டெஸ்ட் அரங்கில் 800 விக்கெட் வீழ்த்திய மகிழ்ச்சியுடன் விடைபெற்றுள்ளார் முரளிதரன். கடந்த 18 ஆண்டுகளாக தனது சுழல் மந்திரத்தால் எதிரணிகளை திணறடித்த இவர், பல்வேறு சர்ச்சைகளை கடந்து சாதித்துக் காட்டியுள்ளார்.
இவரது சாதனையை இனி யாரும் முறியடிக்க முடியாது என முன்னாள் வீரர் வார்ன் தெரிவித்துள்ளார்.
இலங்கையின் "சுழல் மன்னன்' முரளிதரன். 8 வயதில் கிரிக்கெட் விளையாட துவங்கிய இவர், முதலில் வேகப்பந்துவீச்சளாராக தான் இருந்தார். பின் 14வது வயதில் சுழற்பந்துவீச்சுக்கு மாறினார். 1992ல் தனது 20வது வயதில் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்டில் அறிமுகமானார். இவரது சர்வதேச கிரிக்கெட் வாழ்க்கை சர்ச்சை நிறைந்ததாக இருந்தது.
"தூஸ்ரா' பிரச்னை: கடந்த 1995ல் மெல்போர்னில் நடந்த ஆஸ்திரேலியாவுடனான டெஸ்டில், முரளிதரன், பந்தை எறிவதாக சர்ச்சை எழுந்தது. அளவுக்கு அதிகமாக கையை வளைத்து பந்துவீசுவதாக கூறிய அம்பயர் டேரல் ஹேர் 7 முறை "நோ-பால்' கொடுத்து அதிர்ச்சி அளித்தார். இதிலிருந்து மீண்ட முரளிதரனுக்கு இன்னொரு அதிர்ச்சி காத்திருந்தது.
இவரது "தூஸ்ரா' முறையிலான பந்துவீச்சு குறித்து இந்தியாவின் பிஷன் சிங் பேடி உள்ளிட்ட பலரும் விமர்சித்தனர். விதிமுறைக்கு புறம்பாக வீசப்படும் "தூஸ்ரா' வகை பந்துவீச்சை தடை செய்ய வேண்டுமென பேடி வலியுறுத்தினார்.
ஆனாலும். ஐ.சி.சி., பச்சைக் கொடி காட்டியதால் தனது பிரம்மாஸ்திரமான "தூஸ்ரா' மூலம் விக்கெட் வேட்டையை தொடர்ந்தார். டெஸ்ட் மற்றும் ஒருநாள் போட்டிகளில் அதிக விக்கெட் வீழ்த்தியுள்ளவர்களின் பட்டியலில் முதலிடத்தை பிடித்தார்.
0 comments:
Post a Comment