ஸ்ரீசாந்தின் வாய்ப்பு நழுவியது

கால்விரலில் ஏற்பட்டுள்ள காயம் காரணமாக, கேரளா அணியின் வேகப்பந்துவீச்சாளர் ஸ்ரீசாந்த், ரஞ்சி கோப்பை "பிளேட்' லீக் தொடரில் இருந்து நீக்கப்பட்டார். இதனால் இவருக்கு, ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இடம் பிடிக்கும் வாய்ப்பு நழுவியது.

உள்ளூர் தொடர்களில் ஒன்றான ரஞ்சி கோப்பை "பிளேட்' லீக் தொடர் நாட்டின் முக்கிய நகரங்களில் நடக்கிறது. இதில் இடம் பெற்றுள்ள கேரளா அணியில் வேகப்பந்துவீச்சாளர் ஸ்ரீசாந்த் இடம் பெற்றிருந்தார்.

சமீபத்தில் இவரது கால் விரலில் காயம் ஏற்பட்டது. இதனால் இவர், எட்டு வாரங்கள் வரை எவ்வித போட்டியிலும் பங்கேற்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.


நழுவிய வாய்ப்பு:

இதன்மூலம் ஸ்ரீசாந்துக்கு, ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இடம் பிடிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. ஏனெனில் முன்னதாக ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடருக்கு வேகப்பந்துவீச்சாளர் பிரவீண் குமார் தேர்வு செய்யப்பட்டிருந்தார்.

ஆனால் காயம் காரணமாக பிரவீண் குமார், அதிரடியாக நீக்கப்பட்டார். இவருக்கு மாற்று வீரரை, இந்திய கிரிக்கெட் போர்டின் (பி.சி.சி.ஐ.,) தேர்வுக்குழு இன்று தேர்வு செய்கிறது. இதில் இர்பான் பதான், ஸ்ரீசாந்த், அபிமன்யு மிதுன் உள்ளிட்டோரில் ஒருவருக்கு வாய்ப்பு கிடைக்கும் நிலை இருந்தது. ஆனால் காயம் காரணமாக ஸ்ரீசாந்தின் பொன்னான வாய்ப்பு வீணானது.


இதுகுறித்து ஸ்ரீசாந்த் கூறியதாவது:

முக்கியமான நேரத்தில் காயமடைந்திருப்பது வருத்தம் அளிக்கிறது. காயத்தை பரிசோதித்த டாக்டர்கள், "ஆப்பரேஷன்' செய்யும் படி அறிவுறுத்தி உள்ளனர். ஆனால் நான் "ஆப்பரேஷன்' செய்யப்போவதில்லை. மாறாக ஆயுர்வேத மருத்துவம் மேற்கொண்டு வருகிறேன். இதன்மூலம் காயத்தில் இருந்து முழுமையாக குணமடையலாம்.

ஏனெனில் முன்னதாக ஏற்பட்ட காயத்துக்கு, ஆயுர்வேத மருத்துவத்தின் மூலம் பூரண குணமடைந்தேன். காயத்தில் இருந்து மீண்டு வரும் நான், டிச., 12ம் தேதி முதல், பெங்களூருவில் உள்ள தேசிய கிரிக்கெட் அகாடமியில் மறுவாழ்வு பயிற்சி மேற்கொள்ள திட்டமிட்டுள்ளேன்.

எட்டு வாரங்கள் வரை போட்டியில் பங்கேற்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளதால், ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் விளையாடும் வாய்ப்பை இழந்தேன். டெஸ்ட் தொடருக்கு முன், முழுமையாக குணமடைவேன் என்ற நம்பிக்கை இல்லை.

ஆனால் ஒருநாள் தொடருக்கு முன், நூறு சதவீத உடற்தகுதி பெற்றுவிடுவேன் என எதிர்பார்க்கிறேன். இதன்மூலம் ஆஸ்திரேலியாவில் நடக்கவுள்ள முத்தரப்பு ஒருநாள் தொடரில் விளையாடுவேன் என்ற நம்பிக்கை உள்ளது.

இவ்வாறு ஸ்ரீசாந்த் கூறினார்.

0 comments:

Post a Comment