பயிற்சிக்கு "நோ' சொன்ன வீரர்கள்

டெஸ்ட் போட்டிகளில் படுதோல்வி அடைந்த இந்திய வீரர்கள் திருந்தவே இல்லை. தீவிர பயிற்சியில் ஈடுபடுவதற்கு பதிலாக, "கோ- கார்ட்டிங்' ரேசில் பங்கேற்று சர்ச்சையை கிளப்பியுள்ளனர்.

ஆஸ்திரேலிய சென்றுள்ள இந்திய அணி, முதலிரண்டு டெஸ்டில் தோல்வி அடைந்தது. முக்கியமான மூன்றாவது டெஸ்ட் வரும் 13ம் தேதி பெர்த்தில் துவங்குகிறது.

இதில், சாதிப்பதற்கு இந்திய வீரர்கள் தீவிர பயிற்சியில் ஈடுபடுவார்கள் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், "கோ-கார்ட்டிங்' எனப்படும் சிறிய வகை கார் ரேசில் கலந்து கொண்டு பொழுதை வீணாக்கினர்.


தோனி அணுகுமுறை:

இத்தொடரில் இந்திய வீரர்கள் பயிற்சிக்கு முக்கியத்துவம் கொடுக்காதது பற்றி முன்னாள் வீரர் கவாஸ்கர் கடுமையாக சாடினார். இவர்கள், ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுலா செல்லவில்லை என விமர்சித்தார்.

வீரர்களின் தவறான மனநிலைக்கு கேப்டன் தோனியின் அணுகுமுறையும் ஒரு காரணம். வலைப்பயிற்சியில் ஈடுபடுவதால் உடனடி பலன் கிடைக்கப் போவதில்லை என நம்புகிறார். இவர் கூறுகையில்,""ஆஸ்திரேலிய பந்துவீச்சை நமது வீரர்கள் நன்கு அறிந்து கொண்டனர்.

தற்போதைக்கு வேறு விஷயங்களில் கவனம் செலுத்துவது தான் நல்லது. சிலர் பயிற்சியில் அதிக நேரம் செலவழிக்க விரும்பலாம். தனிப்பட்ட முறையில் என்னை கேட்டால், கிரிக்கெட்டில் இருந்து விலகி, பொழுதுபோக்கு தொடர்பான விஷயங்களில் ஈடுபடுவதே சிறந்தது. இது மனதளவில் புது உற்சாகம் தரும்,''என்றார்.

இதே கருத்தையே இந்திய அணியின் மானேஜர் அலுவாலியாவும் பிரதிபலித்தார். இவர் கூறுகையில்,""கோ-கார்ட்டிங் ரேஸ்' போன்றவை மன அழுத்தத்தில் இருந்து விடுபட உதவும். சிறிய வகை ரேஸ் காரை ஓட்டும் போது புது அனுபவம் கிடைக்கும்.

2007-08ல் பெர்த்தில் நடந்த டெஸ்ட் போட்டிக்கு முன், இந்திய வீரர்கள் சைக்கிள் "ரேசில்' கலந்து
கொண்டனர். பின் அந்த போட்டியில் வெற்றி பெற்றனர்,'' என்றார்.

அலுவாலியா சொல்வது போல் இம்முறையும் இந்திய அணி வெற்றி பெறுமா?

0 comments:

Post a Comment