சச்சின் செய்தது சரியா ?

பிரபலங்கள் எழுதும் சுயசரிதைகள் எப்போதுமே சர்ச்சையை கிளப்பும். இதற்கு சச்சினும் விதிவிலக்கல்ல. இவரது ரத்தம் இடம் பெற்ற "டெண்டுல்கர் ஓபஸ்' என்ற சுயசரிதைக்கு எதிர்ப்பு வலுக்கிறது.

இளம் தலைமுறையினரின் "ரோல் மாடலாக' திகழும் இவர், தனது ரத்தத்தின் மூலம் மலிவான விளம்பரம் தேடியிருப்பதாக முன்னணி எழுத்தாளர்கள் உட்பட பலரும் குற்றம்சாட்டியுள்ளனர். அதே நேரத்தில் சேவை பணிக்கு நிதி திரட்டவே, இது போன்ற முயற்சியில் சச்சின் ஈடுபட்டுள்ளதால், தவறாக நினைக்க தேவையில்லை என, கிரிக்கெட் ஜாம்பவான் கபில் தேவ் ஆதரவு தெரிவித்துள்ளார்.

கிரிக்கெட் உலகின் "சாதனை மன்னன்' இந்தியாவின் சச்சின். டெஸ்ட் (13, 455) மற்றும் ஒரு நாள் அரங்கில் (17598) அதிக ரன் குவித்துள்ளார். "கிரிக்கெட் கடவுளாக' வர்ணிக்கப்படும் இவரது வாழ்க்கை வரலாறு அடங்கிய சுயசரிதை புத்தகத்தை, லண்டனை சேர்ந்த கிரேகான் மீடியா நிறுவனம் வெளியிடுகிறது. "டெண்டுல்கர் ஓபஸ்' என்ற சுயசரிதை வரும் 2011ல் உலககோப்பை போட்டி (50 ஓவர்) துவங்குவதற்கு முன், பிப்ரவரி மாதம் வெளியிடப்பட உள்ளது.


அரிய படங்கள்: இந்த சுயசரிதையில், சச்சின் பற்றி இதுவரை வெளிவராத அரிய புகைப்படங்கள் இடம் பெற உள்ளன. இதன் கையெழுத்துப் பக்கத்தில் சச்சினின் ரத்தம் இடம் பெற்றிருப்பது தான் தனிச்சிறப்பு. காகிதக் கூழில், அவரது ரத்தம் தோய்த்து வெளிவர உள்ளது.

அவரது டி.என்.ஏ., பற்றிய தகவல்களும் இடம் பெற உள்ளன. இதற்காக அவரது உமிழ்நீர் கேட்கப்பட்டுள்ளது. மொத்தம் 852 பக்கங்கள் கொண்ட இப்புத்தகம் 37 கி.கி., எடை கொண்டது. இதன் விலை 37 லட்ச ரூபாய். மொத்தம் 10 சிறப்பு பிரதிகள் வெளிவர உள்ளன. இதற்கான முன்பதிவும் முடிந்து விட்டது. இப்புத்தகங்கள் மூலம் கிடைக்கும் நிதி, சச்சின் கட்டி வரும் பள்ளிக்கு பயன்படுத்தப்பட உள்ளது.

இது குறித்து சச்சின் கூறுகையில்,""எனது கிரிக்கெட் வாழ்க்கையில் பல்வேறு இடங்களுக்கு சென்றுள்ளேன். எனது நீ...ண்ட பயணத்தை அரிய புகைப்படங்கள் மூலம் தரமான புத்தகமாக காண்பது இனிமையான அனுபவம். "ஓபஸ்' புத்தகத்தை விட எனது வாழ்க்கையை இன்னும் சிறப்பாக வேறு எதிலும் காண முடியாது,''என்றார்.

இப்படி தனது சுயசரிதையை பற்றி றசச்சின் ஒருபக்கம் புகழ்ந்தாலும், மறுபக்கம் எதிர்ப்பும் காணப்படுகிறது. இவர், தனது ரத்தத்தின் மூலம் மலிவான விளம்பரம் தேடியிருப்பதாக எழுத்தாளர்கள் உட்பட பலரும் கண்டனம் தெரிவித்துள்ளனர். "டுவிட்டர்' இணையதளத்திலும் காட்டமாக விமர்சிக்கப்பட்டுள்ளது.

தனது ரசிகர்களுக்காக ரத்தம் சிந்தியிருந்தால், சாமான்யனும் வாங்கும் வகையில் விலை குறைவாக இருந்திருக்க வேண்டும். ஆனால், விலை 37 லட்சம் ரூபாயாக உள்ளது. சச்சினின் ரத்தம் இடம் பெறாமல், வெறும் கையெழுத்து மட்டுமே இருக்கும் புத்தகத்தின் விலை 1.50 லட்சம் ரூபாயாக உள்ளது. எனவே, அதிக விலைக்கு சுயசரிதையை விற்று இன்னொரு சாதனை படைப்பதே அவரது இலக்கு என விமர்சிக்கின்றனர்.


0 comments:

Post a Comment