எதிரியா சச்சின் - மனம் திறக்கிறார் காம்ப்ளி



கடந்த 7 ஆண்டுகளாக என்னை சச்சின் தொடர்பு கொள்ளவில்லை. நண்பர்களாக இருந்த நாங்கள் தற்போது எதிரிகளாக மாறிவிட்டது போல உள்ளது,''என, வினோத் காம்ப்ளி தெரிவித்தார்.

இந்தியாவின் "மாஸ்டர் பேட்ஸ்மேன்' சச்சின், 40. சமீபத்தில் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றார். இவரது பள்ளித் தோழன் வினோத் காம்ப்ளி. இவர்கள் இருவரும் ஷிரதாஸ்ரம் வித்யா மந்திர் பள்ளியில் படித்தனர். 

அப்போது நடந்த (1988) பள்ளிகளுக்கு இடையிலான ஹாரிஸ் ஷீல்டு தொடரில், சேவியர் பள்ளிக்கு எதிராக சச்சின் (326*)காம்ப்ளி (349*) சேர்ந்து 664 ரன்கள் எடுத்தனர். 

இது தான் சச்சினுக்கு கிரிக்கெட் வாழ்க்கையில் திருப்புமுனையாக அமைந்தது. இதன் பின் 200 டெஸ்டில் பங்கேற்ற சச்சின் சாதனை நாயகனாக பிரகாசித்தார். 17 டெஸ்டில் மட்டும் விளையாடிய காம்ப்ளி ஏமாற்றம் அளித்தார். 

சச்சின் ஓய்வு குறித்து வினோத் காம்ப்ளி கூறியது:

ஓய்வின் போது சச்சின் தனது உரையில் எனது பெயரை சொல்வார் என எதிர்பார்த்தேன். நாங்கள் இணைந்து எடுத்த ரன்களை பற்றி பேசுவார் என நம்பினேன். இதுகுறித்து பேசாதது என்னை மிகவும் காயப்படுத்தியது. 

மறுநாள் நடந்த பார்ட்டிக்கு சக வீரர்கள் மற்றும் பிரபலங்களை அழைத்திருந்தார். ஆனால், என்னை அழைக்கவில்லை. இது கூடுதல் அதிர்ச்சியாக இருந்தது. சச்சினின் 10 வயது முதல் அவரது வாழ்க்கையில் நானும் ஒரு அங்கமாக உள்ளேன். 

இப்போது சச்சின், என்னை மறந்து விட்டதாக எல்லோரும் சொல்கின்றனர். கடந்த 7 ஆண்டுகளாக என்னை தொடர்பு கொள்ளவில்லை. நண்பர்களாக இருந்த நாங்கள் தற்போது எதிரிகளாக மாறிவிட்டது போல உள்ளது எங்களது நட்பு கண்ணாடி போன்றது. 

அவரைச் சுற்றியுள்ள பலர், என்னைப் பற்றி தவறாக எடுத்துக் கூறியுள்ளனர். இதனால் தான் என்னுடன் பேசுவதை நிறுத்தி விட்டார். ஒருவேளை எனக்குப் போன் செய்தால், அடுத்த நிமிடம் சச்சின் முன் நிற்பேன்.

இவ்வாறு வினோத் காம்ப்ளி கூறினார்.

1 comments:

  1. சச்சின் காம்ப்ளியை குறிப்பிடுவார் என்று நானும் எதிர் பார்த்தேன். என்ன காரணமோ தெரியவில்லை

    ReplyDelete