
வெலிங்டன் டெஸ்டில் கேப்டன் பிரண்டன் மெக்கலம் இரட்டை சதம் கடந்து கைகொடுக்க, நியூசிலாந்து அணி வலுவான முன்னிலை பெற்றது. இதையடுத்து இந்திய அணியின் வெற்றி வாய்ப்பு பறிபோனது.
நியூசிலாந்து சென்றுள்ள இந்திய அணி 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்கிறது. முதல் போட்டியில் இந்தியா தோல்வி அடைந்தது. இரண்டாவது டெஸ்ட், வெலிங்டனில் நடக்கிறது.
முதல் இன்னிங்சில் நியூசிலாந்து 192 ரன்கள், இந்தியா 438 ரன்கள் எடுத்தன. மூன்றாவது நாள் ஆட்டநேர முடிவில், நியூசிலாந்து அணி இரண்டாவது இன்னிங்சில் 5 விக்கெட்டுக்கு 252 ரன்கள் எடுத்து, 6 ரன்கள் முன்னிலை பெற்றது. மெக்கலம் (114), வாட்லிங் (52) அவுட்டாகாமல் இருந்தனர்.
வாட்லிங் சதம்:
நான்காவது நாள் ஆட்டத்தில் இரண்டாவது இன்னிங்சை தொடர்ந்த மெக்கலம், வாட்லிங் ஜோடி பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. ஜாகிர், இஷாந்த் பந்தில் மெக்கலம் பவுண்டரி அடிக்க, அணியின் ஸ்கோரை வேகமாக உயர்த்தினார்.
எதிர்முனையில் தன்பங்கிற்கு ஜடேஜா, ஜாகிர் கான் பந்தில் பவுண்டரி அடித்த வாட்லிங், டெஸ்ட் அரங்கில் தனது 3வது சதத்தை பூர்த்தி செய்தார்.
புதிய சாதனை:
ஜாகிர் வேகத்தில் இரண்டு பவுண்டரி அடித்த மெக்கலம், டெஸ்ட் அரங்கில் தனது 3வது இரட்டை சதத்தை பதிவு செய்தார். இதன்மூலம் அதிக இரட்டை சதம் அடித்த நியூசிலாந்து வீரர்கள் பட்டியலில் முன்னாள் கேப்டன் ஸ்டீபன் பிளமிங் (3 இரட்டைசதம்) முதலிடத்தை பகிர்ந்து கொண்டார்.
தவிர, அடுத்ததடுத்த போட்டிகளில் இரட்டைசதம் அடித்த முதல் நியூசிலாந்து வீரர் என்ற புதிய சாதனையை படைத்தார். சர்வதேச அரங்கில் 6வது வீரர் ஆனார் மெக்கலம்.
0 comments:
Post a Comment