‘ வெங்கட் சுந்தரத்தை சந்தித்தது உண்மை தான். வரும் 27ம் தேதி நடக்கவுள்ள (விஜய் ஹசாரே தொடர்) ஒருநாள் போட்டிக்காக, டில்லி அணிக்கு சாதகமான ஆடுகளத்தை தருமாறு கேட்டுக் கொண்டேன், அவ்வளவு தான். 

மற்றபடி எதுவும் நடக்கவில்லை. பத்திரிகைகளில் வந்த செய்தியில் உண்மையில்லை,’’ என்றார்.

0 comments:

Post a Comment