அக்தரை கண்டு பயந்தாராம் சச்சின்

எனது வேகப்பந்து வீச்சை கண்டு சச்சின் பயந்தார். சச்சினும், டிராவிட்டும் வெற்றி நாயகர்கள் அல்ல,''என, தனது சுயசரிதையில் குறிப்பிட்டு சர்ச்சை கிளப்பியுள்ளார் சோயப் அக்தர்.

பாகிஸ்தானின் சர்ச்சைக்குரிய பவுலர் அக்தர். சமீபத்திய உலக கோப்பை தொடருடன், சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்ற இவர், "கான்ட்ரவர்சியலி யுவர்ஸ்' என்ற பெயரில் சுயசரிதை எழுதியுள்ளார். வழக்கமாக சுயசரிதை எழுதும் வீரர்கள் எதாவது பிரச்னைக்குரிய செய்தியை வெளியிட்டு, விளம்பரம் தேடுவார்கள். இதற்கு அக்தரும் விதிவிலக்கல்ல.

இந்த புத்தகத்தில் கூறப்பட்டுள்ளதாவது:

சர்வதேச கிரிக்கெட்டில் வெஸ்ட் இண்டீசின் ரிச்சர்ட்ஸ், லாரா, பாண்டிங் (ஆஸி.,) ஆகியோர் சிறந்த பேட்ஸ்மேன்கள். பேட்டிங்கில் ஆதிக்கம் செலுத்திய இவர்கள், போட்டியை வென்று தரும் திறமை படைத்தவர்கள். ஆனால் அதிக ரன்கள் குவித்த சச்சின், டிராவிட் போன்ற வீரர்களிடம் இந்தத் திறமை இல்லை. இவர்களுக்கு போட்டியை எப்படி முடிக்க வேண்டும் என்று தெரியாது.


பயந்த சச்சின்:

கடந்த 2006 தொடரில், நாங்கள் தோற்கும் நிலையில் இருந்தோம். அப்போது சச்சின் "டென்னிஸ் எல்போ' காயத்தால் பாதிக்கப்பட்டு இருந்தார். அப்போது நடந்த பைசலாபாத் டெஸ்டில், சச்சினுக்கு பந்து வீசினேன். அப்போது மிகவேகமாக வீசிய "பவுன்சர்' பந்துகளை எல்லாம், சச்சின் பயத்தால் அடிக்காமல் விட்டுவிட்டார்.

இது மிகவும் வியப்பாக இருந்தது. மந்தமான ஆடுகளத்தில் சச்சின் இப்படி செயல்படுவதை அப்போது தான் முதன் முறையாக பார்த்தேன். இவருக்கு வேகமாக "பவுன்சர்' வீசினால் தடுமாறுவார் என்று பிறகு தான் தெரிந்து கொண்டேன். இதை வைத்து தான் அவரை அவுட்டாக்கினேன்.


தூக்கம் வராது:

பந்தை சேதப்படுத்தும் செயலை முதலில் துவக்கியது நாங்களாக இருக்கலாம். ஆனால், இப்போது உலகின் அனைத்து வீரர்களும் இப்படித்தான் செய்கின்றனர். ஏனெனில், மந்தமான ஆடுகளத்தில் இப்படிச் செய்தால் விக்கெட் வீழ்த்த முடிகிறது.

இதேபோல, நானும் பலமுறை இந்த செயலை செய்தேன். 2003 <உலக கோப்பை தொடருக்குப் பின், தம்புலாவில் நடந்த முத்தரப்பு தொடரில், நியூசிலாந்துக்கு எதிரான போட்டியில் பந்தை சேதப்படுத்தினேன். இச்செயலுக்காக பலமுறை எச்சரிக்கப்பட்டேன். அபராதம் விதித்தாலும், தொடர்ந்து தவறு செய்தேன். என்ன செய்ய? பந்தை சுரண்டவில்லை என்றால் எனக்கு தூக்கமே வராது.


எல்லோரும் அப்படித்தான்:

நான் மட்டுமல்ல, பாகிஸ்தான் வீரர்கள் அனைவரும் பந்தை சேதப்படுத்துவதை, இப்போதும் வழக்கமாக கொண்டுள்ளனர். இதை முதன் முதலாக நான் ஒத்துக்கொண்டுள்ளேன். சர்வதேச அளவில் இதைத் தடுக்க முடியாது. பேசாமல், பந்தை சேதப்படுத்துவது சட்டரீதியாக அறிவித்து விடலாம். அப்போது தான் கிரிக்கெட்டுக்கு நல்லது.


தகுதி இல்லை:

பாகிஸ்தான் அணியின் கேப்டனாக இருக்க சோயப் மாலிக்கிற்கு தகுதியில்லை. இருப்பினும், இவரை பி.சி.பி., தலைவர் நசீம் அஷ்ரப் கேப்டனாக்கினார். ஏனெனில், சோயப் மாலிக், அஷ்ரபிற்கு எடுப்பார் கைப்பிள்ளையாக இருந்தார்.
இவ்வாறு அந்த புத்தகத்தில் கூறப்பட்டுள்ளது.

சச்சின் பதிலடி

சோயப் அக்தரின் "பவுன்சர்களை' சிக்சருக்கும், பவுண்டரிக்கும் விரட்டியவர் சச்சின். இந்நிலையில் அக்தரின் விமர்சனம் குறித்து சச்சின் கூறுகையில்,"" அக்தர் கருத்துக்கு பதில் கூறுவது எனது தகுதிக்கு ஏற்றது அல்ல,'' என்றார்.

"ரிவர்ஸ் சுவிங்' ரகசியம்

வழக்கமாக, உணவு இடைவேளையின் போது, அம்பயர்கள் பந்தை தங்களது "கோட்டில்' வைத்து, சுவற்றில் தொங்கவிட்டு செல்வார்கள். அப்போது, எனது சக வீரர் ஒருவர் பந்தை எடுத்து சேதப்படுத்தினார். இதனால் பந்து நன்றாக "சுவிங்' ஆனது. எங்களது இச்செயலை எப்படியோ தெரிந்து கொண்ட அம்பயர்கள், அதன்பின் அறையில் வைத்து "கோட்டை' பூட்டிவிடுவர்.

ஏமாற்றிய மோடி

ஐ.பி.எல்., தொடர் குறித்து சோய்ப அக்தர் கூறுகையில்,"" கோல்கட்டா ஐ.பி.எல்., அணி உரிமையாளர், பாலிவுட் நடிகர் ஷாருக்கானிடம், எனது சம்பளம் குறித்து எதிர்ப்பு தெரிவித்தேன். அப்போதைய ஐ.பி.எல்., தலைவர் லலித் மோடி, ஷாருக்கானும் சேர்ந்து சம்மதிக்க வைத்து, சம்பள விஷயத்தில் என்னை ஏமாற்றி விட்டனர். இது இப்போதும் எனக்கு வருத்தமாக உள்ளது,'' என்றார்.

பந்தை சேதப்படுத்துவது எப்படி?

அக்தர் கூறுகையில்,"" பந்தை சுரண்டுவது மட்டுமல்ல, இதை சேதப்படுத்த பல வழிகள் உள்ளன. எனது "பூட்ஸ்' மூலம் சுரண்டுவேன். "பேன்ட்' பாக்கெட்டில் உள்ள "ஜிப்' மீது தேய்ப்பேன். மற்றவர்கள் பெரும்பாலும் பந்தின் மீது "வேசலின்' அல்லது பசையை தடவுவர்,'' என்றார்.

0 comments:

Post a Comment