விளம்பர ஒப்பந்தம்: தோனி சாதனை

கிரிக்கெட்டில் மட்டுமல்ல, விளம்பர உலகிலும் கொடி கட்டிப் பறக்கிறார் கேப்டன் தோனி. சுமார் 210 கோடி ரூபாய்க்கான விளம்பர ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளார். இதன் மூலம் சச்சினை(ரூ. 180 கோடி) முந்தி, சாதனை படைத்துள்ளார்.


இந்திய அணியின் வெற்றி கேப்டன் தோனி. கடந்த 2007ல் "டுவென்டி-20 உலக கோப்பை கைப்பற்றி வரலாறு படைத்தார். டெஸ்ட் அரங்கில் இந்திய அணிக்கு "நம்பர்-1 இடம் பெற்று தந்தார். பேட்ஸ்மேன்களுக்கான ரேங்கிங்(ஒரு நாள் போட்டி) பட்டியலில் தொடர்ந்து முதலிடத்தில் உள்ளார்.


கேப்டன், பேட்ஸ்மேன், விக்கெட் கீப்பர் என மூன்று பணிகளிலும் பட்டையை கிளப்பும் இவருக்கு, ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பு உள்ளது. இவரை ஒப்பந்தம் செய்ய ஐ.எம்.ஜி., பெர்சப்ட் உள்ளிட்ட 9 விளம்பர நிறுவனங்கள் போட்டியிட்டன. "கேம்பிளான் என்ற நிறுவனம் 10.5 கோடி ரூபாய் மோசடி செய்ததாக சமீபத்தில் தோனி வழக்கு தொடுத்தார். எனவே, இம்முறை மிகவும் கவனமாக இருந்தார்.


திருமண பரிசு:


இறுதியில் ரிதி ஸ்போர்ட்ஸ் மானேஜ்மென்ட் மற்றும் மைண்ட்ஸ்கேப் நிறுவனங்கள் சேர்ந்து தோனியுடன் ஒப்பந்தம் செய்து கொண்டன. மூன்று ஆண்டுகளுக்கு சுமார் 210 கோடி ரூபாய்க்கான ஒப்பந்தத்தில் தோனி கையெöழுத்திட்டுள்ளார். இதன் மூலம் இந்திய அணியின் "மாஸ்டர் பேட்ஸ்மேன் சச்சினை முந்தினார்.


கடந்த 2006ல் இவரை, மூன்று ஆண்டுகளுக்கு "ஐகானிக்ஸ் நிறுவனம் 180 கோடி ரூபாய்க்கு ஒப்பந்தம் செய்தது. சமீபத்தில் சாக்ஷியை கைப்பிடித்த தோனிக்கு, 210 கோடி ரூபாய் ஒப்பந்தம் மிகப் பெரிய திருமண பரிசாக அமைந்துள்ளது.


ரூ. 6 கோடி சம்பளம்:

இது குறித்து ரிதி ஸ்போர்ட்ஸ் நிறுவனத்தின் பொது மானேஜர் சஞ்சய் பாண்டே கூறுகையில்,""தோனியுடன் 3 ஆண்டுகளுக்கு 210 கோடி ரூபாய்க்கு விளம்பர ஒப்பந்தம் செய்து கொண்டது உண்மை தான். கடந்த வாரம் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டோம். இனி தோனியின் விளம்பரங்கள் அனைத்தையும் நாங்கள் கையாள்வோம்,என்றார்.

நாட்டில் அதிகம் சம்பாதிக்கும் விளையாட்டு வீரரான தோனி, தற்போது பெப்சி, ரீபோக், கோத்ரெஜ் உள்ளிட்ட 22 நிறுவனங்களின் பொருட்களுக்கு "மாடலாக உள்ளார். ஒரு பொருளுக்கு, ஆண்டு ஒன்றுக்கு 6 கோடி ரூபாய் வரை சம்பளம் பெறுகிறார். சச்சின் 15 பொருட்களுக்கு விளம்பரம் செய்கிறார். இவர், 5 கோடி ரூபாய் வரை சம்பளம் பெறுகிறார்.



நல்ல லாபம்:

தற்போது விளம்பர நிறுவனங்களுக்கு நல்ல லாபம் கிடைக்கிறது. சம்பந்தப்பட்ட வீரர் "மாடலாக தோன்றும் ஒவ்வொரு பொருட்களுக்கான சம்பளத்தில் இருந்து 30 சதவீதம் வரை "கமிஷனாக பெறுகின்றன. வரும் 2011ல் இந்தியாவில் உலக கோப்பை போட்டி நடக்க இருப்பதால், கிரிக்கெட் வீரர்களுக்கு மவுசு அதிகரிக்கும். எனவே, தோனியின் மூலம் நல்ல வருமானம் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.


டைகர் அந்தஸ்து:


இது குறித்து ரிதி ஸ்போர்ட்ஸ்-மைண்ட்ஸ்கேப் நிறுவனங்களின் மார்க்கெட்டிங் பரிவு தலைவர் சங்கீத் ஷிரோத்கர் கூறுகையில்,""ஆண்டுக்கு குறைந்தபட்சம் 70 கோடி ரூபாய் என்ற கணக்கில் தான் 210 கோடி ரூபாய்க்கு தோனியுடன் ஒப்பந்தம் செய்துள்ளோம். அதிகமான பொருட்களுக்கு இவர், விளம்பரம் செய்ய ஏற்பாடு செய்யப்படும். இதன் மூலம் எங்களுக்கு எதிர்பார்த்த லாபம் கிடைக்கும். தற்போது உலகில் அதிகம் சம்பாதிக்கும் கோல்ப் வீரர் டைகர் உட்சுக்கு நிகரான அந்தஸ்தை தோனி பெற்றுள்ளார்,என்றார்.

0 comments:

Post a Comment