40வது முறையாக மும்பை சாம்பியன்

ரஞ்சி கோப்பை கிரிக்கெட் தொடரில், மும்பை அணி 40வது முறையாக சாம்பியன் பட்டத்தை கைப்பற்றி சாதனை படைத்தது. பைனலில், இன்னிங்ஸ் மற்றும் 125 ரன்கள் வித்தியாசத்தில், சவுராஷ்டிரா அணியை வீழ்த்தியது.

ரஞ்சி கோப்பை கிரிக்கெட் தொடரின் பைனல், மும்பையில் உள்ள வான்கடே மைதானத்தில் நடந்தது. இதில் மும்பை, சவுராஷ்டிரா அணிகள் விளையாடின. 

முதல் இன்னிங்சில் சவுராஷ்டிரா அணி 148 ரன்கள் எடுத்தது. இரண்டாம் நாள் ஆட்டநேர முடிவில், முதல் இன்னிங்சில் மும்பை அணி 6 விக்கெட்டுக்கு 287 ரன்கள் எடுத்திருந்தது.

ஷா அரைசதம்: நேற்று மூன்றாம் நாள் ஆட்டம் நடந்தது. முதல் இன்னிங்சை தொடர்ந்த மும்பை அணியின் குல்கர்னி (18) வந்த வேகத்தில் வெளியேறினார். பொறுப்பாக ஆடிய ஹிகன் ஷா (55) அரைசதம் அடித்தார். அடுத்து வந்த ஷர்துல் தாகூர் (10) ஏமாற்றினார். 

அன்கீத் சவான் (41) ஓரளவு கைகொடுக்க, முதல் இன்னிங்சில் மும்பை அணி 355 ரன்களுக்கு "ஆல்-அவுட்' ஆனது.

அபார பந்துவீச்சு: பின், 207 ரன்கள் பின்தங்கிய நிலையில் 2வது இன்னிங்சை துவக்கிய சவுராஷ்டிரா அணி, மும்பை அணி "வேகத்தில்' தடுமாறியது. அஜித் அகார்கர் வேகத்தில், கோடக், ஜோகியானி, வசவதா "டக்-அவுட்' ஆகினர். குல்கர்னி பந்தில் ராகுல் தேவ் (5), கேப்டன் ஜெயதேவ் ஷா (6), ஷெல்டன் ஜாக்சன் (9) சொற்ப ரன்களில் வெளியேறினர்.

இன்னிங்ஸ் வெற்றி: சிறிது நேரம் தாக்குப்பிடித்து, இரட்டை இலக்க ரன் எடுத்த, சனந்தியா (16), தர்மேந்திராசிங் ஜடேஜா (22) ஆகியோர் குல்கர்னி பந்தில் அவுட்டானார்கள். அகார்கரிடம், ஜெயதேவ் உனத்கத் (9) சிக்கினார். 

இரண்டாவது இன்னிங்சில் சவுராஷ்டிரா அணி 82 ரன்களுக்கு சுருண்டு, இன்னிங்ஸ் மற்றும் 125 ரன்கள் வித்தியாசத்தில் படுதோல்வி அடைந்தது. மும்பை சார்பில் குல்கர்னி 5, அகார்கர் 4, அபிஷேக் நாயர் ஒரு விக்கெட் கைப்பற்றினர்.

முதல் இன்னிங்சில் சதம் அடித்து அசத்திய மும்பை அணியின் வாசிம் ஜாபர், ஆட்ட நாயகன் விருதை வென்றார்.

தொடரும் ஆதிக்கம்

பைனலில், சவுராஷ்டிரா அணியை வீழ்த்திய மும்பை அணி, ரஞ்சி கோப்பை வரலாற்றில் 40வது முறையாக சாம்பியன் பட்டம் வென்று சாதித்தது. இதுவரை 44 முறை பைனலுக்கு முன்னேறிய மும்பை அணி, 40 முறை கோப்பை வென்றது. கடைசியாக 2010ல் சாம்பியன் பட்டம் வென்றது.

* மும்பை அணியை தொடர்ந்து, டில்லி (7 முறை), கர்நாடகா (6 முறை), பரோடா (5 முறை), மத்திய பிரதேசம்/ஹோல்கர் (4 முறை) அணிகள் அதிக முறை கோப்பை வென்றுள்ளன. பெங்கால், தமிழகம், ராஜஸ்தான், ஐதராபாத், மகாராஷ்டிரா, ரயில்வேஸ் அணிகள் தலா 2 முறை சாம்பியன் பட்டம் வென்றன. மேற்கு இந்தியா, நவான்நகர், அரியானா, உத்தர பிரதேசம் அணிகள் தலா ஒரு முறை கோப்பையை கைப்பற்றின.

ரூ. 5 கோடி பரிசு 

ரஞ்சி கோப்பை தொடரில் சாம்பியன் பட்டம் வென்ற மும்பை அணிக்கு ரூ. 2 கோடி பரிசு வழங்கப்பட்டது. இது தவிர, மும்பை கிரிக்கெட் சங்கம் (எம்.சி.ஏ.,), ரூ. 3 கோடி பரிசு அறிவித்துள்ளது. இரண்டாவது இடம் பிடித்த சவுராஷ்டிரா அணிக்கு ரூ. ஒரு கோடி அளிக்கப்பட்டது. பிப். 5ம் தேதி மும்பை அணியினருக்கு பாராட்டு விழா நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

வரும் பிப். 6-10ம் தேதிகளில் நடக்கவுள்ள இரானி கோப்பை தொடரில், "ரெஸ்ட் ஆப் இந்தியா' அணிக்கு எதிராக விளையாட "நடப்பு ரஞ்சி கோப்பை சாம்பியன்' என்ற அடிப்படையில், மும்பை அணி தகுதி பெற்றது.

சச்சின் மகிழ்ச்சி

"மாஸ்டர் பேட்ஸ்மேன்' சச்சின், ரஞ்சி கோப்பை பைனலில், மும்பை அணிக்காக 6 முறை பங்கேற்றார். இதில் 5 முறை மும்பை அணி கோப்பை வென்றது. கடந்த 1990-91ல் நடந்த பைனலில் மும்பை அணி, 2 ரன்கள் வித்தியாசத்தில் அரியானாவிடம் தோல்வி அடைந்தது. 

இதுகுறித்து, சச்சின் கூறுகையில், ""40வது முறையாக எங்கள் மும்பை அணி ரஞ்சி கோப்பை வென்றது மகிழ்ச்சி அளிக்கிறது. இது, அணியின் கூட்டு முயற்சிக்கு கிடைத்த வெற்றி. ஒவ்வொரு வீரர்களும், தங்கள் பொறுப்புணர்ந்து விளையாடினர். கடந்த சீசனில் ஏமாற்றிய அஜித் அகார்கர், இம்முறை கேப்டனாக மட்டுமல்லாமல், "ஆல்-ரவுண்டராக' அசத்தினார்,'' என்றார்.

0 comments:

Post a Comment