உலக சாம்பியன் கனவு

பாட்மின்டன் அரங்கில் இந்தியாவுக்கு பெருமை சேர்த்தவர்களில், இளம் வீராங்கனை செய்னா நேவல் (20 வயது) முக்கியமானவர்.


சமீபத்தில் நடந்த இந்திய கிராண்ட்பிரிக்ஸ், சிங்கப்பூர் மற்றும் இந்தோனேஷிய சூப்பர் சீரிஸ் பாட்மின்டன் தொடரில் சாம்பியன் பட்டம் வென்று, அசுர வளர்ச்சி கண்டுள்ள இவர், ரேங்கிங் (தரவரிசை) பட்டியலில் 2வது இடத்துக்கு அதிரடி முன்னேற்றம் கண்டார்.

இருப்பினும் இவருக்கு, உலக சாம்பியன்ஷிப் மற்றும் ஒலிம்பிக் போட்டியில் சாம்பியன் பட்டம் வெல்ல வேண்டும் என்ற கனவு உள்ளது. இவரது சமீபத்திய செயல்பாட்டின்மூலம், இக்கனவை நிறைவேற்றிக் கொள்ளும் வாய்ப்பு கிடைத்துள்ளது.

பிரான்ஸ் தலைநகர் பாரிசில், 18வது உலக சாம்பியன்ஷிப் பாட்மின்டன் தொடர் அடுத்த மாதம் 23-29ம் தேதிகளில் நடக்கிறது. இத்தொடரில் பங்கேற்க செய்னா நேவல் தலைமையிலான 9 பேர் கொண்ட இந்திய அணி சமீபத்தில் அறிவிக்கப்பட்டது.

இதில் செய்னா நேவல், ஆதித்தி முதாத்கர், ஜுவாலா கட்டா, அஷ்வினி பொன்னப்பா, சேட்டன் ஆனந்த், காஷ்யப், சனவே தாமஸ், ருபேஷ் குமார், திஜு உள்ளிட்ட முன்னணி நட்சத்திரங்கள் இடம் பெற்றுள்ளனர்.

இத்தொடர் குறித்து செய்னா நேவல் கூறியதாவது: சமீபத்தில் நடந்த மூன்று முக்கிய தொடரில் சாம்பியன் பட்டம் வென்றது, ரேங்கிங்கில் 2வது இடத்துக்கு அழைத்து சென்றது. இருப்பினும் "நம்பர்-1' இடம் பிடிப்பதை இலக்காக கொண்டுள்ளேன். இதற்காக முழுவீச்சில் தயார் செய்து வருகிறேன்.


"பார்ம்' மற்றும் உடற்தகுதியை கருத்தில் கொண்டு இந்த ஆண்டு முதல், சில முக்கிய தொடரில் மட்டும் பங்கேற்க முடிவு செய்தேன். இதற்கு நல்ல பலன் கிடைத்துள்ளது. ஏனெனில் எந்த ஒரு விளையாட்டு வீரர், வீராங்கனைகளுக்கு உடற்தகுதி முக்கியமானது.


அடுத்த மாதம் பாரிசில் நடக்கவுள்ள உலக சாம்பியன்ஷிப் தொடர், நிச்சயம் சவால் நிறைந்ததாக இருக்கும். ஏனெனில், கடந்த முறை ஐதராபாத்தில் நடந்த இத்தொடரில் காலிறுதி வரை முன்னேறிய நான், இம்முறை சாம்பியன் பட்டம் வெல்ல வேண்டிய கட்டாயத்தில் உள்ளேன். தவிர, பாட்மின்டன் அரங்கில் சீன வீராங்கனைகள் ஆதிக்கம் செலுத்தி வருகின்றனர்.


இவர்களுக்கு எதிராக முழுதிறமையை வெளிப்படுத்தினால் மட்டுமே, சாம்பியன் பட்டம் வெல்ல முடியும். சமீபத்திய போட்டிகளில் முன்னணி சீன வீராங்கனைகளை வீழ்த்தி இருப்பதால், இத்தொடரில் சாதிப்பேன் என்ற நம்பிக்கை உள்ளது.


இத்தொடருக்கு கேப்டனாக நியமிக்கப்பட்டிருப்பது மகிழ்ச்சியான விஷயம். இதுகுறித்து அதிகம் சிந்திக்காமல், போட்டியில் நூறு சதவீத ஆட்டத்தை வெளிப்படுத்தி வெற்றி பெறுவது குறித்து மட்டும் ஆலோசித்து வருகிறேன்.
இவ்வாறு செய்னா நேவல் கூறினார்.

0 comments:

Post a Comment