இந்தியா அசத்தல் வெற்றி

சொந்த மண்ணில் இந்திய அணியின் ஆதிக்கம் தொடர்கிறது. நேற்று நடந்த இரண்டாவது ஒரு நாள் போட்டியில் விராத் கோஹ்லி(117), ரோகித் சர்மாவின்(90) அசத்தல் ஆட்டம் கைகொடுக்க, 5 விக்கெட் வித்தியாசத்தில் சுலப வெற்றி பெற்றது. வெஸ்ட் இண்டீஸ் தரப்பில் ராம்பாலின் அதிரடி ஆட்டம் வீணானது.

இந்தியா வந்துள்ள வெஸ்ட் இண்டீஸ் அணி, ஐந்து போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் பங்கேற்கிறது. கட்டாக்கில் நடந்த முதலாவது ஒருநாள் போட்டியில் வெற்றி பெற்ற இந்திய அணி 1-0 என முன்னிலை வகித்தது. இரண்டாவது போட்டி விசாகப்பட்டினத்தில் நேற்று நடந்தது.


மழையால் தாமதம்:

லேசான மழை காரணமாக, இப்போட்டி சுமார் 15 நிமிடங்கள் தாமதமாக துவங்கியது. முதல் போட்டியில் விளையாடிய அதே இந்திய வீரர்கள், நேற்றும் களமிறங்கினர். வெஸ்ட் இண்டஸ் அணியில் ஒரே ஒரு மாற்றம் செய்யப்பட்டது. அந்தோனி மார்டினுக்கு பதிலாக ரவி ராம்பால் விளையாடினார். "டாஸ் வென்ற இந்திய கேப்டன் சேவக், "பீல்டிங் தேர்வு செய்தார்.


திணறல் துவக்கம்:

இந்திய "வேகங்கள் உமேஷ் யாதவ், வினய் குமார் போட்டுத் தாக்க, வெஸ்ட் இண்டீஸ் அணியின் விக்கெட்டுகள் மடமடவென சரிந்தன. அட்ரியன் பரத் (0), சாமுவேல்ஸ் (4), டேரன் பிராவோ (13), ஹயாத் (0), ராம்தின் (2) சொற்ப ரன்களில் வெளியேறினர். ஒருகட்டத்தில் 63 ரன்களுக்கு 5 விக்கெட்டுகளை இழந்து திணறியது.


சிம்மன்ஸ் அரைசதம்:

விக்கெட் ஒருபக்கம் சரிந்தாலும், மறுபக்கம் பொறுப்பாக ஆடிய சிம்மன்ஸ், ரவிந்திர ஜடேஜா பந்தில் ஒரு சூப்பர் பவுண்டரி அடித்து, தனது 10வது அரைசதத்தை பூர்த்தி செய்தார். அஷ்வின் வீசிய ஆட்டத்தின் 24வது ஓவரில் அடுத்தடுத்து இரண்டு சிக்சர் விளாசிய போலார்டு (35), அதே ஓவரில் அவுட்டானார். அடுத்து வந்த கேப்டன் டேரன் சமி (2), ரசல் (11) பெரிய அளவில் சோபிக்கவில்லை.


ராம்பால் அபாரம்:

பின், சிம்மன்சுடன் இணைந்த ரவி ராம்பால், அதிரடியாக ரன் சேர்த்தார். இரண்டாவது ரன்னுக்கு ஆசைப்பட்ட சிம்மன்ஸ் (78), ஜடேஜாவின் துல்லிய "த்ரோவில் ரன்-அவுட்டானார். அடுத்து வந்த கீமர் ரோச்சுடன் இணைந்த ராம்பால், ஒருநாள் அரங்கில் தனது முதலாவது அரைசதத்தை பதிவு செய்தார். அஷ்வின், ஜடேஜா, ஆரோன் ஆகியோரது பந்தை சிக்சருக்கு பறக்கவிட்ட ராம்பால், அணியின் ஸ்கோரை உயர்த்தினார்.

