சச்சின் தந்த உற்சாகம் - ஹர்பஜன்

சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு எதிரான போட்டியில், "மாஸ்டர் பேட்ஸ்மேன் சச்சின் தந்த உற்சாகம் வெற்றிக்கு முக்கிய காரணமாக அமைந்தது, என, மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டன் ஹர்பஜன் சிங் தெரிவித்துள்ளார்.

சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடந்த, மூன்றாவது சாம்பியன்ஸ் லீக் தொடருக்கான லீக் போட்டியில், மும்பை இந்தியன்ஸ் அணி 3 விக்கெட் வித்தியாசத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை வீழ்த்தியது.

இத்தொடரில் காயம் காரணமாக மும்பை இந்தியன்ஸ் அணி கேப்டன் சச்சின் விளையாடவில்லை. இவருக்கு பதிலாக ஹர்பஜன் சிங் கேப்டனாகவும், சைமண்ட்ஸ் மாற்று வீரராகவும் தேர்வு செய்யப்பட்டனர்.

சென்னை-மும்பை அணிகளுக்கு இடையிலான போட்டியை சச்சின், சக வீரர்களுடன் அமர்ந்து
பார்த்தார்.

இதுகுறித்து ஹர்பஜன் சிங் கூறியதாவது: சாம்பியன்ஸ் லீக் தொடரை வெற்றியுடன் துவக்கியது மகிழ்ச்சி அளிக்கிறது. காயம் காரணமாக சச்சின் விளையாடாத போதிலும், போட்டியை காண வந்தது மகிழ்ச்சி அளிக்கிறது.

இப்போட்டிக்கு முன் மற்றும் போட்டியின் போது இவர் அளித்த உற்சாகம் வெற்றிக்கு முக்கிய காரணமாக விளங்கியது. அணியில் இவர் இல்லாதது பெரிய இழப்பு.

இதேபோல முனாப் படேல், ரோகித் சர்மா உள்ளிட்ட முன்னணி வீரர்களும் காயம் காரணமாக விளையாடாதது ஏமாற்றமாக உள்ளது.

இவர்கள் இல்லாததை இளம் வீரர்கள் சிறப்பாக பூர்த்தி செய்தனர். இந்த வெற்றி, அடுத்து வரும் போட்டிகளில் சாதிக்க ஊக்கமாக இருக்கும். வேகப்பந்துவீச்சாளர் மலிங்கா, பேட்டிங்கிலும் சாதித்தது வெற்றிக்கு முக்கிய பங்குவகித்தது.

இவ்வாறு ஹர்பஜன் சிங் கூறினார்.

0 comments:

Post a Comment