பேட்டிங்கில் எழுச்சி பெறுவோம் - சேவக்

வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான முதலாவது ஒருநாள் போட்டியில் செய்த தவறுகளை திருத்திக் கொண்டு, பேட்டிங்கில் எழுச்சி பெறுவோம்,'' என, இந்திய கேப்டன் சேவக் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

இந்தியா வந்துள்ள வெஸ்ட் இண்டீஸ் அணி, ஐந்து போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் பங்கேற்கிறது. கட்டாக்கில் நடந்த முதலாவது ஒருநாள் போட்டியில், முதலில் பேட்டிங் செய்த வெஸ்ட் இண்டீஸ் அணி 50 ஓவரில் 9 விக்கெட்டுக்கு 211 ரன்கள் எடுத்தது.

சுலப இலக்கை விரட்டிய இந்திய அணி 48.5 ஓவரில் 9 விக்கெட்டுக்கு 213 ரன்கள் எடுத்து, ஒரு விக்கெட் வித்தியாசத்தில், "திரில்' வெற்றி பெற்றது. இதன்மூலம் இந்திய அணி 1-0 என முன்னிலை வகிக்கிறது.

இதுகுறித்து இந்திய கேப்டன் சேவக் கூறியதாவது: வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான ஒருநாள் தொடரை வெற்றியுடன் துவக்கி இருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. அதேவேளையில் கட்டாக்கில் நடந்த முதலாவது ஒருநாள் போட்டியில், "டாப்-ஆர்டர்' பேட்ஸ்மேன்கள் பெரிய அளவில் சோபிக்காதது பின்னடைவான விஷயம்.

இதனால் இந்திய அணி ஒரு கட்டத்தில் 59 ரன்களுக்கு 5 விக்கெட்டை இழந்து திணற நேர்ந்தது. எனவே இப்போட்டியில் செய்த தவறுகளை திருத்திக் கொண்டு, அடுத்து வரும் போட்டிகளில் பேட்டிங்கில் எழுச்சி பெறுவோம் என்ற நம்பிக்கை உள்ளது.

இப்போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் அணியின் பந்துவீச்சு சிறப்பாக இருந்தது. குறிப்பாக நன்றாக விளையாடிக் கொண்டிருக்கும் நேரத்தில், நான் மற்றும் விராத் கோஹ்லி "கிளீன் போல்டானது' சற்றும் எதிர்பாராதது.

பார்த்திவ் படேல், கவுதம் காம்பிர், சுரேஷ் ரெய்னா மூவரும் தங்களது விக்கெட்டை எளிதாக பறிகொடுத்தது பின்னடைவாக அமைந்தது. அடுத்து வரும் போட்டிகளில் எந்த ஒரு பேட்ஸ்மேனும் சோபிக்கத்தவறினால், அதற்கு மன்னிப்பு கிடையாது.

இப்போட்டியில் இளம் வீரர்களின் செயல்பாடு சிறப்பாக இருந்தது. குறிப்பாக பவுலிங் மற்றும் பீல்டிங்கில் அசத்தினர். இது, அடுத்து வரும் போட்டிகளிலும் தொடரும் என நம்புகிறேன். இக்கட்டான நேரத்தில் ரோகித் சர்மா பேட்டிங்கில் கைகொடுத்தவிதம் பாராட்டுக்குரியது.

மிகச் சிறந்த பேட்ஸ்மேனான இவர், கிடைத்த வாய்ப்பை மிகச் சரியாக பயன்படுத்தி, திறமையை நிரூபித்தார். ஒவ்வொரு போட்டியிலும் இவரது பேட்டிங்கில் நல்ல முன்னேற்றம் கண்டு வருவது வரவேற்கத்தக்கது.

எத்தனை ரன் அல்லது விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெறுகிறோம் என்பது முக்கியமல்ல. வெற்றி மட்டும் தான் இலக்கு. இப்போட்டியில் கிடைத்த வெற்றிக்கு ரோகித் சர்மா, ரவிந்திர ஜடேஜா, வினய் குமார் ஆகியோரின் பொறுப்பான பேட்டிங் முக்கிய காரணம்.

பேட்ஸ்மேன்களுக்கு சாதகமாக இம்மைதானத்தில், வெஸ்ட் இண்டீஸ் அணியை 211 ரன்களுக்கு சுருட்டியவிதம் பாராட்டுக்குரியது. இதற்கு வருண் ஆரோன், உமேஷ் யாதவ், வினய் குமார், அஷ்வின் ஆகியோரின் சிறப்பான பந்துவீச்சு முக்கிய காரணம்.

கட்டாக்கில் நடந்த முதலாவது போட்டியில், அதிக அளவில் ரசிகர்கள் வந்தது மகிழ்ச்சி அளிக்கிறது. உள்ளூர் ரசிகர்களின் ஆதரவும், ஊக்கமும் வெற்றிக்கு வழிவகுக்கும். இதனை அடுத்து வரும் போட்டிகளிலும் எதிர்பார்க்கிறேன்.

டெஸ்ட் மற்றும் ஒருநாள் போட்டியில் இந்திய அணியை "நம்பர்-1' இடத்துக்கு முன்னேற செய்வதே இலக்கு. இதற்காக எந்த ஒரு அணியையும் குறைத்து மதிப்பிடாமல், முழுத்திறமையை வெளிப்படுத்தி வெற்றி நடையை தக்கவைத்துக் கொள்ள போராடுவோம்.

இவ்வாறு சேவக் கூறினார்

0 comments:

Post a Comment