ஸ்ரீசாந்த் 100 சதவீதம் அப்பாவி - சூதாட்ட நடிகர் புது தகவல்



பிரிமியர் தொடர் சூதாட்டத்தில் சிக்கிய ஸ்ரீசாந்த் உண்மையில் 100 சதவீதம் அப்பாவி,’’ என, பாலிவுட் நடிகர் வின்டூ தாராசிங் தெரிவித்தார்.

ஆறாவது பிரிமியர் தொடரில் சூதாட்டத்தில் ஈடுபட்ட, இந்திய அணியின் ராஜஸ்தான் வீரர் ஸ்ரீசாந்த், அன்கித் சவானுக்கு வாழ்நாள் தடை விதிக்கப்பட்டது. தவிர, சென்னை அணியின் ‘கவுரவ’ உறுப்பினர் குருநாத் மெய்யப்பன், பாலிவுட் நடிகர் வின்டூ தாராசிங் சிக்கினர்.

இதனிடையே, ஆங்கில ‘டிவி’ சானல் ஒன்று நடத்திய புலனாய்வு நடவடிக்கையில், பிரிமியர் தொடர் சூதாட்டம், பெட்டிங் குறித்து பல்வேறு திடுக்கிடும் தகவல்களை, தாராசிங் தெரிவித்துள்ளார். 

புலனாய்வு செய்தியில் தாராசிங் கூறியது:

இந்திய கிரிக்கெட் போர்டின் (பி.சி.சி.ஐ.,) தலைவர் சீனிவாசன், பிரிமியர் தொடரின் முன்னாள் தலைவர் லலித் மோடி, இடையிலான மோதல் காரணமாகத்தான், பிரிமியர் தொடர் சூதாட்டம் வெளியே வந்தது.

இதில் லலித் மோடிக்கு ஆதரவாக மத்திய அமைச்சர் சரத்பவார் செயல்படுகிறார். சீனிவாசனை வெளியேற்றிவிட துடிக்கிறார் லலித் மோடி. இவரது மருமகன் என்பதால் தான், குருநாத்தை லலித் மோடி சிக்கவைத்தார். ஏனெனில், குருநாத்துக்கு எதிரான ஒவ்வொரு ஆதாரங்களும், சீனிவாசனுக்கு நெருக்கடி தரும் என, இவருக்குத் தெரியும்.


ஸ்ரீசாந்த் அப்பாவி:

ஸ்ரீசாந்த்தை பொறுத்தவரை ‘பிக்சிங்கில்’ தொடர்பே கிடையாது. இவர் ஒரு அப்பாவி. அதாவது ஒரு ஓவரில் நான் 14 ரன்கள் தருவதாக சம்மதிக்கிறேன்.

முதல் 2 பந்தில் 2 பவுண்டரி அடித்தால், மீதமுள்ள 6 ரன்கள் எடுப்பது எளிதாகி விடும். ஆனால், ஸ்ரீசாந்த் முதல் 4 பந்தில் 6 ரன்கள் தான் கொடுத்தார். அடுத்த இரு பந்தில் 8 ரன்கள் கொடுக்க என்ன உத்தரவாதம் உள்ளது.

உண்மையில், ஸ்ரீசாந்துக்கு எதிராக அமைந்த அனைத்து செய்திகளும், அவரை குற்றவாளியாக மாற்றிவிட்டன. இவை எல்லாம் முட்டாள்தனமானது. ஸ்ரீசாந்த் 100 சதவீதம் நிரபராதி.

இவ்வாறு வின்டூ தாராசிங் கூறினார்.

0 comments:

Post a Comment