ஜன. 17ல் இந்திய அணி தேர்வு

உலக கோப்பை தொடரில் பங்கேற்கும் இந்திய அணி, ஜன., 17ல் சென்னையில் தேர்வு செய்யப்பட உள்ளது.

இந்தியா, இலங்கை,வங்கதேச நாடுகள் இணைந்து உலக கோப்பை கிரிக்கெட் (50 ஓவர்) தொடரை நடத்தவுள்ளன. இதில் இந்தியா, ஆஸ்திரேலியா, தென் ஆப்ரிக்கா, நியூசிலாந்து உட்பட மொத்தம் 16 அணிகள் பங்கேற்கின்றன.

இந்திய அணி "பி' பிரிவில் இடம்பெற்றுள்ளது. தவிர, வங்கதேசம், இங்கிலாந்து, தென் ஆப்ரிக்கா, வெஸ்ட் இண்டீஸ், அயர்லாந்து மற்றும் நெதர்லாந்து என, மொத்தம் 7 அணிகள் இந்த பிரிவில் இடம் பெற்றுள்ளன.

உலக கோப்பை தொடரின் துவக்கவிழா வரும் பிப்., 18ல் வங்கதேசத்தில் நடக்கிறது. மறுநாள் தாகாவில் நடக்கும் முதல் போட்டியில் இந்திய அணி, வங்கதேசத்தை எதிர்த்து விளையாடுகிறது.

இதற்கான 30 வீரர்கள் அடங்கிய உத்தேச அணி கடந்த டிசம்பரில் அறிவிக்கப்பட்டது. இதில் கேப்டன் தோனி, சச்சின், சேவக் உள்ளிட்ட வழக்கமான வீரர்களுடன், பியுஸ் சாவ்லா, புஜாரா, பார்த்திவ் படேல், சிகர் தவான், ரகானே போன்றவர்கள் இடம் பெற்று இருந்தனர்.

இதில் இருந்து தொடரில் பங்கேற்கும் 15 வீரர்கள் அடங்கிய அணி தேர்வு செய்யப்பட உள்ளது. ஸ்ரீகாந்த் தலைமையிலான தேசிய தேர்வுக்குழுவினர், சென்னையில் ஜன., 17ல் இந்திய அணியை அறிவிப்பார்கள் என்று தெரிகிறது.

இதுகுறித்து இந்திய கிரிக்கெட் போர்டு (பி.சி.சி.ஐ.,) வட்டாரங்கள் கூறுகையில்,"" சென்னையில் நாளை மறுநாள் உலக கோப்பை இந்திய அணி அறிவிக்கப்படும்,'' என்று தெரிவித்துள்ளது.

0 comments:

Post a Comment