வெஸ்ட் இண்டீஸ் அணி 50 ஓவரில் 9 விக்கெட்டுக்கு 269 ரன்கள் எடுத்தது. ராம்பால் 66 பந்தில் 86 ரன்கள்(6 சிக்சர், 6 பவுண்டரி), ரோச் 24 ரன்கள் எடுத்து அவுட்டாகாமல் இருந்தனர்.
இந்தியா சார்பில் உமேஷ் யாதவ் 3, வினய் குமார், ரவிந்திர ஜடேஜா தலா 2 விக்கெட் வீழ்த்தினர்.


மழை குறுக்கீடு:

எட்டக்கூடிய இலக்கை விரட்டிய இந்திய அணிக்கு பார்த்திவ் படேல் (2) ஏமாற்றினார். அடுத்து வந்த காம்பிர் (12) நிலைக்கவில்லை. அதிரடியாக ஆட நினைத்த சேவக், இரண்டு முறை கண்டம் தப்பினார். இந்திய அணி 11.2 ஓவரில் 2 விக்கெட்டுக்கு 49 ரன்கள் எடுத்திருந்த போது, மழை குறுக்கிட ஆட்டம் நிறுத்தி வைக்கப்பட்டது. மீண்டும் ஆட்டம் துவங்கிய சிறிது நேரத்தில் சேவக் (26) அவுட்டானார்.


இளமை எழுச்சி:

அடுத்து இணைந்த இளம் வீரர்களான விராத் கோஹ்லி, ரோகித் சர்மா ஆட்டத்தை தங்களது கையில் எடுத்துக் கொண்டனர். அபாரமாக ஆடிய விராத் கோஹ்லி, ஒருநாள் அரங்கில் தனது 8வது சதத்தை பதிவு செய்தார். மறுமுனையில் இவருக்கு ஒத்துழைப்பு தந்த ரோகித் சர்மா, தனது 10வது அரைசதத்தை பூர்த்தி செய்தார். நான்காவது விக்கெட்டுக்கு 163 ரன்கள் சேர்த்த போது கோஹ்லி (117) வெளியேறினார். அடுத்து வந்த சுரேஷ் ரெய்னா (0) ஏமாற்றினார்.

பின், ரோகித் சர்மாவுடன் இணைந்த ரவிந்திர ஜடேஜா, ரசல் வீசிய ஆட்டத்தின் 49வது ஓவரில் ஒரு பவுண்டரி அடித்து வெற்றியை உறுதி செய்தார். இந்திய அணி 48.1 ஓவரில் 5 விக்கெட்டுக்கு 270 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. ரோகித் (90), ஜடேஜா (9) அவுட்டாகாமல் இருந்தனர்.

ஆட்ட நாயகன் விருதை விராத் கோஹ்லி தட்டிச் சென்றார். இந்த வெற்றியின் மூலம், ஐந்து போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் இந்திய அணி 2-0 என முன்னிலை வகிக்கிறது.

இரு அணிகள் மோதும் மூன்றாவது ஒருநாள் போட்டி வரும் 5ம் தேதி ஆமதாபாத்தில் நடக்க உள்ளது.


ராம்பால் உலக சாதனை

இந்தியாவுக்கு எதிராக அபார ஆட்டத்தை வெளிப்படுத்திய வெஸ்ட் இண்டீஸ் வீரர் ரவி ராம்பால், 66 பந்தில் 86 ரன்கள் (6 சிக்சர், 6 பவுண்டரி) எடுத்தார். இதன்மூலம் ஒருநாள் போட்டி அரங்கில், பத்தாவது வீரராக களமிறங்கி அதிக ரன்கள் எடுத்த வீரர் என்ற சாதனை படைத்தார்.

முன்னதாக 2009ல், அபுதாபியில் நடந்த நியூசிலாந்துக்கு எதிரான போட்டியில், பாகிஸ்தானின் முகமது ஆமிர், பத்தாவது வீரராக களமிறங்கி 73 ரன்கள் எடுத்து அவுட்டாகாமல் இருந்தார்.

0 comments:

Post a Comment